நடராஜ சிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது - கானா பிரபா


இரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.

வானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.
ஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும்
விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.

பெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் 
எமக்கெல்லாம் விளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.
கோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது. 

பண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.

அவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று


தினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்


காற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை  நடராஜசிவம்
என்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.




No comments: