அந்த மழை நாள் - செ .பாஸ்கரன்

.

சாரல் மழையில் நனைந்த காற்று 
குளிரை சுமந்து வருகிறது 
கூரையில் விழும் மழையின் தூறல்கள்  
புதிய சந்தமிசைக்கிறது 
மனது மத்தாளம் கொட்ட 
மழையில் நனைகிறேன் 
அன்று நீ மழையில் நனைந்தபடி 
புன்னகைத்தது போலவே 
புதிதாய் மலர்ந்த பூக்களும்  
புன்னகைத்து நனைகிறது 
நீயும் நனைந்தாய் 
நானும் நனைந்தேன் 
இன்று உன் நினைவுகள் 
மழை நீராய் வழிகிறது.


சிட்னியில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் - செ .பாஸ்கரன்

.

அமரர் கல்கி இரா கிரிஷ்ணமூர்த்தியின் சிவகாமியின் சபதம் நாவலை வாசித்து ரசித்தவன் நான் பலகால ஆண்டு இடைவெளிகளுக்குப் பின்பு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் விஜி ஈழலிங்கத்தின்  இலக்கிய இன்பத்தில் ஒலிவடிவாக வெளிவந்தபோது கேட்டதுடன் அந்த ஒலிப்பேழையை தேடி வாங்கியும் கேட்டு மகிழ்ந்தேன்.

அந்த காவியம் நாட்டிய நாடகமாக சிட்னி இசைவிழாவில் சனிக்கிழமை இடம்பெற்றபோது பார்க்கக் கிடைத்தது. நான் நினைத்தும் பார்த்திராத விதத்தில் சிவகாமியின் சபதம் மிக அற்புதமாக மேடையேற்றப்பட்டது .
முதலில் நான் நன்றிசொல்வது திரு ஜெகேந்திரனுக்குதான், அவர் நினைத்திருக்காவிட்டால் இதை இங்கு பார்த்திருக்கவே முடியாது .

மகேந்திர பல்லவனாக வந்த ஸ்ரீபாலன், மாமல்லன் நரேந்திர பல்லவனாக வந்த விபூஷன், நாகனந்தியாகவும் புலி கேசியாகவும் வந்த மதுரை முரளிதரன், சிவகாமியாக வந்த காவியா  முரளிதரன், நாவுக்கரசராக வந்த மனோகரன் , ஆயனச் சிற்பியாக வந்த சென்னை சுரேஷ்  , பரம்சோதியாக வந்த நடா கருணாகரன்  என்று அனைவருமே போட்டி போட்டுக்கொண்டு  நடித்தார்கள் ஒருவருக்கொருவர் சோடை போகாத நடிப்பு .அற்புதமாக இருந்தது.

உள்ளூர் கலைஞர்களின் நடிப்பும் ஆடலும் அருமையாக இருந்தது .குறிப்பாக நடன ஆசிரியர் சுகந்தி தயாசீலன் அவரின் மாணவிகள் மற்றும் எமது ஈழத்துக் கலைஞர் சர்மாவும் அவரது நண்பர்களும் பல திறமைகளை வெளிக்காட்டினார்கள் 

சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானம் இராகசங்கமம் 2 - தேவி பாலகங்காதரன்

.


சனிக்கிழமை இனிமையான மாலைப்பொழுதில் சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானமும் சப்தஸ்வரா இசைக்குழுவும் நடாத்திய இராகசங்கமம் 2  நிகழ்ச்சியை பார்த்து ரசித்தேன். மண்டபம் நிறைந்த மக்கள், நிகழ்ச்சியை துர்க்கை அம்மன் கோயில் தலைவரும் அவரது பாரியாருமான திரு திருமதி மகேந்திரன் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.  சிட்னிக்கு நன்கு அறிமுகமான பாவலன் ஆயகலைகள் என்ற பாடலை மிக அழகாக பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். சப்தஸ்வரா இசைக்குழுவினர் அம்மன் துதிபாடி சபையோரைப் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தினர். மகேஸ்வரன் பிரபாகரன் அறிவிப்பாளராக அரங்கு வந்து போட்டியை நடாத்தினார். போட்டிக்கு முன்பாக முரளியும் மாதுமையாளும்  அற்புதமாக முதலில் பாடினார்கள்.

நடுவர்களாக அருணா பார்த்தீபன், செல்வகுமார் டேவிட், ஐஸ்வரியா மட்ராஸ் சுப்ரமணியம் செயற்பட்டனர். சுவேதா சுரேஸ்குமார் போட்டியை உடலையே இசையாக்கி கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலை பாடி அவையினரை மகிழ்வித்தார். இரண்டாவதாக காற்றோடு குழலின் நாதமே என்ற பாடலை கண்ணில் இசையபாயப் பாடி சபையோரை இசையில் ஆழ்த்திவிட்டார் விஜயாள் விஜய். மூன்றாவதாக ஜதுசன் ஜெயராசா இசையமைதியுடன் சாந்தரூபமாக இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்ற பாடலைப்பாடி சிட்னிக்கு இசையில் அருந்சாதனை செய்துவிட்டார்.


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இயல்புகளும்    வாழ்க்கைப்பின்னணியும்   மனிதர்களின்   விதியை தீர்மானிக்கும்
அனைத்துக்கும்   காலம்   பதில்  சொல்லும்                                                          
                                                          இலங்கையில்   ஹெல உருமைய   பொதுபலசேனா  முதலான அமைப்புகளின்   இனவாதப்பேச்சுக்களும்   செயற்பாடுகளும்   இன - மத நல்லிணக்கம்   இன  ஒருமைப்பாடு   குறித்து  சிந்திப்பவர்களுக்கு சவாலாகவே   தொடருகிறது.
நாடும்   வேண்டாம்   அரசும்   அரசியலும்   அதிகாரமும்    வேண்டாம் என்பதுடன்  நில்லாமல்    இல்லறத்தையும்   துறந்து   வனம்   சென்று நீண்டநாள்   நிஷ்டையிலிருந்து  நிர்வாணம்   எய்தி   அன்புமார்க்கத்தை போதித்தவர்    கௌதம  புத்தர்.    துறவறத்திற்கு  முன்னர்  அவர்  ஒரு  மன்னர்.    அவரால்    தோற்றம்  பெற்ற   பௌத்த மதத்தில்  தமிழர்களும் இருந்திருக்கிறார்கள்.
பகுத்தறிவுவாதியும்   உளவியல்   பேராசிரியரும்   திரைப்பட  நடிகருமான (பாரதிராஜாவால்  அறிமுகப்படுத்தப்பட்டவர்)   பெரியார்  தாசன்  அவர்களை சில   வருடங்களுக்கு   முன்னர்   அவுஸ்திரேலியாவுக்கு   அவர்  வருகை தந்தபொழுது    சந்தித்திருக்கின்றேன்.
அவரது   மூதாதையர்கள்   பௌத்தர்கள்   என்று   சொன்னார்.
அன்பு   மார்க்கத்தையே   பௌத்த மதம்   உட்பட   அனைத்து   மதங்களும் போதித்து   வருகின்றன.  இலங்கையில்  தற்காலத்தில்    தீவிரமாக    இனவாதம்   பேசும்   பௌத்ததுறவிகள்   அடங்கிய   இயக்கங்கள்  அதனைச்சரியாகப்புரிந்துகொண்டிருந்தால்    இலங்கையில்   மத - இனநெருக்கடி    போருக்குப்பின்னரும்   நல்லிணக்கத்திற்கு   சவாலாக இருந்திருக்கமாட்டாது.

அண்ணை எங்கே’ – முடிவில்லாத நாடகம் - பராசக்தி சுந்தரலிங்கம்

.
இன்று முள்ளிவாய்க்கால் ஐந்தாவது நினைவு நாள்.
காட்சிகள் மாறுகின்றன, ஆனால் நாடகம் முடியவில்லை.
இந்த முடிவில்லாத நாடகத்தின் சில சேதங்களை
இளைய பத்மநாதனின் ‘அண்ணை எங்கே’  ’ மீண்டும் நிகழ்த்தியது.
சேதம் எனப்படுவது யாதெனில்   தெரிந்த முழுக் கதையிலிருந்து சேதித்து எடுக்கப்பட்ட ஒரு கட்டம். இவ்வாறான சில சேதங்கள்  மறைந்த உறவுகளைத் தேடும் பொருளாகக் கொண்டு ‘அண்ணை எங்கே’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.என்று விளக்குகிறார் இளைய பத்மநாதன்
மேலும் ‘அண்ணை எங்கே’ ஒரு ‘தொகைநிலை நாடகக் கூத்து’ என வகைப்படுத்துகிறார்.
‘தொகைநிலை’ என்பதற்குத் தண்டியலங்காரம் விளக்கம் கூறும்:
 தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
 ஒருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
 பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
 பாட்டினு மளவினும் கூட்டியவாகும்.
கதை தழுவிப் பாடி ஆடல் நாடகக் கூத்து என்பதாம்.
கடத்தல், கைது, கொலை, காணாமல் போதல் என அச்சமும் சோகமும் நிறைந்த வாழ்க்கையும் அதில் இருந்து விடுபடப் போராடுவதும் ஆறு சேதங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன.
மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் காட்சி தொடங்குகிறது.
அன்ரிகனி என்பாள் தன் அண்ணன் உடலைப் புதைக்கப் போராடிய கிரேக்க நாடகம்
சங்ககால மன்னன் ஆஅய் எயினன் உடலைப் பறவைகள் மூடிய கதை
இன்றைய சோக வரலாறு ‘பாலன் படுகளம்’
அரிச்சந்திர மயானகாண்டம் சந்திரமதி புலம்பல்
என இடைவிடாது காட்சிகள் ஒன்றுக்குள் ஒன்றாய்த் தொடர்கின்றன.
மீண்டும் மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவில்லாமல் தொடர்கிறது.
நாடகம் இங்கும் முடியவில்லை,அங்கும் முடியவில்லை.

அந்தர(ங்க)த்தில் மழை -ஷ்ரேயா

 .

டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

Nantri http://mazhai.blogspot.com.au/

சங்க இலக்கியக் காட்சிகள் 11 - செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

உடல் தேரிலே உள்ளம் ஊரிலே!

அரசாங்க அலுவல் காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்த தலைவன் அலுவல் முடிந்ததும் தேரிலே சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறான். குதிரைகள் தேரை வேகமாக இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. தேரின் பின்னால் படைவீரர்களைக் கொண்ட சிறிய சேனையொன்றும் வந்துகொண்டிருக்கின்றது. அந்த வீரர்கள் ஓட்டமும் நடையுமாகத் தேரைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குக் களைப்பும், சோர்வும் ஏற்படுகின்றது. அதனை நன்குணர்ந்த தலைவன் படை வீரர்கள் தேரைத் தொடர்ந்து வரத் தேவையில்லை என்றும்ää தேவையானபோது இடைக்கிடையே இளைப்பாறி, தங்கள் உடைகளைத் தளர்த்தி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தேரோட்டி மூலமாகச் சொல்கின்றான்.

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே -சந்திரிகா சுப்ரண்யன்

.
சிட்னியில் சிவகாமியின் சபதம்


அமரர் கல்கியின் அழியாக் காவியமானசிவகாமியின் சபதம்’ - இப் புதினத்தை  ஐம்பது , அறுபதுகளில் வாசிப்பைத் தொடங்கியவர் எவருமே  வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி  (1899-1954  ) எழுதி 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த கதை இது.
ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு சார்ந்த புதினம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் பல்லவ  இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவன் ஒரு சிற்பியின் மகளிடம் கொண்ட காதல், அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது கருப் பொருளாக உள்ளது.
மனதினை விட்டு இன்றும் அகலாத, காலத்தை வென்ற கதா பாத்திரங்களான   மகேந்திர பல்லவர், அவர் மகன் நரசிம்ம பல்லவன்(மாமல்லர்) சிற்பி ஆயனர், அவர் மகள் சிவகாமி , புலி கேசி, அவன் சகோதரன் பிட்சு நாக நந்தி என முக்கிய கதை மாந்தர்கள். மாமல்லரால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி மாமல்லபுரமாக இன்றும் பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களைக் கொண்டு நிற்கிறது. 


இலங்கைச் செய்திகள்


செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை

சீரற்ற காலநிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 44 ஆயிரத்து 91 பேர் பாதிப்பு

மாத்தறையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியது

 ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும் : மோடியுடனான சந்திப்பில் ஜெயலலிதா

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு

மொரட்டுவை விடுதியிலிருந்து வடபகுதி இளைஞர்கள் 13 பேர் கைது

புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
================================================================

செங்கலடி இரட்டைக் கொலை: 4ஆவது எதிரி தவிர்ந்த மூவருக்கு பிணை


02/06/2014  மட்டக்களப்பு செங்கலடி வர்த்தகர்களான சிவகுரு ரகு அவரின் மனைவியான சுந்தரமூர்த்தி விப்ரா இரட்டைக்கொலை வழக்கின் நான்கு எதிரிகளில் மூவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நான்காவது எதிரியான மேற்படி தம்பதியரின் மகளான ரகு தலக் ஷனாவின் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி. சந்திரமணியினால் இதற்கான தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக தம்பதியினரான ரகு விப்ரா இருவரும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட ஏறாவூர் பொலிஸார் எஸ். அஜத், கு. நிலக்சன், பு. சுமன், ஆர். தலக் ஷனா ஆகியோரை கைது செய்ததுடன் அவர்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல்

பெண் மீதான திறந்தவெளி வன்முறை - - கவிதா முரளிதரன்

கழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும் ஆகப் பெரிய வன்முறை
உத்தரப் பிரதேசத்தின் கதாரா கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மிக விரைவில் கழிப்பறைகளைக் கட்டித்தரப்போவதாக அறிவித்திருக்கிறது சுலப் இண்டர்நேஷ்னல் என்கிற அமைப்பு. இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தருவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், கதாரா கிராமத்துக்கு அவசர அவசரமாகக் கழிப்பறைகளைக் கட்டித்தரக் காரணம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில்தான் மிகச் சமீபத்தில் பதின்வயதைத் தாண்டாத இரண்டு பெண்கள் கொடூர மாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்க விடப்பட்டார்கள். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத அவர்கள், இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வெளியேறியதால்தான் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்களில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், இதுபோல கழிப்பறை வசதியில்லாத நிலையில், பெண்கள் வெளியே வரும்போது நிகழ்த்தப்படுவதாகத் தரவுகள் சொல்கின்றன.

சிட்னி முருகன் ஆலயத்தில் சேக்கிழார் குருபூசை 02.06.14

.

கலைஞனின் நாட்கள்

.
எனது கர்ணமோட்சம் குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர் கிராபியன்பிளாக் எழுதிய கட்டுரை.
***
கலைஞனின் நாட்கள் – கிராபியன் பிளாக்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் உருவான “கர்ண மோட்சம்’ தமிழ் குறும்படச் சூழலில் மிக முக்கிய பதிவு. அதற்கு இக்குறும்படம் பெற்றிருக்கும் எண்ணற்ற விருதுகளே சான்று!லகமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பொருளாதரமற்ற கலைஞனின் நாட்கள், போரின் நாட்களை விடவும் மோசமானவை. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும்பாடாய் போன இச்சமூகத்தில் கலைஞனின் இருப்பு அரிய பொக்கிஷம்தான்.
ஒவ்வொரு கலைஞனின் கனவும் தான் பிறந்த தேசம் தன் படைப்பை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட வேண்டுமென்பது இல்லை. தன்னை அங்கீகரிக்க வேண்டுமென்பதுதான். ஆனால், மாற்றாக சமூகம் அவன் உயிரோடிருக்கும்போது அவனை பட்டினி போட்டு, அகண்ட தெருக்களின் ப்ளாட்பாரங்களில் தங்கவைத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவனை நிர்மூலபடுத்தி சமூகத்தின் விளிம்பு நிலையில் தள்ளி, அவன் வாழ்வை சூறையாடி விடுகிறது. மரணத்திற்குப் பிறகான நாட்களில்தான் அவனது படைப்பை சமூகம் கண்டு கொள்கிறது அல்லது ஒவ்வொரு படைப்பும், படைப்பாளியின் இறப்பிற்குப் பிறகே அடையாளப்படுத்தப்படுகிறது. படைப்பாளி இல்லாத சூழலில் படைப்பை போற்றி, புகழ்வதால் கிடைக்கும் சந்தோஷங்கள் அற்பமானவை. நிறந்தரமற்றவை.

மயானத்திலுள்ள தமிழர்களின் சமாதிகள் சேதம்

.

திருகோணமலை, அன்புவழிபுரம் பொது மயான சமாதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்களடங்கிய கல்வெட்டுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன. 

குறித்த கல்வெட்டுக்களிலுள்ள பெயர்கள், விரங்கள், மற்றும் புகைப்படங்கள் என்பவையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து, திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் ஆகியோர் சனிக்கிழமையன்று (31) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். 

உலகச் செய்திகள்


அமெரிக்கப் படைவீரரை கையளிப்பதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி : தலிபான் போராளிகளால் வெளியீடு

நைஜீரியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி
நைஜீரிய கிராமங்களில் போகோ ஹராம் போராளிகள் தாக்குதல்; 30 பேர் பலி

அமெரிக்கப் படைவீரரை கையளிப்பதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி : தலிபான் போராளிகளால் வெளியீடு

04/06/2014 ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களாக தலிபான் போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரரான போவ் பேர்கடாஹ்லை அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கும் வீடியோ காட்சியை போராளிகள் வெளியிட்டுள்ளனர்.

கௌதமாலாபேயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக மேற்படி அமெரிக்க படை வீரரை போராளிகள் சனிக்கிழமை விடுதலை செய்துள்ளது. 
படைவீரரை விடுவிப்பதற்கு பதிலாக கௌதமாலாவிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அந்த கைதிகளின்  விடுதலையானது அமெரிக்கர்களது வாழ்வை அபாய நிலைக்குள் தள்ளக்கூடியது என அமெரிக்கக் குடியரசு கட்சியினர் எச்சரித்துள்ளனர்
நன்றி வீரகேசரி


‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்



.
சில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க இன்னும் கூடுதல் அழகு பெறும். கே.வி. மகாதேவன் என்ற மேதை இதையமைத்த இந்தப் பாடல், காட்சியாக்கப்பட்ட விதம், அத்தகையதே.
தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்கு படமான ‘தில்லானா மோகனம்பாள்’ படத்தில் இடம் பெற்ற பாடல் இது. அநேகமாக இந்தப் பாடலில், இந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நாகேஷை தவிர எல்லோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பாடல்கள் மட்டுமல்ல, சிறந்த திரைக்கதை. மிகச் சிறந்த நடிப்பு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியம். படத்தின் கலர் இன்னொரு கூடுதல் அழகு.

கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள் -- by: சொக்கன்



அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன்.
கம்பனின் மீது தீராக் காதல் கொண்டு, அவனுடைய பாடல்களிலிருந்து உவமைகளையெல்லாம் நமக்குத் தந்துக்கொண்டிருப்பவர் தான் திருவாளர். அன்பு ஜெயா அவர்கள் தமிழ்ப் பந்தல்

 ஆஸ்திரேலிய நாட்டின் ஆளும் கட்சியினை திருவாட்டி. சந்திரிகா சுப்ரமணியம் எவ்வாறு விமர்சிக்கிறார் என்று இங்கு பாருங்கள் -சந்திப்போமா? சிந்திப்போமா?

பணத்தைப் பற்றிய ஒரு விரிவான அலசலை, திரு. பக்கிரிசாமி இங்கே தந்திருக்கிறார் ஊக்கமது கைவிடேல்

கானா பிரபாவான இவர், தான் சந்தித்த வலைப்பதிவாளர்களைப் பற்றி அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். உலா

பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்! 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம். 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,

தங்கை நடிகை ஆனார் ஆபீஸ் மதுலிமா!

.
3

Mathulima turn as Sister actress
ஆபீஸ் தொடர் மூலம் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி வைத்திருப்பவர் மதுலிமா. (லக்சுமி பாத்திரம் ) யாழ்ப்பாணத்து பொண்ணாக இருந்தாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அந்த சேனலில் மார்டன் உடை அணிய தடை என்பதாலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விஜய் டி.வியின் ஆபீஸ் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மதுலிமாவுக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவின் தங்கையாக நடிக்கிறார். விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக நடிக்கிறார். "தற்போது தங்கை வேடங்களில் நடித்தாலும் என் லட்சியம் எல்லாம் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் செல்கிறவர்கள் ஆரம்பத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்துதானே பெரிய இடத்தை பிடிக்கிறார்கள். நானும் பிடிப்பேன்" என்கிறார் மதுலிமா.

மகாபாரதம் 100 எபிசோட்கள் நீட்டிப்பு

.

Mahabaratham serial extend to another 100 episode
விஜய் டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மகாபாரதம். அதே எபிசோட் இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை 128 எபிசோட்கள் மட்டுமே தமிழில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இன்னும் 100 எபிசோட்கள் நீடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மகாபாரத்தின் தமிழாக்கம் செய்து வரும் செவன்த் சேனல் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிபு தலைவர் மகேஷ் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில்தான் இந்தி மகாபாரத்தை தமிழாக்கம் செய்து வருகிறோம். வசனகர்த்தா பாலகிருஷ்ணன் தலைமையில் 50 டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். முதன் முறையாக டப்பிங் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைத்து வருகிறோம். டப்பிங் கலைஞர்கள் பேச எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி நீட்டி குறுக்கி பேச வேண்டும் என்பதை டம்மியாக நாங்களே பேசி ரிக்கார்ட் செய்து அதனை டப்பிங் கலைஞர்களிடம் கொடுத்து விடுகிறோம்.

128 எபிசோட்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. மகாபாரதத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து மேலும் 100 எபிசோட்களை நீடிக்க சேனல் முடிவு செய்திருக்கிறது. நாங்கள் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்றார்.

உன் சமையல் அறையில்... - திரை விமர்சனம்

.

அதாகப்பட்டது... :

பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் வரும் படங்கள் என்றாலே தரமானவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரின் டைரக்சனில் வரும் படம், சால்ட்&பெப்பர் மலையாளப்பட ரீமேக், இசைஞானி, சிநேகா போன்ற சில விஷயங்களும் நம் எதிர்பார்ப்பை எகிற வைக்க, தியேட்டரில் நாம் ஆஜர். (இங்கே ஒருநாள் தாமதமாக ரிலீஸ்!).

ஒரு ஊர்ல..:
பிரகாஷ்ராஜ் ஒரு சாப்பாட்டுப் பிரியர். பெண் பார்க்கப் போனாலும், பஜ்ஜி சொஜ்ஜியை மட்டும் ரசிக்கும் முதிர்கன்னன்(!). டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகாவும் ஒரு முதிர் கன்னி. அவர்களுக்கிடையே ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல், நட்பாகி காதலாகிறது. இருவரும் சந்திக்க நினைக்கையில் ஒரு இளம்ஜோடியின் காதல் அவர்களைப் பிரிக்கிறது. இறுதியில் சேர்ந்தார்களா என்பதை சுவைபடக் கூறுவதே ‘உன் சமையல் அறையில்’.

உரிச்சா....:
கதைக்குப் பொருத்தமான தலைப்பு இதைவிட வேறு இருக்க முடியாது. முதல் காட்சியிலேயே பிரகாஷ்ராஜ் கேரக்டர் ‘சாப்பிடுவதற்காகவே வாழும் கேரக்டர்’ என்பதை செம காமெடியாகச் சொல்கிறார்கள். தொடரும் ‘இந்தப் பொறப்பு தான்’ பாடலில் ஆரம்பிக்கிறது நமக்குத் தீனி. பிரகாஷ்ராஜ் பெண் பார்க்கப்போகும் சீனில் ஆரம்பித்து, களை கட்டுகிறது தியேட்டர். சிநேகா தோசை கேட்டு பிரகாஷ்ராஜுக்கு ஹோட்டல் என நினைத்து ராங்-கால் செய்ய, தொடரும் மோதல் நட்பாவது அழகு. அடுத்து வரும் ‘ஜோன்’ஸ் கேக்’ செய்யும் சீகுவென்ஸ் காட்சிகளில் வரலாறுடன் காதலும் இருவருக்குமிடையே பரிமாறப்படுகிறது. ஒரு கேக் ரெசிப்பியில் காதல் உருவாவது அழகான கவிதை. முதல் பாதியில் பிரகாஷ்ராஜ்-சிநேகா காதலை விளக்கும் படம், இண்டெர்வெல்லில் இளம்ஜோடிக்கு ஷிஃப்ட் ஆகிறது.

இரண்டாம்பாதியில் இளம்ஜோடியின் காதல் வளர வளர, மூத்த ஜோடிக்கு ஆப்பாக அமைவது லாஜிக்கலாகவும் ஒத்துக்கொள்ள முடிகிறது. காதல் கோட்டை பீரியடில் ஹீரோவும் ஹீரோயினும் சேர்வார்களா எனும் தவிப்பை ஏற்படுத்தும் பல படங்கள் வந்தன. பின்னர் அவை ஓல்டு ஃபேசனாகி நின்றுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின் அதே ‘பார்க்காமலே காதல்’ சப்ஜெக், அதே தவிப்பை நமக்குள் ஏற்படுத்துவது தான் படத்தின் சிறப்பம்சம். இரு ஜோடிகளும் ஒரே காரில் தற்செயலாகப் பயணிக்கும் காட்சியில் நமக்கும் டென்சன் ஏறுகிறது.
தமிழில் சாப்பாடை மையப்படுத்தி வேறுபடங்கள் வந்தமாதிரித் தெரியவில்லை. வெறும் காமெடிக்கு மட்டுமே யூஸ் ஆன ‘சாப்பாட்டுப் பிரியன்’ மேட்டரை வைத்து, ஒரு உணர்வுப்பூர்வமான படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் பாசிடிவ் தான் என்றாலும் விஷூவலாக யோசிக்காமல், நீண்ட வசனம் மூலம் இணைவதாகக் காட்டியிருப்பது சற்றே பழைய உத்தி. ஆனாலும் இருவரும் இணையாமல் போனதற்கு முக்கியக் காரணம், தன் தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை தான் என்பதை விளக்கும் அந்த வசனங்கள் அருமை.

இளையராஜா:
நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜாவின் இசை ராஜாங்கம். நான்கு முத்தான பாடல்கள். இந்தப் பொறப்பு தான் பாடல் ருசிக்க வைக்கிறது என்றால் ஈரமாய் பாடலில் காதல் வழிந்தோடி நம்மை ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் ராஜாவின் பல நல்ல பாடல்களையும் காட்சிப்படுத்துவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஆனால் இதில் அந்த பாடல்களுக்கு இணையாக, காட்சிகளையும் ரசித்து ருசித்து எடுத்திருக்கிறார்கள். பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் இரு அருமையான இளம்ஜோடிப் பாடல்கள் வரும். அதே ஸ்டைலில் அதே இளமையுடன் தெரிந்தோ..தெரியாமலோ பாடல் வருகிறது. நான்காவது பாடலான காற்று வெளியில் இளையராஜாவின் குரல் தான் விசேஷம். பிண்ணனி இசையில் தான் மட்டுமே ராஜா என்று மீண்டும் நிரூபிக்கிறார் இசைஞானி.

பிரகாஷ்ராஜ்:
ஏற்கனவே வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கிறேன் என்று நம்மை ஒருவழி பண்ணியவர். எனவே மறுபடியுமா என்று பயம் வந்தது. சால்ட் அன் பெப்பர் ரீமேக் என்று தெரிந்தபிறகே நிம்மதியாக இருந்தது. ஏற்கனவே நடிப்பில் பின்னுவார், இதில் இயக்குநரும் அவரே. எனவே சின்ன சின்ன எக்ஸ்பிரசனில்கூட ‘ஜீனியஸ்’ என்று உணர்த்துகிறார். வடையை ருசிப்பதாகட்டும், சிநேகாவை மறக்க முடியாமல் தவிப்பதாகட்டும் ‘செல்லம்’ என்று நம்மை கத்த வைக்கின்றார். ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது, அதே ஜீவனை மீண்டும் கொண்டுவருவது பெரும் சவால். அதில் ஒரு இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சிநேகா:
காலம் சில கோலங்களை சிநேகாவின் பொலிவில் செய்திருந்தாலும், அழகாகவே இருக்கிறார். வயதிற்கு ஏற்ற கேரக்டர் என்பதால் உறுத்தாமல் செட்டாகிறார். பிரகாஷ்ராஜ் போன்ற திறமையான நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடிக்க, சிநேகாவை விட்டால் வேறு ஆள் இல்லை. மெச்சூரிட்டியான நடிப்பால், அந்த கேரக்டரின் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் நமக்குள் கடத்திவிடுகிறார்.

தேஜஸ் – சம்யுக்தா:
இரு சீனியர் நடிகர்களின் நடிப்பிற்கு முன் இவர்களின் பெர்ஃபார்மன்ஸ் சப்பையாகத் தெரிகிறது. இருவரும் தனியே சந்திக்கும் காட்சிகளில் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். தேஜஸ், செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ கேட்டகிரி என்பதால் தேறுவது கொஞ்சம் கஷ்டம் தான். அம்மணியும் அப்படியே. இருவரும் நடிப்பில் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- கதைக்கு எந்தவிதத்திலும் உதவாத ஆதிவாசி போர்சன்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் (விஜி & ஞானவேல்)
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- இளையராஜாவின் பிண்ணனி இசை & பாடல்கள் (பழநிபாரதி)
- பிரகாஷ்ராஜ் & சிநேகாவின் மெச்சூரிட்டியான நடிப்பு
-ப்ரீதாவின் ஒளிப்பதிவு
- குடும்பத்துடன் பார்க்கக்கூடிய மொழி கேட்டகிரிப் படம்

Nantrisengovi.blogspot.com.au/