அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிபரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் கடந்த 29 -05 – 2020 ஆம் திகதி அதிகாலை மெல்பனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை பகிர்ந்துகொள்கின்றோம்.
சபேசனின் வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புகளை அண்மையில்தான் பதிவேற்றியிருந்தோம்.

எனினும், அதனையடுத்து மறுநாள் அதிகாலை சபேசன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியைத்தான் அவருக்கு வழங்கமுடிந்தது.

லண்டனிலிருந்து ஐ.பி. சி. ஊடகவியலாளர் எஸ்.கே. ராஜென் இரங்கல்
“ தாயகமண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த பின்னரும் தாயக உணர்வோடு அந்த மண்ணுக்காகப் பணியாற்றியவர்களில் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்த மெல்பேர்ண் சபேசன் குறிப்பிடத்தக்க ஒருவர். “ என்று கலைஞரும் லண்டன் ஐ.பி. சி. வானொலி – தொலைக்காட்சி ஊடகவியலாளருமான திரு. எஸ்.கே. ராஜென் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிவரஞ்ஜித் அவர்கள் ஐபிசி தமிழ் பணிப்பாளராக விளங்கிய 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொலைபேசி வாயிலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் சபேசன் அவர்கள்.
ஒருமுறை அவர் இலண்டன் வந்திருந்த வேளையில் நேரடியான சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்தன.
சபேசன் அவர்கள் அறிமுகமான காலத்திலிருந்து வாரம் தோறும் அவரிடத்தில் பேசி நிகழ்ச்சி ஒலிப்பதிவு மேற்கோண்ட நாட்கள் மறக்க முடியாதவை.
தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவையான அவரது கருத்துக்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தவை.
காலத்துக்குப் பொருத்தமாகக் கருத்துக்களை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான காலம் வரை ஐபிசி தமிழ் வானொலியில் தமது நிகழ்ச்சியூடாக அவர் முன்வைத்தார்.
நிகழ்ச்சி ஒலிப்பதிவு வேளைகளில் எப்போதுமே எம்மை அவர் காக்க வைத்ததில்லை.
சபேசன் அவர்களின் தமிழ்த்தேசியப் பணியை காலம் மறக்காது. நாமும் மறக்கக் கூடாது. அன்னாருக்கு எமது
இறுதி வணக்கம்.
---0---
No comments:
Post a Comment