வெடுக்கு நாறியில் அடக்கு முறை! - கவிஞர் த. நந்திவர்மன்

 .











வெடுக்கு நாறியில் வினையை விதைத்தனர்

அடக்கு முறையினை அவிழ்த்து விட்டனர்

தடுத்து நிறுத்திடச் சைவங் காத்திட 

எடுத்து நிறுவிட எவரும் இல்லையோ?                          1

 

கெடுதல் செய்வதே கீழோர் எண்ணமோ?

கொடுமை இவருடன் கூடப் பிறந்ததோ?

அடிமை வாழ்விதன் அவலந் தீருமோ?

விடிவின் கனவதும் வீணாய்ப் போகுமோ?             2

 

புத்தர் சொன்னதைப் புறத்தில் தள்ளியே 

பித்தர் செய்திடும் பிழைகள் பொறுப்பதோ?

சித்தஞ் சிவனிடம் வைத்த அடியரை 

நித்தம்  அன்பிலா நீசர் வதைப்பதோ?                    3

 

இறைவன் நினைவினில் இரவு முழுவதும்

மறைகள் ஓதிட மனது உருகிடக்

குறைகள் நீங்கிடக் கூடி னோர்களை 

கறைகள் படிந்தவர் கலைக்கக் காண்பதோ?            4

 

தேர்தல் வந்திடத் திட்டம் இட்டிவர்

சார்தல் இவ்வகைத் தாழ்ந்த செயலென

ஓர்தல் நன்றென உணர்ந்து நாமிதால்

சோர்தல் தவிர்த்தவர் சூழ்ச்சி தகர்ப்பமே!                        5

 

கடவுள் அருளினாற் காலம் மாறிடும்

இடர்கள் அழிந்திடும் இன்னல் தீர்ந்திடும்

தொடருந் தொல்லைகள் தொலைந்து போய்விடும்

திடமாய் நம்பியே தீர்வைக் காண்பமே!!                          6

 

ஓர்தல் – ஆராய்ந்து தெளிதல்

 


வேம்படி மகளிர் கல்லூரி சிட்னி கிளையினர் நடாத்திய "இசை மழை 2024" நிகழ்ச்சி - செ.பாஸ்கரன்

 .


சென்ற சனிக்கிழமை 09 மார்ச் 2024 அன்று வேம்படி மகளிர் கல்லூரி சிட்னி கிளையினர் நடாத்திய நிகழ்ச்சியை பார்க்க சென்றிருந்தேன். தமிழ்நாட்டு பாடகர்கள், இலங்கை பாடகி இவர்கள் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்கின்றார்கள் என்ற அறிவிப்பால் இந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன் நிகழ்ச்சி 6 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சற்று முன்னதாகச் சென்றால் இருக்கைகள் மேடைக்கு அண்மையில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதனால் சற்று முன்னதாகவே செல்வோம் என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்கின்றபோது 5 மணி 40 நிமிடங்கள் ஆகிவிட்டது. உள்ளே சென்றால் மண்டபம் ஏறக்குறைய நிறைந்தே காணப்பட்டது மண்டபத்தின் பிற்பகுதியில் தான் இடம் காணப்படட காரணத்தினால் அதிலே அமர்ந்து கொண்டோம் ஆவலோடு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று பார்த்துக் கொண்டிருந்தால் மண்டபத்திலே குளிர் ஊட்டியை காணவில்லை. மண்டபம் ஒரே வெக்கையாக காணப்பட்டது. ஒரு சில நிமிட நேரங்களில் எங்களுக்கு அண்மையாக மின்விசிறி வைக்கப்பட்டது. அந்த மின்விசிறி எத்தனை பேருக்குத்தான் காற்றை கொடுக்கும். ஆக அந்த வெக்கையான மண்டபத்துக்குள்ளே இருந்தோம். அறிவிப்பாளரான மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் அறிவிப்பை சரியான நேரத்துக்கு தொடங்கினார். அவர் அறிவிப்பை தொடங்கும் போதே நகைச்சுவையாகவும் அதேபோல உண்மையை சொல்ல வேண்டும் என்ற காரணத்துக்காகவும் இன்று இந்த நிகழ்ச்சி மிகவும் சூடான நிகழ்ச்சியாக இருக்கப் போகின்றது, ஆகவே இந்த நிகழ்ச்சியை சுடச்சுட பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதை குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் இன்று குளிரூட்டி இந்த மண்டபத்திலே வேலை செய்யவில்லை என்று அறிய தந்திருக்கின்றார்கள், அதற்காக மனம் வருந்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். என்ன செய்வது இப்படியான நிகழ்வுகள் நடத்துனர்களுடைய கையில் இல்லை தானே சரி பொறுத்துக் கொள்வோம் என்று நம்மையே நாம் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தோம். 


சப்தஸ்வரா இசை குழுவினருடைய இசையிலே இந்த நிகழ்வு இடம்பெற்றது சப்தஸ்வரா இசைக் குழு திரு பாலா அவர்களின் இசை குழுவாக இருந்தது. நீண்ட காலங்கள் இந்த இசைக் குழுவை சிட்னி மேடைகளிலே நாம் காண முடியாமல் இருந்தது மீண்டும் அந்த இசைக் குழு இந்த நிகழ்விலே ஆரம்பமாகி இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது. பாலாவை மேடையிலே பார்த்தது உண்மையிலேயே மகிழ்ச்சி, சிறப்பான இசை நிகழ்வுகளை தருவார் என்று நம்பலாம்.


அந்த இசைக் குழுவின் ஆரம்ப இசை முடிந்ததன் பின்பு இந்திய பாடகி ரக்க்ஷிதா அழைக்கப்பட்டார். நிகழ்விலே முதல் பாடல் மக்களை கட்டி போட வேண்டும், அப்படி ஒரு பாடகர் மேடையிலே வந்திருக்க வேண்டும் ஆனால் ரக்க்ஷிதாவினுடைய முதல் பாடல் என்னைப் பொருத்தளவில் பெரிதாக கவர்ந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலையும் பாடுகிறார். உண்மையிலேயே ரக்க்ஷிதா மேற்கத்திய இசை பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையானவர், அவருடைய குரல் வளத்திற்கு அந்தப் பாடல்கள் மிக நன்றாக இருக்கும் ஆனால் மேடையிலே அவர் வந்து தந்த பாடல்கள் அவருடைய குரலுக்கு மெருகூட்டக்கூடிய வகையிலே அமையவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அடுத்து பவதாயினி வந்திருக்கிறார் சத்திய பிரகாஷ் இருக்கின்றார் என்று ஆறுதலாகவும் இருந்தது.

முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் --- வாசிப்பு அனுபவம் - நவஜோதி ஜோகரட்ணம் - லண்டன்.

 .

உலகம் பூராகவும் சினிமாக் கதையைக் கேட்பதும், சினிமாவைப்பற்றிப் பேசுவதும், அதனைப் பார்ப்பதும் மக்களிடம் அதிமாகிக் கொண்டே இருக்கின்றது.

சினிமாக்காட்சிகள் மனித மனதில் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தகையதொரு வலிமையான சாதனமாக நாம் சினிமாவைப் பார்க்கலாம்.

உண்மையில் ஒரு பயங்கரமான செய்தியை பத்திரிகையில் படிக்கும்போது , அதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துபோய்விடுவோம். ஆனால்,  அதே செய்தியை , அந்தக் கதையைக் காட்சியாக்கி, மனித மனதை ஆராய்ந்து கலையாக மாற்றப்பட்டு  திரைப்படமாகப் பார்க்கும்போது வலிமையான ஊடகமாகிவிடுகின்றது. உணர்ச்சிகள் மேலோங்கி அவை ஒரு திகைப்பை ஏற்படுத்திச் சாதனை படைத்துவிடுகின்றது.

       அந்தவகையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இலக்கியப்பணியை வேகமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் என்ற நூலைப் பார்த்ததும், அவருக்கு  சினிமாவைப்பற்றியுமா  தெரியும்? ! என்று யோசித்து வாசித்தேன்.

அவருக்கென்றே உரிய அழகான எழுத்து நடையில் மிகுந்த சுவாரசியமான செய்திகளோடும், நினைவுகளைச் செதுக்கும் புகைப்படங்களோடும்  இந்த நூல் காணப்பட்டது.

யாழ். ஜீவநதியின் 274 ஆவது வெளியீடாக 2023 இல் வெளிவந்திருக்கும் இந்நூல்,  பதினாறு  தலைப்புக்களுடன் 128 பக்கங்களைக் கொண்ட அடக்கமான நூலாகச் சிறப்புச் சேர்த்திருந்தது.

அன்பாலயம் வழங்கும் "இளம் தென்றல் 2024" - 06.04.2024

 .




ஆயுர்வேத மருத்துவர் வி.ரி இளங்கோவன், ஆக்க இலக்கியவாதியான கதை ! - முருகபூபதி

 .

ஆயுர்வேத மருத்துவர் வி.ரி இளங்கோவன், ஆக்க இலக்கியவாதியான கதை ! இலங்கை - இங்கிலாந்து தமிழ் இலக்கிய நிறுவகங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் ! ! 









பிரான்ஸில்  புகலிடம்பெற்றுள்ள  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனை,   யாழ்ப்பாணத்தில்  அரை நூற்றாண்டுக்கு முன்னர் நான்  முதல் முதலில்  சந்தித்தபோது,  அவர்   சீனச்சார்பு  கம்யூனிஸ்ட்டுகளின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர்.

அத்துடன்  சிறுகதை,  கவிதை,  கட்டுரை,  பத்தி  எழுத்துக்கள், விமர்சனங்கள்   எழுதியவர்.  கட்சியின்  தொண்டனாகவே தோழர்களுடன்  ஊர்சுற்றியவர்.  தனக்கென  ஒரு கிளினிக்கை   யாழ்ப்பாணத்தில்   தொடங்கியிருந்தாலும்,  நோயாளருடன்  நேரத்தை செலவிடவில்லை.   அவரது  வாழ்க்கை   கட்சித்தோழர்களுடனும்    இலக்கியவாதிகளுடனுமே   நகர்ந்தது.

  கலை,  இலக்கியக் குடும்பத்திலிருப்பவர். அவருடைய  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்.   துரைசிங்கம்   மற்றும்  ஒரு  எழுத்தாளர்.  சட்டத்தரணி   தமிழ்மாறன் அரசியல்  ஆய்வாளர்.    இளங்கோவனின்  மனைவி  பத்மா  சிறுவர் இலக்கியம்  படைப்பவர்.  இளங்கோவனின்   புதல்வி  ஓவியா  திரைப்படத்துறையில்  தொகுப்பாளர்.

1983  ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நாடாளாவிய  ரீதியில்  பாரதி  நூற்றாண்டு  விழாவையும் பாரதி   நூல்களின்   கண்காட்சியையும்  ஈழத்து  எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது.  இக்கண்காட்சிக்குழுவில்   நான்   இருந்தேன்.  முதல்  விழா  கொழும்பில்  தொடங்கியது.

முற்போக்கு   இலக்கிய  முகாம்  இரண்டாகப் பிளவுபட்டிருந்த  காலம். டானியல்,    அவரது  மச்சான்  ரகுநாதன்,   இளங்கோவன்,  சில்லையூர் செல்வராசன்,   புதுவை   ரத்தினதுரை,  தேவி  பரமலிங்கம்,  பொன். பொன்ராசா,   நல்லை   அமிழ்தன்,   நந்தினி  சேவியர்,  டானியல் அன்ரனி,   இராஜா   தர்மராஜா  ஆகியோர்  இணைந்து திருகோணமலையில்  ஒரு  மாநாட்டை  நடத்தியிருந்த  காலம்.

என் கடமை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

தமிழில் மர்மக் கதைகள், துப்பறியும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள் குறைவு எனலாம். ஆனால் 1964ம் ஆண்டு நான்குப் படங்கள் சஸ்பென்ஸை கருவாகக் கொண்டு படமாகி வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புதுமைதான். அம்மா எங்கே, புதிய பறவை, பொம்மை , என் கடமை என்று ஒரே ஆண்டில் நான்கு படங்கள் வெளியாகின. 


இதில் நடேஷ் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் உருவான படம் தான் என் கடமை. மன்னாதி மன்னன் என்ற சரித்திர கதையை தயாரித்து இயக்கிய எம்.நடேசன் தனது அடுத்த படமாக இதனை எடுத்தார். இரண்டு படங்களிலும் ஹீரோ எம் ஜி ஆர்தான். அதில் சரித்திர உடையணிந்து கிரீடமும், வாளும் தரித்து வந்தவர் , இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையணிந்து தலையில் தொப்பி, இடுப்பில் துப்பாக்கியுமாக காட்சியளித்தார்.

படத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக சண்டைக் காட்சியுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாதனால் காப்பாற்றப் படும் கணவனை இழந்து குழந்தையுடன் தவிக்கும் கமலா தனது மாமனாரை பார்த்து வாழ்வாதாரம் கேட்டு வருவதாக ஊருக்கு புறப்படுகிறாள். அதன் பின் அவளை பற்றி எவ்வித செய்தியும் கிடைக்காத காரணத்தால் அவளைத் தேடி ஊருக்கு ரயிலில் செல்லும் நாதன் , கூட தன்னுடன் பயணிக்கும் சரசுவின் அறிமுகத்தை பெறுகிறார். அதே வேளை வழியில் ஒரு கொலையையும் பார்த்து விடுகிறார். கொலை செய்யப்பட்டவள் கமாலாவாக இருக்குமோ என்ற சந்தேகம் காரணமாக அவளின் மாமனார் தர்மலிங்கத்தை சந்தேகித்து , சந்திக்க முயற்சி செய்கிறார்.தர்மலிங்கத்தின் மகள் தான் சரசு என்றறிந்த நாதன் ஆங்கில நடன ஆசிரியராக மாறு வேடத்தில் அவர்களை சந்திக்கிறார். அங்கே அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது!

இவ்வாறு அமைந்த படத்தின் கதை வசனத்தை மா ரா எழுதியிருந்தார். படத்தில் ஒரு காட்சியில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிபதற்காக சரோஜாதேவியை தான் காதலிப்பது போல் நடித்ததாக எம் ஜி ஆர் சொல்வார். இதற்கு சில மாதங்கள் கழித்து வெளிவந்த புதிய பறவை படத்தில் சரோஜாதேவி , சிவாஜியிடம் இதே போல் சொல்வார். வட் எ கோ இன்சிடென்ட்! 
  
வசனங்களில் குறை வைக்காத மா ரா நகைச்சுவை வசனங்களிலும் அசத்தியிருந்தார். நகைச்சுவை காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி அமைந்தன. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இசையமைத்தனர். சும்மா சொல்லக் கூடாது பாடல்கள் அனைத்தும் சூப்பர். ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் எங்கே போறிங்க , யாரது யாரது தங்கமா, நில்லடி நில்லடி சீமாட்டி, மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா , தேனோடும் தண்ணீரின் மீது ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனதில் அப்படியே இடம் பிடித்தன.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 36

 .

“சட்டநாதன் புனைவுகள் :  உரையாடல்

 

நாள்:         சனிக்கிழமை 30-03-2024       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

உரை நிகழ்த்துவோர்:

கலாநிதி தி.செல்வமனோகரன்

திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்

கலாநிதி சு.குணேஸ்வரன்

திறனாய்வாளர் சி.ரமேஷ்

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

www.ilakkiyaveli.com

 


 

எழுத்தாளர் முனைவர் பெருமாள் முருகனுடன் சிறப்பு விருந்தினர் சந்திப்பு - த .நந்திவர்மன்

 .

பல்லாயிரம் எழுத்தாளர்களைக் கண்ட பெருமையை உடையது தமிழ் எழுத்துலகம்.  குறிப்பாகச் சமூக வலைத் தளங்களின் வருகையின் பின்னர் எழுதுபவர்களின் தொகை அதிகரித்துவிட்டது.  தமிழ் மொழிக்கு இது பெருஞ்சிறப்புத்தான்.

ஆனாலும் வாசகர்களின் மனதை ஒரு சில எழுத்தாளர்களே கவர்ந்து கொள்கின்றார்கள்.  அந்த வரிசையில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்து வருபவர் முனைவர் பெருமாள் முருகன் அவர்கள்.

அவுத்திரேலிய அரசின் அழைப்பில் அடிலேய்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவரை அன்பர்கள் அப்படியே சிட்னிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல தமிழ் இலக்கியப் பணிகளைச் சளைக்காமல் சிட்னியில் செய்து வரும் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒரு சிறப்பு விருந்தினர் சந்திப்பினைச் சிட்னியில் சென்ற சனிக்கிழமை 9 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

முனைவர் பெருமாள் முருகனுடைய நாவல்கள் பல பல்வேறு மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  இந்திய மொழிகளைத் தாண்டி ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன் மொழிகளும் இதனில் அடக்கம்.  அவருடைய எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கவில்லை.  இருந்தாலும் எத்தனையோ மொழிகளிலே இவருடைய நாவல்கள் வெளிவந்திருப்பதால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு என்னை உந்திற்று.

அந்த உந்துதலால் இந்தச் சந்திப்ப்புக்குச் சென்றிருந்தேன்.  அது வீண்போகவில்லை.  மிகவும் பயனுள்ள ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.

தாமரைச்செல்வியின் "சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு" – ஓர் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர்

 .

தாமரைச்செல்வி அவர்கள் எழுதிய `சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு தொகுப்பில் இடம்பெறும் அனேகமான கதைகள் – போரின் அழிவு, இடப்பெயர்வில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள், காணாமல் போனவர்கள், பிரிவால் வாடும் உறவுகள், அங்கவீனமானவர்களின் வாழ்க்கை – என்பவற்றைச் சொல்கின்றன.

தொகுப்பின் முதல் கதை `யாரொடு நோவோம்’, மனித மனங்களின் இரண்டக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் கதை. போர் உயிர் இழப்புகளை, அழிவுகளை மாத்திரம் செய்யவில்லை. உறவுகளை உணர்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரித்துப்போட்டும் விடுகின்றது. ஒரு பெண் விரும்பி ஒருத்தனோடு ஓடிப் போய்விடுகின்றாள். அவர்களையும் மீறி ஒரு இடப்பெயர்வு அவர்கள் இருவரையும் பிரித்து விடுகின்றது. நான்கு வருடங்களாக அவனைத் தேடி அலைகின்றாள் அவள். அவன் இறந்து போயிருக்கக்கூடும் என்று எண்ணி---ஒரு ஊகம் தான்--இன்னொருவனை மணந்து கொள்கின்றாள். ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் தொலைந்துபோன அவன் திரும்பி வருகின்றான். அவள் மறுமணம் செய்துகொண்ட அதே காலப்பகுதியில், தானும் இன்னொரு திருமணம் செய்துவிட்டதாக அவன் சொல்கின்றான். அவசர உலகம், அவசர முடிவுகள். நவீன உலகில் ஒவ்வொருவரும் தத்தமக்கு எது சரியெனப்படுகின்றதோ அதைச் செய்துகொண்டு அவரவர் வழியில் போய்விடுகின்றார்கள். அவ்வளவுந்தான்.

`அவனும் அவளும்’ நிறைவேறாத விடலைப் பருவத்துக் காதலைச் சொல்கின்றது. `அண்ணா அண்ணா’ என்றழைக்கும் இடம்பெயர்ந்து வந்த பெண் ஒருத்தியின் மீது அவனுக்குக் காதல். அது நிறைவேறாமல் லண்டன் சென்று இன்னொரு பெண்ணை மணந்து கொள்கின்றான். புதியவள் கருணையின் வடிவம். ஊரிலே கஸ்டப்படுகின்றவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்பவள். உதவி செய்வதற்காக அவர்கள் ஊருக்கு வந்தபோது, அவன் முன்பு விரும்பிய பெண்ணுக்கும் உதவி செய்யவேண்டி வருகின்றது. சிறுவயதில் தன்னை `அண்ணா அண்ணா’ என்று அழைத்த அந்தப் பெண்ணுக்கு தான் ஒரு அண்ணாவாகவே இருந்திருக்கலாமோ என்று ஏங்குகின்றான் அவன். கதையின் இடைப்பகுதிலேயே முடிவை ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியத்தில் பெண்களின் வகிபாகம் - முருகபூபதி

 .

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு,  எழுத்தாளர் லெ. முருகபூபதி, 
அவுஸ்திரேலியா  " விக் தமிழ்   "  காணொலி ஊடகத்தில் பதிவுசெய்த,   " அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியத்தில் பெண்களின் வகிபாகம்   " என்னும் தலைப்பில் அமைந்த உரை. 


https://youtu.be/uBx-LeIRkvc?si=EqQeWQtci7za0vxT

DEVI KAMAKSHI MANDIR - March 2024 Mandir important events

 .








March 6 (Wednesday) 4 p.m. to 6:30 p.m.: Ekadasi Acchidra Aswamedha Parayanam 
March 7 (Thursday): Periyavaal Sri Vijayendra Saraswathi Swamigal Jayanthi
March 8 (Friday): Maha Shivaratri Pooja conducted by Sri Vanamali Satsang <private function>
March 20 (Wednesday) 4 p.m. to 6:30 p.m.: Ekadasi Acchidra Aswamedha Parayanam 
March 22 (Friday): Periya Periyavaal Sri Jayendra Saraswathi Swamigal Aradhanai
March 22 (Friday), March 23 (Saturday) and March 24 (Sunday): Maha Rudram (coinciding with Periya Periyavaal’s Aradhanai)
March 24 (Sunday): Pournami pooja

*All are requested to be a part of the functions and beget the blessings of Sri Devi Kamakshi and the Acharyas.*