ஈழத்துப் பொன்மணி - தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல்

.


ஈழம் என தமிழர்களால் அறியப்பட்ட இலங்கைத் தீவுக்கும் தென்னாட்டுக்கும் பன்னெடுங்காலமான தொடர்புகள் உண்டு. ஒரு இலங்கையரை கூட்டிக் கொண்டு வந்து அவரைப் பேச விடாமல் இவர் எந்த ஊர்க் காரராய் இருப்பார் என நாம் கேட்டால் நிச்சயம் தமிழ்நாடு என்று தான் சொல்லுவோம். அது இலங்கைத் தீவில் வாழும் சிங்களவராயினும் சரி, தமிழராயினும் சரி - அப்படி தமிழ்நாட்டுக்கும் ஈழத்தவருக்கும் புறத்தோற்ற வேறுபாடுகள் குறைவு என்றாலும் அவர்களுக்கும் தமிழ்நாட்டவருக்கும் அகத் தோற்றங்களில் வேறுபாடுகள் உண்டு. புவியியல் காரணங்களாக இருக்குமோ எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஈழத்தில் வாழும் இரண்டு கோடி மக்களில் 90 சதவீதக்கும் அதிகமானோர் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிலிருந்து தான் குடியேறி இருக்கின்றார்கள். அவர்களின் கலாச்சாரம், மொழி, நம்பிக்கைகள் இப்போது வேண்டுமென்றால் சிறிதளவு மாற்றம் கண்டு இருக்கலாம் - ஆனால் அவற்றின் வேர் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் இதனை பெரும்பாலான இலங்கையர்கள் மறுத்துவிடுவார்கள் - அதற்கான காரணம் இந்தியா தேசத்தின் நிழலில் தாம் இருக்கக் கூடாது எனவும், தாம் தனித்துவமானவர்கள் என்பதை பேண நினைப்பதுமே. ஆனால் ஊர்க்குருவி என்ன உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது என்பார்கள்.



 அது போல இந்தியாவில் இருந்து எங்கே சென்று வாழ்ந்தாலும் நாம் நாம் தான். ஈழம் என்பது பண்டையக் காலத்து ஆஸ்திரேலிய தீவுப் போலவும், அங்கு குடியேறியவர்கள் இன்றையக் கால வெள்ளையர் போலவும், பிரிட்டன் போன்று தான் இந்தியா இருந்திருக்க வேண்டும்.


சரி விடயத்துக்குப் போவோம், நான் அண்மையில் காணக் கிடைத்த ஒரு ஈழத் திரைப்படம். அதுவும் ஈழத்து தமிழ் திரைப்படம். அதிலும் இத்திரைப்படம் ஈழத்தில் போர் முழுவதும் தொடங்க முன் வெளியான ஒருத் திரைப்படம். அதிலும் ஈழத்தில் போர் தொடங்க சிறு சிறு கலகங்கள் வெடித்தக் காலத்தில் நடந்தவையாக வரும் கதைக் கரு. ஆனால் இத்திரைப்படம் ஏனைய ஈழத்துத் தமிழ்படங்கள் போலே அல்லாமல், போரினைச் சொல்லவில்லை, ஆனால் அக்கால வாழ்வியலையும், ஈழத்தமிழர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கும் ஒரு படம்.

பொன்மணி என்னும் இளம்பெண் தான் காதலித்த வாலிபருடன் உடன்போக்குச் செய்ய முடிவு செய்கின்றாள். ஆரம்பத்தில் சிறிது தயங்கும் அவள், பின் அவனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுடன் செல்கின்றாள். காதலன் தனது வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றால் பெரும் பிரச்சனை வரும் என்பதால், திருமண ஏற்பாடு செய்யும் வரை நண்பர் ஒருவர் வீட்டில் போய் தங்குகின்றார்கள். இதற்கிடையில் பொன்மணியின் வீட்டில் அவள் வீடு திரும்பாமல் இருப்பதை அறிந்து கவலைக் கொள்கின்றார்கள்.

பொன்மணி யாழ்ப்பாண சைவ வேளாளர் குடும்பத்துப் பெண். அவர்களின் குடும்பத்தில் கடைக்குட்டி. அவளுக்கு இரண்டு அக்காள்களும், ஒரு அண்ணனும் இருக்கின்றார்கள். வேலைக்குச் செல்லாத தந்தை, கோபம் கொள்ளும் தாய் என வறுமையால் பீடிக்கப்பட்ட ஒரு குடும்பம் அவளின் குடும்பம். முப்பத்து ஐந்து வயதைக் கடந்தும் திருமணம் செய்துக் கொள்ளாமல் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றான் அண்ணன். பொன்மணியின் மூத்த அக்காளுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆனப் பின்னும், அவளின் திருமணத்துக்குப் பட்ட கடனையும், வரதட்சணைப் பாக்கியையும் செலுத்த முடியாமல் திண்டாடுகின்றான் அண்ணன். இதற்கிடையில் இன்னும் இரண்டு தங்கைகளின் திருமணத்தையும் முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றான். நடுப் பெண் திருமண வயதைக் கடந்துவிட்ட போதிலும் மணம் முடியாமல் தவிக்கிறாள். இதற்கிடையில் பொன்மணியின் அத்தைப் பையனும், அவளது அண்ணன் அலுவலகத்தில் பணியாற்றுக்கின்றான். பொன்மணி மீது ஒருத்தலைக் காதல் கொள்ளும் அவன், பொன்மணியை மணம் முடித்துத் தருமாறு அவளது அண்ணனிடம் வேண்டுகின்றான். இருப்பினும் வரதட்சணையையும் கேட்கின்றான். இதனால் மனம் ஒடிந்துப் போகின்றார் அண்ணன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றப் பழமொழி சொல்லும் போது அதன் அர்த்தம் அக்காட்சியில் மனதைத் தைக்கின்றது.

இதற்கிடையில் வீட்டைவிட்டு வெளியேறிய பொன்மணி, தனதுக் காதலன் ஆனந்தனுடன் பேராசியர் மௌனகுரு வீட்டில் தங்குகிறார்கள். அவர்களின் காதல் திருமணத்தை ஆதரிக்கும் அவர் சாதி மற்றும் வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்குக் காதல் திருமணங்கள் பல நடக்க வேண்டும் என ஊக்கம் தருகிறார். ஆனால் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்யப் பல சட்ட சிக்கல்கள் வருகின்றன. காரணம் ஆனந்தன் ஒரு கிருத்தவ மீனவ சமூகத்தைச் சார்ந்தவன், பொன்மணி சைவ வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவள், அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்ய பல சிக்கல்கள் எழுகின்றன. இந்நிலையில் பொன்மணியைத் தேடி அவளது அண்ணனும், அத்தைப் பையனும் காவல் நிலையத்தில் புகார்க் கொடுக்கின்றார்கள். அதற்கு முன்னரே ஆனந்தன் என்பவனுடன் உடன்போகினாள் என்ற செய்திக் கிடைத்து விடுகின்றது. அதனால் காவல் நிலையத்தில் அவள் பதினெட்டு வயதை நிறைவடையாதவள் எனப் பொய்ப் புகார் பதிவு செய்கின்றார்கள். பொன்மணியின் அத்தைப் பையனும் அவனது ரௌடித் தோழனும் பொன்மணி இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்குள்ளவர்களை மிரட்டி விட்டு வருகின்றான். இதனால் கலக்கம் அடைந்து அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு அருகே இருக்கும் ஒரு தீவுக்கு ஆனந்தனின் பெரியப்பன் வீட்டுக்கு செல்கிறார்கள். ஆனால் அவரும் அங்கே அவர்களை அனுமதிக்க மறுத்துவிடுகின்றார். அப்போது தான் பொன்மணிக்கு ஆனந்தன் ஒரு கிருத்தவன் எனத் தெரியவருகின்றது. இருந்தாலும் காதலின் முன் அவை எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை.

வேறு வழியின்றி அவர்கள் ஆனந்தனின் வீட்டுக்கே செல்கின்றார்கள். நினைத்த மாதிரி இல்லாமல் ஆனந்தனின் தாய் அவனதுக் காதலுக்கும், திருமணத்துக்கும் சம்மதம் தெரிவிக்கின்றார்கள். இதற்கிடையில் பொன்மணியின் வீட்டுக்கு அவளது மூத்த அக்காளும், அக்காள் கணவரும், குழந்தைகளும் வருகின்றார்கள். வேற்றுச் சாதிப் பையனோடு சென்ற பொன்மணியை திட்டுகின்றார்கள். பொன்மணியின் அத்தைப் பையன் பொன்மணிக்கும் ஆனந்தனுக்கும் ஒரு தேவாயலத்தில் திருமணம் நடக்கவிருப்பதை அறிந்துக் கொள்கின்றான். அதனால் கோபமுறும் அவன் சாதி கலப்புத் திருமணத்தால் தமது சமூகத்துக்கு இழுக்கு என நினைத்து ஒரு கூலிப்படையிடம் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்கின்றான். திருமணம் முடிந்து வெளியே வரும் பொன்மணியை கிருத்தவக் கோவிலில் வைத்தே சுட்டுக் கொல்கின்றார்கள். பொன்மணி இறுதியாக பொன்மணி ஆனந்தனாக இடுக்காட்டில் புதைக்கப்படுகின்றாள்.

பொன்மணித் திரைப்படம் தமிழின் யதார்த்த திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாக கருதலாம். இத்திரைப்படத்தில் அக்கால சமூக சிக்கல்களைத் தாங்கி வருகின்றது. சாதி ஒழிப்பு, வரதட்சணைக் கொடுமை ஆகிய இரண்டையும் அது பிரதானப்படுத்துகின்றது. அதே சமயம் அக்காலங்களில் போராட்டக் குழுக்கள் என்றப் பெயரில் ஈழத்தில் தோற்றம் பெற்றிருந்த கூலிப்படைகளையும் அது பிரதிப்பலிக்கின்றது. சுமார் 33 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஈழத்துச் சமூகத்தையும், யாழ்ப்பாண நகரினையும் நம் கண்முன்னே விரிக்கின்றது.



முதலில் சாதிக்கலப்புத் திருமணங்களை சமூகங்கள் ஏற்கத் தவறியதால் யாழ்ப்பாண சமூகம் இன்றளவும் கூட பிரிந்தேக் கிடக்கின்றன என்பதை அறிய முடிகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண வேளாளர்களிடம் நிலவிய கடுமையான சாதிப் பாகுப்பாடுகளை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. மற்றொன்று யாழ்ப்பாண சமூகத்துக்குள்ளேயே நிலவிய வரதட்சணைக் கொடுமையும் இப்படம் கடுமையாகச் சாடுகின்றது. சுமார் 33 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் இதே நிலை தான் அங்கு நீடிப்பதாக தோழர் ஒருவர் கூறினார். அங்கு மட்டுமில்லாமல் ஈழத்தமிழர் பரந்து விரிந்து வாழும் அனைத்து நாடுகளிலும் இதே நிலைமைத் தான் நீடித்து வருகின்றது.

குறிப்பாக தாம் ஏற்கனவே கட்டி வைத்திருக்கும் சமூகம் பொய்த்துவிட்ட போதும் அதற்கு மாற்றாக புதிய சமூகத்தையும் சிந்தனையும் ஏற்க மறுக்கின்றார்கள். ஏற்கனவே இருந்த சமூகத்தில் பொன்மணியின் அண்ணனுக்கு ஏற்படும் குடும்பச் சுமைக்கும், திருமணமாகமல் காத்திருக்கும் பொன்மணியின் அக்காவின் முதிர்க்கன்னிமைக்கும், வரதட்சணைக் கொடுமையால் தவிக்கும் பொன்மணியின் மூத்த அக்காளுக்கும், வேலையற்று பழம் பெருமையில் வாழ்வைக் கழித்து வரும் தந்தைக்கும், அல்ல பொன்மணியை மணக்க நினைக்கும் அவளது முறைப்பையனின் வரதட்சணையை விரும்பும் மனோபாவத்துக்கும் தீர்வு அளிக்க முடிந்தத்தா. ஆனால் - ஒரு காதல் - உண்மையான காதல் - சாதி மதம் பாராத காதல் எத்தனைப் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்தது. காதல் திருமணத்தால் சாதிப் பிரச்சனை ஒழிகின்றது, சமூகப் பிரச்சனை ஒழிகின்றது, வரதட்சணை ஒழிகின்றது. ஆனால் பிரச்சனைகளை உருவாக்கி குளிர்காய்பவர்களால் பிரச்சனைகளின் தீர்வுகளை எட்ட விரும்புவதில்லை. அப்படியான ஒரு தீர்வு சமூகங்களில் ஏற்பட்டால் பலருக்கு வேலை இல்லாமல் போகும், மரியாதை இல்லாமல் போகும், பேடிகளும் வீரர்களைப் போன்று நடப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும். இதனாலே சமூக மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள் விரும்புவதில்லை.

இந்தக் கதை யாழ்ப்பாணத்துச் சமூகம் மட்டுமில்லை தெற்காசியாவின் எந்தவொரு சமூகத்திலும் நடப்பதாய் எடுத்துக் கொண்டாலும் அது முற்றிலும் பொறுந்தும். இன்று நகர் சார் மேல் நடுவர்க்கத்துக் குடும்பங்களைத் தவிர ஏனைய குடும்பங்கள் அனைத்திலும் சாதியமும், வரதட்சணைக் கொடுமைகளும் சூழ்ந்து நிற்கின்றன. ஒரு சில பகுத்தறிவு உடைய குடும்பங்கள் மட்டுமே சாதிக் கலப்புத் திருமணங்களுக்கும், வரதட்சணை ஒழிக்கப்பட்டும் இருக்கின்றது. ஏனைய சமூகங்கள் அனைத்துமே புதியதோர் சமூகத்துக்காக எந்தவொரு ஏற்பாட்டினையும் செய்யவில்லை.

சமூகம் என்பது நீரினைப் போன்று ஓடவேண்டியவை, பூவினைப் போன்று மென்மையானது அதனைத் தடுத்து வைத்தாலும், இறுக்கி வைத்தாலும் உடைந்தும் நசுங்கியும் போய்விடும். இன்று உலகமே கிராமமாக சுருங்கிவிட்டப் பின்னரும் கிணற்றுத் தவளையாகவே வாழ்வேன் என மல்லுக் கட்டுவது உமது சந்ததிகள் விருத்தியடைச் செய்யாமல் செய்துவிடும். அது மட்டுமின்றி மாற்றங்களை அரவணைத்துக் கொள்வதும், மனிதர்களை அரவணைத்துக் கொள்வதுமே புதிய சமாதானமான ஒரு சமுதாயத்தை நம்மால் நிறுவ முடியும். நாளைய சமூகம் இப்படியான பழம் முட்டாள்தனங்களை கைவிட்டு ஒரு பரந்துப்பட்ட மனநிலையோடு வாழ முற்படல் வேண்டும். அதற்கான ஒரு வித்தாக பொன்மணித் திரைப்படத்தின் கதை எனக்கு சொல்கின்றது.

இத்திரைப்படத்தை ஈழத் தமிழர்களிலேயே எத்தனைப் பேர் பார்த்திருப்பார்கள் என்றுத் தெரியாது. இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் நிச்சயம் ஒரு சிலரேப் பார்த்திருக்கக் கூடும், சிலர் அதனை மறந்தே போய் இருப்பார்கள். தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடிய ஒரு சிலப் ஈழத்துப் படங்களில் இதுவும் ஒன்று என அறியப்பட்டேன்.

பொன்மணி என்னும் இத்திரைப்படம் 1978-யில் வெளியானது. முற்றிலும் ஈழத்தவர்களின் படைப்பு. இத்திரைப்படத்தின் இன்னொரு சிறப்பு இத்திரைப்படத்தை இயக்கியவர் தர்மசேனை பதிராஜா என்னும் பிரபல சிங்கள இயக்குநர். அது மட்டுமின்றி இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்கள் எனவும் அறியப்பட்டேன். இத்திரைப்படத்தில் கனடாவில் பிரபலமாக அறியப்பட்ட பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர் மௌனகுருவும் நடித்துள்ளார்.

பொனமணியாக, ஆனந்தனாக, பொன்மணியின் அண்ணனாக, அக்காளாக, தந்தையாக என அனைவரின் நடிப்பும் அருமையானதாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்துக் கடற்கரைகள், தீவுகள், ஏரிகள் என வெளிப்புறத்தின் அழகும் பதியப்பட்டுள்ளது. அதே போல யாழ்ப்பாணத்தவரின் உடை, நடை, பேச்சு ஆகியவை தமிழகத்தில் இருந்து மாறுப்பட்டது என்ற போதிலும் இந்திய சமூகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் அங்கு நிலவியதைப் பொன்மணி படம் பிடித்துக் காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்து நூலகம், கோட்டைப் போன்றவற்றிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இசையும், பாடல்களும் அருமையாக அமைந்துள்ளது. சில்லையூர் செல்வராசான் பாடல் வரிகள் அருமை. ரெக்சாமி என்பவரின் இசையமைப்பும் அருமையானதாக இருக்கின்றது.

Nantri Kotukki

No comments: