உலகத்தை சுற்றி வந்த ஜெசிக்கா வற்ஷன்


                                                                                    கரு (கு கருணாசலதேவா)

சிட்னி துறைமுகத்தில் ஏராளமான மக்கள் கூட்டம் உலகத்தை தன்னம்தனியாக ஒரு படகு மூலம் சுற்றி வந்த ஒரு புதிய கதாநாயகியை சென்ற சனிக்கிழமை மே மாதம் 15ம் திகதி பிற்பகல் 2 மணி அளவில் வரவேற்றார்கள். நூற்றுக்கும் அதிகமான படகுகள் இந்த வரவேற்பில் பங்குபற்றின.

3 நாட்களில் தனது 17வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கும் ஜெசிக்கா வற்சன் மிக இள வயதில் 210 நாட்களில் 23,000 கடல் மைல்கள் தனது படகு மூலம் பிறர் உதவியில்லாமல் உலகத்தை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளார்.



அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் றட் இவரை வரவேற்று புகழ்ந்து, ஜெசிக்கா ஒரு புதிய கதாநாயகியென போற்றி உரையாற்றினார்.

ஆனால் ஜெசிக்கா தனது உரையில் தான் பிரதம மந்திரி சொல்லுவதை ஏற்கமாட்டேன். “நான் ஒரு கதாநாயகி அல்ல. நான் ஒரு சாதாரண பெண்பிள்ளை.” என்றார். “என்னுடைய கனவு நனவாக வேண்டும் என எண்ணினேன். அது நடந்துவிட்டது. நீங்களும் ஏதாவது நடக்கவேண்டும் என நம்பிக்கை வைத்திருந்தால் அதற்காக கடுமையாக உழைத்தால் நீங்களும் சாதனை படைக்கலாம்” என்றார் ஜெசிக்கா.





தனது படகு மான் ஒ வார் படிகளில் கரை சேர்ந்ததும்; படிகளிலிருந்து ஒப்பரா கவுஸ் அருகில் உள்ள மேடை வரை விரிக்கப்பட்ட ரோஸ் நிற கம்பளத்தில் தரையிறங்கினார். “நான் கடந்த 7 மாதங்களும் படகில் இருப்பதற்குரிய எல்லாவற்றையும் செய்தேன்” என்றார். தனது வரவை காத்திருந்த தனது பெற்றோர்களை அணைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டார். அவர்களுடம் பிரதம மந்திரி கெவின் ரட்டும் நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஷ்ரினா கெனலியும் வரவேற்றார்கள்.

இவர் மிக விரைவில் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் மூலம் மில்லியன் டொலர்களுக்கு மேல் உழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments: