அவர் வேறு யாருமல்ல குரு சோமசுந்தரம் தான்.
அந்தக் கடுப்பு குரு சோமசுந்தரம் என்ற நடிகன் மீதல்ல, அவர் ஏற்றிருந்தது “சிபு” என்ற அந்தப் பாத்திரம் மீது. அந்த அளவுக்கு பார்வையாளனுக்கு வெறுப்பை அள்ளி விதைக்கக் கூடிய, போகிற போக்கில் அள்ளி வீசி விட்டுப் போகும் யதாத்த நாயகனாக மிளிர்ந்தார்.
அதே சமயம், அந்த சுய நிலை பிறழ்ந்த சிபுவுக்குள் இருக்கும் ஒரு காதல், அதை அப்படியே மெல்ல மெல்ல விரித்துக் காட்டும் பாங்கு என்று சினிமாத்தனமே இல்லாத உணர்வோட்டம்.
அதுவும் ஒரு பக்கம் ஊரே திரண்டு வந்து சிபுவை அழிக்க நினைக்கும் போது, தன் காதலி இப்போதாவது தன் தூய அன்பைக் கண்டுணர்ந்தாளே என்ற பெருமிதத்தில் அவளின் கையை வாஞ்சையோடு அள்ளி முகத்தில் ஒற்றிக் கொஞ்சி உடைந்துருகும் கணத்தில் அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும். இந்தப் படத்தின் நிஜ நாயகன் இவரே.
ஏமாற்றம் எழும் போது தன் உதட்டைப் பிரித்து வெற்றுச் சிரிப்பால் காட்டி விட்டு நடத்தும் ஊழித் தாண்டவம் இருக்கே அப்பப்பா....இயக்குநர் ராஜூ முருகன் “ஜோக்கர்” படத்தின் கதையை குரு சோமசுந்தரத்திடம் போகிற போக்கில் சொன்ன போது,
“ஏன் என்னையே நாயகனாக்கி விடுங்களேன்” என்று கேட்டாராம்.
அவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட ஒரு நடிகன்.
தலைவாசல் முரளி, பசுபதி என்று நம் சமகாலத்துக் குணச்சித்திரங்களை மலையாள உலகம் சுவீகரித்து வெகு அழகான பாத்திரங்களை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.