நான் பார்த்து ரசித்த திரைப்படம் மெய் - செ .பாஸ்கரன்

.

இந்தத் திரைப்படம் பற்றி பேசுவதாக இருந்தால் மருத்துவ உலகின் சில சிந்திக்க
வேண்டிய பக்கங்கள் என்று கூறிவிடலாம் . இலவச மருத்துவ முகாம் என்ற
பெயரில் தகவல்கள் திரட்டுவதும் அதன் பின்னால் நடக்கின்ற கூட்டுச் சதியும்
நெஞ்சை உறுத்துகிறது. இலவச மருத்துவ முகாம் என்பது மக்களுக்கு
கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது இல்லை என்று கூறமுடியாது
ஆனால் அதன் பின்னால் இடம்பெறுகின்ற இப்படியான மோசடிகள்
நிறையவே இந்தியாவில் இருக்கின்றது. பண முதலைகள் மீண்டும் மீண்டும்
பணத்தை குவித்து கொள்வதற்காக மனிதாபிமானத்தை நீக்கிவிட்டு இப்படியான
பாதக செயல்களை செய்கின்றார்கள். கோடிக் கணக்கான பணத்தை
கொட்டி தனியார் நிறுவனங்களில் படித்து டாக்டராகி மீண்டும் அந்தப் பணத்தை
எப்படி திரும்ப பெறலாம் என பலர் பல தப்பான வழிகளை முன்னுடுப்பதும்
நாம் அறிந்ததே . இதைத்தான் இந்த திரைப்படம் சொல்ல முன் வருகின்றது.

நடிகர் நிக்கி சுந்தரம் அவரோடு ஐஸ்வர்யா ராஜேஷ் மிக யதார்த்தமாக
தங்களுடைய பாத்திரத்தை செய்திருக்கின்றார்கள். கிஷோர் பல படங்களில்
போலீஸ் வேடத்திலேயே வந்து கொண்டிருக்கிறார் இங்கும் அந்தப் போலீஸ்
மிடுக்கோடு வராமல் ஒரு போலீஸ் ஆய்வாளராக வந்தது மட்டுமல்ல
மனிதாபிமான செயல்பாட்டையும் மிக அழகாக தன்னுடைய
முகபாவத்தில் காட்டிச் செல்கின்றார். அதிக செலவில்லாமல் இந்த திரைப்படம்
எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன் காரணம் இதிலே பலர்
புதியவர்களாக காணப்படுகின்றார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.
அதிலே படத்தொகுப்பாளர் எடிட்டிங் பிரீர்த்தி மோகன் மிக அருமையாக
அனைத்தையும் செய்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். அடுத்து
பேசப்பட வேண்டியவை ஒளிப்பதிவாளர் வி என் மோகன். சென்னையிலே
இப்படி ஒரு இடம் இருக்கின்றதா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் .
சென்னையினுடைய வீதிகள் எப்படி இருக்கின்றது என்பதையும் மிக
அருமையாக தன்னுடைய கமராவில் பதிவாக்கியிருக்கிறார். ஒரு முக்கியமான
ஒன்று இந்த திரைப்படத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது இசையமைப்பாளர்கள்
அனில் ஜான்சன் பின்னணி இசையை பின்னி தள்ளுகிறார் அதேபோல்
பிருத்வி குமாரின் இசை பாடலுக்கு மெருகூட்டி மனதைத் தொட்டுச்
செல்கின்ற பாடல்களாக அமைந்து விடுகின்றது.



இந்த படத்தில் பெரிய சண்டை காட்சிகள் அல்லது பெரிய கொலைக் காட்சிகள் அதிகம் இல்லை. தற்போது வருகின்ற இந்த திரைப்படங்களில் எல்லாம் அது மிகப் பெரிய நடிகராக இருந்தாலென்ன புதியவர்களாக இருந்தால் என்ன 40 பேரை தனி ஒருவனாக நின்று அடித்துவிட்டு செல்கின்ற ஹீரோயிஸம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது ரத்தம் சொட்டசொட்ட ஒழுகுகின்ற காட்சிகள் எங்கும் விரிந்து இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் சில சண்டை காட்சிகள் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதிகமான தமிழ் திரைப்படங்களிலே கதாநாயகன் துப்பாக்கியை வைத்திருப்பார் ஆனால் பத்து பேர் வந்து சண்டை போடும் போது துப்பாக்கியை விட்டுவிட்டு வந்தவர்கள் கூட துப்பாக்கியில்லாமல் கையாலேயே சண்டை போடுவார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் அதை மிகவும் அழகாக எடுத்துள்ளார்கள். அடுத்தவன் வைத்திருக்கின்ற கைத்துப்பாக்கியின் மகசின் என்று அழைக்கப்படுகின்ற ரவைக் கூடடை வெளித்தள்ள வைத்துவிட்டு கதாநாயகன் அதைத் தொடர்ந்து சண்டை போடுவதும் யதார்த்த காட்சி அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.




இதுஒரு த்ரில்லர் திரைப்படம் என்ற அமைப்புக்குள்ளேயே இந்த திரைப்படம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் எதார்த்தமாக பலவிடயங்களை கையாண்டிருக்கிறார் இந்த நெறியாளர்  எஸ் ஏ பாஸ்கர். அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இதயத்தையும் கிட்னியையும் விறகும் டாக்டர் எப்படி இருப்பார்கள் என்று மிக அழகாக காட்டியிருக்கிறது இந்த திரைப்படம். இல்லாத விடயத்தை இந்த திரைப்படம் காட்டவில்லை நாளாந்தம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகளைத் தான் இந்த திரைப்படத்தின் கதையாக எடுத்து இவர்கள் நகர்த்திச் செல்கிறார்கள்.

மனதிற்கு ரம்மியமான காட்சிகள் ஒருவரையொருவர் நேசிக்கும் விடயங்கள் வெளிநாட்டிலே அமெரிக்காவிலேயே வாழ்ந்துவிட்டு இந்தியாவுக்கு வந்து இருக்கும் ஒரு மருத்துவர் இந்திய நாட்டிலும் மனிதாபிமானம் உரிமைகளுக்கும் போராடுகின்ற பெண்கள் இப்படி பல விடயங்களையும் மிக அழகாக கொண்டு செல்கின்றது என்பது உண்மை. இது நீண்ட நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் என்றாலும் அதை இப்போது ஆறுதலாக இருந்து பார்த்ததால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்பியது தான் காரணம்.
நேரமிருந்தால் நீங்களும் பார்க்கலாம்

No comments: