சுவீட்சிக்ஸ்டி - கைராசி - சுந்தரதாஸ்

.


தனக்கு மருத்துவம் செய்யும் வைத்தியர்  நல்ல கைராசிக் காரராக   இருக்கவேண்டும் என்று எந்த நோயாளியும் விரும்புவார், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு டாக்டருக்கும் நேசுக்கும் இடையில் தோன்றும் காதலை வெளிப்படுத்திய படம் தான் 1960 இல் வெழிவந்த கைராசி.  

ஏவிஎம் நிறுவனத்தில் நீண்டகாலமாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய வாசு மேனன் தனது வாசு பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி உருவாக்கிய கைராசியில் ஜெமினி,  சரோஜா தேவி , எம்ஆர் ராதா,  எஸ் வி சகஸ்ரநாமம்,  தங்கவேலு ராஜம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.  

ஊரில் பல திருட்டுக்களை செய்துவரும் குமாரை பிடிக்க ஹெட் கான்ஸ்டபிள் சுந்தரம் தீவிரம் காட்டுகிறார், ஆனால் அவர் மீது வீண்பழி சுமத்தி பதவியை இழக்க வைப்பதுடன்  சிறைக்கு அனுப்புகிறார் குமார்.  சுந்தரத்தின் மனைவி தன் குழந்தை மோகனுடன் நிர்க்கதியாகி,  மோகனை செல்வந்தர் ஒருவருக்கு சுவீகாரம் கொடுக்கிறார்.  போலீசுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடும் குமாரின் தாயில்லா மகளான சுமதியை வளர்க்கும் பொறுப்பு சுந்தரத்தின் மனைவியை சேர்கிறது. 






டாக்ட்டராக வளரும் மோகனும்,  நர்சாக வளரும் சுமதியும் ஒரே மருத்துவமனையில்  பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது இவ்வாறு அமைக்கப்பட்ட கதைக்கு  கே எஸ் கோபாலகிருஷ்ணநும்  கேடி சந்தானமும் வசனம் எழுதி இருந்தார்கள்.  படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தாது நடிகவேள் எம்ஆர் ராதாவின்  நடிப்பாகும்.  படத்தில் அவருடைய அடாவடித்தனமான பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன,  அவற்றை பேசி ராதா தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.  




எங்கேடா நல்ல புத்தகம் இங்கே இருக்குது காதலை திறந்த மனமே கலை , அரசைத் தொடர்ந்த இளங்கோ,  பணத்தை துறந்த பட்டினத்தார்,  இப்படி எல்லாத்தையும் திறந்த புத்தகம் தான் இருக்குது,  எப்படி வாழனும்,  எப்படி நல்லா இருக்கணும்னு எவன்  புத்தகம் எழுதுகிறான் என்று எம் ஆர் ராதா அங்கலாய்க்கும் காட்சி ரசிகர்களின் கைதட்டல்களை வாரிக் கொண்டது.




 ஜெமினியும் , சரோஜாதேவியும் மென்மையான முறையில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.  படத்திற்கான இசை எம்எஸ் விஸ்வநாதனின் உதவியாளர் கோவர்த்தனம் வழங்கியிருந்தார்.  அன்புள்ள அத்தான் வணக்கம், காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.  டிஎம்எஸ்,  சுசீலா குரலில் ஒலித்த கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ பாடல்  காதல் தோல்விக்கு உள்ளானவர்களை  வாட்டி எடுத்தது.  வெற்றிப்படமான கைராசியை டைரக்ட் செய்தவர் கே சங்கர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவாஜியின் ஆலயமணி எம்ஜிஆரின் பணத்தோட்டம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு கே சங்கருக்கு கிட்டியது.



No comments: