இந்த 61 ஆவது அங்கத்தை ஒரு சிறுகதையுடன் ஆரம்பிக்கின்றேன்.
1972 முதல் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும் வீரகேசரியில் ஒரு சிறுகதையும் வெளிவரவில்லை. 1985 வரையில் சுமார் 13 வருடங்கள் வெளியான எனது அனைத்து சிறுகதைகளும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம்,
மாணிக்கம் முதலான சிற்றிதழ்களில்தான் வெளியாகின.
அவற்றுள் தேர்ந்தெடுத்த
பத்து சிறுகதைகளை தொகுத்து சுமையின் பங்காளிகள் நூலையும் 1975 இல் வெளியிட்டு, அதற்கு
1976 இல் தேசிய சாகித்திய விருதும் பெற்றபின்னர்தான், வீரகேசரிக்குள் பணியாற்ற வந்தேன்.
எனக்கு விருது கிடைத்த
செய்திதான் வீரகேசரியின் முன்பக்கத்தில் வந்ததே தவிர, எனது கதைகள் வெளியாகவில்லை.
அந்த மனக்குறை 13 வருடகாலமாக இருந்தது. நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழியில் தொடர்ந்து
கதைகள் எழுதியமையால், வாரவெளியீட்டுக்குப்
பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால், அந்த மொழிவழக்கு வாசகர்களுக்கு புரியாது என்பதனாலோ
என்னவோ, நான் அவரிடம் கொடுத்த கதைகளை நிராகரித்தார்.
அவர் நிராகரித்த கதைகள் மல்லிகையில் வந்தன.
ஒரு சிறுகதை ( நம்பிக்கைகள்
நம்பிக்கையற்றன ) நண்பர் வி. என். மதியழகனின்
சங்கநாதம் வானொலி நிகழ்ச்சியில் நாடகமாக ஒலிபரப்பாகியது.
வானொலி நேயர்கள் ரசித்த
கதையைக்கூட வீரகேசரி ஏற்கவில்லையே என்ற மனக்குறையும் இருந்தது.