நேற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும்.
செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும்
வாசிப்பு அனுபவத்தில், தங்களையும் இனம்காணத்தூண்டும்.
சில வேளைகளில் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும்
வழிகாண்பிக்கும்.
மெல்பனில்
வதியும் கலை, இலக்கிய ஆர்வலர் வி. எஸ். கணநாதன், இலங்கையில் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும்,
குறிப்பிடத்தகுந்த குத்துவிளக்கு ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான வி. எஸ். துரைராஜாவின் சகோதரர். இவரது மற்றும் ஒரு சகோதரர் பல் மருத்துவர் கருணாகரனின்
துணைவியார் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எழுத்தாளர் தேவகியின் கணவர்.
கணநாதனின்
மனைவி சகுந்தலா ஆங்கிலத்தில் கதைகளும்
நாவல்களும் எழுதியிருப்பவர்.
இவ்வாறு கலை, இலக்கிய குடும்பப்பின்னணியில் வந்திருக்கும்
கணநாதன், தீவிர வாசகர். அவர் இலங்கையில் வாழ்ந்த
காலத்திலும், பின்னாளில் அங்கு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து சென்னைக்கு குடும்பத்தினருடன்
குடியேறியபின்னரும், அங்கிருந்து அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்து இங்கு நிரந்தரமாகியதையடுத்தும் வாசிப்பு ஆர்வத்தை
மட்டுப்படுத்திக்கொள்ளாமல், எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய எழுத்தாளர்
விழாக்கள், இலக்கிய சந்திப்புகள், வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கலை, இலக்கிய
ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டவர்.
அருகிலிருக்கும்
அன்புத்துணைவியோ, ஆங்கிலத்திலும் எழுதி கவனிக்கப்பட்ட படைப்பாளியாகியிருக்கும் சூழலில்,
தானும் இலக்கியப்பிரதிகள் எழுதிப்பார்க்கலாம் என்று முயன்றவர்தான் திரு. கணநாதன்.
தமிழ்
சமூகத்தில் மாமன் -- மாமியார் மருமகள் – மருமகன் உறவு நெருடல்களையும் ஊடல், கூடல்,
உரசலையும் கொண்டது. மாமியார் – மாமனார் மெச்சும் மருமகன் - மருமகள்
பாக்கியசாலிகள்தான்.
தமிழ்
சமூகத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையில் அவ்வாறு பாக்கியம் பெற்றவர்களின் கதைகள்
ஏராளம்.