சுவீடசிஸ்ட்டி - பாவை விளக்கு - சுந்தரதாஸ்

.



 தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவர் அகிலன் இவர் எழுதிய பல நாவல்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன வயது வேறுபாடின்றி பலரும் அவருடைய நாவல்களை விரும்பி வாசித்தார் அந்த வகையில் கல்கி வார இதழில் அவர் எழுதிய பிரபலமான தொடர்கதைதான் பாவைவிளக்கு அகிலன் உடைய இந்த நாவல் 1960 ஆம் ஆண்டு திரைப்படமானது குடும்ப கதைகளுக்கு கதை வசனம் எழுதுவதில் பிரபலமடைந்து கொண்டிருந்த ஏபி நாகராஜன் இந்தப் படத்திற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார் அவர் படங்களை எல்லாம் தொடர்ந்து டைரக்ட் செய்து கொண்டிருந்த கே சோமு பாவைவிளக்கு படத்தையும் டைரக்ட் செய்தார்.  கூடுமானவரை நாவலை ஒட்டியே திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது அதனை சோமு நேர்த்தியாக படமாக்கியிருந்தார்.  விஜயரங்கம் என்ற  படத்தொகுப்பாளரும்  கோபண்ணா என்ற  ஒளிப்பதிவாளரும் இணைந்து படத்தைத் தயாரித்தார்கள். 

படத்தின் ஆரம்பமே புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது, ஒரு தோட்டத்தில் சிவாஜி அசோகன் விகேஆர்  என கலைஞர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்கு சிவாஜி பாவைவிளக்கு கதையை படித்துக் காட்டுகிறார், இப்படி ஆரம்பிக்கும் காட்சி திரைப்படமாக விரிகிறது . கதை கேட்க  அமர்ந்திருந்த கலைஞர்களே  படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் .






படித்துவிட்டு ஒழுங்கான வேலை இன்றி தவிக்கும் தணிகாசலத்தின் வாழ்வில் நான்கு பெண்கள் ஒன்றன் பின் ஒருவராக குறுக்கிடுகிறார்கள் . கல்வி கற்கச் சென்ற இடத்தில் அவன் தங்கியிருக்கும் வீட்டின் விதவைப்பெண் தணிகாசலத்தின் மானசீகமாக காதலிக்கிறாள், பின்னர் தொழில் நிமித்தம் அவன் செல்லும் ஊரில் செங்கமலம் என்ற நாட்டிய பெண்ணுடன்  தணிகாசலத்துக்கு  காதல் ஏற்படுகிறது, ஆனால் காதல் கைகூடவில்லை, அதன்பின் முறைப்  பெண்ணுடன் அவனுக்கு கல்யாணமாகிறது  இதே சூழலில் கல்லூரி விரிவுரையாளர் கௌரியும் அவன் மீது காதல் கொள்கிறாள் தொழில் இல்லாத தணிகாசலம் வேறு வழியின்றி எழுத்தாளன் ஆகி தன் காதல் கதையை கதையாக எழுதுகிறான் .

இப்படி அமைக்கப்பட்ட கதையில் தணிகாசலம் ஆக சிவாஜியும் அவரை நேசிக்கும் பெண்களாக பண்டரிபாய், சவுகார்ஜானகி ,குமாரி கமலா, எம்என் ராஜம் ஆகியோர் நடித்தனர் இவர்களைச் சுற்றியே முழுக்கதையும் அமைக்கப்பட்டிருந்தது தணிகாசலம் சிவாஜி தன் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தி இருந்தார் கமலா பாடி ஆடும் போது சிவாஜி காட்டும் முகபாவனைகள் அபாரம்.  எம் என் ராஜத்துக்கு  துடுக்குத்தனமான பாத்திரம் குமாரி கமலா தன் நடனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் மருதகாசியின் பாடல்களுக்கு கேவி மகாதேவன் ரசிக்கும்படி இசையமைத்திருந்தார் காவியமா நெஞ்சின் ஓவியமா, ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ஆகிய பாடல்கள்  பிரபலமடைந்தன.


 பாவை விளக்கு படத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை தான் அது சிவாஜியும் ராஜமும் அங்கு பாடும் காவியமா நெஞ்சில் ஓவியமா பாடல் காலம் கடந்தும் காட்சியாக மனதில் பதிந்து விட்டது நாவலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு படத்திற்கு ஏனோ கிட்டவில்லை





No comments: