தமிழ் சினிமா

.
மன்மதன் அம்பு
2012 : ருத்ரம் பட விமர்சனம்



நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் 'ருத்ரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.



கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமா த்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்... இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள்.

படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது.

அசத்தல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

நன்றி வீரகேசரி

மன்மதன் அம்பு


மிச்சமில்லாமல் துடைக்கப்பட்ட கிச்சனிலும் பெருங்காய வாசனை இருக்குமல்லவா? கிரேஸி மோகன் இல்லாத 'கிச்சன்' இது. ஆனால் தொட்ட குறையாக தொடர்கிறது வாசனை மட்டும்! அதுவும் கடைசி சில நிமிடங்கள், டிபிக்கல் கிரேஸி படம்!

ஒரு நடிகையின் விடுமுறை நாட்களில் அவரை வேவு பார்க்க நுழையும் மேஜர் கமல், மெல்ல மெல்ல அந்த நடிகையின் மனசுக்குள் 'மைனராக' நுழைவதுதான் கதை! வேவு பார்க்க அனுப்பும் மாதவன்தான் நடிகை த்ரிஷாவின் காதலன். கொஞ்சம் காதல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை என்று சகலவிதமான சென்ட்டிமென்ட்டுக்குள்ளும் சிக்கிக் கொண்டு அரைபட்டிருக்கிறது இந்த பழகிப் போன மாவு.

பிரபல நடிகை த்ரிஷாவை அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்றின் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே பெண் பார்க்க வருகிறார்கள் மாதவனின் அப்பாவும் அம்மாவும். அங்கே நடப்பது எல்லாமே ஆர்த்தோடக்ஸ் பேமிலிக்கு அந்நியமாக தெரிய, "பார்த்துக்கோடா..." என்று செல்லமாக மகனை எச்சரித்துவிட்டு செல்கிறார் அம்மா உஷா உதுப். (மேம், நடிப்பு ரொம்ப சிறப்) மனசுக்குள் இருக்கிற சந்தேக சாத்தான் விழித்துக் கொள்கிறது மாதவனுக்கு. த்ரிஷாவின் கேரவேனுக்குள் ஏறிப்போய் உள்ளேயிருக்கும் கனெக்டிங் கதவை திறந்து செக் பண்ணுகிற அளவுக்கு ஆட்டம் போடுகிறது அது. "செக்ஸ் வச்சுக்கணும்னா அத்தனை பேர் சுத்தியிருக்கும்போதா வச்சுப்பாங்க? வெளிநாட்டுக்கு போயிட மாட்டாங்களா" என்கிற த்ரிஷாவின் வசனம் கிசுகிசு எழுத்தாளர்களுக்கு பலம் சேர்க்கலாம். சண்டை வலுக்கிறது இருவருக்கும். மன அமைதிக்காக வெளிநாடு கிளம்புகிறார் த்ரிஷா. அப்புறம் அங்கு நடப்பதுதான் சுவாரஸ்யம்.

நரையோடிய தாடி, அதையும் மீறி இழையோடும் இளமை என்று ரசிக்க வைக்கிறார் கமல். கேன்சரால் அவதிப்படும் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற கவலை, தனது மனைவியை விபத்துக்கு பறி கொடுத்துவிட்ட வேதனை, திடீரென்று கிராஸ் பண்ணும் காதல் என்று முப்பரிமாண மோதலில் சிக்கிக் கொள்கிற வேஷம் கமலுக்கு. செட்டியார் பிள்ளைக்கு வட்டிக்கணக்கு சொல்லியா தர வேண்டும்? பின்னி எடுக்கிறார் மனிதர். ஆனால் ஒரு வசனகர்த்தாவாக எள்ளி நகையாடுகிற அவரது பேனா, ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஈழத் தமிழனை பதம் பார்த்திருக்க வேண்டாம். இன்னொரு காட்சியில் மாதவன் வாயால் சொல்லப்படுகிறது இந்த வசனம். மெல்ல தமிழ் இனி சாகும்... (படம் நெடுகிலும் பேசப்படும் ஆங்கில வசனங்கள் அதை உறுதிபடுத்துகிறது கலைஞானி அவர்களே...) இதுவாவது பரவாயில்லை. கமலே சொல்கிறார், தமிழ் தெரு பொறுக்கும் என்று!

நல்லவேளை, இதே கமலின் எழுத்தை ரசிக்கவும் ஏராளமான சாய்ஸ் இருக்கிறது ம.அ வில். 'வீரத்தோட மறுபக்கம் மன்னிப்பு. வீரத்தோட உச்சக்கட்டம் அகிம்சை'.

த்ரிஷாவின் அழகில் சில மில்லி கிராம்கள் சேதாரம் ஆகியிருக்கிறது. ஆனால் அதுவே அவரது கோபத்தை இயற்கையாக வெளிப்படுத்துவதால், 'இருந்துட்டு போகட்டுமே...' சொந்த குரலில் பேசியிருக்கிறார். தொடருங்கள் தாயி!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, சமீபத்தில்தான் டைவர்ஸ். கை நிறைய ஜீவனாம்சம் என்று சங்கீதாவின் கேரக்டரும் அவர் பேசும் வசனங்களும் குறைவில்லாத சுவாரஸ்யத்தை மூட்டுகிறது. கமலை பார்த்து 'செம கட்டை' என்று வர்ணிப்பதும், இறுதியில் மாதவனை வளைத்துக் கொள்வதுமாக ஒரே சங்கேத ஆலாபனைதான் சங்கீதாவிடம். இவரது குழந்தைகளில் அந்த பொடியன் ஆஷிஸ் செம துறுதுறுப்பு. 'து£ங்குற குழந்தைக்கு கட்டைவிரல் ஆடும்...' சங்கீதாவை ஏமாற்ற பொடியன் கட்டைவிரல் ஆட்டுகிற காட்சியில் சொல்லி வைத்தாற் போல தியேட்டரில் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் குடிகாரர்களின் வேடத்தை யார் ஏற்றாலும் அதனுடைய 'ஃபுல்' வரைக்கும் போவார்கள். மாதவன் அதையும் தாண்டி போயிருக்கிறார். டாய்லெட்டுக்குள் விழுந்த செல்போனை வைத்துக் கொண்டு அவர் பேசுகிற காட்சிக்கெல்லாம் குடிகாரர்களே சிரித்து போதை தெளிவார்கள்.

"இந்தாங்கோ. பஜ்ஜி ஷாப்டுங்கோ..." என்ற இத்துனு£ண்டு வசனத்தை பேசுவதற்காக நு£று நாள் ஓடிய படத்தின் நாயகி ஓவியா! பெரிய வீட்டு கல்யாணமல்லவா? பல் குத்த தங்க ஊசி. ஹ்ம்...

சாலை விபத்திற்கு பின் கவலையோடு வானத்தை அண்ணாந்து பார்க்கும் த்ரிஷா, அங்கு பறவை கூட்டங்களை பார்ப்பதை ஒரு காட்சியாகவும், பின்னொரு சந்தர்பத்தில் அதே பறவை கூட்டம் கமல் கண்களுக்கு தென்படுவதுமாக, வெறும் காட்சியிலேயே விஷயம் சொல்லியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். இவர் ஸ்டைலுக்கு இது புதுசல்லவா?

மனசு முழுக்க மயக்கத்தை நிரப்பியிருக்கிறது மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு. அந்த கப்பல்... சந்தேகமேயில்லை. அற்புதமான விஷ§வல் ட்ரிட்! மிக நேர்த்தியான எடிட்டிங் (என்று சொல்லதான் ஆசை) ஆனால் படம் மூன்று மணித்துளிகளை தாண்டுகிறதே ஐயா...? நீலவானம் பாடலிலும், சாம பேத தான தண்டத்திலும், தேவிஸ்ரீபிரசாத் ஈர்க்கிறார்.
'விண்'மதன் அம்பு!
-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: