.
தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் வணக்கநிகழ்வுகள் சிட்னியிலும், மெல்பேணிலும் மிகவும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா சிட்னியில் ஹோம்புஸ் ஆண்கள் உயர்தரப் பாடசாலையில் 23.02.2011 பி.ப. 7.15 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுசிட்னிப் பொறுப்பாளர் திரு ஜனகனின் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
அன்னையின் உறவினரான திருமதி கனகாம்பிகை அற்புதநாதன் அவர்கள் தீபத்தை ஏற்ற திரு ஜெகதீஸ்வரன் அவர்கள்மலர் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மண்டபம் நிறைந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எமது தேசத்தின் தாய்க்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழீழ நாடுகடந்த அரசின் நியு சவுத்வேல்ஸ் மாநில பிரதிநிதிகளில் ஒருவரான சேரன்ஸ்ரீபாலன் அவர்களின் அஞ்சலி உரையும் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளரும் முன்னாள் கம்பன் கழகத் தலைவருமான திருதிருநந்தகுமார் அவர்கள் அன்னையின் பெருமையை அழகான தமிழில் எடுத்துக் கூறினார். பின்னர் திரு. மருதநாயகம்அவர்களின் கவிதாஞ்சலியைத் தொடர்ந்து மே 17 இல் தேசியத்தலைவரின் பெற்றோரை முள்ளிவாய்க்காலிலிருந்துமுகாமிற்கு அழைத்துச் சென்றவரான திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் அன்னையுடன் ஏற்பட்ட அனுபவத்தைஎடுத்துரைத்தார்.
இறுதியாக தேசத்தாயின் இறுதி நிகழ்வடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டு இரவு 8.30 மணியளவில் சிட்னி அஞ்சலிநிகழ்வு நிறைவு பெற்றது.
மெல்பேணில், ரிசவொயரில் அமைந்துள்ள மெரிலாண்ட் சனசமூக நிலைய மண்டபத்தில் 23-02-2011 அன்று பி.ப 7.15 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சார்ந்த கணேஸ் தலைமையில் ஆரம்பமானது.
பேரன்னையின் திருவுருவப்படத்திற்கு திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி ஈகச்சுடர் ஏற்ற திருமதி மகேந்திரன் மலர்மாலை அணிவித்தார் .
இந்நிகழ்வில் விக்ரோரிய மாநிலத்தின் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் விக்ரோரிய மாநில தலைவர் திரு. பத்மலிங்கம் உரையாற்றும்போது தமிழர்களே பெருமைப்படுகின்ற பெருந்தலைவனை பெற்றளித்த பேரன்னையின் மாண்பினை விளக்கினார். இன்று அப்பேரன்னைக்கு அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்காக தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளை சுட்டிக்காட்டிக்காட்டிய அவர், தாயகமக்களுக்கான விடுதலைக்கு தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசின் விக்ரோரிய மாநில பிரதிநிகளில் ஒருவரான திருமதி. ஜெனனி பாலா உரையாற்றும்போது தமிழினத்திற்கு கிடைத்த பெருந்தலைவனை பெற்றெடுத்த பார்வதி அம்மாள், இன்று சிறிலங்கா அரசின் அடக்குமுறையால் தனிமையில் வாடி சாவடைந்துள்ளமை அனைவரையும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது என்றும் அங்குவாழும் மக்களுக்கான விடுதலைக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அன்னையின் உறவினருமான திரு.கதிர்காமத்தம்பி உரையாற்றும்போது எங்கள் தலைவனை பெற்றெடுத்த தாயின் சாவிற்கு சிறிலங்கா அரசு மற்றும் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல தமிழ்நாடு அரசு கூட துணைபோய்விட்டதுதான் கவலையளிக்கின்றது என்றும், மேலும் தமிழ்ஈழ தேச விடுதலைக்கான அன்னையின் பங்களிப்பையும் எடுத்து விளக்கி, அவர்களது கனவை நனவாக்க நாம் தொடர்ந்தும், அவரது இளையமகன் காட்டிய பாதையில் உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment