இலங்கைச் செய்திகள்


தமிழ் - சிங்கள சமூகங்கள் விரைவில் இணைந்து வாழும் சூழல் வலுப்பெறும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வடபகுதி மக்களின் முதல் தெரிவாக அமைச்சர் டக்ளஸ் இருக்க வேண்டும்

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சகல விடயங்களிலும் அரசாங்கம் முன்னுரிமை

உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரினால் பிரதமருக்கு யாழ். மாம்பழங்கள்

அரந்தலாவை படுகொலை; உயிர்தப்பிய பௌத்த பிக்கு அடிப்படை உரிமை மனு தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை விழா

இலங்கை கிரிக்கெட் தலைவர் யாழ் விஜயம்

நயினை நாகபூசணி அம்பாள் தேர்

கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு

வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்



தமிழ் - சிங்கள சமூகங்கள் விரைவில் இணைந்து வாழும் சூழல் வலுப்பெறும்




யுத்தம் காரணமாக பிரிந்திருந்த
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கடந்த காலத்தில் யுத்தம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பிரிந்திருந்த நிலமை இப்போது மாறியிருக்கின்றது. இரு சமூகங்களும் இணைவதற்கு இப்போது ஆயிரம் நன்மையான காரணங்களுள்ளன. அதனால் எதிர்காலத்தில் இரு சமூகங்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழும் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும. அதற்காக நாங்கள் உழைக்க வேண்டுமென்று கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றுக் காலை கொழும்பு வெள்ளவத்தை அஷ்டலட்சுமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்கள்.

ஆனால் தமிழ் சிங்கள சமூகங்கள் தங்களுக்கிடையே சந்தேகங்களை வளர்த்துப் பிளவு படவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று நிலைமை முற்றாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் அந்த நிலையை நாங்கள் மேலும் வெளிப்படுத்தி நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து இந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 










காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்




வவுனியாவில்
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 1,229ஆவது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகளே இந்த கவன யீர்ப்பை முன்னெடுத்தனர். இதன்போது பாராளுமன்ற வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றோருக்கு எதிரான பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.  நன்றி தினகரன் 










வடபகுதி மக்களின் முதல் தெரிவாக அமைச்சர் டக்ளஸ் இருக்க வேண்டும்




நிரந்தரமான அரசியல் தீர்வு, பிரதேசத்தின் துரித அபிவிருத்தி;
பிரதமர் மஹிந்த உறுதி
வடபகுதி மக்கள் தமக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை காணவும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கூடிய ஒரு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் சேவை செய்யும் தலைவர்களை உங்களது முதல் தெரிவாக தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு மேலும் பலத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார். அலரிமாளிகையில் தமிழ்ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களை நிரப்பிக்கொண்டு தேவையற்ற விடயங்களை பேசி இந்நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்தில் தேவையற்ற முறையில் கூக்குரல் இடுவதால் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்பட போவதில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று அவரது கட்சியில் பல சிறந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதேபோன்று இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்க கொள்கைகள் சார்பு கட்சிகளில் சிலரும் போட்டியிடுகிறார்கள். அவர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வடபகுதி மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 











காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சகல விடயங்களிலும் அரசாங்கம் முன்னுரிமை




அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவிப்பு
யுத்தச் சூழல் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தீவிர கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.நேற்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய பத்திரிகைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு விடயங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் உதவிகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சகல விடயங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதகவும் அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் கால கொடுப்பனவுகள் இதன் போது வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரணம் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 












உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரினால் பிரதமருக்கு யாழ். மாம்பழங்கள்




பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் தேசிய தமிழ் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களை அலரிமாளிகையில் சந்தித்து சமகால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்ட உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரி. பிரபாகரன் தான் கொண்டு வந்திருந்த கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை பிரதமரிடம் கையளித்த போது எடுத்த படம்.   நன்றி தினகரன் 










அரந்தலாவை படுகொலை; உயிர்தப்பிய பௌத்த பிக்கு அடிப்படை உரிமை மனு தாக்கல்




1987ஆம் ஆண்டு அரந்தலாவையில் பௌத்த பிக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய பௌத்த பிக்கு ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரந்தலாவை படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எவரேனும் உயிருடனிருந்தால் அந்த பயங்கரவாதியை விசாரணைக்குட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அன்டவுல்பொத்த புத்தசார தேரர் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.   நன்றி தினகரன் 













மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை விழா





மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம்பெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் நெல்அறுவடையை விவசாயிகள் சம்பிரதாயபூர்வமாக, விசேட வழிபாடுகளுடன்

ஆரம்பிப்பது வழமையாகும்.
இம்மாவட்டத்தின் புளுக்குணாவி நீர்ப்பாசனப் பிரிவின் முதலைமடுவட்டை, மாவடிமுன்மாரி பகுதியிலுள்ள பதின்மூன்று விவசாயக் கண்டங்களின் விவசாயிகள் மாவடிமுன்மாரி பகுதியில் நெல்அறுவடை விழாவை நடத்தினார்.
பட்டிருப்பு பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். சுபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. ரி. டினேஷ், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, கிழக்கு மாகாண நீரப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ்.கணேசலிங்கம், மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் வீ.ராஜகோபாலசிங்கம் உட்பட பல அதிகாரிகள் மற்றும் பெருமளவு விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா உரையாற்றுகையில் “புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் 1500 ஏக்கர் நெல்வயல்கள் அறுவடைக்கு முந்திய காலத்தில் நீர்ப்பாசனம் இன்றி அழியும் நிலையில் காணப்பட்டன. இவ்வயல்களுக்கு நீர் பற்றாக்குறையாக இருந்த போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உதவியினால் கலுகல்ஓயா நீர்ப்பாசனத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல்அறுவடையை சிறப்பாக மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை அரசாங்க அதிபரைப் பாராட்டுகின்றேன்.
இதேவேளை அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகுவட்டை பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல்வயல்களைக் காப்பாற்ற எமது பிரதேசத்தில் சாத்தியமற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுமாறு கொடுத்த கோரிக்கையை துறைசார் தொழில்நுட்ப அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆற்றுவாயை வெட்டுவதால் ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றி அவர்கள் எடுத்து விளக்கியதால் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததையிட்டு பெரிதும் கவலையடைகின்றேன். எதிர்காலத்தில் ஆரம்பக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீப்பாசனம் பெறக் கூடிய வயல்களில் மாத்திரமே நெற்செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
நீர்ப்பாசனம் இன்றி உற்பத்தி நெல்லை முழுமையாக அறுவடை செய்ய முடியாமல் போய் விடுமென ஏக்கமடைந்திருந்த விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர்ப்பாசனத்தைப் பெற்றுத் தர முயற்சி செய்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் இதற்கு உறுதுணையாகவிருந்த அம்பாறை, மட்டக்களப்பு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், பிரதேச செயலாளர்களுக்கு இப்பகுதி விவசாயிகள் பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கௌரவம் அளித்தனர்.   நன்றி தினகரன் 







இலங்கை கிரிக்கெட் தலைவர் யாழ் விஜயம்




வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர்.
வடக்கில் கிரிக்கெட் விளையாடுகின்ற ஒருசில முன்னணி பாடசாலைகளுக்கும், மண்டைத்தீவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அமையப் பெற்றுள்ள பகுதிக்கும் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர்.
இந்த விஜயம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து வெளியிடுகையில்,
”உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வகையில் மல்லாக்கத்தில் புற்தரை ஆடுகளத்தைக் கொண்ட கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சுமார் 20 முதல் 25 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
வடக்கில் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ். இந்துக் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு புற்தரை ஆடுகளங்களை வழங்கவுள்ளோம்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஏற்கனவே உள்ள புற்தரை ஆடுகளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்”
2016இல் இலங்கை கிரிக்கெட் சபையினால் யாழ்ப்பாணம் மண்டைத்தீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 200 மில்லியன் ரூபா நிதியினை இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கியது. அதிலும் குறிப்பாக, அப்போதைய இலங்கை கிரிக்கெட் தலைவராக இருந்த திலங்க சுமதிபால மண்டைத்தீவுக்கு விஜயம் செய்து கிரிக்கெட் மைதானத்தை நிர்மானிக்கவுள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பை மேற்பார்வை செய்தார்.
குறித்த இரண்டு மைதானங்களினதும் நிர்மானப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி மண்டைத்தீவுக்கு விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து பார்த்தனர்.   நன்றி தினகரன் 











நயினை நாகபூசணி அம்பாள் தேர்




வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது சுவாமி தேரில் வலம் வருவதை படத்தில் காணலாம்.   நன்றி தினகரன் 











கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு




கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு-Committee to Look Into Concerns Connected with Development of JCT & ECT Terminals of Colombo Port
- 45 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
- குழுவுக்கு 8 பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாப்பா பத்திரன, வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியு..ஆர் பிரேமசிறி, மின்சாரம் மற்றும் கணிய வள அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்னாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர்.
குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்
  1. ஜய கொள்கலன் முனையத்திற்குரிய மீள்கட்டுமான செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்தல்.
  2. இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய ஜய கொள்கலன் முனையத்தின் ஆழ்கடல் நங்கூரம் இடலின் இயலுமையை அதிகரித்தல் மற்றும் நவீன மயப்படுத்தல் தொடர்பான அமைச்சரவை தீர்மானங்கள் மற்றும் 2017 ஜூலை 26ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக நிதி அமைச்சர் மேற்கொண்ட கண்காணிப்புக்கமைய நடைபெறுகின்றதா என பரீட்சித்தல்.
  3. இயந்திரங்களை கொண்டு வருவதற்கு முன்னர் ஜய கொள்கலன் முனையத்தை ஏன் அபிவிருத்தி செய்யவில்லை என்பதை ஆராய்தல்.
  4. வேண்டுகோள் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட மீள்கட்டுமான செயற்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட முதலீட்டு இழப்புகள் மேலும் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன் இயந்திரங்கள் எதற்காக கப்பலில் ஏற்றப்பட்டதென ஆராய்தல்.
  5. இலங்கை அரசு ஏனைய நாடுகளுடன் கொழும்பு துறைமுகம், விசேடமாக கிழக்கு முனையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வு.
  6. மேலே குறிப்பிட்ட 01, 02 மற்றும் 03வது சந்தர்ப்பங்களில் இலங்கை துறைமுக அதிகார சபை, நிரல் அமைச்சுக்கள் மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நிதி மற்றும் முதலீட்டு இழப்புகள் பற்றிய மீளாய்வு.
  7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு யார் பொறுப்பு என்பதை இனங்காணுதல்.
  8. வணிக, கடற்றொழில் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் மூலம் உயர் பயனை பெற்றுக்கொள்ள முடியும் வகையில் மேலே குறிப்பிடப்பட்ட இரு முனையங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல்.
இன்று (03) தொடக்கம் 45 நாட்களுக்குள் குறித்த நிரல் அமைச்சுக்கள் மற்றும் தரப்பினர் தொடர்பாக குழு தமது அறிக்கையை முன்வைக்க வேண்டும்.    நன்றி தினகரன் 












வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்



வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்-Fire-at Shops at Galle Road-Wellawatte
காலி வீதி இராமகிருஷ்ணா சந்தியில் மூடப்பட்டது
வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.
காலி வீதி, வெள்ளவத்தையிலுள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியதைதைத் தொடர்ந்து அதற்கு அருகிலுள்ள கடைகளிலும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள தீயணைப்புப் பிரவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்-Fire-at Shops at Galle Road-Wellawatte
இதற்காக அப்பகுதிக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலி வீதியின் கொழும்பு நோக்கிச் செல்லும் ஒழுங்கை,இராமகிருஷ்ணா சந்தியிலிருந்து W.A. சில்வா மாவத்தை வரை மூடப்பட்டுள்ளதாகவும், கடற்கரை அண்டிய வீதியை (Marine Drive) பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்-Fire-at Shops at Galle Road-Wellawatte






No comments: