தமிழ் சினிமா


.
பொன்னர் சங்கர்

கலைஞர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் வரலாற்று கதை அவரது திரைக்கதை வசனத்தில் படமாகியுள்ளது. சிற்றரசர் நெல்லையன் கொண்டான்-தாமரை தம்பதி

மகன்கள் பொன்னர்-சங்கர் இவர்களால் எதிரி அரசனான காளிமன்னன் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கணிக்க இருவரையும் கொல்ல உத்தரவிடுகிறான்.


பொன்னர்-சங்கர் குடும்பத்து வேலைக்காரன் ராக்கி அண்ணன் இருவரையும் காப்பாற்றி மறைக்கிறான். ரகசிய இடத்தில் பொன்னர் சங்கருக்கு சண்டைப் பயிற்சி அளித்து பெரிய வீரர்களாக்குகிறான்.காளியமன்னனை பழி தீர்க்க இருவரிடமும் சத்தியம் வாங்குகிறான். அவர்கள் உயிருடன் இருப்பதை நண்பன் மந்தியப்பன் மூலம் காளிமன்னன் அறிகிறான்.

இருவரையும் கொல்ல படையெடுக்கிறான். மாமன் மகள்கள் முத்தாயி, பவளாயியை மணம் முடித்த பொன்னரும் சங்கரும் தாம்பத்திய வாழ்கையை தவிர்த்து போர்க்கோலம் பூணுகிறார்கள். காளிமன்னன் படைகளை முறியடித்து கொங்கு நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

பொன்னர்-சங்கராக இரு வேடங்களில் அதிரடி செய்கிறார் பிரசாந்த். ஏரி தண்ணீரை திறந்து விட மறுக்கும் முரட்டுக்கூட்டத்துடன் ஆவேசமாக மோதி நொறுக்கும் ஆரம்பமே அமர்க்களம். சூறைக்காற்று தூக்கி வீசிய மாமன் மகள்களை முதலை, பாம்புவிடம் இருந்து காப்பாற்றுவது... யுத்த களத்தில் வாள் சுழற்றி எதிரிகள் தலைகளை உருட்டுவது என ஆக்ஷனில் பொறி கிளம்புகிறார்.

முத்தாயி பவளாயியாக வரும் பூஜாசோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் இருவரும் அரச குடும்ப அழகு. சோழ மன்னனாக பிரபு சில நிமிடங்கள் வந்தாலும் கம்பீரம், நீண்ட தலை முடிதாடியில் அரசுகளுக்குள் ஒற்றுமை எற்படுத்த போராடும் நாசர் மனதில் நிற்கிறார். தனது குழந்தைகளை பலிகொடுத்து அரச குழந்தைகளை காப்பாற்றும் ராஜ்கிரண் வலு சேர்க்கிறார்.

மந்தியப்பன் கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ், சகுனித்தன வில்லன் காளிமன்னனாக வரும் நெப்போலியன் மிடுக்கு. பிரசாந்த் தாய் தந்தையாக வரும் குஷ்பு, ஜெயராம், தாத்தாவாக வரும் விஜய குமார், பொன்வண்ணன், ரியாஸ்கான், போஸ் வெங்கட் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கருணாநிதியின் விறுவிறுப்பான திரைக்கதையும், நறுக் வசனங்களும் பலம். தாய், தந்தை கொல்லப்பட்டதை பிரசாந்த் அறியாதவராய் இருப்பது நெருடல். போர்க்கள காட்சியில் பிரமிக்க வைத்து படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் தியாகராஜன். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பரவசம்.
நன்றி தினக்குரல்

No comments: