வாசிக்க மறவாத சபேசன் என்ற தமிழின் காதலன் சுவாசிக்க மறந்துபோன வலி எமக்கு நெடுந்துயரே ! - முருகபூபதி


ழத்தமிழர்களின்  புலப்பெயர்வு  அவுஸ்திரேலியாவை நோக்கி  ஆரம்பித்தபோது,  முதலில் வந்தவர்கள் கல்வி, தொழில்வாய்ப்பு முதலான காரணங்களைத்தான் முன்னிறுத்தியிருந்தனர்.
ஏற்கனவே லண்டனுக்கும் சிங்கப்பூர், மலேசியாவுக்கும் சென்றவர்களும் அவுஸ்திரேலியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான்,  இந்த கங்காரு தேசத்தில் தொழில் வாய்ப்பு பெறுவதற்காக  வந்து  குடியேறினர்.
1980 இற்குப்பின்னர் அய்ரோப்பிய நாடுகளுக்கு விசா அவசியமின்றி செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது,  ஈழத்தவர்கள் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியை நாடிச்சென்றார்கள்.
ஆனால், அதே குறிப்பிட்ட காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரவிரும்பியவர்கள் முறைப்படி விசா பெற்றுத்தான் வரநேர்ந்தது.
அவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்களும் ஒரு சில மாதங்கள்தான் இங்கு தங்குவதற்கு அனுமதிபெற்றிருந்தவர்கள்.  தொடர்ந்து இங்கே வாழவேண்டுமானால் குடிவரவுத்திணைக்களத்திற்கு சட்டத்தரணிகள் ஊடாக விண்ணப்பித்து அகதி அந்தஸ்து கோரவேண்டும்.
அவ்வாறு 1987 ஆம் ஆண்டில் நானும் இங்கு பிரவேசித்தபோது, எனக்கு பத்திரிகை ஊடகத்தொழிலைத்தவிர வேறு எந்தவொரு தொழிலும் தெரியாது. வாழ்க்கையை நடத்துவதற்காக ஒரு தொழிலைத்தேடிக்கொண்டே,  இயந்திரமயமான அன்றாடப்பொழுதுகளில் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இலங்கை பத்திரிகைகள் வீரகேசரி, தினகரன், மற்றும் மல்லிகை இதழிலும் எழுதிக்கொண்டிருந்தேன்.

1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. மண்டபத்தில் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலுக்கு வெளியீட்டு விழாவை நடத்தியபோது,  அக்காலப்பகுதியில் சிட்னியிலிருக்கும் தமது புதல்வன் மருத்துவர் அநுராவிடம் வந்து சேர்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையையும் அழைத்துப்பேசவைத்தேன்.
அன்றைய விழாவில்தான் அவர் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற அடையாளத்தை பிரகடனப்படுத்தினார். அன்றிலிருந்து அந்த சொற்பதம் பேசுபொருளானது!
அன்றைய நிகழ்வில்தான் லண்டனிலிருந்து வந்து குடியேறியிருந்த   எழுத்தாளர் அருண். விஜயராணியும் முதல் முதலில் இங்கு மேடையேறி இலக்கியம் பேசினார்.
அந்தவகையில்  எம்மூவருக்கும் அதுதான் அவுஸ்திரேலியாவில் முதலாவது இலக்கிய மேடை.
அந்த நிகழ்ச்சிக்கு விக்ரோரியா தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதன்பின்னர் மெல்பனுக்கு வந்து குடியேறியிருந்த சண்முகம் சபேசன்,  விக்ரோரியா இலங்கைத்  தமிழ்ச்சங்கத்திலும் இணைந்து  ( இந்த அமைப்பின் பெயர் அவ்வப்போது மாறியிருக்கிறது ) அதன்சார்பில்  வாராந்தம் ஒலிபரப்பான சமூகவானொலி  3 C R  தமிழ்க்குரலில் செய்தி வாசிப்பவராக இணைந்து பல நிகழ்ச்சிகளையும் அதில் ஒருங்கிணைத்தார்.
எனது எழுத்துக்களைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்த சபேசன், எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியை யாரிடமிருந்தோ பெற்று படித்துவிட்டு,  என்னை தொடர்புகொண்டார்.
அந்தத் தொகுப்பில்  வடபகுதி   தமிழ் இளைஞர்களிடத்தில்   1980 இற்குப்பின்னர்  தோன்றிய சிந்தனைகள், தொடர்ந்து வந்த  போர்க்காலங்கள்,  இந்தியாவிலிருந்து  அமைதிகாக்க வந்த படையினர்  ( ?)  பற்றிய கதைகளும் இடம்பெற்றிருந்தமையால்,  சபேசனை அக்கதைகள் கவர்ந்திருக்கவேண்டும்.
1997 ஆண்டு,  எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு மெல்பனில்  அதே வை. டபிள்யூ. சி. மண்டபத்தில் மூத்த கலை, இலக்கிய ஆளுமைகளான ஓவியர் கே.ரி. செல்வத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை ஆகியோரை பாராட்டி விருதுவழங்கி கௌரவிக்கும் நிகழ்வை எமது முகுந்தன் பதிப்பகத்தினால் நடத்தியபோது நண்பர் சபேசனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வு சிட்னியிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் மெல்பன் சமூக வானொலிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து, அவர்களின் கரத்தினால் குறிப்பிட்ட ஆளுமைகளுக்கு விருதுகளையும் வழங்கச்செய்திருந்தேன்.
 “ ஆளுமைகள்  வாழும்போதே பாராட்டி கௌரவிக்கப்படல்  வேண்டும், அவர்கள்   மறைந்த பின்னர் தரப்படும் மரியாதைகள் அனைத்தும் அவற்றைத் தருபவர்களுக்கு மாத்திரமே  பெருமை சேர்ப்பிக்கும் “   என்ற எனது சிந்தனை நண்பர் சபேசனையும் கவர்ந்திருக்கவேண்டும்.  அடுத்த சில வருடங்களில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் முத்தமிழ் விழாவும் வந்தது. அவ்விழாவுக்காக தமிழகத்திலிருந்து கவிஞர் அப்துல்ரகுமானும் அழைக்கப்பட்டார்.
அவரை அழைப்பதற்கான ஒழுங்குகளை எமது மற்றும் ஒரு நண்பர்,  மருத்துவரும் சமூகப்பணியாளருமான ரகுமான் அவர்கள் மேற்கொண்டிருந்ததுடன்,  தமது இல்லத்திலேயே கவிஞரையும் தங்கவைத்திருந்தார்.
அவ்வேளையில் நண்பர்கள்  சபேசனும்  நந்தகுமாரும் கவிஞரை, மருத்துவர் ரகுமான் அவர்களின் இல்லத்தில் சந்தித்து இலக்கிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
மெல்பனில் Hungarian Community Centre மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 20 ஆண்டு நிறைவுவிழா அச்சமயம் தலைவராக இருந்த திரு. பூபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அவ்விழாவில் இடம்பெற்ற இலக்கிய கருத்தரங்கினை ஒருங்கிணைத்தவர் சபேசன்.  புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – போர்க்கால இலக்கியம் முதலான தலைப்புகளில் எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் நானும் கவிஞர் அப்துல் ரகுமானும், கலைஞர் மாவை நித்தியானந்தனும் உரையாற்றினோம்.
அன்றைய இரவும் தொடர்ந்த அவ்விழாவில்  வாழும்போதே கௌரவிப்போம் என்ற நிகழ்ச்சியில் மாவை நித்தியானந்தன், நடன நர்த்தகி சாந்தி இராஜேந்திரா ,  நாட்டியக்கலைஞர் சந்திரபானு உட்பட  மற்றும்  சிலரும் நானும்  பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோம்.
இவ்வாறு கலை, இலக்கிய செல்நெறியை வடிவமைக்கும்  ஆற்றலும் சபேசனிடத்தில் குடியிருந்தது.
மறுநாள் அதே மண்டபத்தில் முத்தமிழ் விழாவும்  நடைபெற்றது.  சபேசன் 3 C R  தமிழ்க்குரல் வானொலியில் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை தந்தவர்.  இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, வாசிப்பு அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்துகொண்டவர்.
என்னையும் எழுத்தாளர் நித்தியகீர்த்தியையும் வானொலி கலையகத்திற்கு அழைத்து இலக்கிய சந்திப்பு உரையாடல்களையும் ஒலிபரப்பினார்.
மெல்பனில் Thornbury என்ற இடத்தில் அமைந்த ஒரு தேவாலய மண்டபத்தில் நடைபெற்ற எனது வெளிச்சம் ( சிறுகதைத் தொகுதி ) சந்திப்பு  (நேர்காணல் தொகுதி ) வெளியீட்டு அரங்கு யாழ். பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி  த. கலாமணியின் தலைமையில் நடந்தபோது, சபேசன் சந்திப்பு நூல் பற்றிய தனது நயப்புரையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவரது சேகரிப்பில் ஏராளமான இலக்கியம், அறிவியல், சினிமா, விஞ்ஞானம் தொடர்பான நூல்கள் இருந்தன.  தான் படித்த நூல்கள் பற்றி என்னுடன் சிலாகித்துப்பேசுவதும் அவரது வழக்கம்.
தமிழகப்பேராசிரியரும் சபேசனின் நல்ல நண்பருமான சுப.  வீரபாண்டியன்  பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலிருந்தபோது எழுதிய நூல் அது ஒரு பொடா காலம். அதில் ஒரு பிரதியையும் எனக்கு வாசிக்கக்கொடுத்திருக்கும் சபேசன்,  வருடந்தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கும் சென்று வரும் பழக்கத்தையும் கொண்டிருந்தவர்.
சபேசன்,  தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள்  தொல் . திருமாவளவன்,  வை. கோபாலசாமி,  பேராசிரியர் சுப வீரபாண்டியன், பழ. நெடுமாறன், ஓவியர் புகழேந்தி, கவிஞரும் திரைப்பட வசன கர்த்தாவுமான அறிவுமதி, இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர்கள்   வைரமுத்து,  காசி. ஆனந்தன்   ஆகியோருடனும் நட்புறவு கொண்டிருந்தவர்.
இலங்கையில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோருடனும் நட்புறவு பாராட்டியவர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  ( அமரர் )  சிவராஜா,  சபேசனின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
மெல்பனுக்கு சுப. வீரபாண்டியன், ஈழவேந்தன்,  உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த வண. பிதா இமானுவேல் அடிகளார்  உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் வருகை தந்த  சந்தர்ப்பங்களில் சபேசனின் இல்லத்தில் அன்பான உபசரிப்பில் திழைத்திருக்கிறார்கள்.
அரசியலில் கலை, இலக்கியத்தில்  மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுடனும் சிநேகபூர்வமாக பழகும் மென்மையான இயல்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவர் சபேசன்.
நவீன தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தீவிர நாட்டத்தினால், தரமான இலக்கியச் சிற்றிதழ்களையும் நூல்களையும் தருவித்து படிப்பவர். தீராநதி, உயிர்மை, காலச்சுவடு  முதலான தரமான இலக்கிய இதழ்களின் தீவிர   வாசகன்.  அதில் வெளியாகிய பல முக்கிய ஆக்கங்களை பிரதி எடுத்தும் எனக்கு அனுப்பியிருக்கிறார்.
அவரது வாசிப்பு அனுபவத்தின் தீவிரம், அவரை புதுச்சேரியில் வதியும் கரிசல் இலக்கிய வேந்தர் என வர்ணிக்கப்படும்  மூத்த படைப்பாளி கி. ராஜநாரயணன் அவர்களையும் தேடிச்சென்று உறவாட வைத்தது.
ஈழத்து இலக்கியத்தின் மீதும் புகலிட இலக்கிய முயற்சிகள் குறித்தும் ஆர்வம்  காண்பிக்கும் கி. ரா. அவர்கள்,  சபேசனு டனான அந்த சந்திப்பிற்குப்பின்னர், தீராநதி இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார். அதற்கு Cover Story முக்கியத்துவமும் வழங்கப்பட்டிருந்தது.
தரமான நூல்களை படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தை, அவரை சந்தித்த காலம் முதலே நன்கறிவேன்.  ஒரு சமயம் பாரதியார், கண்ணதாசன், தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், அகிலன், கவிஞர் அம்பி, கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, மல்லிகை ஜீவா ஆகியோரின் இலக்கியத்திற்கு அப்பாலான பக்கங்களில் பொதிந்திருந்த சுவாரசியங்களை எழுதி அவரிடம்  படிக்கக்கொடுத்தபோது, அவற்றை வாரம் தோறும் தமது 3 C R  தமிழ்க்குரல் வானொலியில் அவரே வாசித்து சமர்ப்பித்தார். அந்தத் தொடர் பின்னர் கொழும்பு தினக்குரல் வாரப்பதிப்பிலும் வெளிவந்தது.
புதுவை ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூலை மெல்பனில் அறிமுகப்படுத்திய நிகழ்வும் சபேசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அவ்வேளையில் வன்னியிலிருந்த புதுவை ரத்தினதுரையுடன் நான் தொலைபேசியில் உரையாடுவதற்கும்  ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார்.
நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எம்மிருவரிடத்திலும் கலை இலக்கியம்தான் பிரதான பேசுபொருளாக இருக்கும்.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் 2012 ஆம் ஆண்டு பிரஸ்டன் நகரமண்டபத்தில் நடத்திய  12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் அவர் உரையாற்றினார்.  அத்துடன் நாம் ஒழுங்குசெய்யும் வாசிப்பு அனுபவப்பகிர்வுகளிலும் ஆர்வமுடன் கலந்துகொள்வார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நண்பர் நடேசனின் நூல்களின் விமர்சன அரங்கு  மெல்பனில் நடந்தபோது, நடேசனின் நைல்நதிக்கரையில் பயண இலக்கிய நூல் குறித்து தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இதுவே சபேசன் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றி இலக்கிய நிகழ்வு.
அவர் தமது வானொலியில் நிகழ்த்திய உரைகள் ஏராளம். அவற்றை பகுதி  பகுதியாக தொகுத்தால்,  நான்கைந்து பாகங்களுக்குத்  தேறும். அவற்றை கால வரிசைப்பிரகாரம் செப்பனிட்டு வெளியிடவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் கனவாகவே தொடர்ந்தது. எனினும் அந்தக்கனவை நனவாக்கமுடியாமல் அவர் நினைவாகிப்போய்விட்டார்.
எமது இலக்கியக்குடும்பத்தில் இணைந்து வந்த நண்பர் சபேசனின் எதிர்பாராத மறைவு ஏற்படுத்தியிருக்கும் அதிர்வை நாம் கடந்து செல்ல நெடுநாட்களாகலாம். 
( நன்றி – மெல்பன் எதிரொலி )




No comments: