அர­சி­யலும் மதமும் ஒன்­றாக பய­ணிக்­கின்­ற­னவா?


02/12/2019 மதமும் அர­சி­யலும் ஒரே வண்­டியில் சவாரி செய்யும் போது சூறா­வ­ளியும் பின் தொடர்­கி­றது (When religion and politics ride in the same cart, the whirlwind follows)  என அமெ­ரிக்­காவின் விஞ்­ஞான புனை கதை எழுத்­தா­ளரும் பத்­தி­ரி­கை­யா­ள­ரு­மான பிராங்க் ஹேர்பட் ஒரு தடவை கூறி­யி­ருந்தார்.
இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் மற்றும் அடுத்த கட்­ட­மாக இடம்­பெற்று வரும் சம்­ப­வங்­களைப் பார்க்கும் போது சூறா­வளி தொட­ருமோ என்ற அச்சம் சிறு­பான்மை மக்­க­ளி­டத்தே தோன்­றி­யுள்­ளதை மறுக்க முடி­யாது.
ஜனா­தி­ப­தி­யாக   கோத்­தா­பய ராஜபக்ஷ  தெரி­வா­னதும் கடும்­போக்­கு­ பெ­ளத்த அமைப்­பு­க­ளான பொது­ப­ல­சேனா மற்றும் சிங்­கள ராவய  என்­பன தமது அமைப்­பு­களை கலைத்து விடப்­போ­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தன. இந்த நாட்டில் பெளத்­தத்­தையும் பாரம்­ப­ரி­யத்­தையும் கட்டிக் காக்கும் ஒரு தலைவர் கிடைத்து விட்டார்.  இனி எமக்­கென்ன வேலை என்று பொருள்­பட  அவர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாடு நடத்தி அடுத்த பொதுத்­தேர்­த­லுக்­குப்­பின்­னரே தமது அமைப்­பு­களை கலைக்­கப்­போ­வ­தாகத் தெரி­வித்­துள்­ளனர். அதா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜனா­தி­ப­தியின் பொது­ஜன பெர­மு­னவை வெற்றி பெற வைத்த பிறகே அவர்கள் தமது செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­கிச் ­செல்­லப்­போ­வ­தாகத் தெரி­வித்­துள்­ளனர். அதன் படி கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பெளத்த மதம் சார்ந்த பிர­சார நட­வ­டிக்­கைகள் மக்கள் மத்­தியில் தொடரும் என்­பதே அதன் கருத்­தாக இருக்­கின்­றது.
ஏனெனில், பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் தாம் இலங்­கையின் சிங்­கள மக்கள் செறி­வாக வாழக்­கூ­டிய பகு­தி­க­ளுக்குச் சென்று விகா­ரைகள் ஊடாக பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­ததை பகி­ரங்­க­மாகக் கூறி­யி­ருந்தார். இலங்கை ஒரு பெளத்த நாடு என்ற வகையில் அர­சி­யல்­வா­தி­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பதை பிக்­குகள் விரும்­பு­கின்­றனர். அவர்­களின் வழி அர­சியல் செய்­தாலே தமக்கு சிங்­கள மக்­களின் வாக்­கு­களும் கிடைக்கும் என்ற அர­சி­யல்­வா­தி­களின்  எதிர்ப்­பார்ப்பு இன்று நேற்று உரு­வா­கி­ய­தல்ல. இந்த நிலைப்­பா­டுகள்  இம்­முறை இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் உரு­வாகி விட­வில்லை. இது சிங்­கள மன்­ன­ராட்சி காலத்­தி­லேயே தோன்றி விட்­ட­தொன்று. பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க இந்த யுக்­தியை கையாண்டார். இந்த வர­லாறு பல­ருக்கும் தெரிந்­தி­ருக்கும்.
ஆனால் இங்கு எழுந்­தி­ருக்கும் கேள்வி என்­ன­வெனில் எல்லா காலங்­க­ளிலும் பெளத்த பிக்­குகள் எல்­லோ­ரு­டைய அர­சி­ய­லையும் தீர்­மா­னிக்க முடி­யுமா என்­பது தான். அதா­வது தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­விடம் பெளத்த கடும்­போக்கு வாதத்தை முன்­வைத்து பிக்­குகள் அவரை தமது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­துக்­கொள்ள முடி­யுமா என்­பதே முக்­கிய கேள்வி. ஏனென்றால் ஜனா­தி­பதி கோத்­தா­பய எதற்கும் வளைந்து கொடுக்­காத அதே வேளை, தனித்து முடி­வு­களை எடுக்கும் ஒருவர். தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு அவர் பெளத்த பிக்­கு­களின் ஆத­ரவை நாடி­யி­ருந்­தாலும் வெற்றி பெற்ற பிறகு அனைத்து மக்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்ல வேண்­டிய தேவையை உணர்ந்தே தனது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். எனினும் உட­ன­டி­யாக சிறு­பான்மை மக்க­ளுக்கு தீர்­வு­களை முன்­வைக்க அவர்  தயா­ரா­க­வில்லை. அடுத்த வருடம் இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் ஸ்திர­மான ஒரு ஆட்­சியை ஏற்­ப­டுத்­திய பிறகே ஜனா­தி­பதி இது தொடர்பில் பேச விழைவார் என்று எதிர்­பார்க்­கலாம். அது வரை அவ­ருக்கு இந்த பிக்­கு­களின் ஆத­ரவு அவ­சியம்.
பிக்­கு­களின் பிர­தி­ப­லிப்பு
பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய மற்றும் இரா­வணா பலய போன்ற கடும்­போக்கு சிங்­கள பெளத்த அமைப்­பு­களின் கடந்த கால செயற்­பா­டுகள் சில­வற்றால் நாட்டின் பல சிங்­கள பெளத்­தர்­களே தலை­கு­னி­யும்­ப­டி­யான நிலை­மைகள் ஏற்­பட்­டது என்­னவோ உண்மை. பல பெளத்த பீடங்கள் கூட இவர்­களின் செயற்­பா­டு­களை கண்­டித்­தி­ருந்­த­துடன் இவர்கள் பெளத்த மதத்தை அவ­ம­திக்­கின்­றனர், புத்­தரின் போத­னை­களை இவர்கள் விளங்­கிக்­கொள்­ள­வில்லை என்று பகி­ரங்­க­மாக கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தனர்.  
பொது­பல சேனா மற்றும் சிங்­கள ராவய அமைப்­பி­னரின் அறி­விப்­பு­க­ளுக்கு சில நாட்­க­ளுக்­குப்­பின்னர்  களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும் சமூக விஞ்­ஞான பீடத்தின் தலைவர் வணக்­கத்­துக்­கு­ரிய கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் ஒரு முக்­கி­ய­மான கருத்தை முன்­வைத்­தி­ருந்தார்.
‘பெளத்த பிக்­கு­களின் முக்­கி­ய­மான பொறுப்பு என்­ன­வெனில், தம்மை பின்­பற்­று­ப­வர்­களின் மனதை மேம்­ப­டுத்­து­வதே ஒழிய அர­சாங்­கத்தை மாற்­று­வ­தில்லை. இது எமது  நோக்­கமே அல்ல இதைத்தான் புத்­த­ப­கவான் உப­தேசம் செய்­துள்­ள­தோடு பல உதா­ர­ணங்­க­ளையும் காட்­டி­யுள்ளார்.  நாட்டை நிர்­வ­கிக்க சிறந்த தலை­வரை அவர்கள் தெரிவு செய்­தாலும் தலை­வரின் ஆலோ­ச­னை­களை புரிந்து கொள்ளும் அள­வுக்கு மக்­களின் மன­நிலை வள­ராத நிலையில் அவர்­களால் எதையும் அடைய முடி­யாது’  
இவ்­வாறு அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
இதே வேளை கடந்த வாரம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பேசி­யி­ருந்த மிஹிந்­தல  ரஜ­மகா விகா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி வல­வ­க­ஹென்­கு­ண­வேவ தம்­மா­ரத்ன தேரர், எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டு­மல்­லாது எதிர்­கா­லத்தில் வேறு எந்த தேர்­தல்­க­ளிலும்   பௌத்த பிக்­கு­களை போட்­டி­யிட   அனு­மதி வழங்­கக்­கூ­டாது என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்­வைக்­கிறேன் என்று கூறி­யி­ருந்தார்.  
மேலும் ஏனைய கட்சித் தலை­வர்­களும் பௌத்த பிக்­கு­களை தேசிய பட்­டி­ய­லிலும் உள்­வாங்கக் கூடாது என்றும் அவர் தெரி­விக்­கிறார்.    ஜனா­தி­பதி கோத்­தா­பய பெரும்­பான்மை வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். ஆகவே அவர் நாட்டின் தேசி­யத்­தையும் மத விவ­கா­ரங்­க­ளையும்  பாது­காப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. அது தொடர்­பான சகல விவ­கா­ரங்­க­ளையும் சிறப்­பாக    முன்­னெ­டுப்பார் என தான் நம்­பு­வ­தா­கவும்   அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
இவ்­வாறு இரு வேறு கண்­ணோட்­டங்­களை  பெளத்த பிக்­கு­களும் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் சிறு­பான்மை மக்கள் சார்­பாக பேசக்­கூ­டிய பெளத்த பிக்­கு­களோ , பிரி­வி­னரோ அல்­லது அர­சி­யல்­வா­தி­களோ இங்கு மிகவும் குறைந்த எண்­ணிக்­கை­யா­னோரே உள்­ளனர் என்ற உண்­மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது பெரும்­பான்மை சிங்­கள மத்­தியில் எடு­ப­டாது. மேலும் இங்கு பெளத்த தேசியம் மற்றும் பிரி­வி­னை­வாத கருத்­துக்­களும் தேர்தல் காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் போது  அதை மக்­களும் ஏற்­றுக் ­கொள்ளும் மனப்­போக்­கி­லேயே உள்­ளனர்.
ஜனா­தி­பதித் தேர்தல் கால பிர­சா­ரங்­க­ளிலும் இதுவே இடம்­பெற்­றன. எந்­த­வொரு சிங்­கள பிர­தே­சத்தை எடுத்­துக்­கொண்­டாலும் அங்கு வாழ்ந்து வரும் பிர­பல அர­சி­யல்­வா­தி­யா­கட்டும் அல்­லது கல்வி கற்ற சமூ­கமோ , வர்த்­தக பிர­மு­கர்­களோ , சமூ­கத்தின் உயர்ந்த அந்­தஸ்தில் இருப்­ப­வரோ சிங்­கள பெளத்­த­ராக இருக்கும் பட்­சத்தில்  குறித்த பிர­தேச பெளத்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­திக்கு கீழ்­ப­டிந்­த­வ­ரா­கவே இருக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்தை ஏற்­ப­வ­ராக  இருத்தல் அவ­சியம். இங்கு ஊரோடு ஒத்­து­போதல் என்­பது குறித்த பிர­தே­சத்தின் விகா­ரா­தி­ப­தியின் பேச்சை கேட்டல் என்­பதே பொருள்­படும்.
எனினும் கடந்த காலங்­களில் சேறும் சக­தி­யு­மாக மாறி­யுள்ள அர­சி­யலில் புனி­த­மான மதம் எந்­த­ள­வுக்கு ஆழ­வே­ரூன்­றி­யுள்­ளது என்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மன்னர் காலத்தில் இது ஆரம்­பித்­தி­ருந்­தாலும் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னரே  பெளத்தம் அர­சி­யல்­ம­ய­மா­கிய மத­மாக மாறி­யுள்­ளது. அதுவே பின்னர் மத­வாத அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கு கார­ண­மா­கி­யுள்­ளது. இது இலங்­கையின் அர­சியல் தத்­து­வத்தில் அர­சி­ய­லுக்கும் மதத்­துக்­கு­மி­டை­யி­லான ஒரு முக்­கிய தவிர்க்க முடி­யாத கருப்­பொ­ரு­ளாக தொடர்­கி­றது.
உலகின் எந்த மதங்­களை எடுத்துக் ­கொண்­டாலும் அவை மக்­களின் விசு­வா­சத்­திற்கு வலு சேர்க்கும் கருத்­துக்­க­ளையே கூறி­வ­ரு­கின்­றன. அந்த விசு­வா­ச­மா­னது அவர்­களின் எதிர்­கா­லத்­திலும் தாக்கம் செலுத்­து­கி­றது. அதை மத­கு­ரு­மார்­களும் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றனர்.  ஆனாலும் எக்­கா­லத்­திலும் இதை முன்­னெ­டுக்க முடி­யுமா அல்­லது ஆட்­சி­யா­ளர்கள் இவர்கள் சொல்­வ­தற்­கெல்லாம் வளைந்து கொடுக்கக் கூடி­ய­வர்­க­ளாக இருப்­பார்­களா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஜனா­தி­ப­தியின் நகர்­வுகள்
 இடைக்­கால அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வைக்­குப்­பி­றகு தெரிவு செய்­யப்­பட்ட இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்­க - ளில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் இல்லை என்ற செய்தி பர­வ­லா­கப்­பே­சப்­ப­டு­கின்­றது. அமைச்சர் பத­வி­க­ளிலும் இரண்டு தமி­ழர்கள் மாத்­தி­ரமே இடம்­பெற்­றி­ருந்­தனர். இதில் ஆச்­ச­ரி­யங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால்,  தேர்தல் காலத்தில்  பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை கொண்­டி­ருந்த தமிழ் கட்­சி­களில் இரண்டு மாத்­தி­ரமே பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவை நல்­கி­யி­ருந்­தன. ஆகவே அவர்­க­ளுக்கு பத­விகள் வழங்­கப்­பட வேண்­டிய தேவைகள் இருந்­தன. அதே வேளை மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு இணைப்­பா­ளர்கள் பொறுப்­பு­களை குறித்த மாவட்­டத்தின் எம்.பிக்கள் பெற்­றுள்­ளனர். இதில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் பெற்­றி­ருக்­கின்­றனர்.
இதை பெரி­து­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அடுத்த வருடம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் வரையே இந்த பொறுப்­புகள். அதன் பின்னர் இடம்பெறப்போகும் அமைச்சரவையே அடுத்த ஐந்து வருடங்களுக்கானது. எனவே இதில் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமல்ல. எனினும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறப்போவது யார் என்பதே இங்கு எழுந்திருக்கும் எதிர்பார்ப்பாகும். எனவே இந்த ஜனாதிபதியை மதவாதிகள் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று கூறினாலும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை சார்ந்து எடுக்கப்போகும் முடிவுகளை பொறுத்திருந்து பார்த்தல் அவசியம்.
எது எப்படியானாலும் இலங்கையின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அரசியலுடன் சேர்ந்து பயணிக்கவே  பெளத்த மதம் விரும்பும். அது சூறாவளியாக மாற்றாது தென்றலாக மாற்றும் வலிமை தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை மக்களும் அறிவர். அதே வேளை இதை குறித்த கடும்போக்கு மதவாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தை கீழே தள்ளி விட்டு மற்றுமொரு சமூகத்தை மேம்படுத்த வேண்டுமென புத்தபகவான் எங்கும் கூறவில்லையே.
- சிவலிங்கம் சிவகுமாரன் - நன்றி வீரகேசரி 















No comments: