யாழ்ப்பாணத்துக் கிணற்றுப் பண்பாடு




                                                                                . பேராசிரியர் அ. சண்முகதாஸ்



நீர் எங்கள் வாழ்வுக்கு இன்றியமையாதது. ஓர் அரசு தன்னுடைய குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கும் பெரிய பொறுப்பினை உடையது. ஆறு, ஏரி, குளம், கிணறு ஆகியன குடிநீர் வழங்குவன.

இலங்கையிலே சிங்கள மக்கள் வாழும் இடங்களிலே ஆறுகள் உண்டு. அவர்களுடைய ஆற்றுப் பயன்பாடு “ஆற்றுப் பண்பாடு' ஒன்றினை உருவாக்கியுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம் ஆறில்லா இடம்.

கிணறுகள் பல நீர் வழங்கும் நிலைகளாயுள்ளன. இதனால் இங்கே ஒரு கிணற்றுப் பண்பாடு உருவாகியுள்ளது.


யாழ்ப்பாணம் பண்டைக் காலத்திலிருந்தே வரண்ட இடமாக இருந்துள்ளதாக செவி வழிக் கதைகளாலும் சில இலக்கியச் சான்றுகளாலும் அறிகிறோம். யாழ்ப்பாடி என்ற ஒருவன் யாழ் வாசித்து மணற்றிடர் எனப்படும் இப்பகுதியினைப் பரிசாகப் பெற்றான் என்று ஒரு கதை கூறுகின்றது.


மலை எதுவும் இல்லாத இந்நிலத்திலே ஆறு ஊற்றெடுத்தோட வழியில்லை. நல்ல நீரினை தேக்கி வைத்தே யாழ்ப்பாண மக்கள் பயன்பெற வேண்டியவராயுள்ளனர்.

இயற்கை அன்னை மக்கள் வாழ்வுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கிறாள். உலகளாவிய வகையில் இந்த உண்மையினை நாம் உணரக்கூடியதாயுள்ளது. இவ்விடத்தில் யாழ்ப்பாணத்துப் பூப்பௌதிக அடிப் படையில் நிலத்தின் கீழ் உள்ள பாறைகள் பற்றி நாம் விளக்கமாக அறியும்பொழுது மணற்றிடருக்கு இயற்கை அன்னை குடிநீர் வழங்கச் செய்துள்ள ஏற்பாட்டினை உணர்ந்து மகிழலாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ்ப் பகுதிகளில் சுண்ணக் கற்பாறைகள் காணப் படுகின்றன. இவை மயோசீன் காலப் பாறைகள் எனப் புவியியலாளர் கூறுகின்றனர். யாழ்ப்பாணச் சுண்ணக் கற்பாறைகள் நன்கு உருவாக்கம் பெற்ற அடையற் பாறைகளாக உள்ளன. இப்பாறைகளூ டாகவே தரைக்கீழ் நீர் மேலே எழுகின்றது.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் கிணறுகள் நிறைந்த நாடாக அமைந்துள்ளது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கடல்வழி பயணித்த வர்கள் இவ்வுண்மையை உணர்ந்துள்ளனர்.

அவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணக் கிணறு கள் பற்றித் தன்னுடைய நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஒவ்வொரு வீட்டிலும் கிணறு அமைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்கள் தோறும் பொதுக்கிணறுகளே அமைக்கப்பட்டன.

பொதுக்கிணறு ஆண் பெண், இளையோர் முதியோர் என்ற வேறுபாடின்றி எல்லோ ரும் வந்து நீர் பெறவும், குளிக்கவும், உடை தோய்க்கவும் பயன்பட்டது. பலர் வந்து ஒரு கிணற்றினைப் பயன்படுத்தும்போது அங்கு செய்திப் பரிமாற்றம் நடைபெற்றது. நகை யாடி மகிழ்ந்தனர். சில வேளைகளில் சண்டைகளும் கூட நடைபெற்றன.

தற்கொலை செய்யவும், கொலைசெய்து பிணத்தைத் தூக்கிப் போடவும் கிணறுகள் பயன்பட்டன. காதலர் சந்திக்கும் இடமாகவும் அமைந்தது. கிணற்று நீர் குளிர்காலத்திலே சூடாகவும், சூடான காலத்திலே குளிராகவும் இருப்ப தால் இந்நீரை எந்நேரம் பயன்படுத்தக் கூடியதாயுள்ளது. எம்முடைய நீர்ப்பயன் பாடு பல சுவையான தன்மைகளை உடை யது. சில கிரியைகளுக்கும் கொண்டாட்டங் களுக்கும் புதுநீர் கொள்வது வழக்கம். தைப் பொங்கல் அன்று காலையிலே பொங்கு வதற்குப் புது நீர் கொண்டுவரும் வழக்கம் உண்டு. இத்தகைய புதுநீர் கிணற்றிலேயே பெறப்பட்டது. இது நீர் வழிபாட்டின் எச்சமாக அமைகின்றது. நீர் வழிபாடு தமிழர்களிடையே பண்டைக்காலத்தி லிருந்து வந்தது. அவ்வழிபாடு மழை நீர், ஆற்று நீர், கடல் நீர் ஆகியவற்றின் தொடர்புடையதாகவே அமைந்தது. கிணற்று நீர் வழிபாடு தொடர்புடையதாக இருந்தமைக்குச் சில சான்றுகள் காட்டலாம்.

கிணறு தோண்டித் தண்ணீர் ஊற்றெ டுத்தவுடன் கிணறு வெட்டியவர்கள் அக்கிணற்றுக்கருகே பொங்கலிட்டு மடை பரப்புவர். இது இன்றும் நிகழ்ந்து வருகிறது.

யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பாறை காரணமாக சில இடங்களில் வற்றும் கிணறுகளும் சில இடங்களில் வற்றாக் கிணறுகளும் அமைந்துள்ளன. கிணறு வெட்டுபவர்கள் சிலவேளைகளில் மிக ஆழமாக வெட்ட வேண்டிவரும். எப்பொழுது ஊற்றுக்கண் திறந்து நீர்வரும் எனச் சிலவேளை பல நாட்கள் அவர்கள் வருத்தத்துடன் வெட்டு வர். ஆயக்கடவைப் பிள்ளையாரை ஊற்றுக் கண்ணைத் திறந்து வைக்கும்படி பிரம்மஸ்ரீ க. கணேசையர்: ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே கோட்டாலே குத்திக் கூவத்தைக் காட்டிடுவாய் என்று பாடுகிறார்.

கிணறு வெட்டுவதன் முன்னம் நிலையம் எடுக்கும் வழக்கம் உண்டு. நல்ல தண்ணீர் மேல் நிலையில் எங்கே தரைக் கீழ் இருக்கின்றதெனச் சில சிறிய பரிசோதனைகளூடாகக் குறித்துக் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். தம்டைய அருட்சிறப்பாலே இத்தகைய நிலையங்களை இனங்கண்டு கூறும் வழக்கம் யாழ்ப்பாணத்திலே இருந்து வந்துள்ளது. அளவெட்டி கலாநிதி அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்கள் இக்கலையிலே வல்லவர்.

எல்லோரும் வந்து பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவர் என்று முன்னர் குறிப்பிட்டேன். இவ்வழக்கம் எல்லாக் கிணறுகளிலும் எல்லாக் காலங்களிலும் நடை பெற்றதெனக் கூறடியாது. பொதுக் கிணறுகளில் உயர்ந்த சாதியினர் மட்டுமே தண்ணீர் அள்ள டியும். தாழ்ந்த சாதியினர் அள்ளடியாது. உயர் சாதியினரே தண் ணீரை அள்ளி அவர்களுடைய குடங்களிலே ஊற்றலாம். கரவெட்டிப் பகுதியில் தாழ்ந்த சாதியினர் தமக்கென ஒரு கிணற்றினை அமைத்தபொழுது அக்கிணற்றுக்குள் நஞ்சு கொட்டப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்து மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான கே. டானியல் கிணறு தொடர்பான இக்கொடுமைகளை யெல்லாம் தன்னுடைய “தண்ணீர்' என்னும் நாவலிலே விரிவாகக் கூறுகிறார்.

கிணற்றடி தொடர்பாக யாழ்ப்பாணத்தவரிடையே சில நம்பிக்கைகள் உண்டு. இரவு நேரத்தில் பெண்கள் தனியாகக் கிணற்றடிக்குச் செல்லக்கூடாது என்று ஒரு நம்பிக்கையுண்டு. பொதுக்கிணறு என்ற காரணத்தால் இரவு நேரத்தில் யார் அங்கு வருகிறார்கள் எனக் கூற முடியாது. எனவே பெண்களை அங்கு இரவில் போகாமல் இருக்க வைப்பதற்கு அங்கு இரவில் பேய் உலாவுவதாக அச்சமடையச் செய்வர்.

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் நல்ல தண்ணீர் இல்லாத கிணறுகளும் இருக்கின்றன. பெரும்பாலும் கோயில்களை அண்டியுள்ள கிணறுகள் நல்ல தண்ணீருடையனவாக அமைகின்றன. மருதமரம் இருக்கு மிடத்தில் நிலத்தின் கீழ் நல்ல தண்ணீர் இருக்குமென மக்கள் நம்புகின்றனர்.
கோயிலை அண்டியுள்ள கிணறு கோயிற் கிணறு என அழைக்கப்படும்.

யாழ்ப்பாணக் கிணறு பற்றி இன்னும் பல செய்திகள் இருக்கின்றன. வகை மாதிரிக்காக மேல்வரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்த வீரகேசரி நிறுவனத்துக்கு நன்றியும், பாராட்டும், வாழ்த்துக்களும் கூறுகிறேன்.

எழுதியவர்: பேராசிரியர் அ. சண்முகதாஸ்

நன்றி: வீரகேசரி, 

1 comment:

Anonymous said...

இதனை பேராசிரியர் சண்முகதாசா எழுதினார்?!