நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்! 145க்கும் மேற்பட்டோர் பலி

.
நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் கிறிஸ்சர்ச் நகர் உள்ளது. நியூசிலாந்து நேரப்படி சென்ற  செவ்வாய்கிழமை மதியம் 12.51 மணிக்கு கிறிஸ்சர்ச் நகரில் திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது.




இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோர் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடினார்கள். நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என்று பதிவாகி உள்ளது.

பூமிக்கு அடியில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜான்கி, “நில நடுக்கத்தால் 65 பேர் உயிர் இழந்தனர் என்று தெரிவித்தார்.

உயிர் இழப்பு மற்றும் சேதங்கள் அதிகம் இருக்கலாம் என்று கருதுவதாகவும், இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்சர்ச் நகர மேயர், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். இது “நகரத்தின் கறுப்பு தினம்” என்றும் அறிவித்துள்ளார். இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளிக்கிடையே ஏராளமான பொதுமக்கள் சிக்கி இருக்கிறார்கள்.

சாலைகளிலும், தெருக்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியபடி உள்ளனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர். என்றாலும் கட்டிட இடிபாடுகள் காரணமாக தெருவில் விரைவாக செல்ல முடியவில்லை. எனவே, மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கிறிஸ்சர்ச் நகர விமானநிலையம் மூடப் பட்டுள்ளது. காயம் அடைந் தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரில் மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது.

டெலிபோன் தொடர்புகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்பு குழாய்களும் உடைத்தன. நகரம் முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிலநடுக்கத்துக்கு பயந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தங்கி இருக்கிறார்கள்.

கட்டிட இடிபாடுகளில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை, சேத மதிப்பு பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

No comments: