கொழும்பில் நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

 .


  சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்புத் தமிழ்ச் சங்க ‘தமிழ்த்தூது’ தனிநாயகம் அடிகளார் அரங்கில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்களின் பதிவினைத் தொடர்ந்து காலி வீதியிலிருந்து தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதமாக எழுத்தாளர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் கலாசார நடனங்களுடனும் பக்திப் பாடல்களுடனும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற வாசகம் பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தியுடன் ஒற்றுமையுடன் பேராளர்கள் திரண்டிருந்ததைக் காணுகையில் மனம் பூரிப்படைந்திருந்தது.

யுத்தத்தால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை தாங்கினார்.

தமிழ்மொழி வாழ்த்து, மாநாட்டுக் கீதம், அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவியரின் வரவேற்பு நடனம் ஆகியன ஆரம்ப நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.

மாநாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் டாக்டர் தி.ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“உலகின் முதலாவது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இந்த மாநாடு இந்த மண்ணிலே தான் முதன்முதலாக நடைபெற வேண்டும் என்பதற்குப் பலதரப்பட்ட காரணங்களும் கட்டாயங்களும் இருக்கின்றன.

தமிழ் இலக்கியம் பயில்கின்ற ஏனைய நாடுகளான இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் கடந்த காலங்களில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

போரின் காரணமாக பல கலை இலக்கியவாதிகள் புலம்பெயர்ந்தார்கள். தாம் பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இவர்கள், தாம் பிறந்த மண்ணை, இரத்த உறவுகளை, தமது சமூகத்தை தேடிவைத்த செல்வங்களை, இன்னோரன்ன பலவற்றை விட்டுப்பிரிந்த ஏக்கத்தை இலக்கியங்களாக்கினர்.

இந்த இலக்கியங்கள் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் எனப்பட்டன.

அதேவேளையில், போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு உள்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர் சிலரும் போரின் அனர்த்தங்கள் பற்றி இலக்கியம் படைத்தனர். இவை போர்க்கால இலக்கியங்கள் எனப்பட்டன.

இவற்றையெல்லாம் வெளிக்கொணரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இலங்கை மண்ணில் இந்தச் சர்வதேச மாநாடு முதன்முதலில் நடைபெறுகிறது.

இந்த மண்ணில் மூன்று தசாப்த காலம் போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்பேசும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது தொப்புள் கொடி உறவுகளோடு கலந்து பேசவும் உறவாடவும் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழர்களோடு கலந்து பேசவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் தம்மைக் கட்டியெழுப்பவும், வீழ்ச்சியுற்ற மன நிலையிலிருந்து எழுச்சி பெறவும் ஓர் ஆரம்பமாக இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு அமையும் என எதிர்பார்க்கலாம்” என அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து மாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி தொடக்கவுரை நிகழ்த்தினார்.

“செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் - மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து - இடம்பெயர்ந்து – புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா,அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில், பனிபெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொடிய யுத்தத்திலிருந்தும் எண்ணிலடங்கா இன்னுயிரிழப்புக்களிலிருந்தும் மீண்டெழுந்து உயிர்ப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்து காத்திரமான உரையாடல்களை ஆரோக்கியமான திசைநோக்கி வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் முருகபூபதியின் உரையில் காணப்பட்ட தெளிவும் ஆணித்தரமான கருத்துக்களும் அவையினரை சிந்திக்க வைத்தது எனலாம். (தொடரும்…)

-இராமானுஜம் நிர்ஷன்
படங்கள் - ஜே.சுஜீவ குமார்

nanri verakesari

1 comment:

Anonymous said...

This is Murugapoopathy's wedding.