சாதனைகள் பல பெற்ற இளம் இசைத் தாரகை வைசாலி யோகராஜன்

.



2014இன் சக்தி யூனியர் சுப்பர் ஸ்டார் மகுடத்தை தனதாக்கிக் கொண்டவர் தான் வைசாலி யோகராஜன் அன்று முதல் இலங்கை வாழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். பாரம்பரியமான இசைக்குடும்பத்தில் பிறந்த வைசாலி கர்நாடக இசையிலும் கைதேர்ந்த பாடகியாவார், அதற்கு எடுத்துக் காட்டாக இலங்கையின் சிறந்த கர்நாடக இசைப் பாடகிக்கான ஜனாதிபதி விருதினை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றவர். அது மட்டுமன்றி அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல தடவைகள் முதலிடம் பெற்றவர்.

சிறந்த குரல் வளம் சங்கதிகளை சரளமாக கையாளல், பொருத்தமான இடங்களில் ப்ருக்காக்களை பிரயோகித்தல், போன்ற அம்சங்களை விசாலியின் சங்கீத ஞான பலத்திற்கு உறுதுணையாக அமைந்து வெற்றியளிக்கின்றன. இலங்கையின் பிரபலமான சபாக்களான கம்பன் கழகம், ஆலாபனா, நல்லை ஆதீனம், இலங்கை வானொலி, ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் போன்றவற்றில் சிறு வயதிலேயே கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை அளித்து பல இசை வித்துவான்களிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.



2016ம் ஆண்டு அவுஸ்ரேலிய மருத்துவ நிதியத்தின் அழைப்பின் பெயரில் அவர்கள் நடாத்திய முத்தமிழ் மாலை இசை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். தொடர்ந்து சிட்னி முருகன் ஆலயத்திலும் வைசாலி கர்நாடக இசைக்  கச்சேரி செய்து பெரும் பாராட்டை பெற்றிருக்கிறார்.

இவரின் திறமைகளை அறிந்து கிளிவ்லாண்ட் V.V. சுந்தரம் என்ற இசை ஆர்வலரும் புரவலருமான பெரியார் இந்திய சபாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் ஸ்ரீ பார்த்தசாரதி Karnadic Music Wold சபாவில் 23.12.2018 இலும் ஸ்ரீ குருவாரூர்துறை மியுசிக் சென்டரில் 26.12.2018 இலும் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி கோவில் பேயாழ்வார் சந்நிதியில்  30.12.2018 இலும் கர்நாடக இசைக்  கச்சேரிகளை நிகழ்த்தி பல இந்திய வித்துவான்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். அத்துடன் SUSTRAINING SAMBRADAYA இசை பயிற்ச்சி வகுப்புக்களிலும் பயிற்ச்சி பெறும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியது.

அவ்வகையில் திரு A.S.முரளி, சேர்தலை ரங்கநாதன், சுகுணா வரதாச்சாரி, பூசணி கல்யாணராமன், நாகை முரளிதரன் என்பவர்களிடமும் பயிற்ச்சி பெற்று  பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். 15 வயது நிரம்பிய வைஷாலி எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகி எமது இலங்கைத் திருநாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும். தாயகஒலியும் தனது சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறது.
nantri - THAYAKAOLI






1 comment:

Unknown said...

வாழ்த்துக்கள் வைசாலி