பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - அருணோதயம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 10

.



 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பல படங்களை தயாரித்த முக்தா பிலிம்ஸ் 1971 ஆம் ஆண்டில் தயாரித்த படம் அருணோதயம். ஏற்கனவே எம்ஜிஆரின் நடிப்பில் சந்திரோதயம் படம் வெளிவந்து 5 ஆண்டுகள் கடந்து உருவான இப்படத்தில் ஹீரோ சிவாஜியாக இருந்தபோதும் அருணாக நடித்தவர் முத்துராமன் அவரை முதன்மைப்படுத்தியே அருணோதயம் என்று படத்திற்கு பெயரிடப்பட்டது

கார் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடும் அருண் மனதளவில் கோழையாகவே இருக்கிறான். தனது பய உணர்வுகளை மறைக்க தினமும் மாலை நேரத்தில் மது அருந்துகிறார். பிரபுவின் தங்கை அருணை காதலிக்கிறாள் அவளின் காதல் தோற்க கூடாது என்பதால் பிரபு தானும் ஒரு குடிகாரனாக நடிப்பதுடன் அதன் காரணமாக விரைவில் இறக்கப் போவதாக நடிக்கிறார். இதைப் பார்க்கும் அருண் மதுவை விட்டு பிரபுவின் தங்கையை மணக்கிறார். ஆனால் பிரபு மீது குடிகாரன், திருடன் என்று எல்லாம் பழி சுமத்தப்படுகிறது.

இவ்வாறு அமைந்த படத்தின் கதை வசனத்தை மதுரை திருமாறன் எழுதியிருந்தார் வசனங்கள் அர்த்தமுள்ளதாக அமைந்தது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி என்ற பாடல் இன்றும் பலரின் மனக் கவலைக்கு ஆறுதல் தரும் பாடலாக ஒலிக்கிறது. பாடலில் இடம்பெறும் வரிகளான கடலில் விழுந்த ஒருவனுக்கு கை கொடுத்தேன் அவன் வெளியேற, கரைக்கு அவரனும் வந்துவிட்டான் கடலில் நான்தான் விழுந்துவிட்டேன் மூலம் படத்தின் கதையையே வெளிப்படுத்தி இருந்தார் கவிஞர். இசை கே வி மகாதேவன்.


சிவாஜி உணர்ச்சிகரமாக நடித்திருந்தார் அவருக்கு சளைக்காமல் லட்சுமியும் தன் திறமையை காட்டினார் சிவாஜிக்கு ஜோடி சரோஜாதேவி. அவருடைய காலத்திலேயே மற்றுமொரு கதாநாயகியாக நடித்த அஞ்சலி தேவி இதில் சிவாஜியின் தாயாக நடித்தார். சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், நீலு ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைத்தாலும் அபத்தமாக காட்சியளித்தன.

சிக்கனமாக படம் தயாரிப்பதற்கு பெயர் போன முத்தா சீனிவாசன், ராமசாமி சகோதரர்கள் இப்படத்தையும் அதிக செலவின்றி எடுத்து லாபம் பார்த்தார்கள் சீனிவாசன் படத்தை தொய்வின்றி இயக்கியிருந்தார்



No comments: