தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி
உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்
பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு
ஜனாதிபதி சீனா விஜயம்
'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?": யாழில் ஆர்ப்பாட்டம்
இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று முதல் ஆரம்பம்
கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு
பஷிலை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை
தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி
23/03/2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் வைத்திருந்த, சுமார் ஆயிரம் ஏக்கர் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 425 ஏக்கர் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இலங்கையில் வாழும் மக்கள் அச்சமும், சந்தேகமும் இன்றி வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
வடக்கில் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். எனவே காணிகளை மீள வழங்கும் போது சில சிக்கல் நிலைமைகளும், பிரச்சினைகளும் இருக்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து, சிக்கலான நிலைமைகளை அடையாளம் கண்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், காணி அமைச்சர் டி.எஸ். குணவர்தன, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் பலியக்கார உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்
23/03/2015 காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால் அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புபை;படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர்.
உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்புவதாக செல்வேந்திரன் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு
23/03/2015 வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 10.00 மணிக்கு இவ்வாறு பொலிஸ் நிலையம் வருமாறு கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு பொலிஸார் தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறித்த நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தர தவறும் பட்சத்தில் நீதிமன்றில் அவருக்கு எதிராக அறிக்கை தாக்கல்செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் மீது பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்குதல் நடத்தியுள்ளதாக வாழைச் சேனை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அது தொடர்பில் சாட்சியாளர்களினதும் முறைப்பாட்டாளரினதும் வாக்கு மூலங்களை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் இதனை அடுத்தே கருணாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாழைச்சேனை பகுதியை சேர்ந்த எஸ்.வனராஜா என்பவர் தான் வயலில் வேலை செய்துகொன்டிருந்த போது தாக்கப்பட்டதாக பொலிஸில் முறையிட்டிருந்தார். அத்துடன்இ தன்னை துப்பாக்கி முனையில் அவர் அச்சுறுத்தியதாகவும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தகவல் தருகையில்,
குறித்த முறைப்பாடு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டு தகவல்களுக்கு அமைவாக கிரான் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.யின் சகோதரி ஒருவரின் வீட்டிலிருந்து வந்தே அவர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று பொலிஸார் உடனடியாகவே கருணா அம்மானின் சகோதரியின் குறித்த கிரான் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். எனினும் அங்கு ஒருவரும் இல்லை எனவும் கருணா உள்ளிட்டவர்கள் கொழும்பு வீட்டில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முறைப்பாட்டாளரினதும் நேரில் கண்ட சாட்சியங்களினதும் வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவுச் செய்துகொண்ட பின்னர் கொழும்பில் உள்ள எம்.பி.யின் வீட்டுக்கு பொலிஸார் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இன்று காலை 10.00 மணிக்கு வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு பொலிஸ் நிலையம் வராமல் தவிர்ப்பாரானால் அவருக்கு எதிராக மன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி சீனா விஜயம்
25/03/2015 நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் சென்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதி ஜிங் பிங்கின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?": யாழில் ஆர்ப்பாட்டம்
25/03/2015 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று புதன்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
காணாமற்போன லிலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழங்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று முதல் ஆரம்பம்
24/03/2015 கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாது நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜா உரிமை சட்டத்தில் 1987 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க திருத்ததுக்கு அமைவாக புதிதாக வடிவமைக்கப்பட்ட செயற்றிட்டத்துக்கு அமைவாக இந்த இரட்டை பிரஜா உரிமை மீண்டும் நடை முறைப்படுத்துவதாக விடயத்துக்கு பொறுப்பான பொது ஒழுங்குகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடை முறை உத்தியோக பூர்வமாக நிருத்தப்பட்டாலும் சட்ட விரோதமான முறையில் சிலருக்கு அதன் பின்னர் இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந் நிலையில் புதிதாக இந்த இரட்டை பிரஜா உரிமை நடை முறை குரித்து இலகு திட்டம் ஒன்றை வகுத்து கடந்த 12 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பித்து திருத்தங்கள் செய்து நிறைவேற்றியுள்ளதாகவும் அதன்படியே நேற்று 23 ஆம் திகதி முதல் இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடை முறை அமுலுக்கு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது போது ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் டீ.பி.தென்னகோன், மேலதிக செயலாளர் சூலாநந்த பெரேரா, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ரணசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டதாவது,
தற்போது நடை முறைப்படுத்தப்படும் இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பிலான செயற்றிட்டத்தை முன்னெடுக்க குடுவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையில் விஷேட பிரிவொன்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து,இத்தாலி,சுவீடன்,சுவிசர்லாந்து,பிரான்ஸ் ஆகிய ஒன்பது நாடுகள் தொடர்பிலேயே இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கும் செயற்றிட்டம் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளது. ஏனெனில் இந் நாடுகளே இரட்டை பிரஜா உரிமையை தற்போதும் அங்கீகரித்துள்ளன. மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகள் அந்த முறைமையை அங்கீகரிக்கவில்லை.
எமது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சிப்பவர்களும், மேற்குறிப்பிட்ட ஒன்பது நாடுகளில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கை பிரஜா உரிமையைப் பெற்றுக்கொள்ளவும் இந் நடைமுறை பயன்படும்.
புதிய நடை முறை ஊடாக மிக விரைவாகவே குடியுரிமை வழங்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இது தொடர்பிலான தகமைகள் மற்றும் விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் www.immigration.gov.lk
என்ற இணையத்தளம் ஊடாகவோகொழும்பு 10 இல் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தருஇவதூடாகவோ பெற்றுய்க்கொள்ள முடியும்.
இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் கடந்த அரசு கையாண்ட நடை முறைகளை நாம் மாற்றியுள்ளோம். அது தொடர்பில் அரவிடப்படும் கட்டணமான 5 இலட்சம் ரூபாவை நாம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக குறைத்துள்ளோம். இதனைவிட சிறு பிள்ளைகள் தொடர்பில் 50 ஆயிரம் ரூபா மட்டுமே இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் அரவிடப்படும்.
கடந்த அரசின் காலத்தில் இரட்டை பிரஜா உரிமைக்கு விண்னப்பித்து பணமும் செலுத்தி அது கிடைக்காத சுமார் 350 இற்கும் 400 இற்கும் இடைப்பட்ட விண்ணப்பதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்பில் நாம் விஷேட அவதானம் செலுத்தி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்களுக்கு இரட்டை பிரஜா உரிமையினை வழங்க நடவ்டிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நடை முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பலருக்கு சட்ட விரோதமாக இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அவ்வானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவ்டிக்கை எடுக்கப்படும். சில நேரம் அவர்களது இரட்டை பிரஜா உரிமை இரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. என்றார். நன்றி வீரகேசரி
கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு
26/03/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பஷிலை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை
26/03/2015 திவி நெகும ( வாழ்வின் எழுச்சி) திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விஷேட விசாரணைகளத் தொடர்ந்தே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் தலைமையிலான நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது.
திவி நெகும திணைகளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவக்க தான் அப்போதைய விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன் படியே பஷில் ராஜபக்ஷவை விசாரணை செய்து வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய வேண்டிய தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பஷில் ராஜபக்ஷ வெளி நாடொன்றில் உள்ள நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவ்டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்ட மா அதிபர் மற்றும் நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவ்டிக்கைகள் முன்னெடுக்கப்படும்.உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலமையகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கல்ந்துகொண்டு உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது,
அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சுமார் 35 நிதி மோசடிகள் தொடர்பில் தற்போதைக்கு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதில் பிரதானமான ஒரு விசாரணை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அப்போது இருந்த திவி நெகும திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பானதாகும்.
திவி நெகும திணைக்களத்தில் ஊக்குவிப்பு தொடர்பிலான நிதியில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைவிட திவினெகும வீடமைப்பு உதவி திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 'லிதோ' அச்சுப்பதிப்பு தொடர்பிலும் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளது. இவற்றை விட கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக அல்லது பிரசாரங்களுக்காக அத்திணைக்களத்திலிருந்து பல இலட்ச ரூபா நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய சம்மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் இயங்கியுள்ளது.
இந்த ஒவ்வொரு விடயம் தொடர்பிலுமான விசாரணைக்கும் பஷில் ராஜபக்ஷ எமக்கு அவசியமானவர். எனவே தான் நாம் இது தொடர்பில் கடுவலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளோம்.
இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் கோரியுள்ளோம். நீதி மன்றின் ஒத்துழைப்புடன் பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்குள் அழைத்து வந்து இந்த விவகாரங்கள் தொடர்பில் விசாரிக்க நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.
இந்த நிதி மோசடி தொடர்பில் இதுவரை நாம் சுமார் 16 பேரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளோம். திவினெகும ஊக்குவிப்பு தொகையில் 70 மில்லியனுக்கும் மேல் மோசடி தொடர்பில் 8 பேரிடமும் வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மோசடி தொடர்பில் 7 பேரிடமும் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் திவி நெகும திணைக்களத்தில் ஒவ்வொரு கோவைகளை பேணி வந்தவர்கள்.
அவர்களின் வாக்கு மூலத்துக்கு அமைய திவி நெகும அப்போதைய பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவகவை நாம் விசாரித்தோம்.அவர் நிதிக் குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த வாக்கு மூலத்தில் தான் முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தவர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ என்பதை தெளிவாக கூறியுள்ளார்.
பஷில் ராஜபக்ஷவின் உத்தரலை அப்பணிப்பாளர் நடை முறைப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில் அமைச்சர் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க பணிப்பாளர் தன் கீழான அதிகாரிகளை வைத்து அதனை முன்னெடுத்துள்ளாதாகவே சந்தேகிக்கின்றோம்.
திவி நெகும நிதியில் மோசடி செய்யப்பட்ட விததுக்கு ஒரு உதாரணத்தை நான் சுட்டிக்காட்டுகின்றேன். இந்த நிதியின் கீழ் தேசிய சம்மேளனமொன்று நடத்தி வரப்பட்டுள்ளது. ஒரு முறை அந்த சம்மேளன கூட்டம் ஒன்றுக்கு அம்பாறையில் இருந்து மூவர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவர 3 இலட்சத்துக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
யார் என்ன சொன்னாலும் இந்த விசாரணைகள் தொடரும். விசாரணையின் பின்னர் மோசடிக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment