பெண்களின் தார்மீகக் குரலாக ஒலித்த பத்மாசோமகாந்தன் ! ஈழத்து இலக்கிய உலகில் வலம்வந்த அயராத உழைப்பாளியை இழந்தோம் !! முருகபூபதி


ழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும்,  தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில்  ஈடுபட்டவருமான திருமதி பத்மா சோமகாந்தன்   கடந்த  15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார். 
கொழும்பில்  தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சுதந்திரன் பத்திரிகையை தொடக்கியபொழுது சிறுமியாக இருந்த பத்மா, 1954 இல், அந்தப்பத்திரிகை நடத்திய அகில இலங்கை சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுபெற்றவர். இவருடன் போட்டியிட்ட, இரண்டு முக்கிய படைப்பாளிகள், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப்பெற்றார்கள்.


அவர்கள்தான் டானியல், டொமினிக்ஜீவா ஆகியோர்.

பத்மா எழுதி பரிசுபெற்ற சிறுகதை இரத்தபாசம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில், பிரம்மஶ்ரீ ஏரம்பக்குருக்கள், ஶ்ரீமதி அமிர்தம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வியாக பிறந்த பத்மாவுக்கும் சில சமூகப்பின்னணிகள் இருந்திருக்கின்றன. பெரியதந்தையார் பிரம்ம ஶ்ரீ தி. சதாசிவம் தற்காலத்திலிருக்கும் கல்விப்பணிப்பாளர் தகுதிக்குரிய வித்தியாதரிசகர்.

அத்துடன் கல்விமான். யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச்சங்கத்தின் ஸ்தாபகர். தாய்மாமன், பிரம்மஶ்ரீ மு. சபாரத்தினம் அய்யர் அக்காலத்தில் வெளியான கவிகலாதீபம் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியவர்.
இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த அய்யர்மார் குடும்பங்களில் தோன்றி பிரபலமான பலரின் வாழ்வையும் பணிகளையும் சமுதாயக்கண்ணோட்டத்தில் ஆராயமுடியும். அந்த வரிசையில் மகாகவி பாரதி முதலிடம் வகிப்பார். கோயில் பூசகர்களாகியிருக்கவேண்டியவர்கள், படைப்பாளிகளாகவும் கல்விமான்களாகவும், மருத்துவர், பொறியிலாளராகவும் மாறுவதும் அவரவர் மனவெழுச்சிகளின் விளைவே.


பாடசாலையில் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் கட்டுரைகள் எழுதத்தொடங்கிய பத்மா, சுதந்திரன் சிறுகதைப்போட்டிக்கு புதுமைப்பிரியை என்ற புனைபெயரில்தான் இரத்தபாசம் என்ற சிறுகதையை எழுதி அனுப்பி முதல் பரிசைப்பெற்றுள்ளார்.

சிறுமியாக இருந்தபோதே புதுமையில் அவருக்கு நாட்டம் வந்திருக்கிறது. அதன் விளைவுதான் அந்தப்புனைபெயரில் எழுதுவதற்கு அவரைத் தூண்டியிருக்கவேண்டும்.  இவரது கணவர் சோமகாந்தனும்  ஈழத்தின் மூத்த எழுத்தாளர்.
2006 ஆம் ஆண்டு ஏப்பரில் மாதம் 28 ஆம் திகதி கணவர் சோமகாந்தன் மறைந்த பின்னர், பத்மாவுக்கு அகத்தனிமை இருந்தபோதிலும், பொதுப்பணிகளில் முக்கியமாக கலை, இலக்கியம் மற்றும் மகளிர் விவகாரங்களில் தொடர்ந்தும் உற்சாகமாக இயங்கினார். பயணங்கள் மேற்கொண்டார்.  பயிலரங்குகளில் உரையாற்றினார்.
2008 இல் இவரது பாரா முகங்கள் – சில பார்வைகள் வெளியாகியது. இதற்கு தமிழக எழுத்தாளர் திலகவதி (ஐ.பி.எஸ்) முன்னுரை தந்துள்ளார்.
இதற்கு அணிந்துரை எழுதியவர்  செ. கணேசலிங்கன்.
இற்றைத்திங்கள் ( சிறுகதைத்தொகுதி) 2013 இல் வெளிவருகிறது.
இற்றைத்திங்கள் சிறுகதைத்தொகுதிக்கு அணிந்துரை எழுதியிருக்கும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த மூத்த படைப்பாளி பொன்னீலன்,” அற்றைத்திங்கள் அவ் வெண்ணிலவில் என்ற புறநானூறில்
இடம்பெற்ற பாடலை முன்னுதாரணமாக்கி, இன்றைய ஈழத்தின் துயர வரலாற்றை பதிவு செய்யும் கதைகளை எழுதி, இற்றைத்திங்கள் என்ற தலைப்பை குறியீடாக்கியிருப்பதாக  “  புகழாரம் சூட்டியுள்ளார்.
நெஞ்சுக்கு நிம்மதி என்ற நூல் இளம்பெண்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளைக் கூறுகிறது. இதற்கு அன்னலட்சுமி இராஜதுரை முன்னுரை தந்திருக்கிறார். வீரகேசரியின் துணைப்பதிப்பான மங்கையர் கேசரியில் சுமார் மூன்றாண்டுகள் வாசகர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சீர்மிய முறைமையில் (Counselling) தீர்வுகளும் ஆலோசனைகளும் சொன்னவர் பத்மா சோமகாந்தன். அதன் தொகுப்பே நெஞ்சுக்கு நிம்மதி.
பத்மாவின் எழுத்துலகத்தின் தொடக்காலம் சிறுகதைதான்.
பல சிறுகதைகளும் அதேசமயம் ஏராளமான கட்டுரைகளும் எழுதியிருக்கும் பத்மா சோமகாந்தன், 75 இற்கும் மேற்பட்ட இசை வல்லுனர்களையும் பற்றி எழுதியிருப்பவர்.
இவை தவிர, பெண்ணின் குரல், சொல், அகவழி, சங்கத்தமிழ், பிரவாகினி ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் இயங்கியவர்.
1954 இல் மாணவியாக எழுதத் தொடங்கிய பத்மா, வீரகேசரி, ஈழநாடு, ஈழகேசரி, தினபதி, தினக்குரல், உதயன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை இலக்கியம், சிற்பியின் கலைச்செல்வி, மற்றும் மல்லிகை, ஞானம், இலங்கை விகடன், தமிழகத்தில் வெளியான தாமரை, கல்கி, கலைக்கதிர் முதலானவற்றிலும், அமைப்புகளின் ஆண்டுமலர்கள், சிறப்புமலர்கள், நினைவு மலர்கள், மாநாட்டு, கருத்தரங்கு மலர்களிலும் எழுதியிருப்பவர். அவரது கரம் ஓயாத கரம். 
ஏனென்றால், ஏழாம் வகுப்பு மாணவியாக இருந்த காலத்தில் எழுதத்தொடங்கியவர், உயர்வகுப்புக்குச்சென்றும் எழுதினார். திருமணமானதன் பின்னரும் எழுதினார். பிள்ளைகள் பெற்று குடும்பத்தலைவியானதன் பிறகும் எழுதினார். தனது பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் காலப்பகுதியிலும் எழுதிக்கொண்டிருந்தவர்  இந்த அயற்சியற்ற ஆளுமை.
ஆசிரியராக, அதிபராக தொழில் துறையில் ஈடுபட்ட காலத்திலும் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்ட பத்மா சோமகாந்தன், தனது இலக்கியப்பிரவேசத்தை சிறுகதையில் தொடங்கியவர், எண்ணிலடங்காத பத்திகளும் எழுதியிருக்கிறார்.
ஈழத்துச்சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு என்ற தலைப்பில் பத்மா சோமகாந்தன் எழுதிய கட்டுரை, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1996 இல் கொழும்பில் நடத்திய இலக்கியப்பேரரங்கு விழாவில் வெளியிட்ட புதுமை இலக்கியம் மலரில் வெளிவந்துள்ளது.
இலங்கையில் பத்திரிகை இலக்கியம் தொடர்பாக ஆராயப்புகும் மாணவர்களுக்கு அக்கட்டுரை பயன்தரவல்லது.
கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள், கரும்பலகைக்காப்பியங்கள், இற்றைத்திங்கள் முதலான சில சிறுகதைத்தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் அவர், இந்நூல்களுக்காக தமிழ் நாடு லில்லி தேவசிகாமணி பரிசு, சென்னை இந்து நாளிதழின் பாராட்டு, சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, வடக்கு – கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய பரிசு பெற்றிருப்பவர்.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியில் தொடங்கி, சாந்தி சச்சிதானந்தம் வரையில் 23 பெண்ணிய ஆளுமைகள் குறித்து பத்மா சோமகாந்தன் எழுதியிருக்கும் மற்றும் ஒரு நூல் ஈழத்து மாண்புறு மகளிர்.
ஆன்மீகம், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல், கல்வி, மேடைப்பேச்சு, சமூகப்பணி, ஒலிபரப்பு, இதழியல் ஊடகம், இலக்கியம், நடனம், இசை, நிருவாகம், பதிப்புத்துறை முதலான பல்துறைகளிலும் ஈடுபட்டு சாதனைகள் புரிந்த பெண்கள் பற்றி எழுதியிருக்கிறார். இது தவிர ஈழத்து தமிழ்ப்பெண் ஆளுமைகள் என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார்.
” நமது வரலாற்றை எழுதும்பொழுது, இனிமேலும் நாங்கள் மகளிர் வகிபாகத்தை மறத்தல் கூடாது  “  என்பதை பத்மா எழுதிய ஈழத்து மாண்புறு மகளிர் நூல் அழுத்தமாகச்சொல்கிறது.” என்று இந்த நூலுக்கு முன்வாசகக்குறிப்பு எழுதியிருக்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
சிறுவர் இலக்கியமும் படைத்திருக்கும் பத்மா, சிறுவர்களுக்காக அனுமான் கதை என்ற நூலையும் வரவாக்கியவர்.

சுவாமி சின்மயானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்திலும் எழுதும் திறன்வாய்ந்தவர்.
Garland of fifty flower – Stories from Hindu Mythology என்பவை இவரின் இதர நூல்கள்.
நாம் தினமும் முழ்கிக்கிடக்கும் மின்னஞ்சல், முகநூல் வலைப்பதிவுக் கலாசாரத்திற்குள் பிரவேசிக்காமல் தொடர்ந்தும் அமைதியாக எழுதிக்கொண்டும் மேடைகளில் பேசிக்கொண்டுமிருந்தவர்.
எழுதுவதுடன் மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், அமைப்புகளிலும் இணைந்து இயங்குவதிலும் ஆர்வம் காண்பித்த  பத்மா சோமகாந்தன், இந்து மாமன்றம், கொழும்பு தமிழ்ச்சங்கம், இந்து மகளிர் மன்றம், சாரதா சமிதி, ஆறுமுகநாவலர் சபை, நாவலர் நற்பணி மன்றம், விழுது மேம்பாட்டு மையம் – இதனோடு இணைந்த பெண்கள் சார்பு ஊடகத்துறை, ஓளவை இலக்கிய வட்டம், தமிழ் – சிங்கள எழுத்தாளர் ஒன்றியம், இலங்கை அரச எழுத்தாளர் மன்றம், அகில உலக சிற்றிதழ் சங்கம் முதலானவற்றிலும் அங்கம் வகித்திருக்கிறார்.
இனி தனக்கு ஓய்வுவேண்டும் என்று சொல்லாமல் சொல்லி தனது கணவரிடம் சென்றுவிட்டார் என்றுதான் கருதுகின்றேன்.
எங்கள் இலக்கியக்குடும்பத்தில் ஒருவராக திகழ்ந்த சகோதரி பத்மா சோமகாந்தனுக்கு எமது இதய அஞ்சலி.
-----0----
letchumananm@gmail.com




No comments: