பிளமிங்கோ பறவைகளும் நெடுந்தீவு மக்களும் --நாவுக்கரசன், ஒஸ்லோ



.
யாழ்ப்பாணத்தில்  இளவயதில் நான் வாசித்த எழுத்தாளரில், கொஞ்சம் ஜனரஞ்சகமா சுவாரசியமா , தினசரி பத்திரிகை ,மல்லிகை போன்ற முற்போக்கு பத்திரிகை, வேறு பல இலக்கிய வெளியிடுகளில் நாவல் ,சிறுகதை எழுதிய ஒருவர் 'செங்கை ஆழியான்' என்ற புனைபெயரில் எழுதிய, 'குணராசா மாஸ்டர்' என்ற பெயரில புவி இயல் படிப்பித்த , உதவி அரசாங்க அதிபரா இருந்து ,பின்னர் யாழ் பல்கலைக்கழக பதிவாளரா, புவியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கலாநிதி கந்தையா குணராசா. அவர் எப்படியான இலக்கிய வகை எழுத்தாளர் எண்டு எனக்கு சொல்ல முடியவில்லை, பலராலும் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர். 30 வருடங்களின் முன் அவர் எழுதி நான் படித்த சில நாவல்கள் பற்றி சொல்லுறேன் .
அவர் எழுதிய ஒரு முக்கியமான நாவல் 'வாடைக் காற்று'. நெடுந்தீவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், அவர் அந்தத்  தீவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பொழுது எழுதிய கதை. மன்னாரில் இருந்து வாடைக்காத்து சீசனுக்கு 'வாடி' அமைத்துத் தற்காலிகமா தங்கி, 'தங்கு தொழில்' செய்யவந்த ஒரு மீனவ இளைஞனுக்கும், உள்ளுரில் இருந்த ஒரு இளம் மீன்கொத்திப் பெண்ணுக்கும் இடையில் வந்த காதலில், சம்மாட்டியார் ,கரைவலை ,கருவாடு சகிதம் வில்லன்களும், வில்லங்கங்களும் வர, அந்தக் கதையைப் பின்னர் இலங்கை இந்திய தயாரிப்பா படம் ஆக்கினார்கள் "வாடைக்காற்று" என்ற நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற 'பாலு மகேந்திரா' என்கிறார்கள்!








"வாடைக்காற்று" அவர் எழுதிய வட்டார வழக்கு ,பேசுமொழி உள்ள ,கிளாசிகல் எண்டு ஆங்கிலத்தில் சொல்லுறார்களே அப்படி சொல்லகூடிய நாவல். அருமையான உவமான ,உவமேய ,சிம்போலிக் விசியங்கள் உள்ள எளிமையான நாவல். அதை வாசிக்கவே கருவாட்டு மீன் காயப்போட்ட கடற்கரை வாசம் வரும். அந்த கடற்கரை எங்கும் பறக்கும் பிளமிங்கோ பறவைகள் நெடுந்தீவு மக்களின் பழக்க, வழக்கம் எல்லாம் போட்டு பின்னி எடுத்தார் அந்தக் கதையில. அந்தக் கதை எழுதி அது படமாகி வந்தபின், அது நெடுந்தீவில் உண்மைக் கதையோடு சம்பந்தப்பட்ட மீனவ சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சினை உருவாக, அவர்கள் வெகுண்டு எழுந்து ' செங்கை ஆழியான்' வேலை செய்த அரசாங்க அலுவலகத்தை முற்றுகை இட, நல்ல காலம் அவர் அங்கே இல்லை. கோவத்தில அவரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு எழுத்தாளன் எவ்வளவு பிரச்சினைக்கு முகம் குடுக்க வேண்டி இருந்து இருக்கு அந்த நாட்களில்.



"வாடைக்காற்று" படம் யாழ்ப்பாணத்தில பஸ் ஸ்டான்ட் முன் உள்ள தியேட்டரில் ஓடியது. தியேட்டருக்கு வெளியே, நீலக் கடல் பின்னணியில், வெறும் சரம் மட்டும் கட்டி, வெற்று மேல் உடம்பில் புசுக்கு புசுக்கு என்று ரோமம் வளர்ந்த ஒரு கட்டுமஸ்தான மீனவ இளைஞனை, ஒரு சீத்தை துணியில சரம் போல கட்டி, மேல சீத்தை துணி இல ஒரு இறுக்கமான பிளவுஸ் அணியவும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா வாளிப்பு எல்லாம் வெளிய தெரிய, கையில கருவாடு அள்ளுற பின்னல் பிரம்பு கூடையை வைச்சுக்கொண்டு ஒரு பெண் அப்பாவியா, காதல் நிரம்பி கடல் அலை அடிக்க அந்த இளைஞனை 'ரொமான்ஸ் லுக்கு' விடுற படம் பெரிதாக 'கட் அவுட்' வைத்து இருந்தார்கள். அவடத்தால போகவே வாடைகாற்று, கருவாட்டு வாசம் எல்லாம் கலந்து அடித்தது. 'மீனவ நண்பன்', 'படகோட்டி' போன்ற இதே கதைக்களம் உள்ள தென் இந்திய 'MGR' படங்கள் ஓடிய அளவுக்கு 'வாடைகாற்று' யாழ்ப்பாணத்தில் ஓடவில்லை என்றார்கள். சிங்கள மக்கள் அதை விரும்பி, ரசித்துப் பார்த்தார்கள் என்றார்கள். அண்மையில் 'செங்கை ஆழியான்' அந்த நாவலின் கடைசிப் பதிப்பின் முன்னுரையில், 'பாரதிராஜா' தன்னோட அந்தக் கதையத் திருடி 'கருத்தம்மா' படம் எடுத்தார் எண்டு சொல்லியுள்ளார்.

செங்கை ஆழியான்
செங்கை ஆழியானின் பல கதைகள் அவர் வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பல இடங்களில் வேலை செய்த போது சந்தித்த, நடந்த சம்பவங்களைக் கதைகளாக, நாவல்களாக, தொடர் கதைகளாக எழுதினார். மாங்குளத்தில் உதவி அரசாங்க காட்டு இலாகா அதிகாரியா இருந்த போது எழுதிய கதை 'யானை' அவரின் சின்னவயசில் அவர் பிறந்த கந்தரோடையில் நடந்த சம்பவம் 'முற்றத்து ஒற்றைப் பனை'. அவரின் இளவயது காதல் ரொமான்ஸ் எல்லாத்தையும் 'இரவின் முடிவில்' எண்டு எழுதினார். அவர் கதைகளில் வரும் பல சம்பவங்கள் உண்மைச் சம்பவங்கள். கொஞ்சம் வாசிக்க சுவாரசியம் ஆக்கி நனவோடை உத்தியிலையும் கதை சொன்ன செங்கை ஆழியான் யாழ்ப்பாண வரலாற்றை, ஊர்காவற்துறை கடற்கோட்டை, நல்லூர் ராஜதானி போன்றவற்றை வரலாறு நவீனமா கொஞ்சம் ஆராய்ச்சி போலவும் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய ஒரு ரொமான்ஸ் நாவல் எனக்கு ரெம்பப் பிடித்தது அந்த நாடகளில். அந்த நாவலின் பெயர் 'கங்கைக் கரை ஓரம்'. கங்கை கரை ஓரம் நாவல் அருமையானா ரொமன்ஸ் நாவல். அதைப் பத்துத் தரத்துக்கு மேல வாசித்து கனவில மிதந்து இருக்கிறேன். அவர் கதை சொன்ன விதம் அதில நல்லா இருந்திச்சு. அந்த நேரம் தமிழ் நாட்டு ஜெயகாந்தனின் ஸ்டைலில் எழுதி இருந்தார். யாழ்ப்பாணத்தில ஒரு விவசாயக் குடும்பத்தில், 'கந்தரோடை' என்ற வலிகாமம் மேற்கில் பிறந்த செங்கை ஆழியான், யாழ்பாணத்தில படிச்சு, கண்டியில பெரதேனியா கம்பஸ் இல் 'புவியியல்' பட்டதாரி ஆக படித்த நாட்களில், ஊரில விட்டு விட்டு வந்த காதலி, காதலின் ஏக்கம், பிரிவின் வதை, அவர் படிக்கும் பெரதேனிய கம்பஸில் அவரை மயக்கும் இன்னுமொரு காதலி எண்டு கதை சும்மா 'பெரதெனிய பூங்கா', கம்பஸ், அதன் அருகில் மகாவலிகங்கை, அதன் கரை எல்லாம் காதல் செய்யும் கம்பஸ் மாணவ, மாணவிகள் எண்டு கனவு போல அலாதியா எழுதி இருந்தார் அந்தக் கதையை. 


அந்தக் கதை மகாவலிகங்கைக் கரையில் நடப்பதால், அதுக்கு 'கங்கைக் கரை ஓரம்' எண்டு பெயர் வைத்தார். அதில வாற அவரை 'லவ்' பண்ணிய இரண்டு கதாநாயகிகளில், ஒரு கதாநாயகிக்கும் அவரின் பிற்கால மனைவிக்கும் நிறைய உண்மைத் தொடர்பு இருக்கு. அதில வரும் இன்னுமொரு பாத்திரம் உண்மையாகவே அவரை 'லவ்' பண்ணிய அந்த மற்றப் பெண்மணி கடைசி வரை கலியாணம் கட்டாமல் யாழ்பாணத்தில வாழ்ந்தா. அவரைக் கலியாணம் கட்டிய அவர் மனைவியும் அவரை 'லவ்' பண்ணிய அந்தப் பெண்மணியும் ஒரே பாடசாலையில் ஆசிரியர்களாக வேலை செய்தார்கள். செங்கை ஆழியானின் இரண்டு பெண் பிள்ளைகளும் அங்கே படித்தார்கள். தனக்கு கிடைக்காமல் போன காதலனின் இரண்டு பிள்ளைகளின் மீது அளவுகடந்த பாசம் வைத்து அந்த ஆசிரியை அன்பாக எப்போதுமே நடத்துவாவாம் எண்டு அறிந்தேன் அந்த நாடகளில்.

nantri anthimaalai.blogspot

1 comment:

முத்துலிங்கம் said...

இணையத்தில் குறிப்பிடுவது போல் வாடைக்காற்று இலங்கை - இந்திய கூட்டுத்தயாரிப்பல்ல.. பாலநாதன் மகேந்திரன் என்பவர் இந்தியாவில் இருந்து முன் மொழிந்ததை தவிர... (பாலநாதன் மகேந்திரன் தான் இலங்கையர் என்று எப்போதும் கொண்டாடியதாக நான் கேட்டதில்லை..அது வேறுவிடயம்)
செங்கை ஆழியான் பற்றி அறிந்தவ நீங்கள் அவரிடமே கேட்டு அறிவிக்கலாம்... முத்துலிங்கம்