தமிழ் சினிமா

.
காஞ்சனா முனி - 2

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவன முனி படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘காஞ்சனா’.

ராகவா லாரன்ஸ் கிரிக்கெட் விளையாடுவதில் கில்லியாக இருக்கிறார். ஆனால் இருட்டைக் கண்டாலே அலறி ஓடிவிடுவார். தன் அம்மா, அண்ணன் ஆகியோருடன் வசித்து வரும் ராகவா லாரன்ஸின் பொழுது போக்கே கிரிக்கெட் விளையாடுவதுதான்.

அப்படி கிரிக்கெட் விளையாட இடம் கிடைக்காமல், தேடி அலைந்து ஒரு புதிய இடத்தைக் கண்டு பிடிக்கிறார். அந்த இடத்தில் அனைவரும் கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்புகின்றனர். அப்படி வீட்டிற்கு திரும்பும்போது, அவர் வைத்திருக்கும் ஸ்டம்பில் ரத்தக்கறை படிந்திருப்பதை ராகாவா லாரன்ஸ் கவனிக்கத் தவறுகிறார். இதனிடையே மச்சினிச்சியாக வரும் லட்சுமிராயுடன் காதல் ஏற்படுகிறது. இடை இடையே இவர்களது காதல் குறும்புகளும் தொடர்கிறது. சிலநாட்களுக்குப் பிறகு அவருக்குள் அமானுஷ்ய சக்திகள் புகுந்து கொண்டு சித்து வேலை காண்பிக்கின்றன. ஆணாக இருக்கும் லாரன்ஸ் திடீரென்று வளையல் அணிவதும், சேலை கட்டுவதும், மஞ்சள் தேய்த்து குளிப்பதுமாக இருக்கிறார். இதைனைக் கண்ட லாரன்ஸின் அம்மாவான கோவை சரளா, தன் மகனிடம் ஏதோ ஒரு விபரீதம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அவரை முஸ்லீம் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அங்குதான் அவர் மீது ஆவி இருக்கிறது என்று தெரியவருகிறது. பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது. சரத்குமார் ஆணாகப் பிறந்தாலும், பருவமாற்றத்தால் திருநங்கையாக மாறி காஞ்சனா என்று பெயர் வைத்துக் கொள்கிறார்.

இதனால் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். எல்லோராலும் உதாசீனப்படுத்தப்படுத்துகிறார். இதனால் மனம் வெறுத்து தனித்து வாழ ஆரம்பிக்கிறார். அதுமட்டுமின்றி தன்னைப் போலொரு திருநங்கையை தத்தெதடுத்து, டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அங்குள்ள ஏழை மக்களுக்காக 25 லட்ச ரூபாய் செலவில் மருத்துவமனை கட்ட, ஒரு இடத்தை வாங்குகிறார் காஞ்சனா. அதே இடத்தின் மேல் ஒரு கண்ணாக இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ, அந்த இடத்தை அபகரிப்பது மட்டுமின்றி காஞ்சனா, அவரது குடும்பத்தினர் என மூன்று பேரை படுகொலை செய்து புதைத்து விடுகிறார். அந்த மூன்று பேரும் புதைக்கப்பட்ட இடத்தில்தான் ராகவா லாரன்ஸ், ஸ்டம்ப் நட்டு விளையாடியிருக்கிறார்.

அப்போதுதான் அந்த ஆவிகள் அவருடைய உடலில் புகுந்திருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கிறார்கள். தங்களை கொலைசெய்த எம்.எல்.ஏவை பழிவாங்க துடிக்கிறாள் காஞ்சனா.

அவளின் பழி வேட்டை தீர்ந்ததா, ராகவா லாரன்ஸ் மீண்டும் இயல்பான மனிதாக மாறினாரா? லட்சுமி ராயுடன் அவருடைய காதல் என்ன ஆனது? என்பதை விறுப்பாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி பாகம் இரண்டு கலக்கலாகத்தான் இருக்கிறது. அவரது நடிப்பும், ஆக்ரோஷமும், திருநங்கையாக மாறியபின் அவர் காட்டும் நளினமும் பளிச். நடனத்தில் மனிதரைக் கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்துவிடுகிறார்.

சிலகாட்சிகளே வந்தாலும் நம்ம சரத்குமாரா இது என்று வாய் பிளக்க வைக்கிறார். இமேஜிற்குள் சிக்காமல் திருநல்கை வேடத்தை துணிச்சலாக ஏற்றது மட்டுமின்றி, தத்ரூபமாக நடித்தமைக்கு அவருக்கு தாராளமாக கைதட்டல் போடலாம்.

கவர்ச்சிக்கும், காதலுக்கும் மட்டும் வந்து போகிறார் ல்ட்சுமிராய். லாரன்ஸ் உடன் அவர் அடிக்கும் காதல் லூட்டிகள் ரசிக்கும் படி இருக்கிறது. பாடல் காட்சியின் போது லாரன்ஸை இடுப்பில் தூக்கி வைத்தபடி ஆடுவது புதுமை.

லாரன்ஸின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பட்டாசு கிளப்புகிறார். பயந்தாங்கொள்ளி மகனைப் பெற்றதற்காக, அவரிடம் மாட்டிக் கொண்டு அவர் படும் பாடு, நமக்கு குபீர் சிரிப்பை வரவைழைக்கிறது. இப்படத்தின் முதுகெலும்பே இசையும், ஒளிப்பதிவும். தமனின் இசையமைப்பில் திகில் காட்சிகள் திடுக் திடுக்கை வரவழைக்கின்றன. வெற்றியின் ஒளிப்பதிவு இரவிலும் விழித்திருக்கும் நிலவாக காட்சிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. ஸ்ரீமன், தேவதர்ஷினி, மனோ பாலா, தேவன் என அவரவர்களுக்கு கொடுகப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

திருநங்கைகள் படும் துயரினை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கும் ராகவா லாரன்ஸிற்கு கண்டீப்பாக சபாஷ் போட்டே தீரவேண்டும். சரத்குமாரின் அதிரடி நடிப்பும், ராகவா லாரன்ஸின் மிரட்டல் நடிப்பும், சுப்பர் சுப்பராயனின் சண்டை அமைப்பும், தமனின் திகலூட்டம் இசையும் நம்மை கட்டிப் போட்டு வைத்து விடுகின்றன.

திகில் பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி தைரியமான குழந்தைகள் வரை ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

நன்றி விடுப்பு



வெப்பம்
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் ”வெப்பம்” படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தை கெளதம் மேனனின் உதவியாளர் அஞ்சனா இயக்கியுள்ளார்.

குப்பத்து பின்னணி கதையில் தெலுங்கு பட நடிகர் நானி, கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். நானி குப்பத்தில் தன் அண்ணனின் பராமரிப்பில் வளர்கிறார். பிஞ்சு பருவத்தில் அம்மாவை பறி கொடுத்த சகோதரர்கள் வளர்ந்து ஆளாகி தங்களின் தந்தையை ஏன் தீர்த்துகட்டுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அஞ்சனா.

நானி - கார்த்திக் இருவரின் வாழ்க்கையில் நுழையும் காதல், மோதல், கடத்தல் விவகாரத்தை ரசனையோடு படமாக்கியுள்ளார் அஞ்சனா. குப்பத்தில் நானி, கார்த்திக் இருவரும் கெளதம் பட பாணியில் ஓடி, ஆடி விளையாடுகிறார்கள். குப்பத்தில் பளீர் பால் வெள்ளை நிறத்தில் நித்யா மேனன் நடித்திருப்பது படத்திற்கு யதார்த்தை தரவில்லை. வில்லியாக வரும் ஜெனிப்பர் மிரட்டலாக நடித்துள்ளார்.

விபச்சார அழகியான பிந்து மாதவியோடு வாழ கார்த்திக் திட்டம் போடுகிறார். தம்பி நானி விபச்சார புரோக்கரான தந்தையோடு பழகுவதை அண்ணன் எதிர்க்கிறார். திடீரென கார்த்திக் கொல்லப்படுகிறார். நானியை பொலிஸ் பிடித்து செல்கிறது. அதற்க்கு பிறகு, உண்மையில் கார்த்திக்கை கொன்றது யார்? என்பது தெரிய வருகிறது.

வில்லி ஜெனிப்பருடன் நானியும் அவருடைய அண்ணனும் மோதுகிறார்கள். காட்சிகளை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ல விரும்பிய இயக்குனர் அஞ்சனா திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், இந்த வெப்பம் இன்னும் கதகதப்பை தந்திருக்கும்.

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பாடல்களை படமாக்கிய விதத்தில் இயக்குனரின் ரசனை அட்டகாசம். தமிழ் சினிமாவில் பெண் இயக்குனரால் இப்படியும் ஒரு ஆக்ஷன் படம் பண்ண முடியும் என்பதை அஞ்சனா நிரூபித்துள்ளார்.

நடிகர்கள்: நானி, கார்த்திக், முத்துக்குமார், ஷிம்மோர்

நடிகைகள்: நித்யா மேனன், பிந்து மாதவி, ஜெனிப்பர்

இசை: ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
எடிட்டிங்: ஆண்டனி
கலை: மாயன்
வசனம்: பிரபு
சண்டை பயிற்சி: ராஜசேகர், ரவி, ஜேம்ஸ்
பி.ஆர்.: நிகில்
தயாரிப்பு: கௌதம் வாசுதேவ் மேனன்
இயக்கம்: அஞ்சனா

நன்றி விடுப்பு








No comments: