ஆடுகிறான் மனிதனிப்போ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


     இயல்புநிலை மாறியது
     செயற்கையதில் ஏறியது 
     மனமதிலே நவநினைப்பு
     குடியேற்றம் ஆகியது

     மனிதனது நடவடிக்கை
     இயற்கைக் கெதிராகியது
     வாழ்வினிலே பலதுன்பம்
     வந்தபடி இருக்கிறது !

     நாகரிக மெனும்மாயை
     நாளுமே மறைப்பதனால்
     ஆகாயம் பூமியெலாம்
     அடிமையென எண்ணிவிட்டான்
     வேண்டாத பலவற்றை
     விரும்பியே நாடியதால்
     வேதனையின் பிடியினிலே
     மாளுகிறான் மனிதனிப்போ !

     விஞ்ஞானம் கண்டறிந்தான்
     விந்தைகளும் விளைந்தனவே
     மேலுலகை கீழுலகை
     விட்டுமவன் வைக்கவில்லை 
     உடல்பிரித்தான் உருக்கொடுத்தான்
     உணர்வுதனை அழித்திட்டான்
     மனிதனிப்போ உலகினிலே
     அமைதியற்றே உலவுகிறான் ! 


     வானிடிக்கும் அளவினிலே
     வகைவகையாய் கட்டிடங்கள்
     தானமைத்து பெருமையுற்று
     மாநிலத்தில் திகழுகிறான்
     பொறுமையுடை பூமிதனை
     பொங்கியெழ வைக்கின்றான்
     அழிவுதனை யெண்ணாமல்
     ஆடுகிறான் மனிதனிப்போ !  


No comments: