மலையகத் தமிழ் மக்களுக்கு முகவரி பெற்றுக் கொடுத்த மாபெரும் தலைவர்




ஆளுமை மிகு அரசியல் அடையாளம்!
இந்திய வம்சாவளி சமூகத்துக்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்குமே ஈடு செய்ய முடியாத இழப்பு
இ.தொ.கா தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக அரசியலில் மாத்திரமன்றி இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலிலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையக சமூகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் ஆளுமை நிறைந்த ஒரு துணிச்சல்மிக்க செயல் வீரரை இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்கள் இழந்து நிற்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகனின் திடீர் மறைவு பேரதிர்ச்சிக்கு உரியதாகும்.
1964 ம் ஆண்டு பிறந்தவர் ஆறுமுகன் தொண்டமான். தனது கல்வியை கொழும்பில் தொடர்ந்தவர்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மலையக மக்கள் தங்களது தலைவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக உள்ளனர்.

மலையக மக்களுக்கு அளப்பெரும் சேவைகளை ஆற்றிய பெரும் அரசியல் தலைவரை அம்மக்கள் இழந்து நிற்கின்றனர். அவரது இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாததாகும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கம், மிகப் பழைமையான தொழிற்சங்கம் என்ற பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கே உண்டு. ஆரம்ப காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் ஒரே சக்தியாக விளங்கியது. அந்த அமைப்பு ஒன்றுபட்ட மலையகத்தை கட்டியெழுப்பியது.
அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த மலையக மக்கள் மத்தியில் எழுச்சிக்கும், புரட்சிக்கும் வித்திட்டு இந்த மக்களுக்கு தலைமை கொடுக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்றவர் இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ்.தொண்டமான் ஆவார். அன்னாரின் மறைவுக்குப் பின்னர் இ.தொ.கா என்ற மாபெரும் அமைப்பை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்ற ஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார்.
ஆரம்ப காலங்களில் தொழிற்சங்க அரசியல் ரீதியில் இ.தொ.கா முன்னெடுத்த போராட்டங்களும் சாணக்கிய அணுகுமுறைகளும்தான் மலையக மக்களுக்கு இந்த தேசத்தில் ஒரு முகவரியை பெற்றுக் கொடுத்தது எனலாம்.

பரந்து விரிந்த விருட்சமென விளங்கிய இ.தொ.கா.விலிருந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குப் பிறகு பலரும் விடைபெற்றுச் சென்றாலும் அதற்கு சரியான தலைமை கொடுத்து இ.தொ.கா.வை அசைக்க முடியாத சக்தியாக வழிநடத்திச் சென்ற பெருமை அமரர் ஆறுமுகன் தொண்டமானையே சாரும்.
இ.தொ.கா.வைப் பற்றியும் அதன் வழிநடத்தல் பற்றியும் கடந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், வலிமை மிக்க தீர்மானம் எடுக்கும் வல்லமை மிக்க தலைவராக ஆறுமுகன் தொண்டமான் திகழ்ந்தார். தீர்மானத்தை செயலாக்கும் உறுதி மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என்பது மாற்றுத் தலைமைகளும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
அமைச்சர் ஆறுமுகன் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதித்த வெற்றித் தடங்கள் மலையகத்தில் ஏராளம். எத்தனை கட்சிகள் புதிதாக முளைத்தாலும் அந்த மக்களில் பெரும்பாலானவர்களை இ.தொ.கா.வின் பக்கம் கவர்ந்து வைத்திருந்த தலைவர் அவர்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகவும், ஒரு வருடத்துக்குப் பின்னர் 1994 இல் பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார். இதே 1994 ஆம் ஆண்டில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு 75,000 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இது அவரின் அரசியலில் முதலாவது பிரவேசம் எனலாம்.
1999 இல் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் காலஞ்சென்ற பின்னர், ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் வெற்றிடத்தை திருப்திகரமாக நிறைவு செய்தார்.
2000 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற அவர் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையினூடாக 20% சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்தார்.
2000 ஆம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு முதன் முறையாக போட்டியிட்டாலும் கூட பாராளுமன்றத் தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்று அவ்வரசிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக இ.தொ.கா. விளங்கியது.
இப்பாராளுமன்றத்தில் 17வது யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது முதன் முறையாக இந்திய வம்சாவளி மக்கள் ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை நிலைநாட்டினர்.
2001 ஆம் ஆண்டு ஐ.தே.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு அந்த அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பெற்று அரசிலே ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார்.
2002 ஆம் ஆண்டில் மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 121 ரூபாவாக இருந்த நாட் சம்பளத்தை 147 ரூபாவாக உயர்த்தினார்.
இதைத் தொடர்ந்து அரசாங்கம் தனியார் துறைக்கு அறிவித்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஹற்றன் மல்லிகைப்பூ சந்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். இப்போராட்டத்தை ஏளனமாக நோக்கிய எதிரணியினர் கூட இறுதியில் போராட்டத்தில் தாமும் பங்குகொள்ள முன்வந்தனர். இப்போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2003 ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிரஜாவுரிமை விடயத்தில் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளாக அங்கீகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தார்.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு முதன் முறையாக 8 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குக் காரணமாக இருந்தார். அத்தேர்தலைத் தொடர்ந்து பொ.ஐ.மு அரசை அமைத்த போது அவ்வரசிலே தான் இணையா விட்டாலும் அப்போதைய நிதிச் செயலாளர் முத்துசிவலிங்கத்தை அமைச்சராக்கினார்.
லயன் வீடுகளில் இருந்த தோட்ட மக்களை கெளரவமான வாழ்க்கைக்கு தயார் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மாடிவீட்டுத் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் என மலையகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட அனைத்தும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உள்ளத்தில் உதித்தவைகள்தான்.
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்று எதிர்காலத்தை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டங்களை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் ஊடாக செயற்படுத்தினார். 2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு மாத்திரம் முழு மலையக அபிவிருத்தி பணிகளுக்காக 1,896,298,920,27 ரூபா நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டிருக்கிறது.
மின் இணைப்பு, நீர் விநியோகம், பாதை அபிவிருத்தி, பாடசாலை கட்டடம், சமய, சமூக கலாசார நிலையங்கள், விளையாட்டுத் திட்டங்கள், சுகாதார, சுயதொழில், பொது வேலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக 2006 ஆம் ஆண்டு 125,78 மில்லியன் ரூபாவும் 2007 ஆம் ஆண்டு 667.91 மில்லியன் ரூபாவும், 2008 ஆம் ஆண்டு 574,15 மில்லியன் ரூபாவும் 2009 ஆம் ஆண்டு 528.44 மில்லியன் ரூபாவும் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளது.
இது மாத்திரமல்லாது அமரர் ஆறுமுகனின் சேவையில் மகத்தான பணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்டத்துறை மக்களுக்கும், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பிரயோசனமாக மலையக பஸ் சேவைகளை ஆரம்பித்து 50 பஸ் வண்டிகளை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்று முழு மலையகத்திற்கும் சேவையை வழங்கியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் 65,000 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று நுவரெலியா மாவட்டத்தில் அவர் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை முக்கிய அமைச்சுகளில் ஒன்றான கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு பதவியை 2010 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார்.
இதைத் தவிர நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.கா.வின் தலைமைப் பொறுப்பை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்திற்கு அமரர் ஆறுமுகன் வழங்கியிருந்தாலும் பொதுச் செயலாளராக பதவி வகித்து இ.தொ.கா.வின் முக்கிய சக்தியாக விளங்கினார். அமரர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா. எடுத்த முயற்சிகளின் பலனாகவே மலையக இளைஞர், யுவதிகள் அரசாங்க துறை தொழில் வாய்ப்புகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்பதை மறந்து விடலாகாது.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அன்றைய அரசாங்கம் ஆசிரியர் நியமனங்கள், தபால் சேவை ஊழியர்கள், தொடர்பாடல் உத்தியோகத்தர்கள், மற்றும் மலையகத்தின் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 
அரச திணைக்களங்களில் அரசாங்கம் தொழில் வாய்ப்பினை வழங்கியமைக்கு இ.தொ.காவே பின்னணியில் நின்றது என்பது பலருக்கும் தெரியும்.
இதன் மூலம் மலையக இளைஞர், யுவதிகள் தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கப்பட்டனர். அது மாத்திரமின்றி மலையகத்தில் இந்த நியமனங்கள் கல்வித்துறையிலும் வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. மலையகத்தில் வளமான எதிர்காலம் நோக்கிய பயணத்திற்கு இ.தொ.கா.வின் அச்சாணியாக விளங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அம்மக்களுக்காக ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றுமே அழியாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட அரசியல் தலைவரை மலையக மக்கள் இன்று இழந்து நிற்கின்றனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் பெரும் வெற்றிடத்தை இலங்கையின் அரசியலில் விட்டுச் சென்றுள்ளார். மலையக தோட்டத் தொழிலாளர்களின் துயரம் விபரிக்க முடியாததாகும்.  நன்றி தினகரன் 











No comments: