பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 9


குருதட்சணை

சிவாஜி கணேசன் ஏபி நாகராஜன் கூட்டணியில் உருவாகி வெற்றிகண்ட படம் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான சாதாரணப் படம் தான் குருதட்சணை.

தில்லாணாமோகனாம்பாளில் நடித்த எல்லா நடிகர்களும் அனேகமாக இந்தப் படத்திலும் இடம்பெற்றார்கள். நாகேஷ் மட்டும் இதில் இடம் பெறவில்லை. ஆனால் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி இதில் நடிக்கவில்லை. ஜெயலலிதா இந்தப் படத்தில் சிவாஜிக்கு இணையாக தோன்றினார். பத்மினிக்கு சிவாஜிக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர் பாத்திரம் இந்தப் படத்தில் வழங்கப்பட்டிருந்தது.

கிராமத்தில் பால் விற்கும் கண்ணன் படிப்பறிவில்லாதவன் அவனுக்கு இளைஞன் பிறகு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. கிராமத்திற்கு புதிதாக வரும் ஆசிரியையிடம் பாடம் படிக்கிறான்.

இதனிடையே கண்ணனுக்கும் கன்னிக்கும் இடையில் காதல் பிறந்து கல்யாணத்தில் முடிகிறது. கண்ணனுக்கும் ஆசிரியைக்கும் உருவாகும் கல்விசார் நட்பை ஊரில் சில பொல்லாதவர்கள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். கன்னியும் அதனை நம்பி விடுகிறாள். இதனால் மனமுடைந்து போகும் கண்ணன் தற்கொலைக்கு முனைகிறான். ஆனால் முயற்சி கைக்கூடவில்லை. தான் கற்பித்த கல்விக்கு குருதட்சணையாக தற்கொலை செய்து கொள்வதில்லை என்று கண்ணன் சத்தியம் செய்து மனைவியுடன் வாழ வேண்டும் என்று ஆசிரியை குருதட்சணை கேட்கிறார்.
இதுதான் குருதட்சணைப் படத்தின் கதை. கண்ணனாக சிவாஜியும் கன்னியாக ஜெயலலிதாவும் ஆசிரியையாக பத்மினியும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் தங்கவேலு நம்பியார் பாலாஜி ரமாபிரபா செந்தாமரை மனோரமா என்று பலர் நடித்திருந்தார்கள்.

படத்திற்கு திரைக் கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் ஏ பி நாகராஜன். சிவாஜி ஏபி என் கூட்டில் ஏற்கனவே திருவிளையாடல் திருவருட்செல்வர் தில்லானா மோகனாம்பாள் என்று வண்ணத்தி; பிரம்மாண்டமான முறையில் படங்கள் வெளிவந்து வெற்றி கண்டிருந்தன.

ஆனால் குருதட்சணையோ கிராமத்தில் நடக்கும் கதையாக கறுப்பு வெள்ளை படமாக பிரம்மாண்டம் ஏதுமின்றி உருவாகியிருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.


அதுமட்டுமன்றி சிவாஜியின் பாத்திரப் படைப்பும் மிக பலவீனமாக படைக்கப்பட்டிருந்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பத்மினி நடித்தும் அவருக்கு நடனக் காட்சி ஏதுமில்லாததும் ஏமாற்றத்தை அளித்தது. சிவாஜி  ஏபி என்னிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை கை வைத்த பெனியன் வேட்டி மீசை என்று படம் முழுவதும் வித்தியாசமாக வருகிறார் சிவாஜி. ஜெயலலிதாவின் துடுக்குத் தனமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது. ஆசிரியை பாத்திரத்தை பத்மினி நன்றாக செய்திருந்தார்.

திரை இசைத் திலகம் கே வி மகாதேவனின் நிரந்தர உதவியாளராக காலம் பூராவும் இருந்த புகழேந்தி படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓராங்கி ரேகமடிகன்னி ஒன்றே ஒன்று உலகம் ஒன்று ஆகிய கண்ணதாசன் பாடல்கள் நன்றாக இருந்தன.

எம் ஜி ஆருடன் சண்டைக் காட்சிகளில் வழக்கமாக மோதும் குண்டுமணி இப்படத்தில் சிவாஜியுடன் சண்டைக் காட்சியில் மோதுகிறார். அவரிடம் எனக்கும் சண்டைப் போடத்தெரியும் என்று சிவாஜி சொல்வது பஞ்ச்டயலக்
ஏபி நாகராஜனின் அண்ணன் ஏபி சின்னையாவின் மகன் பரமசிவம் தயாரித்து சிவாஜியின் 129வது படமாக வெளிவந்தது குருதட்சணை. இதே கதை சில மாற்றங்களுடன் பின்னர் பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளாக வெளிவந்து வெற்றிகண்டது.!





No comments: