உலகச் செய்திகள்

.

கோகோஸ் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அனைவரும் இலங்கையர்களே

ராஜ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார் : 19 வருட சிறைத்தண்டனை வழங்கப்படக்ககூடிய சாத்தியம்


இலங்கையை பூர்வீகமாக கொண்ட செல்வந்தர் ராஜ் ராஜரட்ணம், பங்கு சந்தை மோசடி தொடர்பில் இன்று புதன்கிழமை அமெரிக்காவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் அவருக்கான இறுதி தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் 29ம் திகதி வெளியிடப்படும் என்று அமெரிக்க மென்ஹட்டன் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரிச்சட் ஹொல்வெல் தெரிவித்துள்ளார்.


அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதினைந்தரை தொடக்கம் பத்தொன்பதரை வருடங்கள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் 60 மில்லியன் டொலர்கள் நட்டத்தை தவிர்ப்பதற்காக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு இலாபம் உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ராஜ்ராஜரட்ணம், அமெரிக்காவில் பங்குச் சந்தையில் பிரபல வர்த்தகராக விளங்கியதுடன், உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 236ம் இடத்தில் இருந்தார்.

1957ம் ஆண்டு கொழும்பில் பிறந்த அவர், இங்கிலாந்தில் தமது பட்டப்படிப்பை பெற்றதுடன், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2009ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 180 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அவர் பங்குசந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டார் என கூறப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16ம் திகதி எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் உலக தமிழக புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் என முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் இலங்கை ஆழிப்பேரலை ஏற்பாட்ட காலப்பகுதியில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உலக தமிழர் புனர்வாழ்வு கழகம் தடை செய்யப்பட்டடிருந்த நிலையில், அதற்கு நிதி வழங்கியமை குற்றமில்லை என குறித்த குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

எனினும் பங்கு சந்தை மோசடி தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  அவை தொடர்பில், ராஜ் ராஜரட்ணத்தின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு, நேற்றைய தினம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.

அவர் சுமார் 63.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்சந்தை மோசடி செய்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்ட 2009ம் ஆண்டில், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றின் பங்கு சந்தையில் வீழ்ச்சி போக்கு ஏற்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்து ராஜ் ராஜரட்னம் மேன்முறையீடு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழ்வின்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோகோஸ் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கையர்களே என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கடந்த ஏபரல் 23ம் திகதி சுமார் எண்பத்தி எட்டுப் பேரைக்கொண்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்திருந்தது. மீன்பிடிப்படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்த அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதனை அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் ஆறாயிரத்துக்கும் அதிகமான சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்பதாகவும் மேலதிகத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.


No comments: