உற்றாரைப் பெற்றாரை
ஊரைவிட்டு ஓடிவந்து
பெற்றுவிடும் ஆசையினால்
பெருங்கனவை மனமிருத்தி
கற்றகல்விக் கேற்காத
கண்டகண்ட வேலையிலே
காலைமாலை பார்க்காமல்
காசுழைக்க ஓடிநிற்பார் !
மொழியறிவு இருக்காது
முழுவயிறும் நிரம்பாது
படுகின்ற தொல்லைகளோ
படுநரகம் ஆகிவிடும்
விளங்காமல் பலவற்றை
விழுங்கவே செய்திடுவார்
வளஞ்சிறக்க பணங்காணும்
வாஞ்சையிலே மழுங்கிடுவார் !
சொர்க்கமென நம்பிவந்தார்
துவண்டிடுவர் சிலநாளில்
கடன்பட்ட இடமெல்லாம்
கனவாக வந்துவிடும்
இருந்தவிடம் சொர்க்கமென
இதயமங்கே இயம்பிடினும்
என்னசெய்வ தெனவறியா
இருட்டவரைச் சூழ்ந்துவிடும் !
தூக்கமும் வாராது
சுவைகூடத் தெரியாது
பார்க்குமிட மெல்லாமே
படுகுழியாய் ஆகிநிற்கும்
கற்பனைகள் அத்தனையும்
சுக்குநூறாய் நிற்குமங்கே
கடுகதிப் புகைவண்டி
காதலுடன் அணைத்துவிடும் !
வலிசுமக்கும் ஆற்றலில்லார்
வாழ்வுதனை இழக்கின்றார்
வாழ்கின்ற இடமனைத்தும்
வாழ்வளிக்கும் எனநினைப்பீர்
கற்பனையால் கதையெழுதல்
வெற்றியினை அளித்துவிடும்
கற்பனையை வாழ்வாக்கல்
காலனுக்கே விருந்தாகும் !
No comments:
Post a Comment