மரண அறிவித்தல்

திருமதி “ செல்வி “ சண்முகவடிவம்பாள் சண்முகம்


நீர்கொழும்பு திரு. சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,  சிவகுமார், சாந்தகுமார், பிரேம்குமார், ஜெயசித்ரா ஆகியோரின் அருமைத் தாயாரும்,  இந்திரன், ஜெயந்தி, சுபாஷினி, சாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், முருகபூபதி, பரிமளஜெயந்தி, நித்தியானந்தன்,  ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

 

நவரட்ணம், மாலதி, ஜெயா, சோபிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஜெயானா, ஜெயமிதா, ரஷிகா ஆகியோரின் அருமைப்பேத்தியாருமான திருமதி  “செல்வி  “ சண்முகவடிவம்பாள்   சண்முகம்   நேற்று 01 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  ( 01-12-2020 )  இலங்கை,  நீர்கொழும்பில் காலமானார்.

 

அன்னாருக்கான  இறுதி அஞ்சலி     நீர்கொழும்பு அலஸ்வீதி இல்லத்தில் 02  ஆம் திகதி  ( 02-12-2020 )  நடைபெற்று, அதனையடுத்து  நீர்கொழும்பு பொது மயானத்தில் மாலை 4.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

 

உறவினர்களும் நண்பர்களும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: முருகபூபதி  +61 4 166 25 766

 

letchumananm@gmail.com 



வஞ்சினத்தால் இயற்கைதந்த அழிவைக் கண்டும் மானிடர்கள் திருந்தாது இருத்தல் நன்றோ?










 


...............  பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி



அன்றெங்கள் காரைநகர் ஈழத்துச் சிதம்பர 

   அழகுத்தேர்த் திருவிழாவாய் இருக்கு மோவென

நன்றாகச் சிந்தித்த வண்ணம் பேருந்திலே

   நசிபட்டுத் தொங்கிநின்று பயணஞ் செய்தேன்!

மன்றாடி நெளிந்துநான் வண்டியில் இருந்தொரு

   வகையாகக் காலிமுகச் சந்தியில் இறங்கி

குன்றெனவோர் உயர்மாட விடுதியின் உச்சிக்

    'குளிர்அறை'யில் நண்பனைநான் காணச் சென்றேன்!.









எழிலாரும் பெருங்கடலின் அருகே அமைந்த

   எட்டடுக்கு விடுதியதன் அறையோ டமைந்த

வெளிச்சன்னல் ஊடாகக் கடற்கரை மணலில்

   விதம்விதமாய் மக்களங்கு கூடக் கண்டேன்

ஒளிகால முழுநீல வானில் வெய்யோன்

   ஒப்பரிய எழில்பூத்து மலரக் கண்டேன்!.

களிபொங்க உளமகிழ்ந்து ஆர்ப்ப ரிக்கும்

   கள்ளமில்லா உள்ளங்கள் சிரிப்பொலி கேட்டேன்!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மறைந்துவிடடார் - தமிழ்முரசு அவுஸ்திரேலியாவின் கண்ணீர் அஞ்சலி

.



சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மறைந்துவிடடார். தமிழ்முரசில் பல கவிதைகளை எழுதிய ஒரு அட்புதமான கவிஞர் கலையுலகில் கலைமகள்  கவிதாயினி அவர்களின் மறைவு நமக்கு கவலை தருகிறது. அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். 

அவரின் கவிதைகளை தமிழ் முரசில் பார்ப்பதட்கு தேடுதல் பெட்டியில் ( Search) 
ஹிதாயா ரிஸ்வி என்ற பெயரை கொப்பி பண்ணி போட்டு தேடினால் அனைத்து கவிதைகளையும் பார்க்கலாம். 


.
தாகம் தீர்(க்)கின்ற 
சிவப்புத் துளி 
நீரில் ஒரு தாமரை போல !
நோண்ட 
நோண்ட 
வளர்கிறது ,
மகிழ்கிறது 
என் கரத்தின் நகம் !

உன் நிறை சுமை தான் 
அதனால் 
விண்ணைத்  தொடாத மண்ணாய் 
மண்ணைத் தொடாத விண்ணாய் 
என் 
நாட்டில் பொருட்களின் விலை வாசி



கார்த்திகைதில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண்  ... அவுஸ்திரேலியா 



கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர் 

அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்  
சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

கார்த்திகைப் பெண்களால் ஏந்திய குழந்தை
கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க 
கந்தனைச் சொந்தமாய் கொண்டிடும் பக்தர்
கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்  

இலங்கையின் கலைஇலக்கியத் துறையில் மாபெரும் ஆளுமை கலைமகள் ஹிதாயா


மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய வானில் பிரகாசித்த கலைத்தாரகையின் திடீர் மறைவு  ஏற்படுத்தியுள்ள துயரம்

இலங்கை தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக சர்வதேசம் வரை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் எழுத்தாளர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி. இவர் தமிழ் இலக்கியத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 'கலைமகள் ஹிதாயா', 'கலைமகள் ஹிதாயா ரிஸ்வி', 'ஹிதாயா மஜீத்', 'மருதூர் நிஸா' என்ற புனைபெயர்களில் இலக்கிப் படைப்புகளை அளித்துள்ளார். இவரது இயற்பெயர் ஹிதாயா மஜீத்.

சாய்ந்தமருது யூ. எல். ஏ. மஜீத்- ஸைனப் தம்பதியினருக்கு மகளாக 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் பிறந்தார். இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் கல்எளிய அரபுக்கலாபீடத்தில் கல்வி பெற்ற ஒரு மௌலவியா ஆவார்.

கார்த்திகைத் தீபஒளித் திருவிழா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
 முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

 

    " ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே " என்று இறைவனை மனமெண்ணி துதிப்பதும் பிரார்த்தனை செய்வதும்பாடுவதும்ஆடுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.இறைவனைக் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை எம்மால் சொல்லிவிட முடியாமலே இருக்கிறோம். ஆனாலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பலரும் நம்பியே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இறைவனை கல்லிலும்செம்பிலும்மண்ணிலும்மரத்திலும்பொன்னிலும்நிலத்திலும்நீரிலும்காற்றிலும்தீயிலும்ஒளியிலும் ஒலியிலும்மழையிலும்இடியிலும்என்று பலநிலையில் காண முற்படுகின்றோம். இந்த வகையில் ஒளிவடிவில் இறைவனை மனமிருத்தும் தத்துவார்த்தமான விழாவாக விளங்குவதுதான் கார்த்திகை மாதத்தில் வருகின்ற " திருவிளக்குத் திருவிழா " எனலாம்.

    தீபத்திருவிழா என்றதும் " தீபாவளி " பண்டிகைதான் எங்கள் மனதில் வந்து முதலில் நிற்பதாகும். உண்மையில் கார்த்திகையில் வருகின்ற விழாவினைத்தான் " தீபாவளி " என்று கொள்ளுதல் வேண்டும் என்னும் ஒரு கருத்தும் இன்று பரலாகி வருகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தீவ + ஆவலி என்றால் தீபங்களை வட்டமாக வைப்பதாகும். கார்த்திகை விழாவிலும் தீபங்கள் வரிசையாயும் வட்டமாயும் வீட்டு வாசல்களில் வைக்கப் படுகிறது. கோவில்களிலும் வைக்கப் படுகிறது. எனவே கார்த்திகையில் வருகின்ற"  திருவிளக்கு விழாவினை " தீப ஒளித் திருநாள் " என்றால் பொருந்தாதா என்று கேட்கும் நிலையும் உருவாகி வருகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தாக இருக்கிறதல்லவா 

முற்கூத்தும், பிற்கூத்தும் (கன்பரா யோகன்)


பொது நிகழ்வுகள், வைபவங்கள் குறைந்து போய்க் காணப்படும் இக்காலத்தில் பல்வேறு வழிகளில் நேரத்தை செலவிடும் வழிகள்

இருக்கின்றன. இந்த வீடடங்கு காலத்தில்

சில நண்பர்களுக்கு அழகான குறுந்தாடி வளர்ந்துள்ளது. குறுஞ் செய்திகளில் மூழ்கிப் போயிருக்கும்  நண்பர்களும்  இன்னும் அதிகம். இன்னும் சிலர் தோட்ட வேலைகளையும் வீட்டு வேலைகளையும் கவனிக்க நேரம் வாய்த்துள்ளது.

 

மேடைக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள் அருகிப் போயிருந்தாலும், Zoom அல்லது Skype தொழிநுட்பத் தொடர்பாடல்கள் மூலம்   பல நிகழ்ச்சிகளை  நிகழ் நிலையில் (ஒன் லைன்) நடாத்த முற்படுகின்றனர்.

இலக்கியகாரர்கள் இதுதான் தருணமென்று அறையிருந்து எழுதிக் குவிக்க வேளை வந்துள்ளது. கணினியில் இலக்கிய கூட்டங்களுக்கும் குறைவில்லை.

நவீன தொழிநுட்ப வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இந்த வெறுமையை போக்கிவிட அனைவரும் முயல்வது தெரிகிறது.

கடவுள் நாடுவார் களிப்புடன் வாழுவார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




முத்தை எடுப்பார்
    சிப்பியை மறப்பார்
சொத்தைக் குவிப்பார்
    சுகத்தை இழப்பார் 
நித்தம் சிரிப்பார்
    நிம்மதி பெறுவார்
சுத்தம் நினைப்பார்
     சுகத்தை அடைவார்  !


உண்டி குறைப்பார்
    உடலைப் பேணுவார்
உறக்கம் தொலைப்பார்
    உளநல முடைப்பார் 
சண்டை போடுவார்
    சஞ்சலம் பெருக்குவார்
சமரசம் நாடுவார்
    சந்தோசம் காணுவார்  !

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 42 – பேரிகை/பேரி – சரவண பிரபு ராமமூர்த்தி

பேரிகை/பேரி – தோற்கருவி

பேரிகை ஒரு தோற்கருவியாகும். பேரி என்றும் வழங்கும். பேரி மற்றும்


பேரிகை என்பதும் ஒரே கருவி என்று பேராசிரியர் பி சாம்பமூர்த்தி அவர்கள் கூறுகின்றார். இக்கருவி செம்பு பித்தளை இரும்பு தகடுகள் இணைத்து செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பாகங்கள் உலோகத்தினால் செய்யப்பட்ட வளையங்களில் நல்ல மாட்டுத்தோல் போர்த்தி செய்யப்படும். சில இடங்களில் மரவளையங்கள் செய்து அதில் இருபுறமும் மாட்டுத்தோல் போர்த்தியும் செய்யப்பட்டது. இப்பொழுது அலுமியினம், பித்தளை அல்லது ஸ்டீல் வளையங்கள் பயன்படுத்துகிறார்கள். பேரிகை மேலைநாட்டு ட்ரம்ஸ் போல் இருக்கும் ஆனால் நமது பேரிகை வேறு ட்ரம்ஸ் வேறு. தோல்வார்க் கொண்டு தோல் பகுதிகள் வளையத்துடன் சேர்த்து இறுக்க கட்டப்படும்.இப்பொழுது கயிறுகொண்டு கட்டுகிறார்கள், 2 முதல் 3 அடி வரை விட்டம் இருக்கும். சற்று வளைந்த பெரிய குச்சியைக்கொண்டு முழக்கப்படும். சிலர் இரண்டு குச்சிகளும் பயன்படுத்துவர்.

 

மிகத்தொன்மையான இசைக்கருவி பேரிகை. ”பேரிகை படகம் இடக்கை


உடுக்கை சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை” என்பது சிலப்பதிகார உரை. பேரிகை தோற்கருவிகளில் முதன்மையானது. திருமுறை, திருப்புகழ், கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல பழம் நூல்களில் இக்கருவி குறிக்கப்பட்டுள்ளது. ”பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும்” என்று நந்தனார் பெருமான் ஆலயத்திற்கான இசைக்கருவிகள் செய்ய தோல் அளித்து வந்த செய்தியை பெரியபுராணம் காட்டுகிறது. இசை நூல்கள் இக்கருவியை வன்மை கருவி என்றும் தலைக்கருவி என்றும்  வகைப்படுத்தியுள்ளது. சங்கு, காளம், தாளம், சின்னம் ஆகிய பிற கருவிகளுடன் சேர்த்து பேரிகை இசைக்கப்படும்.

 

தமிழ்நாட்டில் தொன்மையான பேரிகைகள் கொங்கு பகுதிகளில் காணமுடிகிறது. கொங்கு பகுதி திருமணங்களில் இசைக்கப்படும் “கனக தப்பட்டை” எனப்படும் பல்லிய குழுவில் பேரிகையும் இடம்பெறுகிறது. “கனக தப்பட்டை” பல்லியத்தில் இசைக்கப்படும் மற்ற கருவிகள் பெரிய தப்பட்டை, தாசா, கொம்பு, சின்ன நாயனம் மற்றும் ஒத்து. பேரிகையை பாண்டு அல்லது ட்ரம் செட் என்று இக்காலத்தில் இப்பகுதி மக்கள் அழைத்தாலும் அதன் முந்தைய பெயர் பேரிகை என்பதை “கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்” நூல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. கொங்கு திருமண மங்கல வாழ்த்து பாடுதல் என்னும் சடங்கில் பாட்டின் நடுவே தொம் தொம் என்று இந்த பல்லியம் ஒலிக்கும். கொங்கு நாட்டில் கருப்பண்ணசாமி ஆட்டம், சிலம்பாட்டம், புலிவேடம் ஆகிய ஆட்டவகைகளிலும் பேரிகை இசைக்கப்படும். இறுதி ஊர்வலத்திலும் பேரிகை, தப்புடன் சேர்த்து இசைக்கப்படும். காரமடை அரங்கநாதர் கோவில் மற்றும் பழனி முருகன் கோவில் விழாக்களில் மக்களின் இசையாக ஒலிக்கும் திடும் இசையுடன் பேரிகை முழக்கப்பெறும்.

அனார் கவிதைகள் – கலந்துரையாடல்


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் கலந்துரையாடல் இணையவழி காணொளி அரங்கு.

                           04-12-2020 வெள்ளிக்கிழமை

Topic: ANAR's POEMS - A Discussion by ATLAS - Australia

Time: Dec 4, 2020 08:00 PM Canberra, Melbourne, Sydney, Australia

                               02-30 PM  Srilanka – India

             

 

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81035585459?pwd=UlZVSk1pNTNBeFF5UmRRa1pHUVBZUT09

 

Meeting ID: 810 3558 5459

Passcode: 655071

  


வாசகர் முற்றம் - அங்கம் 12 பரிசுத்தவேதாகமத்தையும் படைப்பிலக்கிய நூல்களையும் தொடர்ந்து படிக்கும் தேர்ந்த வாசகி வானலைகளில் அன்பின் செய்தியை பரவச்செய்யும் திருமதி நிர்மலா அல்போன்ஸ் முருகபூபதி

சிசில் பி டீ மெல் இயக்கிய Ten Commandments                                                     ( பத்துக்கட்டளைகள் ) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.  அந்தப்பத்துக்கட்டளைகளையும் படித்தோ, கேட்டோ தெரிந்தும் வைத்திருப்பீர்கள்.              

அனைத்து கட்டளைகளையும் சுருக்கமாக இவ்வாறு                                                ( பின்வருமாறு )  இரண்டு கட்டளைகளாக்கவும் முடியும் என்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிப்பது. 

தன்னைத்தான்  நேசிப்பது போல் பிறரையும்  நேசிப்பது.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 18 அதிதீவிரவாதம் சந்தர்ப்பவாதமாக மாறும் என்பதை உணர்த்திய சம்பவங்கள் ! உணர்ச்சியின் விளைவு உணர்த்திய பாடங்கள் !! முருகபூபதி


லங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்  இணைந்த காலப்பகுதியில், நீர்கொழும்பில் எனது ஆரம்பக்கல்வியை கற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்குவதற்கு பலருடனும் சேர்ந்து இயங்க நேர்ந்தது.  அத்துடன் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திலும் இணைந்தேன்.

அதற்கெல்லாம் பின்னணியாக சில அரசியல் சம்பவங்களும் இருந்தன.  அது பற்றி இதே பத்தியில் பின்னர் சொல்கின்றேன்.

1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி நாளில் 32 குழந்தைகளுக்கு


ஏடு துவக்கி வித்தியாரம் செய்விக்கப்பட்ட   பாடசாலை தொடங்கப்பட்டபோது அதன் பெயர் விவேகானந்தா வித்தியாலயம்.

பின்னர் நான் அங்கிருந்து புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரிக்குச்சென்ற 1963  காலப்பகுதியில் அதன்பெயர், ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களை நினைவுகூரும் வகையில் விஜயரத்தினம் வித்தியாலயமாகியது.

ஸ்ரான்லி கல்லூரியும் கனகரத்தினம் கல்லூரி என்ற பெயரில்  இயங்கத் தொடங்கியது.

இவ்வாறு காலத்துக்குக் காலம் எங்கும் பெயர்கள் மாறிவந்திருக்கும் கோலங்களையும் அறிவீர்கள். மதம் மாறுபவர்களும் தமது இயற்பெயரை மாற்றிக்கொள்வார்கள். தென்னிந்திய சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நடிகர், நடிகைகளின்


இயற்பெயர்களும் மாறிவிடும்.

எனது அம்மாவுக்கு தாத்தாவும் பாட்டியும் கதிர்மாணிக்கம் என்றுதான் பெயர் வைத்தார்கள்.  ஆனால், அம்மா ஊரில் பபா என்றுதான் அழைக்கப்பட்டார். அறியப்பட்டார்.  பல தமிழ்க்குடும்பங்களில் இந்த  “ பாபா  “ க்கள்  அநேகம்!

எனது தாய்மாமனார் சுப்பையா  எமது ஆரம்ப பாடசாலையின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளரானார்.   அவருக்கும்  குடும்பத்தில் வைக்கப்பட்ட செல்லப்பெயர் பாலா.  அவரும் ஊரில் பாலா என்றுதான் அறியப்பட்டார். அழைக்கப்பட்டார்.  நாம் அவரை பாலா மாமா என்போம்.  அவர் நீர்கொழும்பு  கடற்கரை வீதியில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார்.  கூப்பனுக்கு அரிசி விநியோகிக்கப்பட்ட காலத்தில் அவரது கடை,   கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத்திலும் பதிவுபெற்றிருந்தது.  அவரது   வர்த்தக நிலையம்   “பாலா கடை 


என்றுதான்  ஊரில் பிரபலம்.   மூத்த எழுத்தாளர் வரதர்  தொகுத்து வெளியிட்ட வரதரின் பல குறிப்புகள் என்ற பெரிய ஆவணத்திலும் எமது மாமாவின் பாலாகடை இடம்பெற்றுள்ளது. மாமாதான் எமது அம்மாவின் குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் அக்காலத்தில் அதிகம் படித்தவர்.

ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தாலே அது அக்காலத்தில் அதிகம் என்ற மனப்போக்கு இருந்திருக்கிறது. அவர் சாமி சாஸ்திரியார் என்ற பெரியவருடன் இணைந்து முருகானந்த களிப்பு,  கந்த சஷ்டி கவசம் முதலான நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

அவருக்கு நாம் கதைப்புத்தகம் படிப்பது பிடிக்காது.  புராணப்படங்களுக்குத்தான் அழைத்துச்செல்வார்.  அவரது அழைப்பில்தான் ஶ்ரீவள்ளி, பட்டினத்தார், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமாள் பெருமை ஆகிய புராணப்படங்கள் பார்த்தோம்.  அத்தை சினிமாப்படமே பார்க்காதவர்.  தொலைக்காட்சி வந்தபின்னர்தான் வீட்டிலிருந்து அதில் படம் பார்த்தார்.

மாமா – அத்தையின்  மூத்த பிள்ளைகளும் நானும் மு. வரதராசன், அகிலன், ஜெயகாந்தன் ,  தி. ஜானகிராமன், சுஜாதா ஆகியோரின் தொடர்கதைகளை  நாவல்களையெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல்தான் படித்திருக்கின்றோம்.

அக்காலத்தில் காதல் என்பது எமது சமூகத்தில் கெட்ட வார்த்தை. எவருக்கும் காதல் கடிதமும் எழுதத் தெரியாது. பேச்சுத் திருமணம் என்று வந்துவிட்டால், மணமக்களின் படங்கள் கூட பரஸ்பரம் மணக்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது.

இலங்கைச் செய்திகள்

 தமிழரின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமைக்கு அங்கஜன் கண்டனம்

5 வருடங்களின் பின் பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை

மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில்

மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?

ஷானி அபேசகரவுக்கும் தொற்று; சிறைச்சாலை கொத்தணி 753 ஆக உயர்வு

உடல் நிலையை கருத்திற் கொண்டு ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

மட்டு. பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்படும்

மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய யாழ்.பல்கலை

அஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு


தமிழரின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமைக்கு அங்கஜன் கண்டனம்

யாழ். நீதிமன்றில் யாழ். OIC தெரிவித்த கருத்து

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை 

பிறந்த குழந்தையை கைவிட்டு தப்பிச்சென்ற தாய் அடையாளம்

நெதன்யாகு விரைவில் பஹ்ரைனுக்கு பயணம்

அமெரிக்க கப்பலை ரஷ்யா துரத்தியடிப்பு

ரஷ்ய தடுப்பூசி விலை 20 டொலருக்கும் குறைவு

துருக்கி ஆட்சிகவிழ்ப்பு முயற்சி: 337 பேருக்கு ஆயுள் தண்டனை

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் நிபந்தனை

ஐ.அ. இராச்சியத்தில் 13 முஸ்லிம் நாடுகளுக்கான விசா நிறுத்தம்


காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை 

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதோடு உயிர்ச் சேதங்கள் இடம்பெறவில்லை என்று பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை காசாவின் மேற்கு, கிழப்பு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் உக்கிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

“உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ISSN 2581-9712  பதிவு பெற்ற “உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் சனவரி(மாத) 2021 இதழுக்கான ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றனபேராசிரியர்கள்அயலகத் தமிழ் அறிஞர்கள்அனைத்துத் துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அனுப்பவேண்டிய முகவரிutsmdu2@gmail.com 

உலாச் செல்லulagatamil.in

🦚ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள்ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழில் வழங்க வேண்டும்.

🦚ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.

🦚கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள்அடிக்குறிப்புகளுடன் பெயர்பணி மற்றும் படிப்புநிறுவனம்முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

🦚இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.

🦚கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.

அன்பு ஒன்றே உலகின் மதம்

பகவான் சத்யசாயி பாபா 95வது பிறந்த தினம் இன்று (23/11/2020)

உலகிலுள்ள பல கோடி பக்தர்களால் நேசிக்கப்படும் பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி அவதரித்தார்.

இவரது இயற்பெயர் சத்ய நாராயண ராஜு ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாள். தந்தையார் ராஜு ரட்னகரம் ஆவார். பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்தார்.

பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும் போது 1944 மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணி நேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழ மாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்த வேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்தார். அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்து கொள்ள முடியாத மக்கள் தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிருதம் என்று பின்னர் அறியப்பட்டது.

அவர் சமஸ்கிருதத்தை அதற்கு முன்னர் கற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படி இருக்கும் போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் 1940ம் ஆண்டு மே 23ந் திகதி சாய்பாபா தனது வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதற்கு சாய்பாபா “நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி” என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினர். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர்.

முடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’

முடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’-Sai Pallavi Love Story

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்துள்ளது.

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன.

விஜய் இயக்கிய 'தியா', தனுஷ் ஜோடியாக 'மாரி-2', சூர்யா ஜோடியாக 'என்.ஜி.கே' படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்த ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த ‘ஃபிடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன்