முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான்
சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு
காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான
அந்தக்காலம் அல்ல.
குறிப்பிட்ட
முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம்
, மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம்,
போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில்
மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன.
தமிழ்ப்பத்திரிகைகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு
களம்
வழங்கின.
காலம்
மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள்
மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன்
புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர்.
மாறிக்கொண்டிருப்பது
காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர்.
நவீன
தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும்
இலக்கியம் பேசிவருகின்றன.
எவரும்
தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.
இந்தப்பின்னணிகளுடன்தான்,
பிரான்ஸில் வதியும் எழுத்தாளரும், ஒரு கால
கட்டத்தில் ஓசை, அம்மா முதலான இதழ்களை
வெளியிட்டவரும் மகாஜனாக்கல்லூரியின் பழையமாணவர் மன்றத்தின் பாரிஸ் கிளையின் ஊடாக புகலிட
நாடகக்கலைக்கு பங்களிப்புச்செய்தவருமான மனோ
சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகளின் உள்ளடக்கத்தை பார்க்கமுடிகிறது.
இந்தப்பத்தியின்
தொடக்கத்தில் குறிப்பிட்ட இலக்கியக்காலங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இனிமேல் நாம்
கொரோனா காலக்கதைகளைப்பற்றி பேசுவோம் என்ற எண்ணத்துடன், உள்ளிருப்பு காலத்தில் தனது முகநூலில் எழுதிய கதைகளை
தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
உடனுக்குடன்
தனது கதைகளுக்கு வந்த வாசகர் கருத்துக்களையும் நூலின் இறுதியில் ஏழு பக்கங்களில் பதிவேற்றியிருக்கிறார்.