சுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

             உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதனுக்கே 
             அறிவென்னும் பொக்கிஷத்தை அவனேதான் பெற்றுள்ளான் 
             புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
             அறிவுநிறை மனிதன்மட்டும் ஆக்குகின்றான் அகிலமதில்  !

            காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
            காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனனே 
            மொழியென்றான் இனமென்றான் சாதியென்றான் மதமென்றான் 
            அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றான்  ! 

            விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றான்
            அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றான் 
            விண்கொண்டான் மண்கொண்டான் வெற்றிமாலை சூடிநின்றான்
            வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டான்  !

            ஆராய்சி எனும்பெயரால் அபாயத்தை அரவணைத்தான்
            அணுகுண்டை கண்டறிந்து அழிவுசெய்ய ஆவலுற்றான்
            ஆக்குகின்ற அவனறிவு அகிலத்தைக் காக்காது
            பார்க்குமிடம் எல்லாமே படுகுழியைத் தோண்டியதே  !

           நோய்களுக்கு மருந்துகண்டான் போயகலச் செய்துநின்றான்
           நல்விருந்தாய் மருத்துவத்தை நாடறியக் கொடுத்துநின்றான்
           பேராசை கொண்டிருந்த பேரரசால் ஆராய்ச்சி
           பேரழிவைத் தருவதற்கு பெருவழியை வகுத்ததுவே  ! 

           செல்வத்தை திரட்டுவதில் போட்டிபோட்ட அரசெல்லாம்
           சிறப்புடைய அறிவியலை சுயநலமாய் ஆக்கியதே 
           வெல்லவே முடியாமல் விஞ்ஞானம் வளர்ந்தாலும் 
           வீழ்த்திவிட  சுயநலங்கள் விஸ்வரூபம் கொண்டனவே  ! 

           நுண்கிருமே ஆராய்ச்சி பலவகையில் உதவிடினும்
           தம்விரும்பம் நிறைவேற பேரரசார் ஆசைகொண்டார்
           நுண்கிருமே நோயாகி பல்லுருவம் எடுத்ததனால் 
           தம்தலையில் மண்வாரி இறைத்தநிலை ஆகியதே  ! 

           எதையுமே நினையாது வாழ்ந்துவந்த மக்களெலாம்
           ஏக்கமுற்று கண்ணீரில் இருக்கும் நிலையாகிதே 
           விந்தைதந்த விஞ்ஞானம் வினையாக வடிவெடுத்து
           கொரனோவை உருவாக்கி பலியெடுத்து நிற்கிறதே  !

          அறிவுடைய மனிதவினம் ஆசைகொண்ட காரணத்தால்
          பெருவழிவை காணுகின்ற பேரவலம் நிகழ்கிறது
          ஆணவத்தால் விஞ்ஞானம் ஆட்கொள்ளப் பட்டமையால்
          அநியாயமாய் உயிர்கள் அழிந்தபடி இருக்கிறது  !

         இன்னுமே விஞ்ஞானம் காப்பாற்றும் எனவெண்ணி
         தம்நலத்தை இழந்துபலர் தளர்வின்றி உழைக்கின்றார்
         சுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம்
         கொரனோவை அழிப்பதிலே கோபதாபம் தவிர்த்திடுவோம்  !

         பெரியவரா சிறியவரா என்பதல்ல போராட்டம்
         பேரழிவைத் தந்துநிற்கும் பெருநோயே போராட்டம் 
         அதையழிக்க விஞ்ஞானம் உதவும்நிலை வருவதற்கு
         ஆணவத்தை விட்டுவிடல் ஆபத்தை அகற்றிவிடும்    !

No comments: