தொன்னூறு வயதில் கலைவளன் சிசு.நகேந்திரன் ஒரு கலை இலக்கியவாதியின் வாழ்வும் பணியும் - முருகபூபதி

.
தொன்னூறு வயதில் கலை, இலக்கிய அமைப்பொன்றுக்கு தலைவராக ஒருவர் பணியாற்றும் தகவல் எம்மவர்களுக்கு சற்று வியப்பாகவிருக்கலாம். அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் சோர்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மூத்ததலைமுறை கலை, இலக்கியவாதி ஒரு காலகட்டத்தில் சில ஈழத்து தமிழ் திரைப்படங்களில் தோன்;றியிருக்கிறார். இம்மாதம் 9 ஆம் திகதி தமது 90 ஆவது அகவையில் காலடிவைக்கும் ‘கலைவளன்’ சிசு.நகேந்திரன் அவர்களைப்பற்றித்தான் இப்பத்தியில் குறிப்பிட விரும்புகின்றேன்.


கடந்த ஆண்டு நடந்த எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் அவர் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். இச்சங்கம் வருடாந்தம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், அதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். சங்கத்தின் ஒன்றுகூடல் எழுத்தாளர் விழா மெல்பனில் சிட்னியில் கன்பராவில் நடந்தாலும் சாக்குப்போக்குச்சொல்லாமல் தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்று கருத்தரங்குகளில் கட்டுரையும் சமர்ப்பிப்பார்.

யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும் பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி. அவரது தந்தையார் தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் பிறந்த சிசு. நாகேந்திரன் அவர்களின் வாழ்வில் அவரது ஒன்பதாவது வயதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

நாகேந்திரனின் ஒன்பதாவது வயதில் தந்தையார் முற்றும் துறந்த துறவியாகி குடும்பத்தையும் உத்தியோகத்தையும் துறந்து, வட இந்தியா நோக்கி ஒரு சந்நியாசிகோலத்துடன் புறப்பட்டுவிட்டார். ஒன்பது வயது நாகேந்திரன் அருமைத்தாயாரினதும் அன்பு அண்ணனினதும் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.

தந்தையார் இந்தியா வடக்கு நோக்கிச்செல்லவும் தாயார் இலங்கை வடக்கு நோக்கி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அந்நாளைய அரிவரி தொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ( இன்றைய பல்கலைக்கழகம்) படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று, London Chamber of Commerce உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றினார்.

1944 இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது. பின்னர் கொழும்பில் அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும்போது கணக்காய்வாளராக பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை. இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்தி விட்டு, தமது தந்தையைப்போன்றே ஒரு துறவுக்கோலம் பூண்டு அமைதியாக தனது பணியைத்தொடருகிறார். தமது துறவு வாழ்க்கையை சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும்விதமாக இவர் அமைத்துக்கொண்டிருப்பதுதான் அவரது சிறப்பு. அத்தடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகவும் திகழுகிறது.

அதனாலும் அவர் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமானவராகின்றார். அவருடன் கலந்துரையாடி அவரது இளமைக்காலத்தை கேட்டேன்.

இளமைக்காலத்தில் படிப்பில் படு சுட்டி எனப்பெயரெடுத்தவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள் டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கும் இவரது சூட்சுமும் இந்தப்பின்னணிகள்தான் என்பது எமக்குப்புரிகிறது.

இவரது கலை உலக வாழ்க்கையும் ஆரோக்கியமானது. தேடல் நிரம்பியது. கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலத்தில், ‘ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்’ இவரை உள்வாங்கியிருந்தமையால் இம்மன்றம் மேடையேற்றிய பலநாடகங்களில் தோன்றினார். யாழ்ப்பாணம் திரும்பியதும் அச்சுவேலி ராஜரட்ணத்துடன் இணைந்து அந்நாட்களில் பிரபல்யமாகியிருந்த ‘சக்கடத்தார்’ என்னும் நாடகத்தில் ஒரு பாத்திரமானார்.

இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கும் என்பது நாகேந்திரனின் அபிப்பிராயம். யாழ்ப்பாணத்தில் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், திருநாவுக்கரசு (நந்தியின் சகோதரர்) ஆகியோருடனும் இணைந்து இயங்கியிருக்கிறார். ரகுநாதனின் நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு முதலான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

ஆச்சிக்குச்சொல்லாதை, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம், பொன்னல்ல, தொடாதே, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப... இது இப்ப.. முதலான பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்திருக்கும் நாகேந்திரன், யாழ். திருநெல்வேலி நாடக அரங்கக்கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட வையத்துள் தெய்வம், கந்தன் கருணை, அன்னத்துக்கு அரோஹரா, கூடி விளையாடு பாப்பா, இனி என்ன கலியாணம், கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலானவற்றிலும் நடித்திருப்பதுடன், பொறுத்தது போதும், கோடை, ஆகியவற்றின் மேடையேற்றத்தின்போது அரங்க நிர்மாணப்பணியையும் திறம்பட மேற்கொண்டிருக்கிறார்.

அந்நாட்களில் தமிழ் வானொலி நேயர்களின் விருப்பத்துக்குரிய நாடகங்களாகத்திகழ்ந்த சிறாப்பர் குடும்பம், லண்டன் கந்தையா முதலானவற்றிலும் நடித்திருக்கிறார். இங்கிலாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கும் இவர், அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின் சார்பாக மேடையேறிய புதியதொரு வீடு, அபசுரம், எந்தையும் தாயும் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார். இவ்வாறு ஒரு நாடகக் கலைஞனாக தமது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டவர், அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தன்னை ஒரு எழுத்தாளனாகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.

தான் இந்த கங்காருநாட்டில் ஒரு எழுத்தாளனாக மாறியதும் விந்தையான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். தமது பேத்திக்கு அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது எனச்சொல்லிக்கொடுப்பதற்காக எழுதிய கட்டுரைகளே பின்னர் சிட்னியிலிருந்து வெளியாகும் கலப்பை இதழில் பிரசுரமானது என்றார். குறிப்பிட்ட கட்டுரைகளே பின்னர் அதே பெயரில் தமிழகத்தில் நூலுருவாகி பலரதும் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது.

இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாகமடைந்த சிசு. நாகேந்திரன், பிறந்த மண்ணும் புகலிடமும் என்னும் மற்றுமொரு கட்டுரைத்தொகுதியையும் வரவாக்கினார். இந்நூலை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர்விழாவிலும் பின்னர் மெல்பனில் நடந்த இலக்கிய ஒன்றுகூடலிலும் விமர்சன அரங்கில் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1994 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தருணத்தில் கலைஞர் தாசீசியஸ் உட்பட பலர் இவருக்கு அளித்த பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்;’ என்ற பட்டமளிக்கப்பட்டார்.

நாடகக்கலைஞனாக அறிமுகமாகி எழுத்தாளனாக தன்னை வளர்த்துக்கொண்ட சிசு. நகேந்திரன், சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார். எமது சங்கத்தின் ஆஸ்தான ஒளிப்படக்கலைஞர் பதவியும் இவருக்குத்தரப்பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் மட்டுமல்ல, விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் சாக்குப்போக்குச்சொல்லாத அர்ப்பணிப்புணர்வுடன் இதயசுத்தியோடு இயங்கும் இந்த 90 வயது உலகம் சுற்றும் இளைஞர் தற்போது எமது சங்கத்தின் தலைமைப்பொறுப்பையும் ஏற்றிருப்பதன் மூலம் சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பயணங்களை பெரிதும் விரும்பும் இவர் யாத்ரீகனாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து தான் பெற்ற அனுபவங்களை பதிவுசெய்திருந்தார். குறிப்பிட்ட பதிவின் விரிவாக்கமே பிறந்த மண்ணும் புகலிடமும் என்ற இவரது இரண்டாவது நூல். அதனை அச்சில் வெளியிடமுன்னர் மூலப்பிரதியை தனக்கு நெருக்கமான சிலரிடம் காண்பித்து அவர்களினது கருத்துக்களையும் கேட்டறிந்து செம்மைப்படுத்திய பின்பே நூலை வெளியிட்டார்.

கலை, இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் சகலராலும் நேசிக்கப்படும் சிசு. நகேந்திரன் விதந்துபோற்றுதலுக்குரிய பண்பாளர். முன்மாதிரியானவர். 90 ஆவது பிறந்த நாளை அமைதியாகவும் எளிமையாகவும் கடந்துகொண்டிருக்கும் அவரை நாமும் வாழ்த்துவோம்.

1 comment:

kirrukan said...

வாழ்த்துக்கள் ஜயா...