நிர்ப்பந்தம்


21/09/2019 அர­சியல் உரி­மை­க­ளுக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் நீண்­டது. எழு­பது வரு­டங்­க­ளாக உயிர்ப்­புடன் தொடர்­வது. பல வழி­களில் வீரியம் மிக்­கது. வியந்து நோக்­கத்­தக்க பல்­வேறு வழி முறை­க­ளையும் உத்­தி­க­ளையும் கொண்­டது. ஆனாலும் அது விளை­வு­களைத் தரத்­த­வ­றி­யுள்­ளது. இது கவ­லைக்­கு­ரி­யது - கவ­னத்­துக்கும் ஆழ்ந்த சிந்­த­னைக்கும் மீள் பரி­சீ­ல­னைக்கும் உரி­யது. 
இந்த அர­சியல் போராட்டம் பிர­தா­ன­மாக இரண்டு வழி­மு­றை­க­ளி­லா­னது. சாத்­வீகப் போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட அது, பின்னர் ஆயுதப் போராட்­ட­மாகப் பரி­ண­மித்­தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, மீண்டும் அது சாத்­வீக வழிக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது. 

உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களும் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சாத்­வீகப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­தி­யாவில்  ஆங்­கி­லேய சாம்­ராஜ்­ஜி­யத்தின் கடும்­போக்கைக் கரைத்து வெற்­றி­ய­ளித்த  விடு­தலைப் போராட்­டத்தை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு இதனை தமிழ்த்தலை­வர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். 

அன்­றைய இந்­திய சாத்வீகப் போராட்டம் அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரு­டைய கொள்­கைகள் ஆட்சி முறை­களில் சிந்­தனை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வல்­ல­மையைக் கொண்­டி­ருந்­தது. சாத்­வீகப் போராட்­டத்தின் சத்­திய உணர்வை அதன் ஊடான தியா­கத்தை ஆங்­கி­லே­யர்கள் உண­ரத்­தக்க மனி­தா­பி­மா­னத்தைக் கொண்­டி­ருந்­தனர். 
ஆனால் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்­களின் உண்மைத் தன்­மையும் அதன் நியா­ய­மான நிலைப்­பாடும் பேரின ஆட்­சி­யா­ளர்­களின் கடும்­போக்கு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. அந்தப் போராட்­டங்­களை அவர்கள் எள்­ளி­ந­கை­யா­டி­னார்கள். அந்தப் போராட்­டத்தின் வலி­மையை அவர்கள் உணர்ந்து, தமது கடும்­போக்கில் மாற்­றங்­களைக் கைக்­கொள்­ள­வில்லை. மாறாக பொலி­ஸா­ரையும் படை­க­ளையும் ஏவி­விட்டு, போராட்­டங்­களை அடித்து நொருக்கி அடக்­கி­யொ­டுக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளி­லேயே கவனம் செலுத்­தி­னார்கள். 
சாத்­வீகப் போராட்­டங்கள் ஒரு பக்கம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க, காலத்­துக்குக் காலம் தமிழ் மக்கள் மீது வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்டு, தமிழ் மக்­களை சமூக ரீதி­யாக அழித்­தொ­ழிப்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தார்கள். அஹிம்சை வழி­யி­லான போராட்­டங்கள் நசுக்­கப்­பட்ட அதே­வேளை, தமி­ழி­னத்தின் எதிர்­கா­லத்­தையும். அதன் இருப்­பையும் கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கத்­தக்க மறை­முக நட­வ­டிக்­கை­களில் அவர்கள் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டி­ருந்­தனர். 
இதனால் அர­சியல் உரி­மைக்­கான போரட்­டத்தை முன்­னெ­டுத்த அதே­வேளை, தமிழ் மக்­களின் பாது­காப்பை உறுதி செய்து கொள்ள வேண்­டிய கட்­டாயத் தேவையும் எழுந்­தி­ருந்­தது. இந்தப் பின்­பு­லத்­தி­லேயே ஆயுதப் போராட்டம் தலை­யெ­டுத்­தி­ருந்­தது.
ஆயுதப் போராட்­டத்­துக்கு முன்­ன­தாக சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டங்கள் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பின்னர் அந்தப் போராட்­டங்கள் ஒத்­து­ழை­யாமை இயக்கம் என்ற வடி­வத்தில் அரச நிர்­வாக சேவை­களை முடக்­கு­வ­தற்­கான போராட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

ஒத்­து­ழை­யாமை போராட்டம்
தனிச்­சிங்­களச் சட்டம் 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்­ட­போது தந்தை செல்­வா­வுக்கும் பண்­டா­ர­நாயக்­கா­வுக்கும் இடையில் அர­சியல் உரி­மைகள் தொடர்பில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்தம் கிழித்­தெ­றி­யப்­பட்­டது. தமிழ் மக்­களின் தலை­வ­ராக இருந்த தந்தை செல்­வ­நா­யகம் தனிச்­சிங்­களச் சட்­டத்­துக்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு எதிரில் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அவ­ரு­டைய தலை­மையில் அங்கு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை அர­சாங்கம் தனது அடி­யாட்­க­ளா­கிய குண்­டர்­களைப் பயன்­ப­டுத்தி அடித்து நொருக்­கி­யது. இரத்தம் வழிய வழிய போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள்  அங்­கி­ருந்து இழுத்துச் செல்­லப்­பட்­டார்கள். முக்­கிய தலை­வர்­களைக் குண்டுக்கட்­டாகத் தூக்­கிச்­சென்று அப்­பு­றுப்­ப­டுத்­தி­னார்கள். 
அதன் பின்­னரும் தந்தை செல்வா நாடா­ளு­மன்­றத்தில் தனிச்­சிங்­களச் சட்­டத்­துக்கு எதி­ரா­கவும் தமிழ் மக்­களின் சம அர­சியல் உரி­மைக்­கா­கவும் உரத்து குரல் கொடுத்தார். தனிச்­சிங்­களச் சட்­டத்தின் அடை­யா­ள­மாக வாகன இலக்கத் தக­டு­களில் ஆங்­கில எழுத்­து­க­ளுக்குப் பதி­லாக ஸ்ரீ என்ற சிங்­கள எழுத்தை அரசு பயன்­ப­டுத்­தி­யது. தனிச்­சிங்­க­ளத்தை எதிர்த்த தந்தை செல்வா அந்த சிங்­கள எழுத்­துக்­களை தார் பூசி அழிப்­பதில் முன்­னி­லையில் நின்று செயற்­பட்டார். தனது வாகன இலக்­கத்­த­கட்டில் ஸ்ரீ என்ற சிங்­கள எழுத்­துக்குப் பதி­லாக தமிழ் ஸ்ரீ எழுத்தைப் பயன்­ப­டுத்தி வீதி­களில் வலம் வந்தார். 
அர­சாங்­கத்தின் நிர்­வாக நடை­மு­றைக்கு முர­ணான வகையில் சிங்­கள எழுத்­துக்குப் பதி­லாக தமிழ் எழுத்தைப் பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக அர­சாங்­கம் ­அ­வரைக் கைது செய்து சிறையில் அடைத்­தது. சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் ஒய்ந்­து­வி­ட­வில்லை. ஒத்­து­ழை­யாமை இயக்­கத்தை ஆரம்­பித்து யாழ். கச்­சேரி உட்­பட அரச அலு­ல­வ­ல­கங்­களை பொது­மக்­களை அணி­தி­ரட்டி முற்­று­கை­யிட்டு அரச நிர்­வா­கத்தை அவர் முடக்­கினார். தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு ஒத்­து­ழை­யாமை இயக்­கத்தில் தமிழில் அஞ்சல் தலை (முத்­தி­ரை­களை) அச்­ச­டித்து சுய ஆட்சி அதி­கா­ரத்தைக் கொண்ட நிர்­வா­கத்தின் அடை­யா­ள­மாக அஞ்சல் சேவை நடத்­தப்­பட்­டது.
தமிழ் மக்­களின் ஒத்­து­ழை­யாமை இயக்கச் செயற்­பா­டுகள் அர­சாங்­கத்தை அச்­சத்தில் ஆழ்த்­தி­யது. தனது கட்­டுப்­பாட்டை மீறிச் செயற்­பட்ட தமிழ் மக்கள் மீது ஆட்­சி­யா­ளர்கள் வெகுண்­டெ­ழுந்­தார்கள். அதன் விளை­வாக அவ­ச­ர­காலச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்டு நிலை­­மை­களைக் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வந்த அர­சாங்கம் தனது அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­களைப் பல வழி­க­ளிலும் தொடர்ந்து மேற்­கொள்­ள­லா­யிற்று. இந்தப் பின்­பு­லத்­தி­லேயே ஆயுதப் போராட்­டத்­துக்­கான எண்­ணக்­க­ரு­வா­கிய தனி­நாட்டுக் கோரிக்கை உரு­வாகி 1977 ஆம் ஆண்டு தேர்­தலில் அதற்­கான அங்­கீ­காரம் வடக்கு–கிழக்கு தமிழ் மக்­க­ளிடம் இருந்து பெறப்­பட்­டது. தனி­நாட்­டுக்­கான ஆயுதப் போராட்­டமும் முகிழ்த்­தது.
ஆயுதப் போராட்­டத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் தமிழ் இளை­ஞர்கள் ஆர்­வத்­தோடும் உணர்­வெ­ழுச்­சி­யோடும் இணைந்­தார்கள். பல்­வேறு ஆயுத குழுக்கள் செயற்­பட்­டி­ருந்த போதிலும் திம்புப் பேச்­சு­வார்த்­தையில் அந்தக் குழுக்கள் ஒன்­றி­ணைந்து பங்­கேற்று அர­சியல் தீர்­வுக்­கான கோரிக்­கைகள் அடங்­கிய முன்­மொ­ழிவை முன்­வைத்­தது. பேச்­சு­வார்த்­தைகள் வெற்றி பெற­வில்லை. ஆயுதப் போராட்டம் தீவி­ர­ம­டைந்­தது. 
இலங்கை இந்­திய ஒப்­பந்தம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்டு வடக்­கு­–கி­ழக்கு இணைந்த மாகா­ண­சபை உரு­வாக்­கப்­பட்­டது. அதன் நிர்­வாகப் பொறுப்பை தேர்­தலின் மூலம் ஏற்­றி­ருந்த ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சி­யினால் இந்­திய அமை­திப்­ப­டையின் உத­வி­யு­டனும் பாது­காப்­பு­ட­னும்­கூட வெற்­றி­க­ர­மாகச் செயற்­ப­டுத்த முடி­ய­வில்லை. அதற்­கான வாய்ப்­பையும் வச­தி­க­ளையும் இலங்கை அர­சாங்கம் ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை. இதனால் தன்­னிச்­சை­யாக ஈழப்­பி­ர­க­ட­னத்தைச் செய்த அந்த மாகா­ண­ச­பையின் முத­ல­மைச்சர் வர­த­ராஜப் பெருமாள் இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருடன் இலங்­கையில் இருந்து வெளி­யேறி இந்­திய அர­சாங்­கத்தின் பரா­ம­ரிப்பில் வாழ்ந்­தி­ருந்தார்.  
ஆயுதப் போராட்­டமும் அற­வழிப் போராட்­டமும்
ஆயுதக் குழுக்­க­ளி­டை­யி­லான மோதல்­களின் பின்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுதப் போராட்டம் மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தனி இயக்­க­மாகச் செயற்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் இந்­திய அமைதிப் படை­யு­டனும் பின்னர் இலங்கை அரச படை­க­ளு­டனும் மிகத் தீவி­ர­மாகப் போரா­டி­னார்கள். அந்த ஆயுதப் போராட்டம் தனது தனி­நாட்டுக் கோரிக்­கைக்­காக பல்­வேறு படி­மு­றை­களில் மேற்­கொள்­ளப்­பட்­டது. 
நினை­வ­ழியா வகை­யி­லான உத்­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்தப் போராட்­டத்தின் சுவ­டுகள் தீரம் மிக்­கவை. தமிழ் வீரத்தின் - தமிழ் இளை­ஞர்­களின் வீரத்தை, அர்ப்­ப­ணிப்பை, தியா­கத்தை அற்­பு­த­மாக வெளிப்­ப­டுத்­தி­யவை. நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும் வல்­லமை பொருந்­திய படை நட­வ­டிக்­கைகள் இந்தப் போராட்­டத்தின் உயிர் மூச்­சாக இடம்­பெற்­றி­ருந்­தன. 
ஆயுதப் போராட்டம் மட்­டு­மல்ல. அஹிம்சைப் போராட்­டத்தை – சாத்­வீகப் போராட்­டத்தின் வழி­காட்­டி­யான இந்­தி­யா­வுக்கே முன்­மா­தி­ரி­யான உண்ணா நோன்பின் வலி­மை­யையும் விடு­த­லைப்­பு­லி­களின் போராட்டம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்­திய அமை­திப்­படை காலத்தில் 1987 ஆம் ஆண்டு நல்­லூரில் தியாகி திலீபன் மேற்­கொண்ட சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் அற­வழிப் போராட்­டத்தின் அதி­யுச்ச வெளிப்­பா­டாகும். 
வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வதைக் கைவிட வேண்டும்.
சிறைச்­சா­லை­க­ளிலும் இரா­ணுவ முகாம்­க­ளிலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும்.
அவ­ச­ர­காலச் சட்டம் உட­ன­டி­யாக நீக்கப்பட வேண்டும்.
இந்­திய அமை­திப்­ப­டையின் பொறுப்பில்  ஊர்­காவல் படை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முழு­மை­யாகக் களை­யப்­பட வேண்டும்.
தமிழர் பிர­தே­சங்­களில் புதி­தாக பொலிஸ் நிலை­யங்கள் திறப்­பதை நிறுத்த வேண்டும் என்ற ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து தியாகி திலீபன் தனது அற­வழிப் போராட்­டத்தைத் தொடங்­கி­யி­ருந்தார். 
உணவை ஒறுத்து நீர்­கூட அருந்­தாமல் திலீபன் மேற்­கொண்ட மிகக் கடு­மை­யான அற­வழிப் போராட்டம் இந்­திய அரசின் அர­சியல் ரீதி­யான அறிவுக் கண்­க­ளையும் திறக்­க­வில்லை. ஆட்­சி­யா­ளர்­களின் இத­யத்­தையும் தொட­வில்லை. அந்தப் போராட்­டத்தை அவர்கள் அலட்­சி­யப்­ப­டுத்­தி­னார்கள். ஆனாலும் தனது கொள்­கையில் பற்­று­றுதி கொண்­டி­ருந்த திலீபன் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் உயிர்
 பிரியும் வரையில் தனது போராட்டம் என்ற கூற்­றுக்கு அமைய நீரையும் ஒறுத்து தனது உயிரைத் தியாகம் செய்­தி­ருந்தார். 
இந்த உன்­ன­த­மான உயிர்த்­தி­யாகம் இடம்­பெற்று 32 வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. தியாகி திலீ­பனின் அற­வழிப் போராட்­டத்தின் பின்னர் மிகவும் தீவி­ர­ம­டைந்த ஆயுதப் போராட்டம் இந்­திய அமை­திப்­ப­டையை இலங்­கையில் இருந்து பின்­வாங்கச் செய்­தி­ருந்­தது. ஆயினும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. ஆயுதப் போராட்டம் தொடர்ந்­தது. சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­துடன் கூடிய விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான சமா­தானப் பேச்­சுக்­களும் முடங்கிப் போயின. 
உக்­கி­ர­ம­டைந்த ஆயுத மோதல்கள் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­தன. விடு­த­லைப்­பு­லி­களின் போராட்டம் மௌனிக்­கப்­பட்டு பத்து வரு­டங்கள் கடந்­து­விட்­டன. ஆனாலும் அர­சியல் தீர்வும் கிட்­ட­வில்லை. அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளான எரியும் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. 
மீண்டும் சாத்­வீக வழி­யி­லான போராட்­டங்­களில் ஈடு­பட தமிழ் மக்கள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி உரு­வாக்­கிய நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்­க­மும்­கூட பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண­வில்லை. 
உயிர்ப்­புடன் அழுத்தும் அதே பிரச்­சி­னைகள்
நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, சிக்­கல்கள் நேர்ந்­த­போ­தெல்லாம் ஒத்­து­ழைத்து உத­வி­பு­ரிந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையும் நல்­லாட்சி அர­சாங்கம் ஏமாற்­றி­விட்­டது. 
முப்­பத்­தி­ரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தியாகி திலீபன் தனது அற­வழிப் போராட்­டத்தில் முன்­வைத்த அதே­கோ­ரிக்­கைகள் இன்னும் பெரும் பிரச்­சி­னை­க­ளாக உயிர்ப்­புடன் அழுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. 
வடக்­கிலும் கிழக்­கிலும் சிங்­களக் குடி­யேற்­றங்கள் முன்­ன­ரிலும் பார்க்க தீவி­ர­ம­டைந்­துள்­ளன.
யுத்தம் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும் அர­சியல் கைதிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. ஆட்­சி­யா­ளர்கள் அவர்­களை இன்னும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே நோக்­கு­கின்­றார்கள். கரு­து­கின்­றார்கள். யுத்­தத்தின் பின்னர் நாட்டு மக்­களை ஐக்­கி­யப்­ப­டுத்­தவும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வையும் ஏற்­ப­டுத்த வேண்டும் என்று வாய்­கி­ழிய பிர­சாரம் செய்­கின்ற அவர்கள் தொட்­டி­லையும் ஆட்டி பிள்­ளை­யையும் கிள்­ளி­வி­டு­கின்ற வகையில் சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பையும் பகைமை உணர்­வையும் ஆழப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையே மறு­பு­றத்தில் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 
இந்தச் சூழ­லி­லேயே தியாகி திலீ­பனின் 32 ஆம் ஆண்டு நினை­வேந்தல் நிகழ்­வுகள் உணர்­வு­பூர்­வ­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. நன்­றி­ய­றி­த­லுடன் திலீ­பனை பலரும் வணங்கி அஞ்­ச­லிக்­கின்­றார்கள். 
மறு­பு­றத்தில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்­தலும் வெளி­யாகி இருக்­கின்­றது. இது­வ­ரையில் களத்தில் வேட்­பா­ளர்­க­ளாகப் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­வர்கள், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை உளப்­பூர்­வ­மாக உணர்ந்­தி­ருக்­கின்­றார்­களா என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் தமிழ் அர­சி­ய­லிலும் மிக ஆழ­மாக வேரூன்றி இருக்­கின்­றது. 
வரப்­போ­கின்ற தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, யாரை ஒதுக்­கு­வது என்று தீர்­மா­னிப்­பதில் தமிழர் தரப்பு அல்­லாட நேர்ந்­துள்­ளது. அற­வழிப் போராட்­டங்கள் அலட்­சி­யப்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாகக் கிளர்ந்­தெ­ழுந்த ஆயுதப் போராட்­டமும் மழுங்­க­டிக்­கப்­பட்டு விட்­டது. மீண்டும் அற­வழிப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்ள தமிழர் தரப்பு வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­த­லை­யும்­கூட ஒரு போராட்ட கள­மா­கவே கருதிச் செயற்­பட வேண்­டிய கட்­டாய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. 
அடுத்­தது என்ன?
தியாகி திலீபன் ஐந்து அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து, கடு­மை­யான தனது அற­வ­ழிப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­ததைப் போன்று தமிழர் தரப்பும் கோரிக்­கை­களை முன்­வைத்து ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரிக்க வேண்­டிய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. அன்று திலீபன் இந்­திய அரசு தனது கோரிக்­கை­களை ஏற்றுச் செயற்­படும் என்ற நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்தார்.இந்­தி­யாவின் விடு­த­லைப்­போ­ராட்­டத்­திற்கு அச்­சா­ணி­யாகத் திகழ்ந்த அற­வ­ழிப்­போ­ராட்­டத்­தையே அவரும் கையில் எடுத்­தி­ருந்­ததே அதற்குக் காரணம். 
ஆனால் இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் விடாக்­கண்டன் கொடாக்­கண்டன் என்ற கொள்கைப் பிடிப்பைக் கொண்ட கட்­சி­களின் வேட்­பா­ளர்­களே களத்தில் இறங்­கு­கின்ற சூழலில் யார் மீது நம்­பிக்கை வைத்துச் செயற்­ப­டு­வது, எத்­த­கைய நம்­பிக்­கையைக் கொள்ள முடியும் என்­ப­தற்­கான அறி­கு­றிகள் தமிழர் தரப்­புக்குத் தெளி­வாகத் தென்­ப­ட­வில்லை. 
வெறு­மனே வாய்­மொழி மூல­மான உத்­த­ர­வா­தங்­களும், நிபந்­த­னை­யற்ற ஆத­ரவும் இது­வ­ரையில் ஏமாற்­றத்­தி­லேயே கொண்டு சென்று நிறுத்தி இருக்­கின்­றன. ஆயுத வலிமை பெற்­றி­ருந்­த­போது, சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­துடன் கூடிய சமா­தான முயற்­சி­களும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நல்­லெண்ண நட­வ­டிக்­கை­க­ளும்­கூட தமிழர் தரப்பை நடு ஆற்றில் கைவி­டவே வழி­வ­குத்­தி­ருந்­தன. 
இத்­த­கைய மிகக் கசப்­பா­னதோர் அர­சியல் அனு­ப­வத்தின் பின்­ன­ணியில் ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்குள் தமிழ் மக்­களும் அவர்­க­ளுக்கு வழி­காட்ட வேண்­டிய நிர்­பந்­தத்­துக்குள் தமிழ் அர­சியல் தலை­மை­களும் சிக்­கி­யி­ருக்­கின்­றன. 
கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகின்ற பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய தரப்புக்களின் வேட்பாளர்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச மீது எந்த வகையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் வேட்பாளர் தெரிவுக்காகக் காத்திருக்கின்ற சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகிய மூவரில் யார் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வல்லவர் என்பதைத் தீர்மானிப்பதிலும் சிக்கல்கள எழுந்துள்ளன. 
ஐக்கிய தேசி ய கட்சிக்குள் நிலவுகின்ற உட்கட்சிப் பூசல்களும், தலைமைப் பதவிக்கான மோதல்களும் தெரிவு செய்யப்படுகின்ற வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எத்தகைய அதிகார வல்லமையுடன் காரியங்களை முன்னெடுப்பார் என்பதைத் தீர்மானிப்பதம் கடினமான விடயமாக உள்ளது. 
யுத்தத்தின் பின்னரான ஒரு தசாப்த காலத்தில் சமூக, அரசியல், பொருளதார ரீதியாக நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. பிராந்திய வல்லரசுப் போட்டியில் நிலவுகின்ற அரசியல், இராணுவ பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மட்டுமல்லாமல், பிராந்திய மட்டத்திலான கலாசார ஊடுருவல் தாக்கங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினராகிய சிறுபான்மை தேசிய இனமகிய தமிழ் மக்களுக்கு சமஉரிமைகளை வழங்குவதிலும் அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எத்தகைய பற்றுறுதியுடன் வரப்போகின்ற ஜனாதிபதி செயற்பட முடியும் என்பதைத் தீர்மானிப்பதிலும் சிக்கலான நிலைமைகளே தென்படுகின்றன. 
இந்த நிலையில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது? எவ்வாறு செயற்படப் போகின்றது என்ற கேள்விகள் இப்போத விஸ்வரூபமெடுத்துள்ளன. 
பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி 




No comments: