கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை நான்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

பனையின் மீது தமிழர் பெருங்காதல் கொண்டிருந்திருக்


கிறார்கள்.பனை என்பது தமிழர்களின் மரம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள்.அந்த நினைப்பு அவர்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த காரணத்தால் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தங்களின் விருப்பத்துக்குரிய பனையினை இணைத்து பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் இங்கு சில ஊர்களின் பெயர்களைப் பார்க்கின்றோம்

பனையின் குளம் பனகுடிபனஞ்சாவடி பனங்குளம் பனையூர், பனையப் பட்டி ,  வடக்குப் பனை வடலிதீய்ந்த பனைப்பட்டி கலந்த பனை பனங்காட்டூர்திருப்பனையூர் பனங்காடு பொற்பனைக் கோட்டை.

  இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா !

  வெய்யில் என்று பாராமல் மழை என்று பாராமல் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு - அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    கிறீத்தவ வேதமான பைபிளும் பனையினை வியந்து நிற்கிறது."


நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான் " என்பதும் நோக்கத்தக்கது.

  பதநீரைப் பற்றியும் சுவையான நுங்கு பற்றியும். பனம்பழம் பற்றியும்கள் பற்றியும் இலக்கியங்கள் காட்டி நிற்பதையும் காண முடிகிறது. பனை மாறன் என்று பெயரைக் கொண்ட மன்னர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது.நுங்கின் நீரும்,  கரும்பின் சாறும்இளநீரும் அருந்தி ஆனந்தம் அடைந்தார்கள் பெண்கள் என்று ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடுகிறார்.நலங்கிள்ளை என்னும் அரசனின் படை மிகவும் பாரியது. அப்படையின் முன்னணியினர் பனையின் நுங்கினைச் சுவைத்து மகிழ்கிறார்கள். நடுவில் செல்லும் படையணியினர் பனம்


பழத்தை உண்டு மகிழ்கிறார்கள். படையணியின் கடைசிப் பகுதியினர் பனங் கிழங்கினை உண்டு பசியாறுகிறார்களாம். அந்த அளவுக்கு படையின் பெருக்கமும்கடந்து செல்லும் காலத்தின் நீட்டமும் காணப்பட்டது என்றும்  பனையின் பருவத்தினையும் அதனால் வருகின்ற பயனை யும் புறப்பாடல் வாயிலாக ஆலத்தூர் கிழார் காட்டி நிற்பது கருத் திருத்த வேண்டியதே !

  வீட்டுக்கு வருகின்ற விருந்தினருக்கு நாம் இப்போது தேனீர் கொடுப்போம். கோப்பி கொடுப்போம். இன்னும் எத்தனையோ வகையான பானங்களைக் கொடுப்போம். அவை அனைத்தும் உடல் நலத்துக்கு உகந்தனவா என்பதை கொடுக்கின்ற நாங்களும்


உணர் வதில்லை.பருகுகின்ற விருந்தினரும் உணருவதில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்ற வர்களுக்கு நுங்கினைக் கொடுத்து அக்காலத்தில் எம்மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதை சிறுபாணாற்றுப் படை மூலம் அறிகின்றோம்.

    பனையினைப் பலவிதங்களில் பயன்படுத்திய செய்தியினையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்பதும் நோக்கத்தக்கது.பனையின் ஓலையினால் ஆகிய உண் கலங்கள் பயன்பட்ட விதத்தினை நற்றிணை காட்டுகிறது. தட்டுவம் என்பது பனை ஓலையால் ஆன உண் கலமாகும். பனை ஓலையால் ஆன தட்டுவம் தூய்மையான கலமாகும். இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறதோ தெரியாது ! கள்ளினை அருந்துவதற்கு பனை ஓலையிலான கலம் பயன்பட்டிருக்கிறது. இன்றும் அது நடைமுறையில் கிராமங்களில் இருப்பதையும் காணலாம். பனையின் பன்னாடை கள்ளை வடிப்பதற்கும்பத நீரை வடிப்பதற்கும் துணையாக இருந்தது என்பதை புறப்பாடல் காட்டி நிற்கிறது.

  தென்னம் பிள்ளை என்று செல்லமாய் அழைக்கும் தென்னை யானது வீடுகள் தோறும் இருக்கும். தென்னையைப் பிள்ளையாக்கி


செல்லமாய் வளர்ப்போம். நித்தமும் நீர் ஊற்றுவோம்.கிட்டத்தட்ட பிள்ளையைப் பேணுவது போலவே தான்  தென்னையைப் பேணு வோம். ஆனால் பனையினை அப்படிப் பேணுவதும் இல்லை. அதனை வளர்த்திட நினைப்பதும் இல்லை. வளர்ந்த பனைகளைப் பார்த்துப் பாராமலும் நிற்போம். யாராவது நல்ல உயரமாய் நல்ல கறுப்பாய்நல்ல முறுக்கேறிய உடல் தோற்றத்துடன் காணப்பட்டால் - அவர்களை விபரிப்பதற்கு பனையினை எடுத்துக்காட்டி  நிற்போம். பனையோ இதனை எதையுமே கண்டு கொள்ளாமல் தனது ஒத்துழைப்பினை வழங்கியபடி தலை கவிழாமல் தலை நிமிர்ந்த படியே தளராது நிற்கும். அடியிருந்து நுனிவரை அனைத்தையுமே எங்களுக்கு அளித்து கற்பகதருவாய் கர்ணனாய் களிப்புற்று நிற்கும். தென்னையும் இவ்வாறு தந்தாலும் பனையின் பக்குவம் வேறு ! பனையின் பயன் பாடும் வேறாகும் ! பனையின் வாழும் காலமும் வேறாகும் !

  பிள்ளையென நாமழைக்கும் தென்னையில் ஆண் , பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையில் ஆண் ,பெண் என்று காணப் படுகிறது. ஆண் பனையினை அழகுப் பனை என்றும் பெண் பனை யினை பருவப்பனை ' என்றும் அழைக்கின்றனர். பாளையினை மட்டும் நீட்டிக் கொள்ளுவதுடன் ஆண்பனை நின்றுவிடும். நுங்கினை வழங்கிடும் நிலை ஆண்பனைக்கு இல்லை. ஆனால் காய்ய்ப்பதும் கனிதருவதும் பெண்பனைதான். பதநீர் கூட ஆண்பனையைவிடப் பெண்பனையே தந்து நிற்கும்.

  பயிரிடப் படாமல் தானாகவே வளர்ந்து பயனளிக்கும் பனையினை மனமிருத்துவது அவசியமாகும்.இளம் பனையினை வடலி என்று அழைக்கின்றோம். பனையானது வளர்வதற்கு பதினைந்து ஆண்டுகள் எடுக்கும் என்று அறியமுடிகிறது.பனையின் வயதானது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வளைவுகள் இன்று நேராக வளர்வது பனையின் சிறப்பு எனலாம்.

  கற்பகதருவான பனையினைக் கருத்திற்கொண்டு நாட்டுப்புற மக்களின் நாயகனான ஒருவர் தன்னுள்ளத்து உதித்தவற்றை தனது மொழியிலே கவிதையாக்கி வழங்கி இருக்கிறார். பனையின் வரலாற்றையே எப்படிக் காட்டுகிறார் பாருங்கள்.

 

பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே! சொல்கிறேன் கேட்பீர்.
அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே!
தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே!
பராமரியா யிருக்காமல்  பட்சமுடன் கேட்டிருங்கள்.
படுக்கப்பாய் நானாவேன்பாய்முடையத் தோப்பாவேன்,
வெட்டநல்ல விறகாவேன்வீடுகட்ட வாரையாவேன்,
பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்தநல்ல ஏற்றமாவேன்,
அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்,
கட்டநல்ல கயிறாவேன்கன்றுகட்டத் தும்பாவேன்,
மட்டமுள்ள உறியாவேன்மாடுகட்டத் தும்பாவேன்,
பசுவணைக்குங் கயிறாவேன்,  பால்தயிருக்கு உறியாவேன்,
வாரமட்டை நானாவேன்வலிச்சல்களுந் தானாவேன்,
தொட்டிலுக்குக் கயிறாவேன்துள்ளியாட ஊஞ்சலாவேன்,
கிணத்துசலம்  மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்,
பலத்தசுமை பாண்டங்கட்குப் புரிமணையுந் தானாவேன்,
ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்,
மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்,
பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்,
விர்த்தாப்பியப் பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி  நானாவேன்,
குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்,
பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்குடை நானாவேன்,
திருப்புக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்,
திருப்பாவை சேவிப்போர்க்குத் திருத்துழாய்ப் பெட்டியாவேன்,
எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்,
ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத்  தடுக்காவேன்,
நனைந்து வருவார்க்கு டம்பக்குடை நானாவேன்,
பசித்து வருவார்க்குப் பனம்பழமும்  நானாவேன்,
பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்,
சித்திரைக் கோடையிலே சிறந்தநல்ல நுங்காவேன்,
காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்,
கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்புக்கட்டி நான்தருவேன்,
வேலிகட்டக் கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்,
வருடத்துக் கோர்தினத்தில் சரசுவதி பூசைசெய்து
ஆமெழுகிக் கோலமிட்டு  அச்சோடி பெண்களா சோபனமே!
மணையலம்பிக் கோலமிட்டு மணைநிறைய புராணம்வைத்து
பூவும் புதுமலரும் பொன்னாகும் அட்சதையும்
அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெல்லாம்,
வித்தாரமாய் இரண்டாநாள் விசயதசமி என்றுசொல்லி,
நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு,
எண்ணெய் தேய்த்து நீராட்டி இயல்புடனே அலங்கரித்து,
மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
வெள்ளிநெட் டெழுத்தாணி வேடிக்கை யாய்ப்பிடித்து,
ஆரியரும் வேதியரும் அரிநமோ வென்றெழுதி,
அரிஅரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்,
அரிச்சுவடி என்னாலேஅடுக்காய்ப் பாடம் என்னாலே,
எண்சுவடி என்னாலேகுழிமாற்றும் என்னாலே,
தர்க்கங்கள் என்னாலேசாத்திரங்கள் என்னாலே,
இராமாயணம் என்னாலேபாரதமும் என்னாலே,
பாகவதம் என்னாலேபல்சாத்திரங்கள் என்னாலே,
திருவாய்மொழி என்னாலேதிவ்வியப்பிரபந்தம் என்னாலே,
நாலுவேதம் என்னாலேஆறுசாத்திரம் என்னாலே,
கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகப் பெற்றிருப்பேன்,
மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே,
வர்த்தகரும் செட்டிகளும் வழியறிவதும் என்னாலே,
கணக்கர்களும் முதலிகளும் கணக்கறிவதும் என்னாலே,
பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்,
காசுக்கடை சவுளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்,
கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச் சொல்லி வாங்கி வைப்பேன்,
கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்த பிள்ளைகட்குத்
திருத்தமுள்ள மாபலியாய்த் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்,
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்,
காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்,
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்,
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்,
சீமந்த வாசலுக்குச் சீருடனே நான்போவேன்,
பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்,
மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்,
அரண்மனையில் நானிருப்பேன்ஆஸ்தானத்தில் நானிருப்பேன்,
மச்சுள்ளே  நானிருப்பேன்,  மாளிகையில் நானிருப்பேன்,
குச்சுள்ளே நானிருப்பேன்குடிசைக்குள் நானிருப்பேன்,
எருமுட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்,
ஏரிக்கரை மேலேநான் எந்நாளும் வீற்றிருப்பேன்,
எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்,
சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்,
சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்,
இத்தனைக்கும் உதவியென்று என்னைஅயன் சிருட்டித்தான்,
கற்பக விருட்சமெனக்கு எல்லையுந்தான் மறந்தேன்,
திருப்பாளை ஊர்தன்னிற் சிவன்புனைந்தான் என்நாமம்,
நான்வளர்ந்த சேதிதனை நலமுடனே கேட்டவரும்,
பாடிப் படித்தவரும் பட்சமுடன் கேட்டவரும்,
சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்,
எல்லை உலகளந்த எம்பெருமான் கோத்திரம்போல்,
ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல்வாழ்வார்,
ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் ஈஸ்வரனும்.

 

No comments: