தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திரண்ட மக்கள்


தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள். 

தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும்,  தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து, கான்பராவில் வாழும் தமிழர்களுடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி 13 - 03 - 2013 அன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமானது.

பேரணியில் கலந்துகொண்டு கிறீன் கட்சித்தலைவரும் செனட்டருமான கிறிஸ்ரின் மிலின், செனட்டர் லீ றியானன், சனநாயக தொழிற்கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் மடிகன், லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சருமான பிலிப் றுடொக், ஆளும்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மிசால் றோவ்லன் ஆகியோர் உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் உரையாற்றினர்.
தமிழர்களுக்கான நீதிகிடைக்கும்வரை, தொடர்ச்சியான போராட்டங்களை வலியுறுத்திய தமிழர்  நீதிக்கான செயலணியின் பேச்சாளர் றேவர் கிராண்ட் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற எந்த தீர்மானமும், தமிழர்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
இப்பேரணியின்போது அவுஸ்திரேலிய அரசபிரதிநிதிகளிடமும், ஏனைய நாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகளிடமும், அவுஸ்திரேலிய தமிழ்மக்களின் கோரிக்கைகள் தாங்கிய மனுக்கள், அனைத்து அவுஸ்திரேலிய அரசியல் தமிழ் அமைப்புக்களின் சார்பில் கையளிக்கப்பட்டன.
பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதுவராலயங்களுக்கு பேரணியாகச்சென்று தமிழர்களிள் கோரிக்கைகள் தாங்கிய இம்மனுக்கள் கையளிக்கப்பட்டன.
 அவுஸ்திரேலியாவின் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் திரண்ட தமிழர் நீதிக்கான பேரணி, மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழர் நீதிக்கான செயலணி Campaign for Tamil Justice













No comments: