இலக்கிய உலகில் ஒரு பொக்கிசம் கே. எஸ். சிவகுமாரன்

.

                                                                                                      முருகபூபதி

 ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன்.
இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.  தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள்.





சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதை எழுத்தாளருமாவார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.
இருமை, சிவகுமாரன் கதைகள்  ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். விரைவில் பவளவிழாக்காணவுள்ள கே.எஸ்.எஸ்., பேராதனைப்பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.
விமர்சகர்கள் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திரனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.















 ஒருவரது குணம் அவரது இயல்புகளிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அமைதியான சுபாவம், கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச விரும்பாத இயல்பு மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் குணம் முதலானவையே அவரது மிகச்சிறந்த பலம் என்று கருதுகின்றோம். அதனால்தான் இத்தனைகாலம் இவரால் இங்கு தாக்குப்பிடிக்கமுடிகிறது.
 இலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். தற்போதும் டெயிலிநியூசில் இவரது பத்தி எழுத்துக்களை பார்க்கலாம். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும் இவர் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியிருக்கிறார்.


இலங்கை வானொலியின் தமிழ்வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப்பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத்தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே.
கொழும்பில் மூன்று சர்வதேசப்பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் கடமையாற்றியவர். சிறுகதை, திறனாய்வு, பத்தி எழுத்துக்களில் மாத்திரம் கவனம்செலுத்தியவர் அல்ல. தரமான சினமா பற்றிய பிரக்ஞையுடனும் இயங்குபவர்.
அசையும் படிமங்கள்,  சினமா ஒரு உலகவலம் .ஆகிய இவரது நூல்கள் சினமா பற்றியவை. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர்.
இவர் இத்தனை அனுபவங்களுக்குப்பின்னரும், தாம் இன்னமும் இலக்கியத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்தான் என்று மிகுந்த கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறார். இதுவும் இவரது தன்னடக்கத்திற்கு ஒரு அடையாளம்.
சமீபத்தில் சிவகுமாரன் அவுஸ்திரேலியாவில் மெல்பனுக்கு வந்திருந்தார். அவருக்கு எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் தேநீர் விருந்துபசாரம் வழங்கினோம். எமது ஒன்றியத்தின் வெளியீடான Being Alive  (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள்) நூலை இச்சந்திப்பில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.


 இந்நிகழ்வு அவரைப்பொறுத்தவரையில் எதிர்பாராததுதான். அவுஸ்திரேலியாவுக்கு தமது மகனைப்பாரக்க வருமுன்னரே குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் பற்றி டெயிலி நியூஸ் பத்திரிகையில் மதிப்பாய்வு எழுதியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சிட்னியிலும் மெல்பனிலும் தமது கலை, இலக்கிய, வnhனலி ஊடகத்துறை நண்பர்களை நேரில் சென்று பார்த்து அவர்களது சுகநலன் விசாரித்தார். இலங்கை திரும்பியதும் தமது அவுஸ்திரேலிய பயண அனுபவங்களை ஆங்கிலத்தில் தமது பத்தியில் எழுதினார்.
 மற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப்பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்தும் சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல் பலருக்குத்தெரியாது.
Thamil Writing in Srilanka , Aspects of Culture in Srilanka   ஆகிய நூல்களிலும் தமிழில்  எழுதியிருக்கும் ஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள்,  நாவல் இலக்கியம் தொடர்பான நூல் உட்பட பல நூல்களிலும் எம்மவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தியிருக்கும் இவரது இயல்பு ஏனையவர்களுக்கு குறிப்பாக விமர்சகர்களுக்கு முன்மாதிரியானது.
ஒரு நூலைப்படித்தால் அது இவரைக்கவர்ந்துவிட்டால் தாமதமின்றி ஆங்கிலத்திலோ தமிழிலோ அதனை அறிமுகப்படுத்தி ஏதேனும் இதழில் எழுதிவிடுவார். அத்துடன் இலக்கிய உலகின் சமகால நிகழ்வுகளையும் இரண்டு மொழிகளிலும் தமது பத்திகளில் பதிவுசெய்துவிடுவார். வாழும்காலத்திலேயே பாராட்டி கொண்டாடப்படவேண்டியவர் கே.எஸ். சிவகுமாரன். இவரைப்போன்று பலர் எம்மத்தியில் தோன்றவேண்டும். அல்லது உருவாக்கப்படல்வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றிடங்கள் தோன்றலாம்.
 இலக்கியத்தில் மொழிபெயர்ப்புத்துறை குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம். கணினி இன்று எமக்கு வரப்பிரசாதமாகியிருக்கும் சூழலில் சிவகுமாரனுக்கு  எம்மவர்கள் உரிய மரியாதை வழங்கி நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவரது வாழ்நாள் உழைப்புக்கு மரியாதை செலுத்துவதன் மூலம்  மானுடத்தின் மதிப்பீடுகளை உயர்த்தமுடியும்.
இலங்கையில் நீண்டகாலம் வெளியாகும் ஞானம் இதழின் கடந்த ஏப்ரில் இதழில் கே.எஸ்.சிவகுமாரன் அட்டைப்பட அதிதியாக கௌரவம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
                         

1 comment:

திருநந்தகுமார் said...

கே.எஸ்.சிவகுமாரன் சிட்னிக்கு வந்திருந்தாரா? பலருக்கும் தெரிந்திருக்க வில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. முடிந்தால் ஒரு முறை சந்தித்திருக்கவேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர். அவரின் மெல்பேர்ன் வரவை பதிவாக்கிய முருகபூபதிக்கு நன்றிகள்.