மணிவிழாக்காணும் முருகபூபதியுடன் நேர்காணல்

.
சந்திப்பு: கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா

முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெற்று யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர். சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றுள்ள முருகபூபதி 1977 முதல் வீரகேசரியில் பணியாற்றிவிட்டு 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். அவுஸ்திரேலியாவில் இலக்கியப்பணிகளுடன் சமூகப்பணிகளிலும் அயராமல் தொடர்ந்து உழைத்துவரும் முருகபூபதி அவுஸ்திரேலியாவிலும் சில விருதுகளைப்பெற்றவர்.



 இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக இயங்கிய முருகபூபதிக்கு இவ்வாண்டு 60 வயது பிறக்கிறது. மணிவிழாக்காணும் அவருடனான நேர்காணல் ஊடாக அவரது வாழ்வும் பணியும் அவரது கருத்துக்களுடன் வாசகர்களிடம் பகிரப்படுகிறது.

கேள்வி :
உங்களது முதலாவது சிறுகதையான கனவுகள் ஆயிரம், 1972 ஆம் ஆண்டு மல்லிகையில் வெளிவந்தது. ஒரு தரமான சிற்றிதழில் முதல் சிறுகதை வெளியாவது ஆச்சரியமான விடயம். அதைவிட ஆச்சரியம் முதல் சிறுகதை பிரசுரமாகி மூன்று ஆண்டுகளில், குறிப்பிட்ட கதையும் இடம்பெற்ற சுமையின் பங்காளிகள் என்ற தங்களது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. குறிப்பிட்ட முதலாவது சிறுகதைக்கு முன்பு ஏதும் இலக்கிய முயற்சிகள், எழுத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டீர்களா?, அதில் சந்தித்த அனுபவங்களில் சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;.

பதில்:
கனவுகள் ஆயிரம் என்ற சிறுகதைதான் எனது முதலாவது இலக்கியப்படைப்பு. அதற்கு முன்னர் வீரகேசரி நிர்கொழும்பு நிருபராக செய்திகளும் செய்திக்கட்டுரைகளும்தான் எழுதிக்கொண்டிருந்தேன். சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், இலக்கியக்கூட்டங்கள் தொடர்பாக செய்திகள் எழுதிக்கொண்டிருந்தேன். மல்லிகை ஆசிரியர் 1970-1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் கொழும்புக்கு வரும்பொழுது நீர்கொழும்பிலிருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினரைப்பார்ப்பதற்காக வருவார். அச்சமயங்களில் ஏற்கனவே இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம் மு.பஷீர், மற்றும் செல்வரத்தினம், தருமலிங்கம், சந்திரமோகன், பவாணிராஜா, நிலாம் உட்பட பலர் அவரைச்சந்தித்து கலந்துரையாடுவார்கள். இச்சந்திப்புகள் பெரும்பாலும் நீர்கொழும்பு கடற்கரையில் இடம்பெறும். நானும் ஆர்வமுடன் கலந்துகொண்டு உரையாடுவேன். மல்லிகை ஜீவாவுடன் விவாதிப்பேன். அச்சமயம் ஜெயகாந்தனைப்பற்றி அவர் காரசாரமான விமர்சனக்கட்டுரைத்தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அத்தொடர் எமது கலந்துரையாடலில் விவாதப்பொருளாகும். எனது கருத்துக்களை கூர்ந்து அவதானித்த ஜீவா ஒருநாள், “ நிறைய விவாதிக்கிறீர். நீரும் எழுதலாமே” என்றார். அவர்தந்த உற்சாகத்தில் கனவு என்ற சிறுகதையை எழுதினேன். எனது உறவினரும் தற்போது ஜெர்மனியில் பெண்கள் சந்திப்பு ஊடறு முதலான அமைப்புகளில் இருப்பவருமான தேவா ஹெரால்டிடம் அந்தக்கதையை காண்பித்தேன். அச்சிறுகதை நீர்கொழும்பு பிரதேசத்தில் கடற்தொழிலை நம்பி வாழும் மக்களைப் பற்றியது. அதனை, செல்வரத்தினம் (இவர் தற்போது பிரான்ஸில் இணையத்தளம் நடத்துகிறார்) நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரிடமும் காண்பித்தேன். அதற்கு முன்னர் எமது பிரதேச மக்களின் பேச்சு மொழி வழக்கில் எவரும் படைப்பிலக்கியம் படைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட கனவு கதை மீனவ மாந்தரின் கனவுகளின் சித்திரிப்பாக அமைந்திருந்தமையால் அதனை எதற்கு அனுப்பவிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். மல்லிகைக்கு எனச்சொல்லிவிட்டு தபாலில் அனுப்பினேன். கனவுகள் ஆயிரம் எனத்தலைப்பிட்டு ஜீவா அதனை மல்லிகை ஜூலை இதழில் பிரசுரித்தார். ஆச்சரியம் என்னவென்றால் 1972 ஆம் ஆண்டு எனது 21 வயது பிறந்த நாளன்று அதாவது ஜூலை 13 ஆம் திகதியன்று எனது வீட்டு முகவரிக்கு குறிப்பிட்ட மல்லிகை இதழ் தபாலில் வந்ததுதான். எனது முதலாவது இலக்கியக்குழந்தைதான் அச்சிறுகதை. இதுவரையில் இச்சிறுகதையை ஆயிரம் தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் படித்திருப்பேன். 1975 இல் இச்சிறுகதையுடன் மேலும் ஒன்பது கதைகளையும் சேர்த்து சுமையின் பங்காளிகள் தொகுப்பை வெளியிட்டேன். 1976 இல் அதற்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. இந்தத்தகவல் இலங்கை வானொலி மாலை நேரச்செய்தியில் ஒலிபரப்பானது. ஆனால் எனக்குத்தெரியாது. காரணம் எங்கள் வீட்டில் வானொலி இல்லை. நண்பர் செல்வரத்தினம் வானொலியில் கேட்டுவிட்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தகவல் சொன்னார். நான் நம்பவில்லை. இரவு 9 மணிச்செய்தியை அயல்வீட்டுக்குச்சென்று கேட்டுத்தான் உறுதிப்படுத்திக்கொண்டேன். முதலாவது ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவிடம் விருதைப்பெற்றுக்கொண்டேன். மல்லிகை ஜீவா 1975 இல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சுமையின் பங்காளிகள் தொகுப்பிற்கு அறிமுக விழா நடத்தியபோது அதற்கு தலைமை தாங்கிய மூத்த எழுத்தாளர் சு. இராஜநாயகம் அவர்கள், எனது உருவத்தை பார்த்து வயதைக்கேட்டறிந்து வியப்புற்றார். தமது வியப்பை தமது தலைமையுரையிலும் குறிப்பிட்டார். கனவுகள் ஆயிரம் உட்பட ஏனைய சிறுகதைகளை தாம் படித்தபோது அவற்றை எழுதிய முருகபூபதி ஒரு முதியவர் என்றுதான் கற்பனை செய்துவைத்திருந்தாராம். தன்னை இதுவிடயத்தில் ஏமாற்றிவிட்ட முருகபூபதி தமது படைப்புகளில் எம்மை ஏமாற்றவில்லை என்று சுவாரஸ்யமாகச்சொன்னார். சுமையின் பங்காளிகளின் இரண்டாவது பதிப்பு 2007 இல் வெளியாகியுள்ளது. முதலாவது பதிப்பு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு கணினியில் பதிவாகியது. என்னைப்;பொறுத்தவரையில் இந்நிகழ்வுகள் யாவும் எதிர்பாராதவையே.

கேள்வி: 2001 இல் வெளியான பறவைகள் என்ற உங்களது முதலாவது நாவலும் சாகித்திய விருதைப் பெற்றுக் கொண்டது. உங்களது இலக்கிய உலக முதல் காலடி கனவுகள் ஆயிரம் சிறுகதை வெளிவந்து 29 ஆண்டுகளின் பின்னர்தான் உங்களது நாவல் வெளிவந்துள்ளது. ஆறு சிறுகதைத் தொகுதிகளும், பல கட்டுரைத் தொகுதிகளும் எழுதிய நீங்கள், பறவைகள் நாவலுக்குப் பிறகு வேறு நாவல்கள் ஏதும் ஏன் எழுதவில்லை?

பதில்:
மாரீசம் என்ற அரசியல் நாவலை தொடர்கதையாக ஐரோப்பிய இதழ் ஒன்றில் எழுதினேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்நாவலை புனைபெயரில்தான் எழுதநேர்ந்தது. எதிர்பாராதவிதமாக இந்நாவலை முழுமைப்படுத்த முடியாமல்போனது. எனினும் அதனை மீண்டும் முழுநாவலாக எழுதி முடிக்கும் பணியிலிருக்கின்றேன். தொடர்கதைக்கும் நாவலுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். ஊடகத்துறையிலும் பணியாற்றியிருப்பதனால் ஊடகம் தொடர்பாகவும் ஒரு நாவலை எழுதவிருக்கின்றேன். பறவைகள் நாவலில் வரும் தேவகி என்ற பாத்திரத்தை நாவலின் முடிவில் அநாதரவாக விட்டுவிட்டேன் என்றும் விமர்சனங்கள் வந்தன. அந்நாவலின் இரண்டாம் பாகத்தையும் நான் எழுதவேண்டும் என்றும் சிலர் கேட்டுக்கொண்டனர். ஆயுளும் ஆரோக்கியமும் இருந்தால் நிச்சயம் இவற்றையும் எழுதுவேன்.

கேள்வி:
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் கட்டுரைத்தொகுதியில் மறைந்த 12 இலக்கியவாதிகளின் நினைவுகளை மீட்டிருந்தீர்கள். கடிதங்கள் என்ற தொகுதியில் எண்பத்தைந்து இலக்கிய நெஞ்சங்கள் உங்களுக்கு எழுதிய கடிதங்களை தொகுத்து வெளியிட்டீர்கள். அத்துடன் மல்லிகை ஜீவா நினைவுகள், அம்பி வாழ்வும் பணியும், ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் என்று பலருடனும் ஏற்பட்ட இலக்கிய உறவுகளை பதிவுசெய்தீர்கள். இதில் பலர் எதிர் எதிர் இலக்கிய முகாமில் இருப்பவர்கள். அத்துடன் தமிழ், முஸ்லிம், சிங்கள இலக்கியவாதிகளுடனும் தொடர்புகளைப் பகிர்ந்தீர்கள். எப்படி உங்களால் இந்த முரண்பாடுகளைக் கையாள முடிகிறது?

பதில்:
‘முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனங்காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது.’ என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றேன். ஒவ்வொருவரது குண இயல்புகள்தான் அவர்களது அடிப்படை அழகு. அவர்களின் விதியை தீர்மானிப்பதும் அவர்களின் இயல்புகள்தான். இலக்கியப்படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் அதேசமயம் சமூகம் சார்ந்த பொதுப்பணிகளிலும் ஈடுபடும் ஒருவருக்கு வுநயஅ றுழசம குறித்த தெளிவு இருக்கவேண்டும். அதாவது மாற்றுக்கருத்துக்களையும் செவிமடுத்து ஆரோக்கியமான சிந்தனையை உருவாக்கவேண்டும். சிலரது சகிக்கவே முடியாத சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் சந்திக்கும்போது சில சமயங்களில் வெறுப்பின் எல்லைக்கும் செல்ல நேரிடும். அத்தகையவர்களிடமிருக்கும் குறைந்த பட்ச நல்லியல்புகளை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையில் தொடர்பாடலை மேற்கொள்ளலாம். தொடர்பாடல் இறுக்கத்தை குறைத்து நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன். தனித்தனி இலக்கியத்தீவுகளாக இயங்குபவர்கள் அனைவருமே கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. நான் சந்தித்தவர்களிடமிருந்து நிறையக்கற்றுக்கொண்டேன். இன்றும் நான் கற்றுக்கொண்டிருக்கும் சாதாரண இலக்கிய மாணவன்தான்.

முகாம்களை உருவாக்கியவர்களும் நாங்கள்தான். சமயங்கள் உருவானதுபோன்று அரசியல் முகாம்களும் இலக்கிய முகாம்களும் மனித உரிமை மற்றும் தொண்டு நிறுவன முகாம்களும் உருவாகியுள்ளன. எமது சமூக அமைப்பில் இவை தவிர்க்கமுடியாதவை. மத நல்லிணக்கம் பற்றி பேசப்படுகிறது. அதுபோன்று இலக்கிய முகாம் நல்லிணக்கமும் தோன்ற வேண்டும். முரண்பாடுகளை எவ்வாறு கையாள முடிகிறது என்று கேட்கிறீர்கள். குடும்பங்களில் கணவன் - மனைவி- பிள்ளைகள் மத்தியில் முரண்பாடுகள் இல்லையா? அனைவருமே ஒரேவிதமாகவா சிந்திக்கிறார்கள்? செயற்படுகிறார்கள்? குடும்ப நிகழ்வு வரும்போது முரண்பாடுகளையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு சேர்ந்து இயங்குகிறர்கள்தானே. இச்சிந்தனையைத்தான் எமது அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாக்களிலும் இலங்கையில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் முன்மொழிந்தேன். அதாவது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்துகொள்ள முயல்தல். அதற்காக ஒன்றுகூடுதல். எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் மற்றும் சில நினைவு நூல்கள் கடிதங்கள் தொகுப்பு ஆகியனவற்றிலும் இந்தக்கருத்தையே வலியுறுத்தினேன். எழுத்தில் சொன்னதை செயலிலும் காண்பிப்பதற்கான முயற்சியே இந்த ஒன்றுகூடல்கள். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொகுப்பில் இடம்பெற்ற பன்னிரண்டு பேருடன் மேலும் நாற்பத்தியெட்டு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் சமூக நலன் விரும்பிகளையும் பற்றிய விரிவான நூல் காலமும் கணங்களும் தொகுப்பை தற்போது எழுதி முடித்துள்ளேன். விரைவில் இந்நூலும் வாசகர்களுக்கு கிடைக்கும்.

கேள்வி:
உங்கள் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டீர்கள். அதாவது, பாடசாலை ஆண்டுத்தொடக்கத்தின் போது பாடப் புத்தகம் வாங்குவதற்கு பணம் இல்லாது நீங்கள் சிரமப்பட்ட போது உங்கள் பாட்டி, நத்தார் தினத்தன்று தேவாலய முன்றலில் கடலை விற்று அந்தப்பணத்தில் பாடப் புத்தகங்கள் வாங்கித்தந்தார் என்று. மனதில் பதிந்த அந்த நிகழ்வின் விளைவு எழுத்தாளர் என்ற வகையில் ஒரு படைப்பாக வந்திருந்தால் அதிசயமில்லை. ஆனால் அமைப்பாக உருவாகியுள்ளது. பலருக்கு எழுத்தாளர் என்ற உங்களது முகத்தைத்தான் தெரியும் உங்களுக்கு இன்னொரு முகம் உண்டு. அது சமூகசேவை. உங்களால் உருவாக்கப்பட்டு 23 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றி அறிவோம். அவுஸ்திரேலியாவில் நீங்கள் தொடங்கிய இந்த செயற் பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் வெடித்தமைக்கு கல்வி மீதான தரப்படுத்தல் ஒரு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும் ஒரு காரணம்தான். எனது அப்பா நான் பிறந்து சில வருடங்களில் எனது பெயரில் முருகன் லொட்ஜ் என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான வீதியில் பஸாரில் தொடங்கினார். அப்பா ஒரு பரோபகாரி. இரக்க சிந்தனையுள்ளவர். பசி என்று வந்தவர்களுக்கெல்லாம் பசிபோக்கியவர். அதனால் சற்று பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டவர். கடன் தொல்லைக்கும் ஆளானவர். சிறிது காலத்தில் அந்த சைவஹோட்டல் மூடப்பட்டது. வீடு வறுமையில் வாடியது. அப்பா வேலை தேடி அலைந்தார். அம்மாவும் பாட்டியும் வீட்டில் தோசைசுட்டும் இடியப்பம் அவித்து விற்றும் எமது தேவைகளை கவனித்தார்கள். நான் ஏழுவயதில் அம்மா தரும் காலை ஆகாரங்களை தட்டில் எடுத்துச்சென்று கடற்கரையோரமாக வந்து குவியும் கடற்றொழிலார்களுக்கு விற்றுவிட்டு வந்துதான் பாடசாலை செல்வேன். எனது அக்கா ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும் பாட்டி அதாவது அம்மாவின் அம்மா வேறு ஒரு திசையிலும் சென்று தேசை, இடியப்பம் விற்போம். அம்மா வீட்டிலே அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அடுப்பங்கரையில் வெந்துகொண்டிருப்பார்கள். அந்த வருமானம் எங்கள் உணவுக்கும் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை, இரண்டு தம்பிமார். சின்னத்தம்பி பசியில் அழுவான். அம்மா ஆட்டுரலில் தேசைக்காக உளுந்து அரைக்கும்போது சின்னத்தம்பி அம்மாவின் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு பசியால் அழுத காட்சி இன்றும் எனது மனதில் அழியாத சித்திரம். இந்நிலையில் பாடசாலை புத்தகங்கள் வாங்குவதற்கு அம்மாவிடம் ஏது பணம். அதனால் எங்கள்பாட்டி, எமது வீட்டுக்கு அருகமையிலிருக்கும் செபஸ்தியார் தேவாலயத்தில் ஏசு பாலகன் பிறப்பன்று (நத்தார் தினம்) இரவு கடலை அவித்து எடுத்துச்சென்று விற்றார். நானும் அவர்களுடன் சென்று அதிகாலை ஒருமணிவரையில் அந்த தேவாலய முன்றலில் அமர்ந்தேன். எனக்கு பாடப்புத்தகம் வாங்குவதற்காகத்தான் பாட்டி கடலை அவித்தார்கள், விற்க வந்தார்கள் என்பது தெரியாது. அவர்களது மடியில் நான் உறங்கிவிட்டேன். கடலை வியாபாரம் முடிந்து பாட்டி என்னை தட்டி எழுப்பி சொன்னார்கள், ‘’தம்பி உனக்கு புத்தகம் வாங்க காசு கிடைத்துவிட்டது” எப்படி என்று கேட்டேன். “ கடலை வித்தோமில்லையா” என்றார்கள். நான் பாட்டியை கட்டி அணைத்துக்கொண்டேன். என்னைப்போன்ற பிள்ளைகளுக்கு எனக்கு கிடைத்தது போன்ற பாட்டிமார் கிடைக்கவேண்டும். (இதுபோன்ற சம்பவங்கள் பலரது வாழ்விலும் இடம்பெற்றிருக்கும்) அச்சமயம் பாட்டி எனக்குள் விதைத்த விதை எதிர்காலத்தில் விருட்சமாகும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் என்னைப்போன்ற பிள்ளைகள் கல்வியை இடைநிறுத்தாது தொடரவேண்டும். எதிர்காலத்தில் எனக்கு வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் கல்விப்பணிக்காக அயராமல் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் கருக்கொண்டது.

அவுஸ்திரேலிய புலப்பெயர்வும் எதிர்பாராதது, எங்கள் தேசத்தில் தோன்றிய நெருக்கடியும் சிறுவயதில் நான் எதிர்பாராதது. வீரகேசரியில் ஆரம்பத்தில் ஒப்புநோக்காளர் பிரிவிலும் பின்னர் ஆசிரிய பீடத்திலும் பணியாற்றும்போது போர்க்கால செய்திகள் என்னை பெரிதும் பாதித்தன. இந்தப்போராட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படப்போகிறவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்பது தெளிவாக புலனாகியது. போரில் பெற்றவர்களை குறிப்பாக தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி பொருளாதாரக்காரணங்களினால் இடைநிறுத்தப்படும் அபாயம் தோன்றும் என்பது தீர்க்கதரிசனமாகத்தெரிந்தது. அச்சமயங்களில் எனது பாட்டி அடிக்கடி எனது நினைவில் வந்து சஞ்சரிப்பார். எனது கனவும் விஸ்வரூபம் எடுக்கும்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் சில நண்பர்களை அழைத்து எனது யோசனையை சொன்னேன். அதாவது போரில் தந்தையை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்து கல்வியை தொடர முடியாமல் இருக்கும் எமது தமிழ்க்குழந்ததைகளின் கல்விக்கு உதவுவதுதான் அந்த யோசனை. எனது எண்ணத்தை எனது நண்பர்கள் வரவேற்றார்கள்.

படைப்பாளியோ பத்திரிகையாளனோ எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது என்பதன் அர்த்தம் அவர்களைப்பற்றி கவிதை எழுதுவதோ அவர்களுக்காக ஊர்வலம் போவதோ அல்லது அறிக்கைகள் வெளியிடுவதோ பேட்டிகள் வழங்குவதோ அல்ல. அதற்கும் அப்பால் ஆக்கபூர்வமாகவும் இயங்கவேண்டும். எனக்கு காற்றை சுவாசித்துத்தான் பழக்கம். காற்றிலே பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அவுஸ்திரேலியா மெல்பனில் எனது வாடகை அறையில் ஒரு சரஸ்வதி பூசை காலத்தில் சிறு நிகழ்வு ஒன்றை நடத்தி நான் உத்தேசித்திருந்த கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். எனது மதிப்பிற்குரிய உடன்பிறவாச்சகோதரர் சட்டத்தரணி ரவீந்திரன் (எழுத்தாளர் அருண். விஜயராணியின் அண்ணன்) அவர்கள் மங்கள விழக்கேற்றி இந்தத்திட்டத்தை தொடக்கிவைத்தார். 1989 இல் எனது சமாந்தரங்கள் சிறுகதை;தொகுப்பை மெல்பனில் வெளியிட்டு அதில் கிடைத்த நிதியையும் இந்தத்திட்டத்திற்கு வழங்கி மேலும் பல இரக்கமுள்ள அன்பர்களைத்திரட்டி இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை உருவாக்கினேன். சுமார் 23 ஆண்டுகாலமாக தங்கு தடையின்றி இந்த தொண்டு நிறுவனம் இயங்குகிறது. இதுவரையில் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இதனால் இலங்கையில் பயனடைந்திருக்கிறார்கள். எமது அமைப்பு சுநாமி கடற்கோள் அநர்த்தத்தின்போதும் கடந்த 2009 இல் வன்னியில் ஏற்பட்ட பேரவலத்தின்போதும் பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருக்கிறது. சுநாமியின்போதும் போர் முடிவுற்ற பின்னரும் நான் இலங்கை சென்று பாதிக்கப்பட்ட எமது குழந்தைகளையும் மக்களையும் பார்த்திருக்கின்றேன். இந்தப்பணியும் ஒருவகையில் வுநயஅ றுழசம தான். பலரதும் ஆதரவும் ஒத்துழைப்பும் எமக்கு கிட்டியமையால்தான் இந்தப்பணி சாத்தியமாகியது. அதனால் சம்பந்தப்பட்ட அனைவருமே எனது நன்றிக்கும் நேசத்துக்கும் உரியவர்கள்.

போர் முடிந்த பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிச்சிறார்களின் கல்வித்தேவையையும் எமது கல்வி நிதியம் கவனித்தது. பல முன்னாள் போராளிகள் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்தனர். சிலர் பல்கலைக்கழகமும் சென்றுவிட்டனர்.

(இந்தப்பணிக்காக புனர்வாழ்வு முகாம்களின் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்த எனது இனிய நண்பர் டொக்டர் நொயல் நடேசன் அவர்களுக்கும் இந்தத்திட்டத்திற்கு உதவிய அன்பர்களுக்கும் குறிப்பாக தனது அரங்கேற்றம் ஒன்றின் மூலம் கிடைத்த நிதி அன்பளிப்புகளை வழங்கிய செல்வன் பிரகதீஸ் சண்முகராஜாவுக்கும் என்றென்றும் நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கின்றேன்.) தற்போது நாம் அவர்களை முன்னாள் போராளிகள் என்று அழைக்காமல் எமது பிள்ளைகள் என்று அழைக்கவேண்டும் என்ற புதிய மரபை கடைப்பிடிக்கவேண்டும் என்பதும் எனது அபிப்பிராயம்.

கனவு மெய்ப்படல் வேண்டும் என்ற விரிவான கட்டுரை எனது இலக்கிய மடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்தக்கட்டுரையில் இந்த கல்வி நிதியம் பற்றி விரிவாக பதிவுசெய்துள்ளேன்.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுள்ளது. அதாவது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. எனக்கு பாடப்புத்தகம் வாங்க கையில் பணமில்லாதிருந்தது ஒரு பிரச்சினைதான். அதற்கான எளிமையான தீர்வு எனது அருமைப்பாட்டியிடமிருந்திருக்கிறது. அவர்கள் பாடசாலை சென்று படித்தவர்கள் இல்லை. வெறும் கைநாட்டுத்தான். ஆனால் தனது பேரன் படிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். தீர்வுக்காக அழுது புலம்பிக்கொண்டிருக்கவில்லை. இயங்கினார்கள். இந்த எளிய உண்மையை நான் காலம்கடந்து புரிந்துகொள்கின்றேன்.

கேள்வி: எழுத்தாளர்கள் வாசகர்களைத்தான் உருவாக்க விரும்புவார்கள். வாசகர் வட்டம், வாசகர் சந்திப்பு அல்லது நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தமது படைப்புகள் பரவலாக சென்றடைய முயற்சியெடுப்பார்கள். ஆனால் நீங்கள், விதிவிலக்காக எழுத்தாளர் விழா, எழுத்தாளர் மாநாடு என்று ஒழுங்கு செய்கிறீர்கள். அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக பதினோரு ஆண்டுகாலமாக தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னின்று நடத்துகிறீர்கள். இதனால் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? அவை எப்படி இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு உதவின?

பதில்:- நானும் எனது நூல்களுக்கு வெளியீட்டு விழாக்கள் அறிமுக நிகழ்வுகள் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் நடத்தித்தான் இருக்கின்றேன். இத்தகைய நிகழ்வுகள் அண்மைக்காலமாக பணச்சடங்காகிப்போயிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. முதல் பிரதிகள் சிறப்புப்பிரதிகள் பெற்றுக்கொள்பவர்கள் அவற்றை படிக்கிறார்களா? அல்லது தங்கள் புத்தக அலுமாரியில் அழகுக்காக அடுக்கிவைக்கின்றார்களா? என்பது நூலை எழுதியவருக்குத்தெரிவதில்லை. அச்சிட்டது எப்படியோ விற்று பணமாக வந்தால் சரி. படித்தீர்களா என்று கேட்டால் இக்காலத்தில் சௌகரியமான பதில் இருக்கிறது. “ நேரம் இல்லை.”

புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் எழுதி பிரபலம் பெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளவருக்கு ஐநூறு வெள்ளிகள் இருந்தால் போதும் ஒரு நூலை எழுதி அச்சிட்டுவிடலாம்.. எழுத்தாளராகியும்விடலாம். அந்தளவுக்கு இன்றைய கணினி யுகம் இருக்கிறது. நூல் என்றாலே அது இலவசத்துக்குரியது என்ற மனோபாவம் எம்மவர் மத்தியிலிருப்பதனால் நூல் வெளியீடு என்பது மனத்திருப்திக்கு மாத்திரம்தான் என்றாகிவிட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நூலாசிரியருக்கு “ இன்றைய நாயகன் இவர்தான்” என்ற பாராட்டு புகழாரங்கள் மாலை மரியாதை பொன்னாடை போர்த்துதல் முதலான சடங்குகளே மரபாகிவிடும்போது குறிப்பிட்ட நூல் பற்றிய சமூகப்பார்வை இரண்;டாம் பட்சமாகிவிடுகிறது.

அவுஸ்திரேலியாவில் நாம் 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் ஒன்றுகூடல் நடத்திவருகின்றோம். இதுபற்றிய எனது விரிவான கட்டுரை பல தகவல்களுடன் 2010 இல் நடந்த பத்தாவது எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட ‘பூமராங்’ சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது.

கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள் காலத்துக்குக்காலம் தங்களை தேர்ச்சியடையச்செய்துகொள்வதற்காகவும் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்காகவும் பயிலரங்குகளில் கருத்தரங்குகளில் பங்கேற்பார்கள். இந்த மரபு படைப்பிலக்கியவாதிகளிடமும் பரவ வேண்டும். ஆக்க இலக்கியத்துறை மற்றும் நாடகம், கூத்து. குறும்படம் முதலான துறைகளில் ஈடுபடுபவர்கள் ஒன்றுகூடி தத்தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் ஊடாக தெளிவுகளை நோக்கி நகரமுடியும். அதற்காகவே அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் என்ற நோக்கத்துடன் வருடாந்தம் ஒன்று கூடுகின்றோம். இத்தகைய நிகழ்வுகளில் சலிப்பூட்டும் தனிமனித புகழாரங்கள் தவிர்க்கப்பட்டு அனுபவங்கள் பேசும். கருத்துப்பரிமாறல்கள் நிகழும். அதனால் கலைஞனும் படைப்பாளியும் பயனடைவான்.

2001 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த முதலாவது எழுத்தாளர்விழாவில் பகல் பொழுது கருத்தரங்கில் 28 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரையில் பேசப்பட்டது. ஊடகங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. புகலிடத்தில் பெண்கள், முதியோர் விவகாரங்கள், தலைமுறை இடைவெளி தொடர்பாகவெல்லாம் பேசப்பட்டது. இந்தப்பணி தொடரும் அதேசமயம் நாம் இளம்தலைமுறையினரையும் நிகழ்ச்சிகளில் உள்வாங்கி அவர்களுக்கும் கனதியான களம் கொடுக்கின்றோம். இன்று குழந்தைகளாகத்தோன்றி எமது ஒன்று கூடலில் கலந்துரையாடுவோர் இனிவரும் காலங்களில் கலைஞர்களாக படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புள்ளது. எமது பணி மரதன் ஒட்டம் போன்றது.

அவுஸ்திரேலியாவில் தேசிய மட்டத்தில் ஒன்று கூடினாலும் இலங்கை தமிழகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இலங்கையிலிருந்து எத்தனைபேரால் இங்கு வருகை தரமுடியும். பலரையும் அழைக்கும் நிலையில் எமது அமைப்பின் நிதிவளம் இல்லை. மற்றது விசா பிரச்சினைகள். வருபவர் திரும்பிச்செல்வாரா என்பதற்கு உத்தரவாதம் கேட்கும் நிலைமை.

எனக்கிருந்த சர்வதேச கலை, இலக்கிய, ஊடக தொடர்புகளினால் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு என்னிடம் ஒத்துழைப்புக்கோரினார்கள். ஏற்கனவே இருந்த அனுபவங்களும் புரிந்துணர்வு மிக்க இலக்கிய நண்பர்களும் சகோதரிகளும் எம்முடனேயே அர்ப்பணிப்புடன் இயங்கியமையால் இலங்கை தலைநகரில் நாம் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நான்கு நாட்கள் நடத்தினோம்.

எங்கள் தேசம் தமிழுக்காக இரத்தமும் உயிரும் இழந்தது. நீடித்த போரை காரணமாகச்சொல்லி ஏதிலிகளாக அலைந்தோம். இலங்கையில் முப்பது ஆண்டுகாலமாக நடந்த போர் முடிவுக்கு வந்தபோது அதனால் பாதிப்புற்ற எம்மவர்களுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிராமல், வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என்று பிரிந்து நின்ற கலை, இலக்கியவாதிகளை ஒன்றுகூடச்செய்து பரஸ்பரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்று அதில் வெற்றியும் கண்டோம். ஒரு மாநாட்டின் மூலம் முழுமையான தீர்வுகளை எட்டிவிட முடியாது. இதுவும் தொடர் பயணம்தான்.

உலகத்தமிழாரய்ச்சிக்கு வித்திட்டவரும் எம்மவர்தான். ஆனால் பின்னர் தமிழகத்தின் அரசியல்வாதிகளினால் கேலிக்கூத்தாகியது. தற்போது அவர்கள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளையே மறந்துவிட்டார்கள். நாம் எமது மாநாட்டின் முதலாவது நாள் நிகழ்வையே அடிகளாரின் நினைவரங்கிலேயே நடத்தினோம்.

கேள்வி:
பல சர்ச்சைகள், அவதூறுகள், கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கையில் மாநாட்டை சிறப்பாக உங்கள் குழுவினர் நடத்தினார்கள். மாநாட்டின் பின்னர் உங்கள் நோக்கத்துக்கு சேறு பூசிய பலர் மௌனிகளாகிவிட்டனர். இன்னும் சிலர் புதிய புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

பதில்:
எமது மாநாட்டின் தோற்றம் வளர்ச்சி அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக விரிவான நூல் ‘உள்ளும் புறமும்’ எழுதியுள்ளேன். விரைவில் வெளியாகவுள்ளது. உங்கள் கேள்விக்கு விரிவான பதில் இந்நூலில் இருக்கிறது. எனினும் சில கருத்துக்களை சொல்லலாம். ஊகத்தின் அடிப்படையில் எமது மாநாட்டுக்கு எதிராக எதிர்வினையாற்றியவர்கள் ஊகத்துக்கு ஆதாரம் தேடாமல் அவதூறு பரப்புவதற்கே முனைந்தனர். மாநாடு திட்டமிட்டவாறு நடந்துவிட்டது. அவர்களின் ஊகங்கள் தவறானவை என்பதை நாம் நிரூபித்துவிட்டோம். எந்தவொரு அரசியல்வாதியும் எங்கள் மாநாட்டு மேடையில் ஏறவில்லை. பொன்னாடைகளோ பூமாலைகளோ தனிநபர் புகழாரங்களோ அனுமதிக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் இயக்கங்களும் மாநாட்டின் பின்புலமாகவும் இயங்கவில்லை. எனது இனிய இலக்கிய நண்பர் ஞானம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன் தலைமையில் இயங்கிய அமைப்புக்குழுவின் அர்ப்பணிப்பும், கலை, இலக்கியவாதிகள் ஊடகவியலாளர்கள் தமிழ்ப்பற்றாளர்கள் வழங்கிய நிதியுதவியும்தான் மாநாட்டை வெற்றிபெறச்செய்தது. என்னிடம் இன்று இந்த நேர்காணலுக்காக கலந்துரையாடும் நீங்களும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து நேரில் கலந்துகொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்திருக்கிறீர்கள். வரவு- செலவு கணக்கும் சமர்ப்பித்துவிட்டோம். யார் யார் நிதிப்பங்களிப்பு செய்தார்கள் என்பதையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம்.

அத்துடன் நாம் ஓய்ந்துவிடப்போவதில்லை. அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் இளம்தலைமுறையினரின் கலை, இலக்கிய ஒன்றுகூடலுக்கு களம் அமைத்துக்கொடுக்கவுள்ளோம். அதற்கான பூர்வாங்க யோசனைகளை எமது முதலாவது மாநாடு முடிந்து ஒரு வாரகாலத்திலேயே பேராதனை பல்கலைக்கழகத்தில் முன்மொழிந்துள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையில் அல்லது ஏனைய நாடுகளில் எமது அமைப்பின் நோக்கங்களுக்கு அமைய நடக்கும்.

நாம் சொன்னதையும் செய்தோம். சொல்லப்போவதையும் செய்வோம்.

சரி, எமது முதலாவது மாநாட்டை தூற்றியும் அவதூறு பொழிந்தும் அறிக்கைகள் விட்டவர்களுக்கும் கையொப்ப வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கும் கண்டனக்கூட்டங்களை நடத்தியவர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு சர்வதேச ஒன்று கூடலை நடத்துங்கள். தமிழ் யாருடையதும் குடும்பச்சொத்து அல்லவே. எவர் வேண்டுமானாலும் நடத்தலாம்.

இனிவரும் நூற்றாண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றென்று சிலர் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தாவது தமிழை வாழவைக்க தமிழ் கலை, இலக்கியங்களை உச்சத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்யுங்கள்.

அவதூறுகளிலேயே அழிந்து போய்விடாமல் ஆக்;கபூர்மாக சிந்திக்கட்டும். செயற்படட்டும்.

கேள்வி:
உங்கள் வாழ்வும் பணிகளும் முன்னுதாரணமானவை. எனினும் தங்களின் தளராத நம்பிக்கைக்கு அடிப்படை என்ன?

பதில்:
நான் வழக்கமாகச்சொல்வதுதான். ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் என்றைக்குமே தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமானது. அதுதான் அடிப்படை.

No comments: