21/11/2019 அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது.
அடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத் தேர்­தலும், மாகாணசபைகளுக்­கா­ன தேர்­த­லுக்­கான எதிர்­பார்ப்பும் உள்­ளது.
இவ்­வா­றுள்ள நிலையில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பெறு­பே­றுகள் தெரி­வா­கி­யுள்ள ஜனா­தி­ப­தியின் எதிர்­காலத் திட்­டங்கள் எவ்­வாறு அமையும் என்ற எதிர்­பார்ப்பை நாட்டு மக்­க­ளிடம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளிடம் மட்­டு­மல்ல உலக அரங்­கிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நோக்க முடி­கின்­றது.
நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேசிய பாது­காப்பு, தொழிலற்றோர் பிரச்­சினை எனப் பல்­வேறு பிரச்­சினை களுக்குத் தீர்­வு­காண வேண்­டி­யுள்­ளது என்று கூறப்­பட்­டாலும், அதற்கும் அப்பால் நாட்டின் சகல இன, மத மொழி மக்­க­ளுக்கு மத்­தி­யிலே புரிந்­து­ணர்வும், நல்­லு­றவும் ஏற்­ப­டுத்தும் பாரிய பொறுப்பும் அவ­ருக்­குள்­ளது.
யார் விரும்­பி­னாலும், விரும்­பா­விட்­டாலும் நாடும், நாட்டு மக்­களும் எதிர்­நோக்­கி­யுள்ள முதன்மைப் பிரச்­சினை அது­வா­க­வே­யுள்­ளது.
பெரும்­பான்மை வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை இல்­லை­யென்­றாகி விடாது. இந்த நாட்டில் மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களால் வெற்­றி­யீட்­டிய அர­சாங்­கங்­களே இனப்­பி­ரச்­சி­னைக்கு அடித்­த­ள­மிட்­டன என்ற உண்­மையை மறைக்க முடியாது.

பல்­லின, பல­மொழி, பல இன மக்­களைக் கொண்ட இலங்­கையில் பல்­லினத் தன்­மைக்கு மதிப்­ப­ளிக்­காது, பேணாது பெரும்­பான்மை என்ற மாயையில் சிக்கி பல சீர­ழி­வு­க­ளுக்கு அடி­கோ­லிய வர­லாற்­றுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­காத வரை நாட்டின் பெரு­மைக்கும், இறை­யாண்­மைக்கும் பாதிப்­புகள் ஏற்­படும் என்ற யதார்த்த நிலை­மையைத் தடுக்க முடி­யாது. தேர்­தல்­காலப் பரப்­பு­ரைகள் எவ்­வா­றி­ருந்த போதிலும் தான் நாட்டின் அனைத்து மக்­களின் ஜனா­தி­பதி என்­ப­தையும் அனை­வ­ருக்கும் சேவை­யாற்­று­வதன் பொறுப்பை தான் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தா­கவும் புதிய ஜனா­தி­பதி கூறி­யி­ருப்­பது யதார்த்­த­மானால் நாடு நிச்சயம் பெரு­மை­ய­டையும்.
கடந்த கால நிகழ்­வு­க­ளையும், செயற்­பா­டு­க­ளையும் சரி­யாக, முறை­யாக எடை­போட்டு விட்ட தவ­றுகள் மேலும் தொட­ராது தடுக்கும் வழியை அவர் காண்பார் என்று நம்­புவோம். பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்த டீ.எஸ்.சேனா­நா­யக்­கவின் அர­சாங்­கத்தால் இந்­நாட்டின் குடி­மக்­க­ளா­யி­ருந்த இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்­களின் குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை என்­பன பறிக்­கப்­பட்டு அவர்கள் நாடற்­ற­வர்­க­ளாக்­கப்­பட்­டனர். அதேபோல் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்­டா­ர­நா­யக்­கவின் அர­சாங்­கத்தால் தனிச்­சிங்­களச் சட்டம் கொண்டு வரப்­பட்டு இந்­நாட்டின் பாரம்­ப­ரிய தமிழ்­மொழி புறக்­க­ணிக்­கப்­பட்­டது.
அதேபோல் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்த ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஆட்சிக் காலத்தில் பல தமி­ழ­ருக்­கெ­தி­ரான இனக்­க­ல­வ­ரங்கள் கட்­ட­விழ்க்­கப்­பட்­டன.
அதைத்­தொ­டர்ந்து பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்த அனைத்து அர­சாங்­கங்­க­ளாலும் சிறு­பான்­மை­யினர் பாதிப்­பு­க­ளையே எதிர்­கொண்­டனர் என்­பது வர­லாறு. அவ்­வா­றுள்ள நிலையில் சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ருக்குப் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யிலும் ஏற்­க­னவே ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளி­லி­ருந்து அவர்கள் விடு­ப­டக்­கூ­டி­ய­தா­கவும் புதிய ஆட்சி அமைந்தால் அது வர­வேற்­கப்­படும். உலக அரங்கில் நாட்டின் கௌரவம் காக்­கப்­படும்.
நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழர் தாயகப் பிர­தே­சங்­க­ளான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், அதேபோல் தமி­ழர்கள் அறுதிப் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் நுவ­ரெ­லியா மாவட்­டத்­திலும் தனித்­து­வ­மான பெறு­பே­றுகள் கிடைத்­துள்­ளன. அது மக்­களின் தீர்ப்பு. அது ஜன­நா­ய­கத்தின் பாற்­பட்­டது. மாறான கருத்­துள்­ள­வர்கள் ஏன், எதற்­காக மாற்­றுக்­க­ருத்துக் கொண்­டுள்­ளார்கள் என்­பதை ஆய்வு செய்து முடி­வுகள் எடுத்து அம்­மக்­க­ளையும் தம்பால் ஈர்த்துக் கொள்­வதே பண்­பட்ட ஜன­நா­யக வழி­முறை.
சிறு­பான்மை மக்கள் மட்­டு­மல்ல பெரும்­பான்மை மக்­களில் கணி­ச­மானோர் மாற்றுக் கருத்­துள்­ள­வர்­க­ளாகத் தமது வாக்­கு­களைப் பிர­யோ­கித்­துள்­ளனர் என்­பதை எவரும் கவ­னத்தில் கொள்­ளாது  சிறு­பான்­மை­யி­னத்­தவர் மட்­டுமே எதி­ராகச் செயற்­பட்­டனர் என்று கூறு­வது பொறுப்­பற்ற, ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கூற்­றாகும்.
1980 களின் முற்­ப­கு­தியில் ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஆட்சிக் காலத்தில் அன்­றைய பாரா­ளு­மன்­றத்தின் ஆட்­சிக்­கா­லத்தை அதற்­கு­ரிய காலம் முடி­வ­டைந்த பின் மேலும் ஆறு ஆண்­டு­க­ளுக்கு நீடிப்­ப­தற்­காக கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட்­டது. உரிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்று முழு வட­மா­கா­ணமும் கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் வாக்­க­ளித்­தது. அதா­வது தமிழ் மக்கள் ஏகோ­பித்து வாக்­க­ளித்­தனர். ஆனால் நாட்டின் ஏனைய பிர­தே­சத்­த­வர்கள் பாரா­ளு­மன்ற ஆட்சி நீடிப்­புக்கே வாக்­க­ளித்­தனர்.
தென்­னி­லங்­கையில் பாரா­ளு­மன்ற கால நீடிப்­புக்கு எதி­ராகப் போரா­டிய பெரும்­பான்­மை­யி­னரைக் கொண்ட சிங்­க­ள­வர்­களைத் தலை­மை­யாகக் கொண்ட அர­சி­யல்­வா­தி­களால் ஜன­நா­ய­கத்­திற்கு மாறா­ன­தென்ற ஆட்சி நீடிப்பை, அதற்­கெ­தி­ரான தீர்­மா­னத்தை தமது மக்­களை அணி திரட்டி நிறை­வேற்ற முடி­யாது போனது. முன்னாள் பிர­த­மரும் அன்­றைய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வி­யு­மான ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க அம்­மையார் வடக்கு, கிழக்கு மாகாண தமி­ழர்­களின் ஜன­நா­யகப் பற்­று­று­தியைப் பாராட்­டினார் என்­பதும் வர­லாறு. மன­ச்சாட்­சியின் படி ஜன­நா­யக முறையில் தமது கருத்தை அன்று வெளி­யிட்ட தமிழ் மக்­க­ளது முடிவைத் தாங்க மாட்­டாத அன்­றைய ஆட்­சியில் இனக்­க­ல­வ­ரங்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­மையும் வர­லாற்­றி­லுள்­ளது.
இவை­யெல்லாம் இலங்­கைக்­கே­யு­ரிய தனித்­து­வ­மான அர­சியல் வர­லாற்றுப் பாடங்கள். கடந்து வந்த பாதையைத் திரும்­பிப்­பார்த்து அதில் விடப்­பட்ட குறைகள், தவ­று­களைத் திருத்திச் செயற்­ப­டு­வது எதிர்­கா­லத்­திற்கு நல்­லது. அவ்­வா­றின்றேல் நாட்டின் மீட்சி, இனங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லு­றவு என்­பன பகற்­ க­ன­வா­கவே முடியும்.
நடை­பெற்று முடிந்த தேர்­தலில் தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சி­யல்­வா­திகள், தலை­வர்கள் என்போர் இரு தரப்­பி­ன­ருக்கும் பிரிந்து நின்று ஆத­ரவு வழங்­கினர். ஒரு தரப்பு ஆத­ரவு வழங்­கி­யவர் வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ளார்.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி என்­ப­னவும் வேறு சில தமிழர் அமைப்­பு­களும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கின. இரா.சம்­பந்தன், மனோ கணேசன் ஆகியோர் குறிப்­பி­டத்­தக்­க­வர்கள். இவர்கள் ஆத­ரவு வழங்­கிய தரப்பின் வேட்­பாளர் தோல்­வி­ய­டைந்தார்.
மறு­புறம் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ், ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் தலை­வர்­க­ளான டக்ளஸ் தேவா­னந்தா, ஆறு­முகன் தொண்­டமான் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் சில தமிழ்த் தரப்­பினர் ஆத­ரவு வழங்­கி­யவர் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ளார். தமிழர் தரப்பின் அதி­க­ரித்த ஆத­ரவு கிட்டவில்­லை­யென்­பதால் தமிழ் மக்கள் எது­வித புறக்­க­ணிப்­புக்குள் உள்­ளா­காமல் தடுப்­பதும், பாது­காப்­பதும் புதிய ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு உழைத்த தமிழ்த் தலை­வர்­களின் பொறுப்­பாகும்.
அவர்கள் தமக்­கு­ரிய கட­மையில், பொறுப்பில் பின்­னிற்கக் கூடாது, மாட்­டார்கள் என்று நம்­பலாம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நிம்­ம­தி­யாக வாழும் வாழ்­வையே எதிர்­பார்க்­கின்­றனர். நிம்­ம­தி­யாக வீட்டில் தூங்­கி­யெழும் நிலைக்குப் பங்கம் ஏற்­ப­டக்­கூ­டாது. இன, மொழி, மத ரீதியில் நாட்டில் எப்­பா­கத்­திலும் வேற்­றுமை பாராட்­டவோ, பாதிக்­கவோ கூடாது.
அர­சி­ய­ல­மைப்பில் தமிழ்­மொ­ழிக்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசிய மற்றும் ஆட்சி மொழிக்­கான உரிமை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பில் தமிழ்­மொ­ழிக்கு மேற்­படி உரி­மைகள் வழங்கப்பட்­டி­ருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாதுள்ள இன்றைய நிலை நீக்கப்படவேண்டும்.
கல்வி, தொழில் உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க முன்வந்து செயற்பட்ட, அவருக்கு தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தலைவர்கள் தமக்குரிய மேற்படி பொறுப்புகளை நிறை வேற்ற முன்வர வேண்டும்.
இந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான தமிழர்களும் இந்நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் என்று உறுதியாக நம்பப்படு மானால் அவர்களுக்கு பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் அனுபவிக்க வழி செய்ய வேண்டும். அப்போது இனங்களுக்கிடையே பிளவுகள், பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு கட்டலாம். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ வழி கிட்டும். வரலாற்றில் புதிய திருப்பமொன்று ஏற்படத்தான் போகின்றது. அது எவ்வாறமையும் என்பதை நாடாளும், நாடாளத் துடிக்கும் அரசியல்வாதிகளே தீர்மானிக்க வேண்டும்.
த.மனோகரன் - நன்றி வீரகேசரி