குரு டவீனா வேந்தன் சிஷ்யை உமா மகேஸ்வரியின் இசை
அரங்கேற்றம் 16-09-23 மெல்பேனில் நடந்தேறியது. குருவின் வழிநடத்தல், சிஷ்யையின் திறமை இரண்டுமே மிளிர்வதுதான் அரங்கேற்றம். இளம் கலைஞர் ஒருவரை உருவாக்கி இரசிகர் முன் அரங்கேற்றுகிறார் குரு. சிஷ்யையோ தனது திறமையை, தான் கற்ற கலை மூலம் வெளிப்படுத்தி, இரசிகரின் பாராட்டைப் பெற்று, கற்பித்த குருவிற்கும் தனக்கும் பெருமை சேர்ப்பதாக அன்றைய இசை அமைந்தது.
மகேஸ்வரி குரு அஞ்சலியாக “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ
மகேஸ்வரகா” என நிகழ்வை ஆரம்பித்தார். அவர் முதல் உருப்படியான வர்ணமே வீணை குப்பையரின் நவ ராகமாலிகா வர்ணம். டவீனாவிற்கு தன் சிஷ்யையின் மேல் இருந்த நம்பிக்கையை அவர் இந்த வர்ணத்தைத் தெரிவு செய்ததன் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வர்ணத்தின் முதல் 5 இராகங்களும் பஞ்சரத்தின கிருதியில் அமைந்தவை. நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம், நாராயண கௌளை, ரீதி கௌளை, காந்தாரம், பௌளை. ஒரு இராகத்தில் இருந்து அடுத்த இராகத்தைத் தொடர்வது மிக லாவண்யமாக கலை அழகு குன்றாது இசைத்தமை அவர் ஒரு திறமையான கலைஞர் என்பதை எடுத்துக் காட்டியது.
அடுத்த உருப்படியான “வாதாபி கணபதி” என அவர் உச்ச ஸ்தாயில் பாடும்பொழுது
இராகத்தின் அழகு மிளிர்ந்தது. பாடலின் பாவம் குன்றாது, தகுந்த உணர்வை
வெளிப்படுத்தி பார்வையாளரைத் தன்னுடன் இணைத்தார். நிரவல் சுரம் அற்புதமாக அமைய,
“பிரணவ சொரூப வக்ரதுண்ட” நிரவல் கற்பனா சுரங்களுடன் வளைந்தும் நெளிந்தும்
குதித்தும் ஓடும் அருவியாகப் பிரவாகித்தது. சிறந்த தேர்ந்த வயலின் வித்துவான்
ஸ்ரீசுரேஷ் பாடி ரசித்துப் பல தடவைகள் சபாஷ், சபாஷ் என ரசிக்க, ஆங்காங்கே பார்வையாளர்களும்
தம்மை இசையில் இணைத்து சபாஷ், சபாஷ் என ரசித்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ பாபநாசம் சிவனின் “மாதயானி” என ஆரம்பிக்கும் வசந்தாவில்
அமைந்த சவுக்க காலத்திலான தமிழ் கீர்த்தனை. உமா மகேஸ்வரி பாவம் பொலிய இசைத்தார்.
கச்சேரியின் முக்கிய உருப்படியாக அமைந்தது, 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் கல்யாண “கிமகிரி சுதா” கல்யாணி இராகத்தின் நளினங்களை எல்லாம் மகேஸ்வரி அனுபவித்து இசைக்க, கச்சேரியில் என்னை மறந்து இசை இன்பத்திலே மூழ்கினேன். இராக ஆலாபனை மேலும் தொடராதா என என்னை ஏங்க வைத்தது. இதுவே உமா மகேஸ்வரியின் திறமைக்கு எடுத்துக்காட்டு. தொடர்ந்து வயலின் வித்துவான் சுரேஷ் பாபு, ராக பாவ சுவையை மேலும் பொழிந்து இது ஒரு கச்சேரி, வெறும் முதல் அரங்கேற்றம் அல்ல, ஒரு தேர்ந்த இசை விருந்து என எம்மை உணர வைத்தார். நாமும் தலை அசைத்து ஆனந்த வெள்ளத்தில் மிதந்தோம். M.S. அம்மாவால் பிரபலப்படுத்தப்பட்ட “சோபிலு சப்த சுர” என்ற தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை இசையில் 7 சுரங்களின் தெய்வீகத் தன்மையை அழகாக உணர வைத்தார் மகேஸ்வரி.