யுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம.

.
ஓரு நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார, அரசியல் வாழ்வின் நிலைப்பாடுகள்; எப்படி இருக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலை பொருளாதார, சமுகவாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதில் தங்கியிருக்கின்றன.

உலகத்தில் நடந்த பாரிய விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகளின்பின் பெண்களின் நிலையில் ஏற்படும் பல தரப்பட்ட மாற்றங்களும் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. உயிர் அழிவுகள்,



 அங்கவீனங்கள், உடைமைகளின் அழிவுகள், இடம் பெயர்வுகள் என்பன மிக அளவில் இலங்கையில் நடந்திருக்கின்றன. இதன் விளைவுகளால் மக்களின் சாதாரண வாழ்க்கை அசாதாரணமாவிருக்கின்றது. உடைந்த கட்டிடங்களைத் திருப்பிக் கட்டலாம். இடம் பெயர்ந்தவர்கள் காலக் கிராமத்தில் தங்கள் இடங்களுக்கத் திரும்பிப்போகலாம். ஆனால் நடந்து முடிந்தபோரில் அடைந்த உயிர் இழப்புக்கள் இலங்கையின் சமுதாய வாழ்க்கைமுறைகளை அளவிடமுடியாத விதத்தில் மாற்றியமைத்திருக்கிறது.

தொடர்ந்து நடந்த முப்பது வருடபோர் நிலையால் பட்ட அவதிகள் மட்டமல்லாது அத்துடன் இலங்கையை மிகவும் அழிவுக்குள்ளாக்கிய சுனாமி அனர்த்தம், தற்போது வந்துபோன பாரிய வெள்ளம் என்பவற்றால் முக்கியமாகப் பாதிக்கப் பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்றால் அது மிகையாகாது.

இலங்கையின் சனத் தொகை, கடந்த வருடக்கணிப்பின்படி 20,410074 ஆகும். இதில் 52 விகிதமானவர்கள் பெண்கள். இவர்களில் 23 விகிதமானவர்கள் கடந்த காலத்தில் நடந்து முடிந்த பலவிதமான அனர்த்தங்களாலும் குடும்பத்தைச்சுமக்கும் குடும்பத்தலைவியான பணிக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் இவர்களில் 50 விகிமானோர் 30 வயதுக்குற்பட்டவர்கள் என அறிக்கைகள் சொல்கின்றன.


இலங்கையில் தொடர்ந்த போரின் காரணமாக விதவையாக்கப்பட்டவர்கள் 100.000க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதில் 90.000 போர்வரையிலுள்ளவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கிறார்கள். போரில் பங்கேற்ற பெண்களில் கைதிகளானவர்கள் 2.000 புனர்வாழ்வுத்திட்டங்களின் பின் விடுதலை செய்யப் படுகிறார்கள். சில போராளிகளின் மனைவிமார் இன்னும் தடுப்புக்காவல்களில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

2004ம் ஆண்டில் கிழக்குப்போராளிகள் பிரிந்தபோது 'பழையபோராளிப்' பெண்களானவர்கள் கிட்டத்தட்ட 3000மேல். போரால் அங்கவீனமானவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். அனாதையாக்கப்பட்ட பெண்குழந்தைகள் பல நூறாகும் கிழக்கு மாகாணத்தின் தலைநகரை ஒட்டிமட்டும் 14 சிறுவர் நிலையங்கள் இருக்கின்றன அதில் கணிசமான தொகையினர் பெண்களாகும்.

பல துறைகளிலும் அல்லற்படும் பெண்களுக்கு உதவி செய்யப் பல குழுக்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமான ஒரு சிறந்த வேலைப்பாட்டை முன்னேடுக்கப் பல நிர்வாகத் தடைகள் இருக்கின்றன. லஞ்ச ஊழல்கள் பொதுமக்களை மிகவும் வாட்டுகிறது. எதற்கும் பணம் எதிர்பார்ப்பது என்பது அரச ஊழியர்களிடம் தடையின்றி காணப்படுவதான புகார்கள் வருகின்றன.

இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பண்பாடு , கலாச்சார விழுமியங்கள் ஆண்களை முன்னிலைப் படுத்தி அவர்களின் ஆளுமைகளை கேள்;விக்குறியின்ற ஏற்றுக்கொள்வதால் எப்படித்தான் பல அரசியற் சட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்தை ஒட்டி எழுதப்;பட்டிருந்தாலும் அவை நடைமுறைக்குக் கொண்டு வரும் சாத்தியங்கள் பல காரணிகளால் முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன.

உதாரணமாக இன்று போரின் நிமித்தம் இடம் பெயர்ந்த குடும்பங்களில் பெண்கள் படும் பல தொல்லைகள் விபரிக்கப்பட்டன. அதாவது, தங்களின் சொந்த இடங்களுக்குப்போகத் தேவையான பத்திரங்களைத் திரட்டுவதிலிருந்து அதைக்கொண்டு போய்த்தங்கள் தேவைகளை முடிக்கும் வரை நிர்வாகத்தில் மேன்மைநிலையிலிருக்கும் உத்தியோகத்தர்களால் உதாசீனங்களுக்கும் லஞச எதிர்பார்ப்புக்களுக்கும் ஆளாகும்; நிலை ஏராளம் என்று சொல்லப்பட்டது.

இலங்கைச் சட்டத்தின்படி:

இன்று பெண்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆதிக்கத்தை நடைமுறைப் படுத்தும் அரச நிhவாகத் துறையில் பல பெண்கள் பெரிய இடங்களில் இல்லாததும் ஒரு காரணமென்று சொல்லப் பட்டது. இவற்றை எடுத்து விவாதிக்கும் பாராளுமன்றத் தரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதனால் பெண்கள் பிச்சினைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாமல் மறைந்து போகின்றன. திருமதி பண்டாரநாயக்காவைத் தங்கள் முதற் பெண்மணியாகத் தெரிவு செய்த நாட்டில் இன்று பெண்களின் பிரச்சினைகளைத் தீ+ர்க்க ஒரு ஆளுமையான பெண்தலைமை பாராளுமன்றத்தில் கிடையாது.

இந்தியாவில் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் 33விகித பாராளுமன்ற இடங்களும் பாகிஸ்தானில் 33விகித இடங்களும், நேபாளத்தில ;20 விகித இடங்களும் பங்களதேசில் 25விகித இடங்களும் இலங்கைச் சட்டத்தின்படி 25விகிதமான இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் 4 விகிதமான பெண்களே இலங்கைப் பாராளுமன்றத்திற்குப்போக முடிகிறது. 2விகிதம் மட்டும் உள்ளூர்ஆட்சிக்குள் நுழையமுடிகிறது. பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது என்பது ஆண்களின் தயவைப்பொறுத்திருக்கிறது. பெண்களின் படிப்பு அரசியல் திறமை என்ற பரிமாணத்தில் தெரிவு செய்யப் படாமல் அரசியலில் இருக்கும் ஆண்களின் உறவினர்களும் சினேகிதிகளும் தேர்தலில் நிற்கத் தெரிவு செய்யப்படுகிறார்கள். பாராளுமன்றக்கட்சிகள் பெண்களுக்காக 6விதமான இடத்தைக்கூட அனுமதிக்காதிருக்கிறார்கள்.

இதனால் இன்று பெண்கள் முகம் கொடுக்கும் பாரதூரமான பொருளாதார, சமுகப்பிரச்சினைகள் தீர்க்கப்பட ஆண்களின் புரிந்துணர்தலும் உதவியும் தேவைப்படுகிறது.

முப்பது வருடங்கள் தொடர்ந்து நடந்த சீர்;நிலையற்ற பல மாற்றங்கள் பழமை தழுவிய குடும்ப அமைப்புக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. 1971ல் நடந்த  ஜேவிபி யினரின் போராட்டத்தால் பல நூற்றுக்கணக்கான உழைக்கும் வயதுடைய இளம் தலைமுறை அழிக்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் தெடர்ந்த போராட்டத்தால் உழைக்கும் வயதுடைய பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டார்கள். பல்லாயிரம் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டுச் சென்றார்கள்.

இப்படியான மாற்றங்களால் தென்கிழக்காசிய நாடுகளில் பொருளாதாரத் துறையில் இலங்கையால் மற்ற நாடுகள்போல் துரிதமாக இதுவரை முன்னேற முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தால் 1.8 மில்லியன் இலங்கையர் அன்னிய நாடுகளில் பணிபுரிகிறார்கள். இதில் 500.000 பெண்கள் மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலைக்குப்போகிறார்கள் இவர்களால் 3.5 பில்லியன் டொலர்ஸ் அன்னிய செலவாணி இலங்கைக்குக் கிடைக்கிறது. ஆனால் வெளிநாடு செல்லும் பெண்களின் துயர்கள் பலபத்திரிகைகளில் தினமும் வந்து கொண்டிருந்தாலும் இலங்கையிலுள்ள வறுமை காரணமாகப் பெண்கள் வெளிநாடு சென்று கொண்டேயிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பான்மையாகச் சிங்கள முஸ்லிம் பெண்கள் அடங்குவர். அவர்களின் வயது 18லிருந்து 40 வயது வரையிருக்கும். பெரும்பாலோனோர் தாய்களாக இருப்பதாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை உற்றார் உறவினர் பாதுகாப்பில் விட்டுச்செல்வதாலும் பல தரப்பட்ட உள உடல் நலப் பிரச்சினைகளுக்குக் குழந்தைகள் உள்ளாகிறார்கள்

வெளிநாட்டுக்கு வேலைக்குப்போகும் பெண்களுக்கு பெரும்பாலான இடங்களில் நிலை மிகப் பரிதாபமாகவிருக்கிறது. இவர்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட உடல் உள, பாலியல் வன் முறைகள் இலங்கைப் பத்திரிகைகளில் அடிக்கடி வந்தாலும் அந்தச் செய்திகளையும் பார்த்து விட்டும், வெளிநாடுகளில் பணிப்;பெண்ணாக வேலைபார்;க்க ஆயிரக்கணக்கான பெண்கள் முன்வருவதற்கு இலங்கையின் வறுமை அளப்பரியதாகவிருக்கிறது. பணிப் பெண்களாகவிருக்கும் பெண்களை மிருகத்தனமாக அடித்தல், அவர்களின் உடம்பில் ஆணிகளை அடித்து சித்திரவதை செய்தல், அவர்களின்மேல் கொலைக்குற்றம் சுமத்துதல் என்பன் மத்திய தரைக்கடல் நாடுகளில் பரவலாக நடக்கின்றன. 2007ம்; ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்குப்போய் அங்கு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட றிஷானா நபீக்க் என்ற இளம் பெண்ணின் ; நிலை அதற்கு ஒரு உதாரணமாகும்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி 2004-5ல் 796 குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதில் சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் 40 விகிதமான புகார்கள் வருகின்றன. சிலர் வேலைபார்க்கப் போகுமிடங்களிலிருந்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகுவதுமட்டுமல்லாது இலங்கைக்கு வரும்போது அவர்கள் வேலை செய்யும் இடங்களிலுள்ள ஆண்களின் கொடுமைக்குள்ளான துன்பத்தால் கர்;ப்பம் அடைந்து குழந்தைகளையும் கொண்டுவருவதால் அவர்கள் இலங்கையிலுள்ள அவர்களின் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இப்படிப் பிறந்த 4000 குழந்தைகளை இலங்கை அரசு இலங்கைப் பிரiஐகளாக ஏற்கவேண்டி வந்தது.

ஓவ்வொரு நாளும் சிங்கள இளைஞர்கள் இத்தாலி போன்ற நாடுகளுக்கும் தமிழ் இளைஞர்கள் பல வேறுபட்ட நாடுகளுக்கும் நூற்றக்கணக்கான தொகையில் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். போரின் இழப்புக்கள் மட்டுமல்லாது இப்படியான காரணிகளாலும் இலங்கையில் சனத்தொகையில் இன்று ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகமாகும்.

இதனால் வரும் திருமணப் பிரச்சினைகள் பிரமாண்டமானவை. திருமணமாத பெண்களின் தொகை கூடிக்கொண்டு வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய பிரச்சினையாகும். இதில் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் மருத்துவத்துறை, ஆசிரியத் துறைகளை நாடுகிறார்கள். அதை விட்டால் வேறு எதுவும் பெரிதாக இல்லை. ஓருகாலத்தில் வெளிநாட்டுதவியுடன் நடத்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை கிடைத்தது. இன்று ஒரு குறிப்பிட்ட இடங்களில் தவிர மற்ற இடங்களில் எந்த என் ஐp ஓ வும் கிடையாது.

பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சாதனங்களாக இந்தியாவில் செயற்படும் பெரிய தொழிற்சாலைகள், கணனி நிலயங்கள், அத்துடன் பெருந்தோட்ட விவசாயத் திட்டங்கள் என்பனவற்றைச செயல் முறைபப்படுத்தஅரசு முயன்று கொண்டிருந்தாலும் அண்மையில் தொடர்ந்த இயற்கை அனர்த்தங்கள் அத்திட்டங்களைப் பல வருடங்கள் பின் தள்ளிப் போடப்படவைத்து விட்டன என்று தான் சொல்லவேண்டும்.

இலங்கையரின் ஒருவருட சராசரி சம்பளம் 2.200 டொலர்ஸ் என்று சொல்லப்படுகிறது;. இந்த வருமானத்தை 4.000 டொலர்ஸாக வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகச் சொல் லப்படுகிறது.

இலங்கையின் அன்றாட வாழ்க்கைக்கு 39.000 ரூபாய்கள் சராசரியாகத் தேவைப்படுவதாகச்சொன்னாலும் குடும்பத்தைத் தாங்கும் பல பெண்களிற் பெரும்பாலானவர்கள் 9.000 ரூபாய்கள் உழைப்பதும் அரிதே. அதிலும் கட்டுநாயக்காவை அண்டியிருக்கும் உடுப்புத்தைக்கும் தொழிற்சாலைகளில் 100.000 பெண்கள் அளவில்வேலை செய்கிறார்கள். ஆரம்ப சம்பளம் 3500 ரூபாயிலிருந்து பின்னர் சராசரி சம்பளம் 9.000 ரூபாய்களாகும். அண்மையில் இந்தத் தொழிற்சாலையில் 15.000 வெற்றிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு கொடுக்கும் சம்பளம் மிக்குறைவாகவிப்பதால்; இலங்கையின் தென்பகுதியிலுள்ள ஏழைப்பெண்கள் பலர் வெளிநாடுகளுக்குப்பணிப் பெண்களாகப்போகிறார்கள்.

தமிழ்ப்பகுதிகளில் 89 000 விதவைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. போராளிகளின் குடும்பம் அல்லது போரினால் விதவையாக்கப் பட்டவர்களாகவிருக்கிறார்கள்.. இலங்கையில் அதிலும் தமிழ்ப் பகுதிகளில் 53விகிதமான குடும்பங்கள் பெண்களின் தலைமையில் வாழ்கின்றன.

இவர்களுக்கென்று கிடைக்கும் நிவாரண நிதிகள் மிகச்சொற்பமே. வடக்கில் 60 விகிதமான வர்களின் வருமானம்; 9000 ரூபாய்க்கும் குறைய இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல படித்த பெண்கள் கடைகளிலும் தனியார் நிறுவனங்களிலும்; மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறார்கள்.

சத்துள்ள உணவு வாங்க வசதியற்ற நிலை பெரிதாகவிருக்கிறது. போதிய அளவு போசாக்குணவு இல்லாததால் இலங்கை பூராவும் போசாக்கற்ற பெண்களும் குழந்தைகளும் பல நோய்களுக்கும் ஆளாகிறார்கள் என்று சுகாதார அறிக்கைகள சொல்கின்றன. இலங்கையிலுள்ள குழந்தைகளில் 29 விகிதம் போசாக்கற்றவர்களாக இருக்கிறார்கள் அந்த நிலை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் குழந்தைகளிடம் இன்னும் மோசமாக சராசரி 50 விதமாகக் காணப்படுகிறது.

உயர்ந்து கொண்டு போகும் விலைவாசியால் அன்றாட வாழ்வே மிகக் கஷ்டமாவிருக்கிறது. பல விதவைகளுக்கு அவர்களின் வாழ்வுதவிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஆடுமாடு, கோழிகள் அண்மைய இயற்கை அனர்த்தால் அழிந்து விட்டன. ஓரு இலட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கா ஏக்கர் பயிர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது. தென்னை மரங்கள் ஒருவித நோயற் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் கட்டிக்கொடுத்த பல வீடுகளளை வெள்ளம் பாதித்தவிட்டது.

தொழில் உதவி என்ற பெயரில் வடக்கிலிருந்து பழைய போராளிப்பெண்களைத் தென்பகுதிகளுக்குக் கொண்டுவந்து வேலை கொடுப்பதாகச்சொல்லப்பட்டது. விசாரித்துப் பார்த்தபோது இவர்களும் இந்தத் துணிதைக்கும் ப்றி ட்ரேட் சோன் (Free Trade Zone) பகுதிகளில் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. இந்தத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களுக்கு எந்த விமான தொழிலாளர் பாதுகாப்பும் கிடையாது. மிகவும் மோசமான விதத்தில் வேலைவாங்கப்படுவார்கள். இங்கிருக்கும் நிலையைமாற்றிச் சம்பளத்தைக் கூட்டிப்பெண்களுக்கு உதவி செய்யும் திட்டங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இருப்பதாகத்தெரியவில்லை.

வறுமை காரணமாகவும் வேறுபல காரணிகளாலும் வட பகுதியில் கொள்ளை கொலைகள் நடக்கின்றன. இலங்கையில் பல இடங்களிலும் பாலியற்தொழிலிலும் கணிசமான பெண்கள் ஈடுபடுவதாச் செய்திகள் சொல்கின்றன. நாடுபூராக எடுத்த கணிப்பில் கிட்டத்தட்ட 40.000 பெண்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்ப்பகுதிகளிலும் இவை இருக்கின்றன என்று சொல்லபட்டது.

வடக்கில் அதிக அளவில் வரும் உல்லாசப் பிரயாணிகளாற் பல மாற்றங்கள் நடக்கின்றன. பல ஹோட்டல்கள், றெஸ்ட் ஹவுஸ்கள் ஸ்தாபிக்கப் படுகின்றன. பழைய வாழ்க்கை முறைகள் உடைபடுகின்றன. இளைஞர்கள் டிஸ்கோ போன்ற விடயங்களில் நாட்டம் கொள்வதால் இளம் பெண்களும் அவற்றாற் கவரப்படலாம் என்ற பயம் சமூகத்தில் வந்திருக்கிறது.

சமூக மாற்றங்கள்;:

போர்க்காலத்தில் புலிகள் இளம் வயதினரைப் பலவந்தமாகக் கடத்திக்கொண்டு போவதற்குப் பயந்து பல பெற்றோர் தங்கள் பெண்களுக்குச்சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்;. பல திருமணங்கள் பெண்களின் சம்மதமின்றி நடந்தன. இன்று அப்படித் திருமணம் செய்து வைக்கப்பட்ட பல இளம் பெண்கள் இன்று விவாகரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்பது மிகவும் மோசமான சமூக வரைமீறலாகக் கருதப்படுவதால் இந்தப்பெண்களின் போராட்டம் தோல்வியில் முடியலாம். இலங்கையிலுள்ள பெண்களின் பிரச்சினைகள் வடக்கு கிழக்கு தெற்கு சார்ந்த பெண்களின் பிரச்சினைகளாகப் பார்க்கப் படாமல் ஒரு தேசியப் பிரச்சினையாகப் பார்க்கும் சமூகப்பார்வையுள்ள பெண்தலைவிகள் இலங்கையில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். அதற்கான அமைப்புக்களை உருவாக்கிப் போராடவேண்டும். பெண்களால் நடத்தப்படும் பல என்ஐpஓக்கள் அங்கும் இங்குமாய் இருக்கின்றன. இவர்களின் வேலைப்பாடும் குரல்களும் ஒருமித்து ஒலிக்கவேண்டும்.

கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் தமிழர்கள் பல நாடுகளுக்கும் அகதிகளாகப்போயிருக்கிறார்கள். இவர்களிற் பெரும்பாலோர் மேற்குடி சார்ந்தவர்கள். வடக்கிலுள்ள இவர்களின் சொந்தங்கள் பொருளாதாரத்தில் பரவாயில்லாமல் வாழ்கிறார்கள் ஆனால் இன்று வடக்கில் இருக்கும் மக்களில் கணிசமான தொகையினர் விளிம்பு நிலை மக்கள். இவர்களின் நிலை பழையபடியே மிகவும் துக்கமான நிலையில் இருக்கிறது.. பொருளாதார வளர்ச்சியோ கல்வியில் மேம்பாடோ பெரிய அளவில் நடக்காததால் பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

வடக்கிலுள்ள 20.000 மீனவர்களில், பாதுகாப்பு வலயங்கள் காரணமாக 6000 மேற்பட்டவர்கள் இன்னும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் இவர்களின் நிலை இன்னும் பரிதாபமாவிருக்கிறது. அத்துடன் இலங்கை மீனவர்களின் தொழிலில் இந்திய மீவர்களின் பலம்வாய்ந்த படகுகளுடன் வந்து எல்லை தாண்டி மீன் பிடித்துத் தொல்லைகள் வருவதால் மீன்பிடித் தொழிலில் பல பிரச்சினை வருவதாக மீனவர்கள் சொன்னார்கள். எழுவைதீவு போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்களின் நிலை பரிதாபமாகவிருக்கிறது.

மலையகப்பெண்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நடப்பதாக இல்லை. தொடர்ந்தும் பாhரிய வறுமைக்கோட்டுக்குள்ளேயே வாழ்கிறார்கள். போசாக்கற்ற பெண்களும் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகாத பெண்களும் கூடுதலாக வாழும் மலையகமாகும் அதிலும் மலையகத் தமிழ் மக்கள் கூடுதலாகவாழும் நுவரெலியாவில் பல பிரச்சினைகள் மக்களைப் பாதிக்கிறது.

வடக்கில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளை பெண்களுக்குச் செய்து கொடுப்பதுபோல் கிழக்கில் நடக்கவில்லை; குறிப்பாக அண்மையில் நடந்த வெள்ளப் பெருக்கும்போது கிழக்கில் உள்ள ஏழைத்தமிழர்கள் பட்டினியைச்சந்தித்து வாடினார்கள். ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் அமிழ்ந்துவிட்டுவிட்டது. பயிர்கள் நாசமாகிவிட்டன.வயலின் உரிமையாளர்களும் வயலை நம்பி வாழ்பவர்களும் வறுமையை எதிர்நோக்குகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் உதவி மிகச்சொற்பமே.

பயிர்கள் அழிந்ததினால் இன்னும் சிலமாதங்களில் இலங்கையில் பரவப்போகும் பட்டினிக்கொடுமைக்குக் குழந்தைகளும் தாய்களும் ஆளாகப்போகிறார்கள்.

தமிழருக்கான பிரச்சினைகளைப் பார்ப்பதில் அரசியல் கலந்திருக்கிறது. ஓட்டுமொத்தமாகச் சொல்லப்போனால் வடக்கு கிழக்குப் பிரிவினை மனப்பான்மை இன்னும் இருப்பதால் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினைகள் சரியான விதத்தில் கையாளப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். தமிழ் அரசியற் தலைவர்கள் அங்கொன்றும் இங்கொற்றுமாகப் பல கருத்துக்களை அவ்வப்போது சொல்லிவிட்டுப்போகிறார்கள் . தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்கவோ அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளை அலசி ஆராயவோ தமிழ்த் தலைமைகளிடமிருந்து ஒரு தீர்கக்மான திட்ட அமைப்பு முன்வைக்கப் படவில்லை. முப்பது வருடப்போருக்குப் பின்னும் ஒர ஆணித்தரமான குரல் வரவில்லை என்பது எனது கருத்தாகும்.முரண்பாட்டு அரசியல்பேசும் நேரத்தைக் குறைத்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உதவிகளை எடுக்கப் பல தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் கருத்தைத் திருப்பினால் எத்தனையோ மாற்றங்களை மக்களுக்குச் செய்யலாம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களைப் பல வித்திலும் அழகுபடுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். புதிய கோபுரங்கள் வானைமுட்டுகின்றன் அதே நேரம் வறுமையால் வாடும் ஏழைத்தமிழரின் எண்ணிக்கையும் வானைமுட்டுகிறது.

19- 20 .02.2011 பாரிஸ் இலக்கியச்சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை




No comments: