பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 12 - பாதுகாப்பு - சுந்தரதாஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பா வரிசையில் பல படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் பீம்சிங். இவர் இயக்கிய பாகப்பிரிவினை பாலும் பழமும் , பாவமன்னிப்பு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று சிவாஜி பீம்சிங் இருவருடைய திரையுலக வாழ்விலும் தடம் பதித்தது. அவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் தான் பாதுகாப்பு. கலரில் உருவான இப்படத்தை 1970 ஆம் ஆண்டு தயாரித்து திரைக்கதை எழுதி இயக்கினார் பீம்சிங்.

இயந்திர படகு ஒன்றின் சொந்தக்காரரான வையாபுரி தன்மகன் விநாயகத்துடன் சேர்ந்து கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார் அவனுடைய இரண்டாவது மகனான கந்தன் இவர்களுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களுடனேயே பணியாற்றுகிறார். இந்நிலையில் ஓரிரவு படகு புறப்படும் போது வள்ளி என்ற பெண் பாதுகாப்பு கேட்டு படகில் ஏறுகிறாள். மூன்று ஆடவர்கள் மட்டும் இருக்கும் படகில் ஏறும் வள்ளி தான் யார் என்பது பற்றி மூன்று விதமான கதைகளை மூவரிடமும் சொல்கிறாள்.

கந்தனிடம் தான் ஒரு பாம்பாட்டி என்றும், விநாயகத்திடம் நாடக நடிகை என்றும் வையாபுரி இடம் நாட்டியக்காரி என்றும் கூறுகிறாள். மூவருக்கும் அவள் மீது ஆசை பிறக்கிறது ஆனால் வள்ளி யார் என்பதுதான் படத்தின் முடிச்சு.

படத்தில் வள்ளியாக நடித்தவர் ஜெயலலிதா விதவிதமான வேடங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார் . படத்தின் கதை அவரை வைத்து பின்னப்பட்ட தால் தன் நடிப்பை பாராட்டும்படி வழங்கியிருந்தார். கந்தனாக வருபவர் சிவாஜி இவரின் வழமையான கதாபாத்திரத்தில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இப்படத்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது அதனால் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. கூடவே நம்பியார் சுந்தரராஜன் இருவரும் இவர்களுடன் இணைந்தார்கள்.



தன் ஆரம்ப கால படங்களில் பணியாற்றிய பாலையா, சுப்பையா, சந்திரபாபு கருணாநிதி ஆகியோரையும் மறக்காமல் இப்படத்தில் சேர்த்திருந்தார் பீம்சிங் இவர்களுடன் நாகேஷும் நடித்திருந்தார் கண்ணதாசனின் ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும், ஆத்துக்கு பக்கம் ஒரு, வரச்சொல்லடி அந்திமாலை தன்னில் ஆகிய பாடல்கள் விஸ்வநாதனின் இசையில் இனிமையாக அமைந்தன. அதிலும் ஒரு நாள் நினைத்த காரியம் பாடலில் கண்ணதாசனின் வரிகளான ஒன்று என்பது வரம் இரண்டு என்பது மணம் மூன்று என்பது குணம் என்பன அருமையாக பொருளுடன் அமைந்தது. படத்திற்கான வசனங்களை பாசுமணி எழுதியிருந்தார். ஜி விட்டல்ராவ் ஒளிப்பதிவு செய்தார் குடும்பப்பாங்கான உணர்ச்சிகரமான படங்களை இயக்குவதை வழமையாகக் கொண்ட பீம்சிங் வித்தியாசமான கதையை படமாக்கி இருந்தார் ஆனாலும் ரசிகர்களின் முழு ஆதரவையும் பாதுகாப்பு ஏனோ பெறவில்லை 



No comments: