வீடியோஸ்பதியின் புது முயற்சி : ஈழத்து எழுத்தாளர் சிறுகதைகள் ஒலி/ஒளி வடிவில்



செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” - சிறுகதை குரல் பதிவு
குரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

வீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.


ஆனால் இதை ஒரு கூட்டு முயற்சியாக, இலக்கிய வாசகர்களின் வழியாகவே பகிரும் நோக்கில் வரும் முதல் படைப்பு இது.ஈழத்தின் மிக முக்கியமானதொரு சிறுகதை, நாவல் படைப்பாளி, வரலாற்றாசிரியர் செங்கை ஆழியான் அவர்களது சிறுகதையான “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” என்ற சிறுகதையை டொமினிக் ஜீவா அவர்களது மல்லிகை தனது 200 வது இதழில் (ஜூலை, 1986) இல் பகிர்ந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். அந்தச் சிறு வயதிலேயே என்னுள் ஒரு பெரிய அதிர்வலையை உண்டு பண்ணிய சிறுகதை இது.
செங்கை ஆழியான் “மல்லிகைச் சிறுகதைகள்” தொகுப்பை டொமினிக் ஜீவா அவர்களது பவள விழாச் சிறப்பு நூலாக வெளியிட்ட போது மல்லிகை இதழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைளை, அவை ஏன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில் இந்தச் சிறுகதையையும் அவர் இனம் காட்டியதில் இருந்து இதன் கனம் புரியும்.ஈழத்தின் போர் தின்ற சனங்களின் ஒரு முகம் இந்தச் சிறுகதை.
ஈழத்து வானொலி ஊடகப் பரப்பில் நீண்ட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சகோதரி சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களிடம் வீடியோஸ்பதியின் தொடர் முயற்சியைக் குறிப்பிட்டு இந்தச் சிறுகதையை நேற்று முன் தினம் தான் பகிர்ந்திருந்தேன். முழு மூச்சில் படித்து விட்டு சிறுகதையை சிலாகித்து விட்டு உடன் குரல் பகிர்வைச் செய்து பகிர்ந்தார். இவரின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும் குரல் பகிர்வைக் கேட்டதும் திகைத்து விட்டேன். அப்படியே செங்கை ஆழியானுக்கு உருவம் கொடுத்தது போல அபாரமான உரையாடல் ஏற்ற இறக்கங்களுடன், ஒரு மிகச் சிறந்த குறும்படம் போல உருவாக்கி விட்டார்.
இந்தச் சிறுகதையை வெளியிட அனுமதி கோரிய போது பெரு மதிப்புக்குரிய செங்கை ஆழியான் (க.குணராசா)“அப்பாவின் எழுத்துக்கள் மூலமாக அவர் சிரஞ்சீவியாக வாழ்வது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்”என்று அவர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.
இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். இந்த நாளில் இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்க உதவிய எம் செங்கை ஆழியான் குடும்பத்தினருக்கும், சங்கீதா தினேஷ் பாக்யராஜாவுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

YouTube இணைப்பு
கானா பிரபா

No comments: