உலகச் செய்திகள்

வடக்கு சைப்ரஸ் தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி 

கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானில் 15 பேர் பலி

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் சரமாரித் தாக்குதல்

வியட்நாமில் கடும் வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ தாண்டியது

சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

கொரோனா தொற்று தொடர்பில் டிரம்ப் - பைடன் கடும் விவாதம்

ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்


வடக்கு சைப்ரஸ் தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி 

துருக்கி கட்டுப்பாட்டு வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாதியான எர்சின் டாடர் வெற்றிபெற்றுள்ளார்.

துருக்கி ஆதரவுடையவரான டாடர் மத்தியதரைக்கடல் தீவான சைப்ரஸை இரண்டு நாடுகளாக பிரிக்க விரும்புபவராவார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 52 வீத வாக்குகளை பெற்று எதிர்பாராத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது போட்டியாளரான பதவியில் உள்ள ஜனாதிபதி முஸ்தபா அகின்சி, அந்தத் தீவின் கிரேக்கப் பகுதியுடன் ஒன்றிணைவதற்கு ஆதரவானவராவார்.

சைப்பரஸில் கிரேக்கத்தின் ஆதரவில் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றதை அடுத்து துருக்கி அதன் வடக்கு பகுதியை ஆக்கிரமித்த 1974 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த நாடு இரண்டாக பிளவுபட்டு காணப்படுகிறது.

அந்த தீவின் வடக்கில் துருக்கிய சைப்ரஸ் அரசு ஒன்று ஆட்சியில் இருப்பதோடு தெற்கின் மூன்றில் இரண்டு பகுதி கீரேக்க சைப்ரஸ் தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் நிர்வாகத்தில் உள்ளது. இதில் சுமார் 300,000 மக்கள் தொகை கொண்ட வடக்கு வைப்ரஸ் துருக்கி குடியரசை துருக்கி மாத்திமே ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக அங்கீகரிப்பதோடு ஏனைய உலக நாடுகள் அதனை சைப்ரஸின் ஓர் அங்கமாகவே கருதுகிறது.   நன்றி தினகரன் 




கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானில் 15 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் துணைத் தூதரகத்திற்கு அருகில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துணைத் தூதரகத்தில் இருந்து வீசாவை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஜலாலாபாத் நகரில் உள்ள மைதானம் ஒன்றில் திரண்டிருந்தபோதே இந்த நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நகரஹார் மாகாண தலைநகரான ஜலாலாபாத்தின் மைதானத்தில் இருந்து பலரும் வெளியேற முயன்றபோதே இந்த நெரிசல் ஏற்பட்டதாக மாகாண மருத்துவமனை பேச்சாளர் சஹர் அடெல் தெரிவித்துள்ளார்.

இதன்போது 11 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதியவர்கள் பலர் காயமடைந்திருப்பதாகவும் மாகாண சபை உறுப்பினர் சஹ்ராப் காதரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான அட்டையை பெறுவதற்கு 3,000க்கும் அதிகமான ஆப்கானியர்கள் ஒன்றிணைந்ததாக மாகாண அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

உறவினர்களை பார்ப்பதற்கு, மருத்துவ சிகிச்சைக்கு, தொழில் வாய்ப்பை தேடி அல்லது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளில் இருந்து தப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானியர்கள் பலர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீற்றர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.    நன்றி தினகரன் 






இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் சரமாரித் தாக்குதல்

முற்றுகையில் உள்ள காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

பலஸ்தீன ஹமாஸ் குழுவுக்கு சொந்தமான சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்து கடந்த செவ்வாய் இரவு இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கான் யூனிஸ் மற்றும் டெயிர் அல் பலாஹ்வில் இரு விவசாய நிலங்கள் மீதே மூன்று ஏவுகணைகள் விழுந்ததாக அதனைப் பார்த்த பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கான் யூனிஸ் பகுதியில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த விபரமும் வெளியாகவில்லை.

காசாவின் அனைத்து தேவையான வர்த்தகப் பொருட்களும் சுரங்கப் பாதை ஊடாகவே எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






வியட்நாமில் கடும் வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ தாண்டியது

மத்திய வியட்நாமில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 20 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த வெள்ளத்தினால் சுமார் 178,000 வீடுகள் நீரில் மூழ்கி இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் தெரிவித்துள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் மீட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த வெள்ளத்தினால் வீதிகள், உட்கட்டமைப்புகள் மற்றும் விவசாய நிலங்களும் அழிவடைந்திருப்பதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. வெள்ளம் காரணமாக 200,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் வார இறுதியிலும் இந்தப் பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.    நன்றி தினகரன் 





சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கஷோக்கி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது பெண் தோழி ஹாடீஜா ஜெங்கிஸ் மற்றும் கஷோக்கி நிறுவிய ‘அரபு நாடுகளுக்கான ஜனநாயகம்’ எனும் அமைப்பு சார்பில் வொஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டவரான ஹாடீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறியுள்ளார்.

கஷோக்கி கொலையால் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘அரபு நாடுகளுக்கான ஜனநாயகம்’ அமைப்பு தெரிவித்துள்ளது. 59 வயதான ஜமால் கஷோக்கி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான சவூதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். அவர் சவூதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்து வந்தார்.    நன்றி தினகரன் 





கொரோனா தொற்று தொடர்பில் டிரம்ப் - பைடன் கடும் விவாதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிக்கட்ட விவாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் போட்டியாளரான ஜோ பைடன் இருவரும் கொரோனா தொற்று மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பெருந் தொற்றுக்கு எதிராக மேலும் முடக்க நிலைகளை கொண்டுவருவது குறித்து பைடன் கூறும்போது, அமெரிக்காவை மீண்டும் திறப்பதற்கு நேரம் வந்துவிட்டதாக டிரம்ப் வலியுறுத்தினார்.

மகனின் வர்த்தகச் செயற்பாடுகள் மூலம் பைடன் தனிப்பட்ட முறையில் நன்மைகள் பெறுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மறுபுறம் டிரம்பின் வெளிப்படையற்ற வரி விவகாரங்கள் தொடர்பில் பைடன் பதிலுக்கு குற்றம்சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் கருத்துக் கணிப்புகளின்படி உறுதியான முன்னிலையில் உள்ளார்.

எனினும் அதன் புள்ளிகள் குறைவாக இருக்கும் நிலையில் ஒருசில மாநிலங்கள் தேர்தல் முடிவில் செல்வாக்குச் செலுத்த வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் தினத்திற்கு முன்னதாக முன்னர் எப்போது இல்லாத அளவுக்கு 47 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே தமது வாக்கை அளித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க நேரப்படி கடந்த வியாழக்கிழமை இரவு டென்னசி, நஷ்வில்லாவில் டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையிலான இறுதி நேருக்கு நேர் விவாதம் இடம்பெற்றது. இந்த இருவரும் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்ட போதும் ஒருவரை ஒருவர் தூற்றி பெரும் இடையூறுகளுடன் முடிந்தது.

இதனால் ஒருவர் பேசும்போது மற்றவர் இடையூறு செய்யாத வகையில் ஒலிவாங்கியை துண்டிக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் அவ்வாறான இடையூறுகள் குறைவாகவே இருந்தது.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினாலும், முந்தைய விவாதத்தைக்காட்டிலும் ஓரளவு அமைதியான விவாதமாக இது அமைந்தது.

இதில் பைடன் கொரோனா தொற்றை டிரம்ப் கையாளத் தவறியதாக மீண்டும் ஒரு முறை குற்றம்சாட்டினார்.

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என டிரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் உள்ளது.

தளர்வுகளை வழங்கும் அரசு, வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை கையாளவில்லை. கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

டிரம்ப் எதற்காக முகக்கவசம் அணிய மறுக்கிறார். ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் சொல்லவில்லை” என்று பைடன் குறிப்பிட்டார். எனினும் நோய்த் தொற்றில் இருந்து அதிகமானவர்கள் மீண்டு வருவதால் நாட்டை முடக்குவது பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

“இது பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட பெரிய நாடு. மக்கள் தொழில்வாய்ப்பை இழக்கும்போது தற்கொலைக்கு முயல்கின்றனர். மன அழுத்தம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு இதுவரை காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது” என்று டிரம்ப் கூறினார்.

ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து வந்ததும் இந்த வைரஸ் காணாமல்போய்விடும் என்று டிரம்ப் குறிப்பிட்டபோது, இந்த நாடு ஒரு கறுப்பு குளிர்காலம் ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக பைடன் எச்சரித்தார்.

73 வயதான ஜனாதிபதி டிரம்ப், “அதனுடன் வாழ நாம் பழகிக்கொள்கிறோம்” என்று கூறியபோது, 77 வயதான பைடன், “அதனால் நாம் உயிரிழந்து வருகிறோம்” என்று பதிலளித்தார்.

இரு வேட்பாளர்களுக்கு இடையிலான இந்த கடைசி விவாதத்தின்போது சில முக்கிய விவகாரங்களில் இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் தனது சக போட்டியாளர் ஜோ பைடனை நோக்கி, "நீங்கள் எண்ணெய் உற்பத்தித்துறையை மூடிவிடுவீர்களா?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பைடன், "எண்ணெய் உற்பத்தித்துறை கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நான் அதை சீர்மாற்றம் செய்வேன்" என்று கூறினார்.

மேலும், பெரிய எண்ணெய் தொழில்கள் காலப்போக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மாற்றப்பட வேண்டும் என்று பைடன் மேலும் கூறினார்.

"அடிப்படையில் எண்ணெய் தொழிற்துறையை அழிக்கப் போவதாக அவர் கூறுகிறார். டெக்சாஸ், அதை நினைவில் கொள்வீர்களா? பென்சில்வேனியா, ஓக்லஹோமா, ஓஹியோ மக்களே இதை நினைவில் கொள்வீர்களா?" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது.  நன்றி தினகரன் 





ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க, அமெரிக்கா முழு ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மருந்து நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





No comments: