கொரோனா மீது முதியோருக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம்!




கொரோனா பேரழிவில் இருந்து உலகம் முற்றாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பதே சர்வதேச நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்புவதை விட கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்வதே பெரும் சவாலாக உள்ளது.
கொரோனா அனைத்து வயதினரையும் தாக்குகிறது என்றாலும் வயதானவர்கள்தான் இதனால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் இறந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கும் மேலானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா தாக்கினால் அவர்களை குணப்படுத்துவதற்கு வைத்தியர்கள் போராட வேண்டியுள்ளது.
வயதானவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுவதற்கு முதல் காரணம் அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்தான். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத இந்தக் காலங்களில் அவர்களின் அன்றாட உடல் இயக்கங்கள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளும், வலிகளும் ஏற்படலாம். அதேசமயம் சமூகத்தில் இருந்து விலகியிருப்பது அவர்கள் மனநிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த கடினமான காலத்தில் அனைவரும் குறிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் முதியவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகிறது. வயதானவர்களுக்கு ஆரோக்கியமான இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வயது தொடர்பான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இது அவசியமாகும்.
பெரும்பாலான வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது வீழ்ந்து விடுவதால் உண்டாகும் காயங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், இதனால் உடல் செயல்பாடுகளிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

நடைப் பயிற்சி, யோகா ஆகியவை தசைகளை சரியான நிலையில் வைத்திருக்க உதவும். நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த உடல் இயக்கமும் இல்லாமல் இருப்பதால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். உயிர்ச்சத்து டி, உயிர்ச்சத்து சி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் பச்சை இலை, காய்கறிகள், பழங்கள் சேர்க்க வேண்டும். பதற்றம் மற்றும் கவலை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் தகவல்களைத் தவிர்க்கவும். வதந்திகள் அல்லது தவறான தகவல்களைக் கேட்க வேண்டாம். வழக்கமான வாழ்க்கை நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அன்பானவர்களுடன் வழக்கமான தொடர்பைப் பேணுவது நலம். வயதானவர்கள் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மறதி உள்ளவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது அதிக கவலை, கோபம், மனஅழுத்தம், கிளர்ச்சி ஆகியவற்றுக்கு உட்படலாம். அவர்களுக்கு மற்றையோர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது அவசியம். சமைத்த உணவின் மூலம் சரியான ஊட்டச்சத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி, தியானம் அவசியம். வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. புத்தகம் வாசிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம், 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட நபர்களின் அருகில் செல்லலாகாது.
இன்றைய காலத்தில் பூங்காக்கள், சந்தைகள் மற்றும் மத இடங்கள் போன்ற நெரிசலான இடங்களுக்குச் செல்லக் கூடாது.   நன்றி தினகரன் 

No comments: