புலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமதி ஸ்ரீனிவாசன்

.

“இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்.” என்பது உண்மைதான் இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகிவிடுவது இயல்பு ஆகும்.  03/03/2013 அதாவது மார்ச் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி மிகவும் சிறப்பாக சிட்னி முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள கல்வி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமன்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதே போல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருக்கின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிட்னியில் இசைக்கல்லூரியினை நடாத்தி வருகின்ற திருமதி பஷ்பா ரமணனின் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தரமான பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து சுருதி, லயத்துடன் இணைந்து வாடி எம்மையெல்லாம் பக்தி பரவசநிலைக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.


ஆண்டவனிடம் நம்மை இணைப்பது இசையே என்பதுபோல தமிழோடிசை பாடல்களினை தந்து தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். கேஷிகாவின் பாடல் தெரிவுகள், தமிழ் உச்சரிப்பு, சுருதியுடன் குரலின் ஏற்றத் தாழ்வுகள் என்பன மிகவும் நேர்த்தியாகவே அமைந்திருந்தன. பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியில் தொடர்ந்து 7 மணி வரை அயராது பாடி தனது அசாத்தியமான பாடல் திறமையினை நிரூபதித்திருந்தார் செல்வி கேஷிகா அவர்கள்.


நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கஜன் பரமேஸ்வரன் மற்றும் பாலகி பரமேஸ்வரனின் கம்பீரமான குரலுடன் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட 12 உருப்படிகளினை இடைவிடாது தொடர்ந்து பாடியிருந்தார். குறிப்பாக கலியுகவரதன் என்று பிருந்தாவன சாரங்கா ராகத்தில் பாடிய பாடலும், போ சம்போ என ரேவதி பைரவி ராகத்திலும், ஆண்டவன் அன்பே என சிவரஞ்சனி ராகத்தில் பாடிய பாடல்களினை பாடிய போது இசையால் வசமாக இதயம் உண்டோ? ஏன்று கேட்கத் தோன்றியது.


சங்கீத ஆசிரியர் திருமதி புஷ்பாரமணனின் கற்பித்தல் திறனும் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் ஆர்வமான கற்றல் திறனும் அரங்கில் வெளிப்பட்டிருந்தமையினை காணமுடிந்தது. அமிர்தலிங்கம், சாரதா தம்பதிகளின் செல்வ புதல்வியான கேஷிகாவிற்கு அவரது பெற்றோர்களின் கலை ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பும் பக்க பலமாக இருந்தமையும், செல்வி கேஷிகாவிற்கு நல்லதொரு எதிர்காலம் இசை அரங்கில் காத்திருப்பதும் நிச்சயமெ. செல்வி கேஷிகாவினை அவரது இசைப்பயணம் தொடர நாமும் வாழ்த்துகின்றோம்.


No comments: