பேரில என்ன கிடக்கு – சிறுகதை
எழுத்தாளர் “தேவன்” – யாழ்ப்பாணம்
ஒலிப்பகிர்வு – திரு திருநந்தகுமார்
வீடியோஸ்பதி வழியாக “ஈழத்தவர் கதை கேட்போம்” தொடரில் மூன்றாவது சிறுகதை ஒலிப்பகிர்வு இது.
ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் தேவன் – யாழ்ப்பாணம்,
இவரது இயற்பெயர் இளையப்பா மகாதேவா.
1944 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1982 ஆம் ஆண்டு வரை தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர்.
நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், நாடக இயக்குநர், பேச்சாளர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி.
“பேரில் என்ன கிடக்கு” என்ற சிறுகதை ஈழத்தில் நிலவுகின்ற சாதிப் பிரச்சனை, அதன் வழி எழும் மத மாற்றம் ஆகிய சமூகச் சிக்கலை எழுப்பி நிற்கின்றது. 1964 ஆம் ஆண்டில் சுதந்திரன் இதழில் வெளிவந்த இந்தச் சிறுகதையின் களத்தை இன்றைய சமூகத்திலும் நாம் முகம் கொடுப்பது குறிப்பிட வேண்டியது.
இந்தச் சிறுகதைக்கு இன்னொரு சிறப்புண்டு. தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதி நூலுருப் பெற உதவியவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள், இவர் தேவன் அவர்களது மாணாக்கர்களில் ஒருவர். யாழ் இலக்கிய வட்டம் இதனை வெளியிட்டது.
இங்கே குரல் வடிவம் தந்திருக்கும் சிட்னியின் கல்விச் சமூகத்திலும், இலக்கிய வட்டத்திலும் முக்கியமானதொரு ஆளுமை திரு.திருநந்தகுமார் அவர்களும் தேவன் அவர்களது இன்னொரு மாணாக்கர். ஆகிய இரு பொருத்தங்களும் இந்தச் சிறுகதைக்கு மேலும் அணி சேர்க்கின்றன.
இந்த முயற்சிக்கு அனுமதியளித்த எழுத்தாளர் தேவன் குடும்பத்தினருக்கும், குரல் பதிவாக அருமையாக உயிரோட்டம் கொடுத்த திரு.திருநந்தகுமார் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
வாருங்கள் எழுத்தாளர் தேவனின் “பேரில் என்ன கிடக்கு” கேட்போம்
No comments:
Post a Comment